முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுகுமாரன் எனும் கடைசி நவீனத்துவர்

Image result for சுகுமாரன்

இவ்வருடத்துக்கான இயல் விருது பெறும் சுகுமாரனுக்கு வாழ்த்துக்கள்!
தமிழின் எல்லா சிறந்த கவிஞர்களுக்கும் ஒரு தனித்துவமான மொழி உண்டு. ஆனால் இந்த மொழி வெறும் மொழி அல்ல. அது ஒரு அணுகுமுறை, வாழ்க்கைப்பார்வை, நிலைப்பாடு. தமிழின் இறுக்கமான குறியீட்டு, படிமக் கவிதை உலகில் சுகுமாரன் நேரடியான (plain) கவிதைகளுடன் தோன்றினார். எண்பதுகளின் இறுதியில் துவங்கி தொண்ணூறுகளில் மறைபொருளுடன், அரூபமான கேள்விகளுடன் திரிந்த கவிஞர்கள் மத்தியில் அவர் காட்டன் சேலையில் தோளில் சிறு தோல்பையுடன் சரியான சில்லறையை எண்ணியபடி பேருந்து நிலையத்தில் நிற்கும் நிற்கும் ஒரு பெண்ணைப் போல் தோற்றமளித்தார். தனது வெறுமையை, தனிமையை, இச்சையின் தீராத தகிப்பை, உண்மைத் தேடலை, அதற்கான முடிவற்ற தவிப்பை பற்றி தன்னிலையில், வாசகனை எதிர்முனையில் வைத்து பேசும் தோரணையுடன் எளிய சொற்களுடன் பேசினார்.

சுகுமாரனின் plain poetryக்கு அமெரிக்க ஆங்கில கவிதையுலகில் வால்ட் விட்மேன், எமிலி டிக்கன்ஸன் போன்று முன்னோடிகள் உண்டு. அமெரிக்க புனைவு எழுத்து, அதன் கலாச்சாரம், மதம், வாழ்க்கைமுறை என ஒவ்வொன்றுமே நேரடியான, அன்றாட பௌதிக உலகின் எளிமையை புலப்படுத்தும் plain ஸ்டைலை கொண்டது தான். ஜீன்ஸ் பேண்ட் அவர்களின் பண்பாட்டின் ஒரு உச்ச குறியீடு. இதுவே பின்னர் கச்சிதமான, உணர்ச்சிகளற்ற ஹெமிங்வேயின், ரேமண்ட் கார்வரின் பத்திரிகை அறிக்கை-பாணி எழுத்தாக பரிணமித்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்பான வெறுமை, அந்நியமாதல், தனிமையை பேச இந்த ஸ்டைல் அவர்களுக்கு கச்சிதமாக அமைந்தது. ஐரோப்பிய நவீனத்துவம் என இந்த எழுத்தை இன்று அடையாளப்படுத்துகிறோம். தமிழிலும் இப்படியான வெறுமையும் அவநம்பிக்கையும் தேச விடுதலைக்கு பின்பான மூன்று பத்தாண்டுகளில் மெல்ல மெல்ல தோன்றி வளர்ந்தது. காந்திய லட்சியவாதத்தை நம்பி பின்னர் அதனால் கைவிடப்பட்ட ஒரு தலைமுறையினர் (புதுமைப்பித்தன், சி.சு செல்லப்பா போல்) நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடைப்பட்டு தவித்தனர். இவர்கள் தமிழ் நவீனத்துவத்தை ஏற்படுத்தினர். இவர்களுக்கு அடுத்தது சு.ராவின் தலைமுறை. இவர்கள் காந்தியின் இடத்தில் மார்க்ஸை வைத்து கைதொழுதனர். ஆனால் மார்க்ஸும் கைவிட்டார். ஆக இவர்களும் நம்ப கொள்கைகள் ஏதுமின்றி வெறுமையில் தவித்தனர். இவர்களுக்கு அடுத்த தலைமுறையின் இறுதி நவீனத்துவர்கள். சுகுமாரனின் தலைமுறையினர்.
இறுதி நவீனத்துவர்கள் மார்க்ஸின் இடத்தில் வைக்க ஏதுமில்லாததால் அவநம்பிக்கையையே கடவுளாக நிறுவி வணங்கினர். வெறுமையை அரிச்சுவடியாக கற்று வளர்ந்தனர். “எனக்கு வெளியே தேட ஏதும் இல்லை, நான் நொறுங்கிப் போனவன்” என அறிவித்தனர். பற்றிக் கொள்ள உண்மையின் ஒரு நிழலாவது போதும் என வறண்ட கண்களுடன் பொசுங்கும் வெயிலில் நடந்தனர். மணமாலை சூடும் சில நிமிடங்களுக்கு முன்பு தன் “காதலியை” மீள முடியாதபடி இழந்தவனின் மனநிலை இது. அவருக்கு முந்தைய தலைமுறையினர் லட்சியம் எனும் காதலியை நம்பி ஏமாற்றமடைந்திருந்தனர். ஆனால் சுகுமாரனின் தலைமுறையினர் அந்த பெண்ணை கண்ணெடுத்து பார்த்தது கூட இல்லை. அவள் விட்டு சென்ற தடங்களும், வாசனைகளும், நினைவுகளும் மட்டுமே அவர்களுக்கு எஞ்சின. இந்த செவன் ஜி ரெயின்போ காலனி தான் சுகுமாரனின் உலகம். அதனால் தான் அவர் தொடர்ந்து பயணங்களை உருவகமாய் தன் கவிதைகளில் கொண்டு வருகிறார். இந்த பயணங்கள் இலக்குகளோ வரைபடங்களோ அற்றவை. அவர் கவிதைகள் பனிமூட்டமான பாதையில் திக்கற்று நடக்கும் மஜ்னுவின் “பயணியின் சங்கீதங்கள்” ஆயின.
முந்தைய தலைமுறையின் லட்சியவாத எச்சங்கள் ஏதுமின்றி சுகுமாரன் ஒரு வெட்டவெளியை கண்டடைந்தார். அந்த வெட்டவெளிக்கான சன்னமான, காகிதப்பூ மொழி ஒன்றை உருவாக்கினார். இந்த மொழியில் தனது சமகாலத்து இறுதி நவீனத்துவர்களுக்காக பல முக்கியமான கவிதைகளை அவர் எழுதினார். சுகுமாரனின் plain poetry வெகுவான கவனம் பெற்றது. அவரது வாரிசாக தோன்றியவர் தான் மனுஷ்ய புத்திரன். ஒருவிதத்தில் சுகுமாரனின் சற்றே “பருமனான” இரட்டை என மனுஷ்ய புத்திரனை கருதலாம். அவர் சுகுமாரனின் கவிதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றார். சுகுமாரன் உருவாக்கிய இந்த தனிப்பாதை தமிழ் கவிதைக்கு அவரது முக்கிய பங்களிப்பு.
தமிழின் சிறந்த உரைநடையாளர்களில் ஒருவராக சுகுமாரனை நிச்சயம் சால்வை போர்த்தலாம். அவரது துல்லியமான, பிசிறற்ற, சரளமான, காட்சிபூர்வமான மொழி நிறமற்ற வோட்காவை போன்றது. சுகுமாரன் உரையில் கருத்து, உணர்ச்சி ஆகியவற்றை விட ஸ்டைலுக்கு அதிகம் முக்கியவத்துவம் கொடுப்பார். நினைவேக்கம், போதாமை, கசப்பு, ரொமாண்டிக்கான மயக்கம் போன்ற உணர்வுநிலைகளை தன் உரையில் பிரதிபலிக்க அவரால் இயன்றது. “உயிர்மையில்” அவர் எழுதிய பத்திகளை நான் நினைவுகளில் பலமுறை உருப்போட்டிருக்கிறேன். எதன் மீது பாய்கிறதோ அதன் நிறத்தை பெறும் தண்ணீர் மொழி அவருடையது. ஒரு இலக்கிய விமர்சகராக அவர் (”பேசும் படத்தில்” வரும் அந்த வில்லனைப் போல்) இந்த தண்ணீர் மொழியை உறைய வைத்து கூர்மையான பனிக்கத்தியாக்கினார். விமர்சனங்களுக்கு பின்புள்ள அவரது கூர்மையான தர்க்கம், கருத்துக்களை பின்னி ரிப்பன் போட்டு விடும் மிடுக்கும் வியக்கத்தக்கவை. ஏனென்றால் அரிதாகத் தான் கவிஞர்கள் நல்ல உரைநடையாளர்களாக இருப்பார்கள். அதிலும் மிக மிக அரிதாகத் தான் அவர்கள் சிறந்த விமர்சகர்களாகவும் இருப்பார்கள். சுகுமாரன் அப்படி விரல்விட்டு எண்ணத்தக்கவர்களில் ஒருவர்.
சுகுமாரனின் முதல் நாவலான “வெல்லிங்டன்” அவரது கவிதைகளின் மைய உருவகமான பயணத்தை எடுத்துக் கொண்டு கச்சிதமாக அமைந்தது. எம்.டியின் “மஞ்ஞு” (பனிமூட்டம்) நாவலை போன்று கதையின் மையத்தை ஒரு மனநிலையாக மாற்றி சொற்சித்திரங்கள் வழி ஒவ்வொரு பக்கத்திலும் உலவ விடும் படைப்பு அது.
இது, போக சுகுமாரன் ஏகப்பட்ட (மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து) மொழியாக்கங்கள் செய்திருக்கிறார். தன் ஆசான் சு.ராவை போன்றே தன்னையும் எழுத்தின் எல்லா தளங்களிலும் சுணங்காமல் பங்களிக்கும் ஒரு ஆளுமையாக சுகுமாரன் வடித்திருக்கிறார். அவரால் இயல் விருதுக்கு நிச்சயம் பெருமை தான்.

நன்றி: உயிர்மை, ஜனவரி 2017

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...