முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜல்லிக்கட்டு போராட்டங்கள்: ஒ.பி.எஸ்ஸின் முதல் வெற்றி

Image result for ஒ.பி.எஸ் மோடி
என்னதான் மக்கள் ஒ.பி.எஸ்ஸை டம்மி என கலாய்த்தாலும் எனக்கு அவர் மீது மதிப்புண்டு. பிரச்சனைகளை முன்கூறாக கணித்து புன்னகைத்தபடியே காய்நகர்த்தி அமைதியாக ஜெயித்து விடுவார். இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் அவரது ராஜதந்திரத்துக்கான சிறந்த உதாரணம்.

 இப்போராட்டத்தில் இணைந்த லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகள் உண்மையானவை. பாராட்டுக்குரியவை. ஆனால் இன்னொரு பக்கம், இதே மக்கள் ஆளும் அரசின் நாடகம் ஒன்றின் ஒப்பந்தம் செய்யப்படாத நடிகர்களும் தாம். அவர்களுக்கே தெரியாமல் விரைவில் ஒ.பி.எஸ் மொத்த போராட்டத்தையும் ஹைஜேக் செய்யப் போகிறார். ஒ.பி.எஸ் இயக்குநர் என்றார் மோடி தயாரிப்பாளர். வாடிவாசலை ஒ.பி.எஸ் திறந்து வைப்பதுடன் கரைபுரண்டு ஓடும் உற்சாகத்தில் அவர் மீதான மக்கள் அபிமானம் இரட்டிப்பாகும். குறைந்தது, ஒரு மக்கள் ஆதரவு நிகழ்வுக்கு முகம் கொடுத்த பெருமை கிடைக்கும்.
 முதல்வர் ஆன பிறகு இப்படியான ஒரு வாய்ப்பு அவருக்கு அமையவே இல்லை. இதன் மூலம் உறுதியற்ற, கட்சிக்குள் அதிகாரமற்ற, செயலூக்கமற்ற முதல்வர் எனும் அவப்பெயரை அவர் சுலபத்தில் துடைத்து எறியப் போகிறார். மக்கள் ஆதரவு எனும் ஆயுதம் கொண்டு சசிகலாவுடனான யுத்தத்தில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள போகிறார்.

தமிழகம் முழுக்க நடந்த இப்போராட்டங்களுக்கு காவலர்கள் அளித்த ஒத்துழைப்பு, அனைத்து டி.வி சேனல்களுக்கு அளித்த முக்கியத்துவம் போராட்டங்கள் நிச்சயம் ஒ.பி.எஸ் / பன்னீர் செல்வத்தின் ஆசியுடன் (ஆனால் பங்கேற்றவர்களுக்கு இது தெரியாமலே) நடந்தது என்பதை காட்டுகிறது. புத்தாண்டு இரவு மக்கள் கடற்கரையில் குழுமக் கூடாது என்பதற்காய் எல்லா சாலை வழிகளையும் அடைத்த காவல்துறை இம்முறை அப்படியான எந்த தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. போக்குவரத்துக்கும் எந்த தடையும் இல்லை. பொதுவாக இது போன்ற மாணவர் எழுச்சியை பல வழிகளில் அடக்க முயலும் அரசு இம்முறை புன்னகையுடன் “போங்க போங்க” என்றது. இப்போராட்டங்களை நீங்கள் ஈழப்போரின் போதான தமிழ்தேசிய உணர்வாளர்களின் போராட்டங்களுடன் ஒப்பிடுங்கள். அன்றும் மிகப்பெரிய உணர்வலை எழுந்தது. ஆனால் கூட்டங்கள் நடப்பதில் காவலர்கள் கடும் கெடுபிடிகள் போட்டனர். அன்று அரசு எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அப்போராட்டம் வளர முடியாத வண்ணம் செய்தது. இம்முறை முழுக்க நிலைமை நேர்மாறாக உள்ளது.
 நிர்பயா கொலையின் போது தில்லி ஜந்தர் மந்தரில் நடந்த பெரும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு எதிராக இருந்தன. ஆனால் இப்போராட்டங்களில் அத்தகைய அரசு விரோதம் இல்லை. சிலர் அரசும் காவல்துறையும் மக்கள் உணர்வுகளை மதித்து அனுமதி அளிக்கிறது என்றும் சொல்லலாம். மற்றும் சிலர் மக்களை தம் திரைக்கதைக்கு ஏற்ப இயங்க அரசு அனுமதிக்கிறது என்றும் பார்க்கலாம்.


இப்போராட்டங்கள் மக்களின் ஒன்றிணைந்து செயல்படும் எழுச்சி உணர்வுக்கு ஒரு ஊக்கமாக, நாளைய போராட்டங்களுக்கு மாதிரியாக இருக்கும் என்பதில் நிச்சயம் மறுப்பில்லை. கடந்த சில பத்தாண்டுகளில் நடந்த எழுச்சிகளில் உடனடி வெற்றி பெறும் ஒரே போராட்டம் என்ற முறையில் ஒரு நிறைவளிக்கும் அரசியல் நிகழ்வு இது. ஒ.பி.எஸ்ஸும் கோலடித்தால் என்ன இறுதி நொடிக்கு சற்று முன்னால் வரை மக்களும் ஆடினார்களே. நமக்கு அது போதும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...