Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அவரா இவரா?


ஒருவர் சில நாவல்களை எழுதி பிரசுரிக்காமல் வைத்திருக்கிறார். அவரை நாவலாசிரியர் என்று அழைக்கலாமா? அல்லது வேறு எப்படி அழைப்பது? சரி, நாவலாசிரியர் என அறியப்பட பிரசுரமும், அது பரவலாக வாசிக்கப்படுவதும் ஒரு அளவுகோல் என வைப்போம். மற்றொருவர் பல நாவல்கள் எழுதி பிரசிரித்திருக்கிறார். ஆனால் விமர்சகர்களும் வாசகர்களும் அவை நாவலே அல்ல என்று நிராகரித்து விட்டனர். இப்போது அவர் நாவலாசிரியரா இல்லையா?

ஒருவர் அனுப்பிய கவிதை தவறுதலாக வாசகர் கடிதம் பகுதியில் வெளியாகி விடுகிறது. இன்னொருவர் கவிதை ஜோக் பகுதியில் தவறுதலாய் வெளியாகிறது. இரண்டுமே வெகுவாய் பாராட்டப்படுகின்றன. இப்போது அவர் எப்படி அறியப்பட வேண்டும்?
என் நண்பர் ஒருவர் நாவல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் வேறெதுவும் இதுவரை பிரசுரித்ததில்லை. நான் அவரை என் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தும் போது “இவர் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்” என்பேன். அவர்கள் அவரை குழப்பமாய் பார்ப்பார்கள். ஏனென்றால் அது ஒரு அடையாளம் அல்ல. அடையாளம் எப்போதும் தொடர்வினையில் இராது. உதாரணமாய், ஒருவரை குடிகாரர் எனலாம். ஆனால் “குடித்துக் கொண்டிருக்கிறார்” என அடையாளப்படுத்த முடியாது. எப்போதுமே எனக்கு அந்த நண்பரை அறிமுகம் செய்வதே பெரும்பிரச்சனை.
என்னுடைய உதவி/இணை இயக்குநர் நண்பர்கள் யாருமே தம்மை இயக்குநர் என்றோ உதவி இயக்குநர் என்றோ அறிமுகம் பண்ணிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் ”சினிமா இயக்கும் முயற்சியில் இருக்கிறேன்” என்று தனிப்பட்டு தெரிந்தவர்களிடம் கூறுவார்கள். பொதுவானவர்களிடம் “சினிமாவில் இருக்கிறேன்” என மேலும் பூடகமான விளக்கம் ஒன்றை அளிப்பார்கள். அவர்களாலும் தம்மை சுலபத்தில் சுயஅறிமுகம் பண்ண முடியாது.
ஜெயமோகன் இது குறித்து ஒரு நகைச்சுவை கட்டுரை எழுதியிருக்கிறார். ரைட்டர் என்று தன்னை எழுத்தாளன் அறிமுகப்படுத்தினால் எந்த போலீஸ் ஸ்டேஷனில் என கேட்பார்கள் என்று கூறியிருப்பார். எனக்குத் தெரிந்து சொன்னவுடனே புரிகிறாற் போன்ற ஒரு அடையாளம் என்றால் அது “கவிஞர்” தான். “நான் ஒரு கவிஞன்” என சொல்லிப் பாருங்கள். எல்லாருக்கும் உடனே புரியும். எங்கே எழுதுகிறீர்கள், அதை யார் படிக்கிறார்கள், பணம் வருமா என்றெல்லாம் கூட கேட்க மாட்டார்கள். கவிஞனை நம் சமூகம் ஒரு நாடோடிக் கலைஞனாக, அடுக்குவரிகளை சொல்லி மகிழ்வுக்கும் பொழுதுபோக்காளனாக, மொழி வல்லுநனாக கற்பனை செய்து வைத்திருக்கிறது. எந்த ஒரு கூட்டத்திலும் ஒருவரை எழுத்தாளர் என அறிமுகப்படுத்துவதை விட கவிஞர் என பிரகடனம் செய்தால் மக்கள் உடனடியாய் ஏற்றுக் கொள்வார்கள். இங்கு நீங்கள் நாவல், கதை, கட்டுரை என்ன எழுதினாலும் மக்களுக்கு நீங்கள் கவிஞன் தான். ஒருவேளை நம் சமூகத்தில் அதிகம் அறியப்பட்ட எழுத்தாளுமைகள் கவிஞர்களாகவே இருப்பதனால் இது இவ்வாறு இருக்கலாம்!
இயக்குநர் ராமை எனக்கு அவர் இயக்குநர் ஆகும் முன்பே தெரியும். அப்போதே அவர் தன்னை இயக்குநர் எனத் தான் அறிமுகப்படுத்துவார். “படம் எடுக்கணுமுன்னு நினைச்சாலே அவன் இயக்குநர் தான். பணம் எடுத்து வெளியாகணமுன்னு அவசியம் இல்லை” என்பார்.
ராமின் நிலைப்பாட்டிலும் ஒரு லாஜிக் உள்ளது. ஒருவர் யார் என்பதை அவர் அல்லாது வேறு யார் தீர்மானிக்க? ஆனால் ஒருவர் வாழ்நாளெல்லாம் சினிமா எடுக்கப் போவதாய் தீர்மானித்துக் கொண்டு மட்டும் இருந்தால் அவர் இயக்குநரா? ஒருவர் எழுத வேண்டிய நாவலின் சொற்களை மனதிற்குள் மட்டும் உருட்டிக் கொண்டு எழுதாமலே போய் விட்டால் அவர் நாவலாசிரியரா? எழுத முடிவெடுத்த உடன் ஒருவன் எழுத்தாளனா? முடிவும், பிரகடனமும் மட்டுமே போதுமா?
பிரசுரம், எழுத்தின் மீதான மதிப்பு, அங்கீகாரம் என எதுவுமே நிலையானது அல்ல. வெர்ஜினியா வூல்ப் அவரது படைப்புகள் சிலவற்றை நண்பர்கள் வாசிப்பதற்கு என்று மட்டுமே ஒரு வட்டத்துக்குள் சுற்ற விடுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படைப்புகளின் அங்கீகாரம் பதிப்பில் இல்லை. சிறிய நண்பர் வட்டத்தின் எதிர்வினையில் இருக்கிறது. ஒருவேளை அந்நாவல்கள் பதிப்பிக்கப்படவே இல்லை என்று கொள்வோம். நண்பர் வட்டத்தினரின் மறைவுடன் அவை முழுக்க மனித நாகரிகத்தின் நினைவில் இருந்தே கழன்று விடும். அப்படி என்றால் அவற்றால் நிலைக்கவே முடியாதா? ஒருவேளை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட நண்பர் குழு சில மாதங்களுக்கு பின்னர் தம் மதிப்பீடு தவறானது, அப்படைப்புகள் உண்மையில் குப்பை என கூறினால் என்னவாகும்? பதிப்பிக்கப்படாமலே தனக்கென ஒரு இடத்தை பெற்ற படைப்புகள் இப்போது முழுக்க மறைந்து விடுமே!
ஆக சுயமதிப்பீடு மட்டுமே நிலையானது. நான் என்னை கவிஞன் எனக் கோரினால் நீங்கள் என் தொகுப்பை வெளியிட்டாலும் வாங்கினாலும் படித்தாலும் இல்லாவிட்டாலும் நான் கவிஞன் தான். நீங்கள் ஒரு விசயத்தை தீவிரமாய் நம்பி முன்னெடுத்தால் அதுவே உங்கள் அடையாளம். இந்த நம்பிக்கை தான் ஒருவனை தொடர்ந்து எழுத வைக்கிறது.

 நீங்கள் வெளியிட்ட நாவலை படித்து அது நாவலே அல்ல என ஒருவர் மதிப்பிட்டு நிராகரித்தால். ஒரு உண்மையான எழுத்தாளனாய் நீங்கள் அந்த மதிப்பீட்டை ஏற்க மறுப்பீர்கள். அந்த மறுப்பில் தான் நீங்கள் நிலை கொள்கிறீர்கள். அந்த புள்ளியில் தான் உங்கள் அடையாளம் உறுதியாகிறது.  “அவர் சொல்வது உண்மை, அது நாவல் அல்ல” என நீங்கள் நினைக்கத் துவங்கியதும் நீங்கள் எழுத்தாளன் அல்லாமல் ஆகிறீர்கள். எழுத்தாளன் ஆக விரும்புகிறவர்களுக்கும் ஆனவர்களுக்கும் இது தான் வித்தியாசம். 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...