முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவரா இவரா?


ஒருவர் சில நாவல்களை எழுதி பிரசுரிக்காமல் வைத்திருக்கிறார். அவரை நாவலாசிரியர் என்று அழைக்கலாமா? அல்லது வேறு எப்படி அழைப்பது? சரி, நாவலாசிரியர் என அறியப்பட பிரசுரமும், அது பரவலாக வாசிக்கப்படுவதும் ஒரு அளவுகோல் என வைப்போம். மற்றொருவர் பல நாவல்கள் எழுதி பிரசிரித்திருக்கிறார். ஆனால் விமர்சகர்களும் வாசகர்களும் அவை நாவலே அல்ல என்று நிராகரித்து விட்டனர். இப்போது அவர் நாவலாசிரியரா இல்லையா?

ஒருவர் அனுப்பிய கவிதை தவறுதலாக வாசகர் கடிதம் பகுதியில் வெளியாகி விடுகிறது. இன்னொருவர் கவிதை ஜோக் பகுதியில் தவறுதலாய் வெளியாகிறது. இரண்டுமே வெகுவாய் பாராட்டப்படுகின்றன. இப்போது அவர் எப்படி அறியப்பட வேண்டும்?
என் நண்பர் ஒருவர் நாவல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் வேறெதுவும் இதுவரை பிரசுரித்ததில்லை. நான் அவரை என் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தும் போது “இவர் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்” என்பேன். அவர்கள் அவரை குழப்பமாய் பார்ப்பார்கள். ஏனென்றால் அது ஒரு அடையாளம் அல்ல. அடையாளம் எப்போதும் தொடர்வினையில் இராது. உதாரணமாய், ஒருவரை குடிகாரர் எனலாம். ஆனால் “குடித்துக் கொண்டிருக்கிறார்” என அடையாளப்படுத்த முடியாது. எப்போதுமே எனக்கு அந்த நண்பரை அறிமுகம் செய்வதே பெரும்பிரச்சனை.
என்னுடைய உதவி/இணை இயக்குநர் நண்பர்கள் யாருமே தம்மை இயக்குநர் என்றோ உதவி இயக்குநர் என்றோ அறிமுகம் பண்ணிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் ”சினிமா இயக்கும் முயற்சியில் இருக்கிறேன்” என்று தனிப்பட்டு தெரிந்தவர்களிடம் கூறுவார்கள். பொதுவானவர்களிடம் “சினிமாவில் இருக்கிறேன்” என மேலும் பூடகமான விளக்கம் ஒன்றை அளிப்பார்கள். அவர்களாலும் தம்மை சுலபத்தில் சுயஅறிமுகம் பண்ண முடியாது.
ஜெயமோகன் இது குறித்து ஒரு நகைச்சுவை கட்டுரை எழுதியிருக்கிறார். ரைட்டர் என்று தன்னை எழுத்தாளன் அறிமுகப்படுத்தினால் எந்த போலீஸ் ஸ்டேஷனில் என கேட்பார்கள் என்று கூறியிருப்பார். எனக்குத் தெரிந்து சொன்னவுடனே புரிகிறாற் போன்ற ஒரு அடையாளம் என்றால் அது “கவிஞர்” தான். “நான் ஒரு கவிஞன்” என சொல்லிப் பாருங்கள். எல்லாருக்கும் உடனே புரியும். எங்கே எழுதுகிறீர்கள், அதை யார் படிக்கிறார்கள், பணம் வருமா என்றெல்லாம் கூட கேட்க மாட்டார்கள். கவிஞனை நம் சமூகம் ஒரு நாடோடிக் கலைஞனாக, அடுக்குவரிகளை சொல்லி மகிழ்வுக்கும் பொழுதுபோக்காளனாக, மொழி வல்லுநனாக கற்பனை செய்து வைத்திருக்கிறது. எந்த ஒரு கூட்டத்திலும் ஒருவரை எழுத்தாளர் என அறிமுகப்படுத்துவதை விட கவிஞர் என பிரகடனம் செய்தால் மக்கள் உடனடியாய் ஏற்றுக் கொள்வார்கள். இங்கு நீங்கள் நாவல், கதை, கட்டுரை என்ன எழுதினாலும் மக்களுக்கு நீங்கள் கவிஞன் தான். ஒருவேளை நம் சமூகத்தில் அதிகம் அறியப்பட்ட எழுத்தாளுமைகள் கவிஞர்களாகவே இருப்பதனால் இது இவ்வாறு இருக்கலாம்!
இயக்குநர் ராமை எனக்கு அவர் இயக்குநர் ஆகும் முன்பே தெரியும். அப்போதே அவர் தன்னை இயக்குநர் எனத் தான் அறிமுகப்படுத்துவார். “படம் எடுக்கணுமுன்னு நினைச்சாலே அவன் இயக்குநர் தான். பணம் எடுத்து வெளியாகணமுன்னு அவசியம் இல்லை” என்பார்.
ராமின் நிலைப்பாட்டிலும் ஒரு லாஜிக் உள்ளது. ஒருவர் யார் என்பதை அவர் அல்லாது வேறு யார் தீர்மானிக்க? ஆனால் ஒருவர் வாழ்நாளெல்லாம் சினிமா எடுக்கப் போவதாய் தீர்மானித்துக் கொண்டு மட்டும் இருந்தால் அவர் இயக்குநரா? ஒருவர் எழுத வேண்டிய நாவலின் சொற்களை மனதிற்குள் மட்டும் உருட்டிக் கொண்டு எழுதாமலே போய் விட்டால் அவர் நாவலாசிரியரா? எழுத முடிவெடுத்த உடன் ஒருவன் எழுத்தாளனா? முடிவும், பிரகடனமும் மட்டுமே போதுமா?
பிரசுரம், எழுத்தின் மீதான மதிப்பு, அங்கீகாரம் என எதுவுமே நிலையானது அல்ல. வெர்ஜினியா வூல்ப் அவரது படைப்புகள் சிலவற்றை நண்பர்கள் வாசிப்பதற்கு என்று மட்டுமே ஒரு வட்டத்துக்குள் சுற்ற விடுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படைப்புகளின் அங்கீகாரம் பதிப்பில் இல்லை. சிறிய நண்பர் வட்டத்தின் எதிர்வினையில் இருக்கிறது. ஒருவேளை அந்நாவல்கள் பதிப்பிக்கப்படவே இல்லை என்று கொள்வோம். நண்பர் வட்டத்தினரின் மறைவுடன் அவை முழுக்க மனித நாகரிகத்தின் நினைவில் இருந்தே கழன்று விடும். அப்படி என்றால் அவற்றால் நிலைக்கவே முடியாதா? ஒருவேளை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட நண்பர் குழு சில மாதங்களுக்கு பின்னர் தம் மதிப்பீடு தவறானது, அப்படைப்புகள் உண்மையில் குப்பை என கூறினால் என்னவாகும்? பதிப்பிக்கப்படாமலே தனக்கென ஒரு இடத்தை பெற்ற படைப்புகள் இப்போது முழுக்க மறைந்து விடுமே!
ஆக சுயமதிப்பீடு மட்டுமே நிலையானது. நான் என்னை கவிஞன் எனக் கோரினால் நீங்கள் என் தொகுப்பை வெளியிட்டாலும் வாங்கினாலும் படித்தாலும் இல்லாவிட்டாலும் நான் கவிஞன் தான். நீங்கள் ஒரு விசயத்தை தீவிரமாய் நம்பி முன்னெடுத்தால் அதுவே உங்கள் அடையாளம். இந்த நம்பிக்கை தான் ஒருவனை தொடர்ந்து எழுத வைக்கிறது.

 நீங்கள் வெளியிட்ட நாவலை படித்து அது நாவலே அல்ல என ஒருவர் மதிப்பிட்டு நிராகரித்தால். ஒரு உண்மையான எழுத்தாளனாய் நீங்கள் அந்த மதிப்பீட்டை ஏற்க மறுப்பீர்கள். அந்த மறுப்பில் தான் நீங்கள் நிலை கொள்கிறீர்கள். அந்த புள்ளியில் தான் உங்கள் அடையாளம் உறுதியாகிறது.  “அவர் சொல்வது உண்மை, அது நாவல் அல்ல” என நீங்கள் நினைக்கத் துவங்கியதும் நீங்கள் எழுத்தாளன் அல்லாமல் ஆகிறீர்கள். எழுத்தாளன் ஆக விரும்புகிறவர்களுக்கும் ஆனவர்களுக்கும் இது தான் வித்தியாசம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...