முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வலியும் பரிவும்


வலியை எனது இரண்டாம் பிரக்ஞை என்பேன். அது எனக்குள் ஒற்றைக்கண்ணாய் சதா திறந்திருக்கிறது. புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்ததுமே பலருக்கும் அங்கு பார்க்கப்போகும் அபாரமான நூல்கள், எதிர்கொள்ளப் போகும் நண்பர்கள், கூட்டத்தின் சலசலப்பு, அழகிய இளம்பெண்கள், குதூகலம் குறித்து ஒரு சித்திரம் கண்முன் எழும். எனக்கு நேர்மாறாக இவ்வளவு தூரம் நடந்தால் கால் எவ்வளவு வலிக்கும், உடம்பில் எப்படியான அசதி ஏற்படும் எனும் எண்ணமே முதலில் ஏற்படும். அது குறித்த அலுப்புடனே முதல் அடியை எடுத்து வைப்பேன். அங்கு போக வேண்டும் என திட்டமிட்டவுடனே என் உடல் அலுத்துக் கொள்ளும் வலியை கற்பனை பண்ணிக் கொள்ளும். ஆனால் உள்ளே சென்று வேடிக்கை பார்க்க துவங்கியதும் மனம் குதூகலத்தில் எல்லாவற்றையும் மறந்து விடும்.

இன்றைய நாளும் அப்படித் தான் அமைந்தது. காலையில் எழுந்ததுமே கை மணிக்கட்டில் மாட்டு ஊசியை நுழைத்து தைத்து இழுப்பது போன்ற வலி. ஒரு பாரம். இறுக்கம். நான் கையை ஊன்றித் தான் படுக்கையில் இருந்து எழுந்து என் சக்கர நாற்காலியில் அமர முடியும். இன்று எழுந்த பின் ஒரு மணிநேரம் எப்படி படுக்கையில் இருந்து எழுந்து அமர்வது என புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பசிக்கிறது, தயாராகி ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். ஆனால் கையை ஊன்றினால் உயிர்போகும் வலி. எப்படி சமாளிப்பது? கடைசியில் பல முயற்சிகளுக்கு பிறகு படுக்கையில் திரும்பி அமர்ந்து பின்னால் நகர்ந்து சக்கர நாற்காலியில் தாவிக் கொள்ளும் ஒரு வழியை கண்டுபிடித்தேன். அடுத்து தயாரானேன். ஆனால் மூன்று மாடிகளை இறங்க வேண்டும். கைப்பிடியை பற்றி ஊன்றாமல் இறங்க முடியாது. எப்படி வலியை தாங்கி இறங்குவேன்? சரி, இறங்கி விட்டால், எப்படி திரும்ப ஏறுவேன்? இதை நினைத்ததுமே என் வலியை ஒற்றைக் கண் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. சோர்ந்து போனேன்.
ஆனால் இறங்க ஆரம்பித்து வெளியே போனதும் வலியை மறந்து போனேன். நான் எதிர்பார்த்ததை விட எளிதாகவே இருந்தது. வலி உடம்பில் இருக்கிறதா அது மனதின் கற்பனையா?
வலியை மறக்க முடிந்ததற்கு நண்பர் இளவேனிலுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரை இதற்கு முன் தெரியாது. இன்று தான் முதன்முறை பேசுகிறேன். அவர் தன் உறவினர் ஒருவருடன் வந்து என்னை ஆஸ்பத்திரி அழைத்து சென்றார். எனக்காய் ஒரு பாதி நாளை செலவழித்தார். நான் அவரைப் போல் என் வேலை நாளை இது போல் மற்றொருவரின் தேவைக்காக எங்கும் செலவழித்தது இல்லை. இப்படியான மனிதர்கள் துன்பங்களை மறந்து மீண்டும் வாழ்வை உற்சாகமாய் எதிர்கொள்ள ஒரு பாதையை திறக்கிறார்கள். அவர் என் தோழி ஆர்த்தி வேந்தனின் துணைவர் என்றறிய மகிழ்ச்சியாக இருந்தது. தனக்கு சுத்தமாய் முன்பழக்கம் இல்லாத எனக்காய் அவர் இவ்வளவு அக்கறை கொள்வார் என்றால் கூட வாழ்பவருக்காய் இதை விட அதிக அன்பை, பரிவை கொடுப்பார் என தோன்றியது.

இன்றைய நாள் இவ்வாறு கடும் வலியில் துவங்கி மகிழ்ச்சியான மனநிலையில் முடிந்தது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.