Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சமிஸ்கிருதம் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

Image result for அர்ச்சகர்

சமிஸ்கிருதம் நேரடி மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி. ஆனாலும் அது ஏன் திருமண நிகழ்வுகளில், கோயில் சடங்குகளில் முக்கிய இடம் பெறுகிறது? ஏன் நாம் அதற்கு பதிலாக தமிழை பயன்படுத்துவதில்லை? தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்கள் அடிக்கடி கோபமாய் கேட்கும் கேள்வி இது. சமீபத்தில் “வந்தேறி மாடு” பேஸ்புக் பக்கத்தில் இக்கேள்வி எழுப்பப்பட வழக்கம் போல் கும்மியடித்தார்கள். ஒரு பக்கம் இது வடமாநில சதி என்றும் இன்னொரு பக்கம் சமிஸ்கிருதம் ஒரு சக்தி வாய்ந்த மொழி என்றும் சில வாதிட்டார்கள். இந்த விவாதம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இப்படி ஒரே தேய்ந்த தடத்தில் செல்வது காண வியப்பாக உள்ளது.

 சமிஸ்கிருதத்தை இங்கு தொடர்ந்து மத்திய வர்க்கமும் மேல் மத்திய வர்க்கமும் சில குறிப்பிட்ட சந்தர்பங்களில் பயன்படுத்தி வருகிறது. மக்கள் அதற்கு ஒரு மதிப்பை கொடுக்கிறார்கள். சமிஸ்கிருத ஸ்லோகம் தெரிந்தவர்களுக்கு அதுவே ஒரு தொழிலாகவும் இருக்கும் அளவுக்கு அதற்கு ஒரு பயன்மதிப்பு உள்ளது. தமிழ் தேசியவாதிகள் கேட்கும் இக்கேள்வியை ஏன் பொதுமக்கள் கேட்கவில்லை என நாம் யோசிக்க வேண்டும். நான் எப்போதும் நம்பும் ஒரு விசயம் என்னவென்றால் “பொதுமக்கள் முட்டாள்கள் அல்ல.” பொதுமக்கள் தீவிரமாய் நம்பி ஏற்கும் எதிலும் மனித மனம் பற்றின ஒரு உண்மை இருக்கும். அது அரசியல்ரீதியாய் ”சரியாக” இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் உண்மை இருக்கும்.
சமிஸ்கிருதத்துக்கு போகும் முன் நாம் ஆங்கிலத்துக்கு வருவோம். ஒரு நண்பர் சமீபத்தில் என்னை அழுத்தம் திருத்தமாய் “ஐயா” என்று அழைத்தார். எனக்கு அது ஒரு கூச்சத்தை, மனவிலக்கை ஏற்படுத்தியது. அச்சொல்லுடன் என்னால் இணங்க முடியவில்லை. ஏன்? பொதுவாகவே தீவிர இலக்கிய பரப்பில் “ஐயா” பயன்படுத்துவதில்லை. வயதில் மூத்தவர்களை கூட பெயர் சொல்லி அழைப்போம். பெயர் சொல்லி அழைப்பது மரியாதை அல்ல எனத் தோன்றினால் “சார்” என்று அழைப்போம். ஐம்பதுகளில் இருந்தே தமிழ் தேசிய பண்பாட்டை ஒருவித ”மொழி வெறி” என தீவிர இலக்கியவாதிகள் நம்பி வருகிறார்கள். அதனாலே அவர்கள் “ஐயாவுக்கு” பதில் “சார்” என்பதை ஏற்றார்கள். இதில் ஒரு காலனியவாத எச்சம் உள்ளது என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் அப்படி ஒன்றுமில்லை. அது ஒரு மாற்றுச்சொல் அவ்வளவு தான். ஆனால் முக்கியமாய், இச்சொல்லின் பின்னே ஐம்பது வருட வரலாறு உள்ளது. மொழியையும் இன அடையாளத்தையும் வழிபட வேண்டும் எனும் அரசியலை ஏற்காமல் நீங்கள் “ஐயாவை” ஏற்க முடியாது.
இந்த “சார்” என்பதற்கு பின்னால் இன்னொரு நுணுக்கமும் உள்ளது. அச்சொல்லில் ஒரு அந்நியத்தன்மை உள்ளது. எது அன்னியமாய் படுகிறதோ அதில் மரியாதையும் அதிகாரமும் உள்ளது. இது ஒரு அடிப்படை உளவியல். எது ஒன்று எளிதில் அணுக முடியாததோ அது அதிகாரம் மிக்கது. உ.தா., உங்கள் நண்பர் ஆளுங்கட்சி பிரமுகர் அல்லது எம்.எல்.ஏ என்றால் அவரை நேரே வீட்டுக்கு சென்று அறைக்குள் புகுந்து பார்க்க முடியாது. அவர் மந்திரி என்றால் அவர் வீட்டு வாசலை சுலபத்தில் தாண்ட முடியாது. அவர் முதல் மந்திரி என்றால் அவர் வீட்டு தெருவுக்குள் சுலபத்தில் நுழைய முடியாது. அதிகாரம் அதிகமாக அவருடனான அணுக்கமும் குறையும். குறைய வேண்டும். இல்லாவிடில் அதிகாரம் குறைந்து விடும். அடுத்த தேர்தலில் அவர் தோற்று, ஆனால் கட்சி ஜெயித்து விட்டால் அவரை போனில் அழைத்து அனுமதி பெற்று சுலபத்தி பார்க்கலாம். அவர் கட்சியும் தோற்று விட்டால் அவரை நீங்கள் நேராகவே வீட்டுக்கு சென்று அருகில் உட்கார்ந்து பேச முடியும்.
 ஏன் உயரதிகாரிகள் உதவியாளர்களை வைத்துக் கொள்கிறார்கள்? ஏன் ஒரு அலுவலகத்தில் சிலருக்கு மட்டும் தனி அறை அளிக்கப்படுகிறது? அதுவும் நவீன அலுவலகங்களில் இது கண்ணாடி அறை. இந்த அறைக்குள் அவரை நீங்கள் பார்க்கலாம். அவரும் உங்களைப் பார்க்கலாம். அப்படி என்றால் அந்த அறையின் பயன் என்ன? அது ஒரு குறியீடு. நீங்கள் அவரிடம் இருந்து விலகி இருக்கிறீர்கள் என்பதற்கான குறியீடு. அப்படி இருப்பதனால் தான் அவர் அதிகாரம் தக்க வைக்கப்படுகிறது. (இந்த விசயங்கள் எல்லாம் வசதி கருதி என்பது புருடா.) இன்றைய தொழில்நுட்பங்கள் கொண்ட ஒருவர் உதவியாளர் இன்றியே எல்லா வேலைகளையும் சமாளிக்கலாம். ஆனால் உதவியாளர் தருகிற அந்தஸ்தை தொழில்நுட்பம் தராது. என்னுடைய ஆங்கில பேராசிரியர் செரியன் குரியன் உயரதிகாரிகளுக்கு அளிக்கப்படும் அதிக சம்பளமே இந்த அதிகாரத்தை உருவாக்கத் தான் என்பார். இதை நான் ஜெயின் கல்லூரியில் பணி புரியும் போது உணர்ந்திருக்கிறேன். அங்கு நிறைய மார்வாரி பையன்கள் வருவார்கள். அவர்கள் சொல்வார்கள் “சார் நீங்கள் ஒரு மாதம் சம்பாதிக்கிறதை நான் ஒரே வாரத்தில் சம்பாதித்து விடுவேன்.” நீங்கள் அபார அறிவு படைத்தவர் என்றால் மட்டுமே அவர்கள் உங்களை விதிவிலக்காய் மதிப்பார்கள். இதற்காகத் தான் அரசு இன்று உதவி பேராசிரியர்களின் சம்பளத்தை அரைலட்சமாய் வைத்திருக்கிறது. பணம் என்பது பணம் மட்டுமே அல்ல.
சமிஸ்கிருதமும், ஆங்கிலமும் இப்படியான ஒரு கண்ணாடி அறை, ஒரு உதவியாளர், அரை லட்ச சம்பளம். எது ஒன்று சுலபத்தில் அணுகக் கூடியதோ அதில் அதிகாரம் இருக்காது. கடவுள் நம்மால் சுலபத்தில் அணுக முடியாது ஒரு அதிகாரப் புள்ளி; ஒரு மறைபொருள்; மாயை. அப்படியான கடவுளை கொச்சை தமிழில் அழைத்து வேண்டிப் பாருங்கள். உங்களுக்கே அவலமாய் தோன்றும். சரி தமிழில் அழைப்பதென்றால் கூட சுலபத்தில் புரியாத, அல்லது அன்றாட புழக்கத்தில் இல்லாத தமிழில் தான் அழைக்க வேண்டும். அதனால் தான் திருப்பாவையை கோயிலில் பாடலாம். கடவுள் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையை பாட முடியாது.
”இந்த அதிகாரத்தை உடைக்கத் தான் நாங்கள் தமிழில் மந்திரம் ஓத விழைகிறோம்” என்று நீங்கள் கோர முடியாது. ஏனென்றால் கடவுள் என்றாலே அதிகாரம் தான். அதை உடைக்க முடியாது. தமிழ் மந்திரம் கூட மக்கள் அன்றாடம் பயன்படுத்தாத புராதனத் தன்மை கொண்டதாய் இருந்தால் மட்டுமே அது எடுபடும்.
மக்கள் ஏன் ஒரு “செத்த மொழியை” கோயிலில் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதன் உளவியல் அவர்களுக்கு உள்ளுணர்வு ரீதியாய் தெரிந்திருக்கிறது. ஆனால் அதை கேள்வி கேட்கும் உங்களுக்கு புரியவில்லை.

பின்குறிப்பு 1: கடவுளின் அதிகாரத்தை உடைக்க ஒரே வழி மிகவும் கொச்சையாய், தத்துபித்தென்ற உளறல்களாய் கடவுளிடம் பிரார்த்திப்பது. கிறித்துவத்தின் ஒரு பிரிவில் இந்த முறை உள்ளது. பெந்தேகோஸ்துகள் உணர்ச்சிகரமாய் மட்டுமே கடவுளை அணுக முடியும் என நம்புகிறார்கள். சூபிகளும் அவ்வாறு தான். அவர்கள் அழுது பாடுகிறார்கள். கடவுளை உடலுறவு கொள்ளும் பெண் அளவுக்கு அந்தரங்கமாய் எதிர்கொள்ள முயல்கிறார்கள். மொழி முழுக்க தோற்றுப் போகும் இடம் அது. அங்கு நிச்சயம் அதிகாரம் இல்லை. ஆனால் இது மைய நீரோட்ட சமூகத்தில் ஏற்கப்படாது. உதிரி மார்க்கமாய் மட்டுமே இருக்க முடியுமே. “டேய் தெய்வமே, என் உயிரே” என்று எல்லா பக்தர்களும் அழைக்க முடியாது.


பின்குறிப்பு 2: தொண்ணூறுகளில் ஏ.ஆர் ரஹ்மானின் பல பாடல் வரிகள் புரியாது என்றொரு குற்றச்சாட்டு இருந்தது. அது என்ன “முக்காலா முக்காபுலா, சொக்காலா சொக்காபுலா”? ஆனால் புரியாத சொற்களை இசையில் பயன்படுத்துவதில் ஒரு அந்நியத்தன்மை, ஸ்டைல், விசித்திரம் உள்ளது. அதையும் மக்கள் ரசித்தார்கள். இளையராஜாவின் இனக்குழு அடையாளங்கள் பதிந்த தமிழ்த்தன்மை மிகுந்த இசையை அகற்றி புது சுவையை உருவாக்க ரஹ்மான் நிறைய முயன்றார். புதுபுது இசைக்கருவிகள், அயல் இசை கோர்வைகள், வித்தியாசமான குரல்கள் கலந்து பரிசோதனையை இசையை உருவாக்கினார். ராஜாவின் இசை கேட்ட இசை என்றால் ரஹ்மானின் இசை கேட்காத இசை. அதற்கு புரியாத சொற்களும் அன்று பயன்பட்டன. இசையில் எப்போதும் சொற்களுக்கு அர்த்தம் விளங்க வேண்டியதில்லை என அவர் அறிந்திருந்தார். சொற்களின் ஒலி அவற்றின் அர்த்ததத்தை விட முக்கியம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...