Skip to main content

இளம் எழுத்தாளன் கண்டிப்பாய் வாசிக்க வேண்டுமா?


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மாணவர்களிடம் கவிதை குறித்து சமயவேலுடன் சேர்ந்து உரையாடிய அனுபவத்தை போகன் சங்கர் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அம்மாணவர்கள் இன்றும் பாரதிதாசனை தாண்டி வாசித்திராதது, தாம் எழுதும் கவிதைகளில் பாரதிதாசனையே பிரதியெடுப்பது குறித்த வருத்தத்தை தெரிவித்திருந்தார். மனுஷ்யபுத்திரனை கூட இவர்களுக்கு தெரியவில்லை என சமயவேலுக்கு சோர்வாகி விடுகிறது. தம் கவிதைகள் உண்மையில் கவிதையே அல்ல என சொல்லப்பட அம்மாணவர்களும் வேதனையில் தவிக்கிறார்கள். இப்படி சிவாஜிகணேஷன் பட கிளைமேக்ஸ் போல் ஆகி விடுகிறது.


எனக்கு இந்த பதிவு ஒரு விசயத்தை நினைவூட்டியது. நான் கூட பதின்வயதில் இந்த மாணவர்களை போலத் தான் இருந்தேன். எனக்கு நவீன கவிதையை அறிய எந்த வழியும் இல்லை. தமிழ் பாட நூல்கள் வழி அறிமுகமான மரபு கவிதை மீது ஈர்ப்பு ஏற்பட, நான் சந்தம், தளை பின்பற்றி மரபு கவிதை எழுத ஆரம்பித்தேன். பள்ளியில் தமிழாசிரியரிடம் கொண்டு போய் காட்டுவேன். அவர் ”வடிவம் சரியாக இருக்கிறது, ஆனால் ஏன் இவ்வளவு காதல் உருக்கம், மருகுதல்? சமூக நோக்கோடு எழுதலாமே?” என்பார்.
 இதன் பின்னர் எனக்கு ஊரில் கலை இலக்கிய பெருமன்றத்துடன் பரிச்சயம் ஏற்பட்டது. அங்கு நடந்த இலக்கிய கூட்டங்களில் நான் மரபு கவிதையாக பொழியத் துவங்கினேன். மன்றத்தினர் எனக்கு நவீன கவிதையை அறிமுகம் செய்தார்கள். அதாவது போதிக்கவில்லை. ஆனால் அவர்களின் உரையாடல்களை கவனித்த போது நவீன கவிதையின் பிதாமகர்களின் பிரபலமான கவிதைகள், பாணி, பார்வை பற்றி தெரிய வந்தது.
 அடுத்து நான் நவீன கவிதையின் பாடுபொருளை மரபுக்கவிதை வடிவில் புனையத் துவங்கினேன். ஆனால் மன்றத்தினர் இதை வேடிக்கையாக பார்க்கவில்லை. என்னை திருத்த முயலவில்லை. ”நவீன கவிதைகளை போய் முதலில் படி, பிறகு எழுது” என சொல்லவில்லை. அவர்கள் என்னை வாசிக்கவே சொல்லவில்லை. இங்கே தான் முக்கியமான ஒரு நுணுக்கம் உள்ளது.
ஒரு தத்துவவாதியாக விரும்புகிறவன் நிச்சயம் தனக்கு முன் வந்த தத்துவங்களை படிக்க வேண்டும். வரலாற்று மாணவனுக்கும் அவ்வாறே. ஆனால் எழுத்தாளனுக்கு இது தேவையில்லை. சரியான வழிகாட்டுதல் இருந்தால் எந்த நவீன வாசிப்பும் இன்றி முக்கியமான நவீன படைப்புகளை ஒருவர் எழுத முடியும். தமிழில் இதற்கு சில நல்ல முன்னுதாரணங்கள் உண்டு. (அவர்களைப் பற்றி மற்றொரு சந்தர்பத்தில் எழுதுகிறேன்.)

இது எப்படி சாத்தியமாகிறது? நவீன இலக்கியம் தன்னிலையானது. மரபு இலக்கியமோ புறநிலையானது. இது தான் முக்கிய வித்தியாசம். கம்பன் தன்னைப் பற்றி எழுதுவதில்லை. அவர் ராமனைப் பற்றி எழுதினார். ஆனால் பிரமிளோ சுந்தர ராமசாமியோ கல்யாண்ஜியோ முகுந்த் நாகராஜனோ, அல்லது மேற்சொன்ன பதிவில் வரும் போகன், சமயவேல் ஆகியோரோ தம்மைப் பற்றி தம் தரப்பில் இருந்து தான் எழுதுகிறார்கள். ”ஏ சமூகமே”, “ஏ வானமே” என வெளியில் இருந்து கருத்து கூறுவதில்லை. தமக்கு உள்ளிருந்து சமூகத்தை, வானத்தை பார்த்து கருத்து எழுதுகிறார்கள்.

 இந்த வித்தியாசத்தின் பின்னே முன்னூறு வருட மேற்கத்திய அறிவுலக மாற்றங்கள் உள்ளன. நாம் இவற்றை ஒரு இளம் கவிஞனுக்கு விளக்க தேவையில்லை. அவனிடம் தன் சொந்த வாழ்க்கையின் வித்தியாசமான அனுபவங்கள் பற்றி தன் தரப்பில் இருந்து (first person), ”நான்” என்று ஆரம்பித்து எழுத சொன்னால் போதும். அது நவீன கவிதையோ சிறுகதையோ ஆகி விடும்.

எல்லார் வாழ்க்கையிலும் ஒரு மிக அந்தரங்கமான, வித்தியாசமான அனுபவம் இருக்கும். ஒரு மரணம், தெருவில் பார்த்த வித்தியாசமான மனிதர், நண்பர்களுடன் சென்ற பயணம், யாரோ தந்த அவமானம் இப்படி. ராஜேந்திர சோழனில் ஒரு சிறுகதை உண்டு, ஒரு பதின்வயது பையனின் சுய இன்ப அனுபவம் பற்றியது. கொல்லையில் அவன் சுய இன்பம் செய்யும் போது அங்கே பாம்பு புற்றுகள் இருக்கும். இந்த சூழல் வர்ணனை மூலம் அவர் கதையை இன்னொரு தளத்துக்கு எடுத்து செல்வார். ஆனால் கதையின் மையம் அந்தரங்கமானது: சுய இன்பம்.

கலை இலக்கிய பெருமன்றத்தில் யார் மரபுக்கவிதை / வானம்பாடி கவிதை கொடியுடன் வருகிறார்களோ அவர்களை சுய அனுபவங்கள்  பற்றி எழுத தூண்டுவார்கள். அவர்களாகவே கொடியை கீழே வைத்து விடுவார்கள். இவ்வாறு வைரமுத்துவின் கொடியுடன் கை நிறைய வார்த்தை ஜால கவிதைகளுடன் மன்றத்துக்கு வந்தவர் தான் லஷ்மி மணிவண்ணன். அவர் சில வருடங்களில் ஒரு முக்கிய நவீன இலக்கியவாதி ஆனார்.

 சமகால இலக்கியத்தில் நாட்டார் வழக்கு, ஊடகங்கள், நம்பிக்கைகள், தொன்மங்கள் ஆகியவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. தன்னனுபவத்துடன் இவையும் சேர்ந்து கொண்டால் சமகால (பின்நவீனத்துவ) இலக்கியம் ரெடி.

மன்றத்தினர் இந்த வகை எழுத்து வாசிப்பின் வழியாக வெளிவர வேண்டியது அல்ல என்பார்கள். எழுத்து நம் வாழ்க்கையினுள் உறைந்து இருக்கிறது. அதை வெளிக்கொணர்ந்தால் போதும். மன்றத்தில் தீவிர இலக்கிய நூல்களை, விமர்சன, அரசியல், சமூக, தத்துவ நூல்களை படிப்பார்கள். விவாதிப்பார்கள். ஆனால் விமர்சகர்கள் தாம் இதை பெரும்பாலும் செய்வார்கள்.

வாசிப்பு சில நேரம் எழுத்துக்கு தடையாகி விடும். சரளத்தை கெடுத்து விடும். யாரையோ போல செய்ய தூண்டும். அப்படி என்றால் இளம் எழுத்தாளன் வாசிக்கவே தேவையில்லையா? நான் இது பற்றி முன்பு ஜெயமோகனிடம் உரையாடியிருக்கிறேன். அவர் ஒருவர் வாசிப்பு இன்றியே தன் அனுபவம் மூலம் சிறந்த சில கதைகள், கவிதைகளை எழுத முடியும் என ஏற்றுக் கொண்டார். ஆனால் சீக்கிரமே சரக்கு தீர்ந்து போகும். எழுத்தாளன் கையளவு அனுபவத்தை கொண்டு அதன் பலவித பரிமாணங்களை, ஆழங்களை அகலங்களை வாசகனுக்கு காட்டிக் கொண்டே இருக்கிறான். கொஞ்சத்தை பெரிதாக காட்டுகிறவனே எழுத்தாளன்.

 இதற்கு தான் அவனுக்கு வாசிப்பு அவசியம். இதற்கு சிறந்த உதாரணமாய் இமையத்தை காட்டலாம். அவர் நேரடி அனுபவங்களில் இருந்து தான் எழுதுகிறார். ஆனால் தன் மொழி நுணுக்கம் மூலம் ஒரு பாத்திரத்தின் உரையாடலில் மனம் எப்படியெல்லாம் ஜாலம் காட்டுகிறது என அவரால் பேச முடியும். இதற்கு அவரது நீண்ட கால வாசிப்பு, க்ரியா ராமகிருஷ்ணன் அளித்த பயிற்சி அவருக்கு பெரிதும் பயன்படுகிறது.
சரியான வழிகாட்டுதல் இருந்தால் இந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மாணவர்கள் மத்தியில் இருந்து ஒரு நல்ல கவிஞனோ சிறுகதையாளனோ தோன்ற முடியும். அவர்கள் எதையும் புதிதாய் வாசிக்க வேண்டியதில்லை. யாரையும் பிரதியெடுக்காது சொந்த அனுபவத்தை, கூசச் செய்யும் ஒரு அனுபவத்தை, நேரடியான மொழியில் எழுதினால் போதும். அதை ஒருவர் எடிட் செய்து கொடுத்தால் போதும்.

நான் ஆரம்பத்தில் தன்னிலை, புறநிலை பார்வைகள் பற்றி சொன்னேன். இந்த மாணவர்களுக்கு பள்ளியில் இருந்து கல்லூரி முதுகலை வரை நவீன கவிதைகள் மிக மிக அரிதாகத் தான் அறிமுகம் ஆகின்றன. ஆனால் நவீன கவிதைக்கு வெகுநெருக்கமான சங்கக் கவிதைகளும் பெரிதாய் வகுப்பில் விவாதிக்கப்படுவதில்லை. சங்கக் கவிதைகளை அதிகமாய் அதன் நுணுக்கங்களை வெளிப்படுத்தும் வண்ணம் போதித்தாலே இம்மாணவர்கள் நவீன கவிதைக்கு வெகுநெருக்கமாய் வந்து விடுவார்கள். ஆனால் பாடத் திட்டம் வகுப்பவர்களுக்கு இந்த மாதிரி அக்கறைகள் எல்லாம் இல்லை.

நான் மன்றத்துக்கு சென்ற புதிதில் ஒரு கேள்வி கேட்டேன். ஏன் பள்ளியில் சங்கப் பாடல்கள் சொல்லித் தருவதில்லை? ஏன் நீதி இலக்கியம், சமய இலக்கியம் மட்டுமே பயிற்றுவிக்கிறார்கள்? பாடத்திட்ட குழுவை சேர்ந்த ஒருவர் சொன்னார்: “பெண் ஆசிரியர்கள் சங்கக் கவிதைகளை சொல்லித் தர கூச்சப்படுகிறார்கள். அதில் ரொம்ப செக்ஸ் இருக்கிறது என சிரமப்படுகிறார்கள்”.

நம் அக்கறைகள் வேறு மாதிரியானவை. 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...