முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வலியும் பரிவும்


வலியை எனது இரண்டாம் பிரக்ஞை என்பேன். அது எனக்குள் ஒற்றைக்கண்ணாய் சதா திறந்திருக்கிறது. புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்ததுமே பலருக்கும் அங்கு பார்க்கப்போகும் அபாரமான நூல்கள், எதிர்கொள்ளப் போகும் நண்பர்கள், கூட்டத்தின் சலசலப்பு, அழகிய இளம்பெண்கள், குதூகலம் குறித்து ஒரு சித்திரம் கண்முன் எழும். எனக்கு நேர்மாறாக இவ்வளவு தூரம் நடந்தால் கால் எவ்வளவு வலிக்கும், உடம்பில் எப்படியான அசதி ஏற்படும் எனும் எண்ணமே முதலில் ஏற்படும். அது குறித்த அலுப்புடனே முதல் அடியை எடுத்து வைப்பேன். அங்கு போக வேண்டும் என திட்டமிட்டவுடனே என் உடல் அலுத்துக் கொள்ளும் வலியை கற்பனை பண்ணிக் கொள்ளும். ஆனால் உள்ளே சென்று வேடிக்கை பார்க்க துவங்கியதும் மனம் குதூகலத்தில் எல்லாவற்றையும் மறந்து விடும்.

இன்றைய நாளும் அப்படித் தான் அமைந்தது. காலையில் எழுந்ததுமே கை மணிக்கட்டில் மாட்டு ஊசியை நுழைத்து தைத்து இழுப்பது போன்ற வலி. ஒரு பாரம். இறுக்கம். நான் கையை ஊன்றித் தான் படுக்கையில் இருந்து எழுந்து என் சக்கர நாற்காலியில் அமர முடியும். இன்று எழுந்த பின் ஒரு மணிநேரம் எப்படி படுக்கையில் இருந்து எழுந்து அமர்வது என புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பசிக்கிறது, தயாராகி ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். ஆனால் கையை ஊன்றினால் உயிர்போகும் வலி. எப்படி சமாளிப்பது? கடைசியில் பல முயற்சிகளுக்கு பிறகு படுக்கையில் திரும்பி அமர்ந்து பின்னால் நகர்ந்து சக்கர நாற்காலியில் தாவிக் கொள்ளும் ஒரு வழியை கண்டுபிடித்தேன். அடுத்து தயாரானேன். ஆனால் மூன்று மாடிகளை இறங்க வேண்டும். கைப்பிடியை பற்றி ஊன்றாமல் இறங்க முடியாது. எப்படி வலியை தாங்கி இறங்குவேன்? சரி, இறங்கி விட்டால், எப்படி திரும்ப ஏறுவேன்? இதை நினைத்ததுமே என் வலியை ஒற்றைக் கண் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. சோர்ந்து போனேன்.
ஆனால் இறங்க ஆரம்பித்து வெளியே போனதும் வலியை மறந்து போனேன். நான் எதிர்பார்த்ததை விட எளிதாகவே இருந்தது. வலி உடம்பில் இருக்கிறதா அது மனதின் கற்பனையா?
வலியை மறக்க முடிந்ததற்கு நண்பர் இளவேனிலுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரை இதற்கு முன் தெரியாது. இன்று தான் முதன்முறை பேசுகிறேன். அவர் தன் உறவினர் ஒருவருடன் வந்து என்னை ஆஸ்பத்திரி அழைத்து சென்றார். எனக்காய் ஒரு பாதி நாளை செலவழித்தார். நான் அவரைப் போல் என் வேலை நாளை இது போல் மற்றொருவரின் தேவைக்காக எங்கும் செலவழித்தது இல்லை. இப்படியான மனிதர்கள் துன்பங்களை மறந்து மீண்டும் வாழ்வை உற்சாகமாய் எதிர்கொள்ள ஒரு பாதையை திறக்கிறார்கள். அவர் என் தோழி ஆர்த்தி வேந்தனின் துணைவர் என்றறிய மகிழ்ச்சியாக இருந்தது. தனக்கு சுத்தமாய் முன்பழக்கம் இல்லாத எனக்காய் அவர் இவ்வளவு அக்கறை கொள்வார் என்றால் கூட வாழ்பவருக்காய் இதை விட அதிக அன்பை, பரிவை கொடுப்பார் என தோன்றியது.

இன்றைய நாள் இவ்வாறு கடும் வலியில் துவங்கி மகிழ்ச்சியான மனநிலையில் முடிந்தது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...