Skip to main content

ஜல்லிக்கட்டு போராட்டம் 2.0 – அப்பாவுக்கும் குழந்தைக்கும் இடையிலான உளவியல்

இந்தியாவில் சாமான்யர்கள் களத்தில் இறங்கி போராட தயங்குவதற்கு முதல் காரணம் போலீஸ் தாக்குதல், வழக்கு, அன்றாட வாழ்வில் ஏற்படும் இழப்புகள், பாதுகாப்பின்மை, இவை சேர்ந்து ஏற்படும் ஒட்டுமொத்தமான பயம். மெரீனா போராட்டத்தின் முதல் வாரத்தில் இவை எதுவும் இல்லை. ஆரம்பத்திலேயே இதை மாணவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அதனால் லட்சக்கணக்கில் குவிந்தார்கள். அவர்கள் என்னதான் மோடியையும் ஒ.பி.எஸ்ஸையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பினாலும் போலீஸார் இணக்கம் காட்டும் வரை அது அதிகார வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் ஆகாது. அதிகார வர்க்கத்தின் இசைவுடன் நிகழ்ந்த போராட்டம் தான். ஏனென்றால் போலிஸார் அரசு எந்திரத்தின் முகம். ஆனால் இரண்டாவது வாரம் தான் இப்போராட்டம் முதன்முறையாக “போராட்டம்” ஆகிறது. அதிகார வர்க்கம் போராட்டத்தை நிறுத்த சொல்கிறது. வெளியே மண்ணில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா “போதும் வீட்டுக்குள்ள போ” என கண்டிப்பது போல இது. குழந்தை ஏற்க மறுத்தால் அப்பா பிரம்பெடுப்பார். அப்பாவின் உண்மையான முகம் இப்போது தான் குழந்தைக்கு தெரிய வரும். “நீ விளையாடும் போது என்ன தான் சுதந்திரமாய் இருந்தாலும் அந்த சுதந்திரம் நான் அளித்தது தான், என்னால் எப்போது வேண்டுமெனிலும் அதை பறிக்க முடியும்” என அப்பா குறிப்புணர்த்துவார். போராட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் நடப்பது இது தான்.

கடந்த வாரம் போராட்டத்தை மாபெரும் மக்கள் எழுச்சியாக சித்தரித்து மகத்துவப்படுத்திய சில சேனல்கள் இப்போது அதை கைவிடும் படி அறிவுறுத்தி வருகின்றன. அப்படியென்றால் கடந்த வாரம் அவர்கள் எழுச்சிக்கு தந்த முக்கியத்துவம் அரசின் விருப்பப்படி ஏற்பட்டது என்பது தெளிவாகிறது. போராட்டத்தின் தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் இப்போது அதிகாரத்தின் முன் மண்டியிடுகிறார்கள். அவர்களின் கடந்த வாரம் ஆவேசம் போலியானது என்பது புலனாகி விட்டது. மெல்ல மெல்ல சில நாட்களில் இப்போராட்டம் முழுக்க துடைத்து அகற்றப்படும். ஏனென்றால் இந்தியர்கள் அனைவருக்கும் ஆழ்மனதில் அதிகார வர்க்கம் மீது ஒரு அச்சம் உள்ளது. அந்த அச்சம் குடும்பத்து மூத்தோர், மேலதிகாரிகள், அரசு எந்திரம் அனைவர் மீதும் உள்ளது தான். காவல்துறை இந்த அச்சத்தின் தூல வடிவம். காவல்துறையை அஞ்சும் வரை நாம் குடும்பத்துக்கு, வேலையிடத்தில் அதிகாரிகளுக்கு, சமூகத்தின் பல்வேறு அதிகார அமைப்புகளுக்கு பணிவோம்.
 அதிகார வர்க்கத்துக்கு இந்திய மனம் மீதுள்ள பருந்துப்பிடி வரலாற்றில் ஒரே ஒருமுறை தான் முறியடிக்கப்பட்டது. காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தின் போது மக்கள் சுயேச்சையாய் தலையில் தடியடி வாங்கி காயத்துடன் கூட்டம் கூட்டமாய் சரிந்தார்கள். அந்த ஆத்மசக்தியை காந்தியால் அளிக்க முடிந்தது. ஆனால் அது வரலாற்றி இனி மீள நிகழுமா என தெரியவில்லை.
தமிழர்கள் என்னதான் வீரமானவர்கள் என்றாலும் அதிகாரத்தின் முன் பணியக் கூடியவர்களும் தான். உலகம் முழுக்க அவர்கள் சிறந்த உழைப்பாளிகளாய் கருதி வரவேற்கப்படுவது இதனால் தான். நீங்கள் ஒரு மலையாளியை சுலபத்தில் வேலை வாங்க முடியாது. ஆனால் தமிழன் அதிகாரத்துடன் சுலபத்துடன் முரண்பட மாட்டான். உலகம் முழுக்க தமிழர்கள் பரவி வெற்றி அடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இந்த அதிகார இசைவும் தான்.
கடந்த வாரம் நடந்த போராட்டம் கூட இந்த அதிகார இசைவின் நீட்சி தான். நம்மால் அரசின் இசைவுடன் பெருங்கூட்டமாய் இணைந்து போராட முடிந்தது. அரசு இசையாவிட்டால் நாம் சிதறி விடுவோம். இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு விதிவிலக்கு. அன்று போராட்டக்காரர்கள் கடும் வன்முறையை எதிர்கொண்டார்கள். ஆனால் இந்த தலைமுறைக்கு அந்த மனோபலம் உண்டா? எனக்குத் தெரியவில்லை.
போராட்டம் என்பது அதிகாரத்தை எதிர்ப்பது மட்டுமே. போன வாரம் நாம் உண்மையில் அதிகாரத்தை எதிர்க்கவில்லை. அதிகாரத்தின் தோளில் கையிட்டு சிரித்தபடி போராடினோம். தன் பெரும்பான்மை பலத்தை காட்ட, மக்கள் தலைவன் எனும் பெயர் வாங்க இவ்வளவு பெரிய கூட்டம் திரள வேண்டிய தேவை ஒ.பி.எஸ்ஸுக்கு இருந்தது. அதனால் அவர் அதை அனுமதித்தார். (ஆனால் தகவல் தொழில்நுட்ப உலகில் மக்கள் விரல் நுனியில் தகவல்களை வைத்திருப்பார்கள், மிகுந்த தெளிவுடன் இருப்பார்கள் என்பதை ஒ.பி.எஸ் கணிக்கவில்லை. அவர் அதனால் ஆட்டத்தின் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றார்)
 ஆனால் அதே அதிகாரம் இப்போது நம்மை நோக்கி லத்தி தூக்குகிறது. நாம் மிரட்டும் அப்பாவைக் கண்டு அழுதபடி வீட்டுக்குள் ஓடப் போகிறோமா?
 கடந்த வாரம் நாம் மெரீனாவுக்கு கூட்டமாகவும், குடும்பத்துடனும், கைக்குழந்தையுடனும் சென்று நம் எதிர்ப்பை பதிவு செய்தோம். என் மனைவியும் குழந்தையுடன் அங்கு சென்றாள். எனக்கு பயம் இருக்கவில்லை. ஆனால் இப்போது சென்றால் காவல்துறை தடியடி நடத்தும். நாம் போவோமா? என் குழந்தை மீது தடியடி படுவதை நான் நிச்சயம் விரும்ப மாட்டேன். மாணவர்கள் பலர் போலீஸ் தடியடியால் காயம்பட்டு அரசு மருத்துவமனையில் இருப்பதாய் ஒரு வாட்ஸ் ஆப் வீடியோ பார்த்தேன். இந்த இளைஞர்களின் பெற்றோர் இனி அவர்கள் மெரினாவில் குழுமுவதை விரும்புவார்களா? அவர்களுக்கு அச்சம் இருக்காதா? இது வன்முறை மீதான அச்சம் மட்டுமல்ல. போன வாரம் காவல்துறை உங்கள் நண்பன். ஆனால் இனிமேல் போராடினால் வழக்குகள் போடுவார்கள். அதை சந்திக்க நம் இளைஞர்கள் விரும்புவார்களா?
இந்த வாரம் இப்போராட்டம் எடுக்கப் போகிற வடிவம் சமகால தலைமுறையினரின் உளவியலை நமக்கு துல்லியமாக காட்டி விடும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...