Skip to main content

கபாலியின் மற்றொரு தொன்மம்

Image result for கபாலி

“கபாலி” குறித்த கட்டுரைகளில் சிறந்தது என டி.தருமராஜுடைய மூன்று பகுதி கட்டுரை தான். மூன்று விசயங்களை ரசித்தேன்.
1)   ரஜினி எனும் தொன்மம் எப்படி “கபாலியில்” புது நிறம் பெறுகிறது. ஆண்டைகளில் தொன்மமாக இருந்தவர் எப்படி சரேலென தலித் தொன்மமாக மாற எத்தனித்தார், அதன் வியாபார சாத்தியங்கள் என்ன என்பது குறித்து டி. தருமராஜ் எழுதியிருக்கிறார். அவர் ”தொன்மம்” என்பதற்கு பதில் “திரைக்கதைக்கு வெளியே இருக்கும் திரைக்கதை” என கூறுகிறார்.
ரஜினியை பற்றி பேசும் போது இந்த தொன்ம ஆய்வு முக்கியமானது. அவரது வெற்றிக்கும் சரி எம்.ஜி.ஆரின் முந்தைய வெற்றிக்கும் சரி அவர்களை ஒட்டி உருவாக்கப்பட்ட தொன்மங்கள் தாம் உதவின. டி.தருமராஜ் தான் அருந்ததிய மக்கள் குடியிருப்பில் தான் கண்ட நாட்டுப்புற கூத்து ஒன்றை விவரிக்கிறார். அதில் தலித் ஒருவர் ஆக்ரோசமாய் தனக்கு மேல்சாதியாய் உள்ளவனை திரும்ப தாக்கும் இடத்தை தலித் மக்கள் எவ்வாறு திரும்ப திரும்ப நிகழ்த்துப்படி நிர்பந்தித்து பார்த்து ரசித்தார்கள் என சொல்கிறார். இந்த கூத்து நிகழ்வதற்கு சற்று முன் நாயக்கர் சாதியினர் சில அருந்ததிய இளைஞர்களை கூத்து நடக்கும் இடத்தில் இருந்தே அழைத்து சென்று தாக்குகிறார்கள். தலித் மக்கள் இதற்கான எதிர்வினையை கூத்து நாயகனின் ஹீரோயிசத்தை ரசித்து கொண்டாடுவதன் வழி வெளிப்படுத்துகிறார்களே அன்றி நேரடியான எதிர்நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. இதன் பொருள் என்ன?


 ஒரு சினிமா தொன்மம் (தலித் போராளியாக இருந்தாலும்) மக்களை எழுச்சி கொண்டு போராட வைக்காது. மக்கள் தொன்ம நிகழ்த்தலின் ஒரு பகுதியாக மாறி லயிப்பார்களே அன்றி தொன்மத்தில் இருந்து நடைமுறைக்கு நகர மாட்டார்கள். அப்படி நிகழும் என நம்புவது ஒரு இடதுசாரி கற்பனை மட்டும் தான். “கபாலி” ஒரு புரட்சி படம் என தலித் போராளி நண்பர்களும் அது போல் நம்ப விரும்புகிறார்கள். ஆனால் அப்புரட்சி கதையாடலுக்குள் நிகழும் புரட்சி மட்டுமே.

தருமராஜ் மற்றொன்றையும் சுட்டிக் காட்டுகிறார். ரஞ்சித் உருவாக்கும் தலித் நாயகர்களில் பெரும்பான்மையான மத்திய சாதியினர் தம்மைத் தான் காண்கிறார்கள். தலித்தை அல்ல. தொன்ம / சினிமா கதையாடல்கள் இப்படித் தான் இருக்க முடியும். அதாவது தான் உத்தேசிக்கிற ஒன்றிக்கு நேர் எதிராகக் கூட.

2)   தலித்துகள் முதலில் தம்மை அரசியலில் தம்மை ஏதுமற்றவர்களாக, ஏதிலிகளாக முன்வைக்கிறார்கள். அதை நம்புகிறார்கள். இந்த ஏக்கம் அவர்களை தம் மீட்சிக்காக, விடுதலைக்காக போராட தூண்டுகிறது. இதன் அடுத்த கட்டத்தில் தமது (கலாச்சார, தொன்ம, அரசியல், தத்துவ) மரபை மீட்டெடுக்க விரும்புகிறார்கள். தமது முதாதைகளின் பெருமையை பேசுகிறார்கள். அதை மீட்டுருவாக்கம் பண்ண முயல்கிறார்கள். இதை நாம் தலித் அரசியல் எழுத்துக்களில் இருந்து என்.டி ராஜ்குமார், நட.சிவகுமாரின் கவிதைகள் வரை காண இயலும். தலித்துகள் தம்மை அரசியல், பொருளாதார ரீதியாய் தக்க வைக்கும் கட்டம் இது. இது ஆபத்தான போக்கு என தருமராஜ் எச்சரிக்கிறார்.

என்ன ஆபத்து? தமது மேல்நிலையாக்கம் பற்றி தலித்துகள் கவலைப்படும் போது தம் எழுச்சியை ஒட்டுமொத்த சமூக சமத்துவம் நோக்கிய நகர்வாக பார்க்க தவறுகிறார்கள் என்கிறார். எனக்கு இந்த பார்வையில் உடன்பாடில்லை.

சமத்துவம் என்பதே ஒரு நவீனத்துவ கருத்துருவாக்கம் தானே. அது கற்பனாவாத காலத்தில் பிரஞ்சு புரட்சியின் போது ஐரோப்பாவில் காலூன்றிய ஒரு நம்பிக்கை. ஆனால் “சமத்துவம்” என்பது மற்றொரு கற்பனை. மனிதன் தன் இடத்தை தக்க வைக்க இன்னொருவர் இடத்தை அடைய வேண்டும். இது தான் மனிதனின் அடிப்படை இயல்பு. அதிகாரம் என்ற ஒரு உரையாடல் மட்டுமே இன்று சாத்தியம். எனக்கான இடத்தை எவ்வளவு விட்டுத் தருவாய் என்று எதிர்தரப்பை நோக்கி பேரம் பேச மட்டுமே இன்றைய மனிதனுக்கு முடியும். அதனால் தான் தலித்துகளில் பறையர்கள் மேலெழும் போது அருந்ததியர் தம் இடம் அவர்களால் மறுக்கப்படுவதாய் கோபமுறுகிறார்கள். அருந்ததியர் மேலெழும் போது இன்னொரு கீழ்நிலை சாதி அங்கு உருவாகும். இதில் இருந்து தப்புதலே கிடையாது.

தருமராஜ் இதை அறிவார். அதனால் தான் அவர் சமத்துவம் எனும் கனவை முன்வைக்கிறார். ஆனால் கனவு என்பது தூங்கும் போது பார்த்து சுகிக்க மட்டும் தானே. அதற்கு எதார்த்தத்தில் எங்கே இடம்? நான் வாழ்க்கையில் மிகவும் வெறுக்கும் ஒரு சொல் “சமத்துவம்”. என் 36 வருட வாழ்வில் நான் ஒரு துளி கூட சமத்துவத்தை எங்கும் பார்த்ததில்லை. அது ஒரு கற்பனாவாத பொய். டி.தருமராஜுடன் நான் உடன்படாத இடம் இது மட்டும் தான்.

3)   டி. தருமராஜ் கட்டுரையில் இன்னொரு சுவாரஸ்யமான இடம் அவர் மேற்சொன்ன தலித் அரசியல் நெருக்கடிக்கு “கபாலியில்” காணும் மற்றொரு தொன்மம். தன் மனைவி, குழந்தையை தேடி புறப்படும் கபாலியை அவர் பழம் மரபை நாடி செல்லும் தலித்தாக புரிந்து கொள்கிறார்.

 ஆனால் இந்த ஒப்பீடு கொஞ்சம் நெருடலாய் உள்ளது. மரபின் பல்வேறு சாத்தியங்களை உணர்ந்து ஒரு தலித் தன் சுய அடையாளத்தை கட்டமைப்பது புது அனுபவங்களையும் புரிதல்களையும் அளிக்கும் மிக கிளர்ச்சியான ஒரு கட்டம். ஆனால் ஏற்கனவே நன்கு அறிந்த மனைவியை திரும்ப கண்டுபிடிப்பது பழைய காதல் நினைவுகளை உறுதிப்படுத்தும் செயலும், அன்பை காணும் வேட்கையும் தான். அயோத்திதாசர் நம் மரபிலக்கியத்தில் பௌத்த பிரதிகளை கண்ட போது அவர் அடைந்திருக்கும் மனவிரிவையும் கபாலி தன் மனைவியை திரும்ப பார்ப்பதையும் ஒப்பிட முடியாது. மனைவியை திரும்ப அடைவது ஒரு பழைய ஆடையை பெட்டியில் இருந்து திறந்து எடுத்து முகர்ந்து பார்ப்பது போன்றது மட்டுமே.
ஜெயிலில் இருக்கும் போது மனைவி பற்றி கபாலிக்கு பல கனவுகள் இருந்திருக்கும். அந்த கனவுகளில் உத்வேகத்திலேயே அவன் தன்னை தக்க வைத்திருப்பான். அந்த கனவுகள் ஒரு உள்ளுணர்வாக அவனுடனே உள்ளன. அந்த உள்ளுணர்வும் எதார்த்தமும் முரண்படுகின்றன என்கிறார் தருமராஜ். இதை சமத்துவ லட்சியத்திற்கும் சுய தக்கவைப்புக்கான சமகால தலித் அரசியலுக்குமான முரணாக அவர் பார்க்கிறார்.
இந்த விசயத்தில் நான் தருமராஜுடன் ஒத்துப் போகிறேன். வயது முதிர்ந்த மனைவியும் தலை நரைத்து முதியோர் இல்லத்தில் இருக்கும் “சமத்துவமும்” ஒன்று தான். J

எண்பது, தொண்ணூறுகளில் தான் இவ்வாறு ஒரு சினிமா அல்லது இலக்கிய கதையில் பெரும் தத்துவத்தை வைத்து விவரிக்கும் போக்கு இருந்தது. எனக்கு இக்கட்டுரைத் தொடர் அதை நினைவுபடுத்தியது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...