Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மறைந்து வாழும் மதவாதம்


Image result for modi rss flagImage result for ambedkar

இன்றைய ஆங்கில ஹிந்துவில் சஞ்சய் ஹெக்டெ அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்ட பசுவதையை குற்றமாக்கும் சட்டப்பிரிவை பற்றி ஒரு நடுப்பக்க கட்டுரை எழுதியிருக்கிறார். முக்கியமான விவாதம் இது. அம்பேத்கர் தனிப்பட்ட முறையில் பசுவை புனிதமாக்குவது தீண்டாமையை வலுப்படுத்தும் செயல் என நம்பியவர். அவர் அதை தன் The Untouchables: Who Were They and Why They Became Untouchables? என்ற நூலிலும் பதிவு செய்கிறார். மாட்டுக்கறி உண்பதே தலித்துகள் மீதான குற்றச்சாட்டாக வைத்து அவர்களை பிராமணர்கள் தீண்டத்தகாதோர் ஆக்கினார்கள் என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கர் தான் இயற்றிய சட்டத்தின் முதல் வடிவில் பசுவதை சட்டத்தை சேர்க்கவில்லை. அவர் அப்படி ஒரு சட்டத்துக்கு அடிப்படையில் எதிரானவர். ஆனால் 1948ஆம் வருடம் அரசியல் சட்டமைப்பின் மீது நடந்த பாராளுமன்ற விவாதங்களில் வலதுசாரிகள் பசுவதை சட்டத்தை சேர்க்க வேண்டும் என வாதிடுகிறார்கள். ஆச்சரியமாக அம்பேத்ர்கர் இவர்களை கடுமையாய் எதிர்த்து வாதிடவில்லை. ஆனால் பசுவதையை மத நம்பிக்கையின் பெயரில் குற்றமாக்க முடியாது என மறுக்கிறார்.



உடனே வலதுசாரிகள் விவசாயத்தில் மாட்டுக்கு உள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இந்திய தேசத்தின் பொருளாதாரத்தை தக்க வைக்க மாடுகளை பாதுகாப்பது அவசியம் என வாதிடுகிறார்கள். இந்த கோணத்தில் மாட்டைக் கொல்வதை தண்டனைக்குரிய செயலாக்கும் சட்டப்பிரிவு 48 உருவாக்கப்படுகிறது.


பொருளாதாரத்தின் போர்வையில் நம் அரசியலைமைப்பு சட்டத்திற்குள் புகுந்த மதவாதம் இந்த சட்டப்பிரிவு. இதை அம்பேத்கரும் உணர்ந்திருப்பார். ஆனால் அவர் இதை ஏன் கடுமையாய் அப்போதே எதிர்க்கவில்லை என்பது முக்கியமான கேள்வி. ஒருவேளை இந்த சட்டப்பிரிவு இராவிட்டால் கடந்த பத்தாண்டுகளில் மாட்டின் பெயரில் மக்கள் அடித்து கொல்லப்படுவதும் கலவரங்கள் நடத்தப்படுவதும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஏன் அம்பேத்கர் ஒரு நச்சுப்பாம்பை நசுக்காமல் உள்ளே அனுமதித்தார்?


அம்பேத்கர் அரசியல் சட்டமைப்பை உருவாக்கியவராக முடிந்தளவு புறவயமாய், நேர்நிலையாக செயல்பட முயன்றிருக்கிறார். அதனாலே பிற மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கு செவிசாய்த்திருக்கிறார். ஒரு சிந்தனையாளனாக, அரசியல்வாதியாக, எழுத்தாளனாக அவர் தன் கருத்துக்களை துணிச்சலாய் முன்வைத்தார். ஆனால் அரசியல் சட்டமைப்பை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு அவர் தலையில் வைக்கப்பட்ட பின் அவரால் அதே துணிச்சலை, மூர்க்கத்தை காட்ட முடியவில்லை. அவர் அனைவருக்கும் பொதுவான ஒரு நபராக இருக்க தலைப்பட்டார். அதனாலே அவர் காவித் தலைவர்களுக்கும் செவி சாய்க்க வேண்டி வந்தது. வரலாற்று பொறுப்பு என்பது பல சமயங்களில் நம்மை விரும்பாத காரியங்களையும் செய்ய வைக்கக் கூடியது.


அம்பேத்கர் மதசார்பற்ற தேசத்துக்கான அடிப்படையை உருவாக்கினார். ஆனால் அவரால் கூட அரசியலில் இருந்து முழுக்க மதத்தை ஒழித்துக்கட்ட முடியவில்லை. ஏனென்றால் நம் சட்டப்பிரிவுகள் முகமூடி அணிந்து ஏமாற்றுபவை. அவற்றை உள்நோக்கத்துடன் வளைக்க முடியும். சட்டப்பிரிவு 123 மதம், சாதி ஆகிய அடையாளங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்கிறது. ஆனால் நம் அரசியல் கட்சிகளால் சாதியை பயன்படுத்தாமல் மக்களை திரட்டவே முடியாது. தொண்ணூறுகளில் பா.. ராமர் கோயில் விவகாரத்துடன் எழுச்சி பெற்றது. ஒரு மதத்தின் பிரதிநிதியாக தன்னை முன்வைக்காமல் மோடி இந்தளவு வளர்ந்து பிரதமர் ஆகியிருக்க முடியாது. 1992இல் இவ்வாறு தேர்தலின் போது மதவாதத்தை பயன்படுத்தி வென்றவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ஜெ.எஸ் வர்மா ஹிந்துத்துவா என்பது வாழ்வியல் நெறி. அது மதம் அல்ல என கூறினார். இது போன்ற விசித்திரமான அர்த்தப்படுத்தல்கள் சாத்தியமாகும் போது எப்படியான சட்டம் வந்தாலும் பயன்படாது.


மதத்தின் அடிப்படையில் ஒரு கட்சி அமையக் கூடாது (மதச்சடங்குகளில் ஒரு பிரதமர் பங்கேற்க கூடாது, மதத்தின் நிறத்தையோ சின்னத்தையோ கொடியில் பயன்படுத்தக் கூடாது, மதத்தின் தொன்மங்களையோ மொழியையோ பயன்படுத்தக் கூடாது, சாமியார்கள் அரசிய்லில் ஈடுபடக் கூடாது ) என மிகக்கடுமையான தடை ஒன்று அம்பேத்கர் கொண்டு வர விரும்பியிருப்பாரா? இருக்கலாம். ஏனென்றால் அவர் காலத்திலே ஆர்.எஸ்.எஸ் தாய் அமைப்பினர் மதத்தின் பெயரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். காந்தியின் படுகொலையில் அவர்களின் சதி இருந்ததாய் கூறப்பட்டது. அன்றைய காங்கிரசுக்குள் பல ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் இருந்ததாய் ராமசந்திர குஹா தன் நூலில் (காந்திக்கு பின் இந்தியா) எழுதுகிறார். ஆக, மதவாதம் அரசியலில் கலப்பதன் சிக்கலை அவர் அறிந்திருப்பார். ஆனால் அவரால் மதவாதத்தை முழுக்க அரசியலில் இருந்து தடை செய்யும் ஒரு சட்டப்பிரிவு உருவாக்கி செயல்படுத்தி இருக்க முடியுமா என்பது சந்தேகமே. அதற்கு கடுமையான எதிர்ப்பை காங்கிரசில் உள்ள வலதுசாரிகள் தெரிவித்திருப்பார்கள். (வல்லபாய் பட்டேலின் லாபியிங் காரணமாய் தான் ஆர்.எஸ்.எஸ் மீதான தடை பின்னர் காங்கிரசால் நீக்கப்பட்டது.)


அதே போல் இந்த அரசியலமைப்பு சட்டத்தின் இன்னொரு சிக்கல் மிதமிஞ்சிய அதிகாரத்தை பிரதமர், முதல்வர் போன்றோருக்கு அளிப்பது; மைய அரசின் கைப்பாவையாக மாநில அரசை மாற்றியது இந்த மையவாத அதிகாரம். இதற்கு அனுகூலமாக ஆளுநர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. அதிகாரம் முழுக்க உங்களுடையது அல்ல, இந்த வீட்டின் உரிமையாளர் நான் தான் என மாநில அரசுக்கு அவ்வப்போது உணர்த்துவது போல் அமைந்தது ஆளுநர் பதவி. மாநில அரசின் அரசியல் நகர்வுகள், உட்கட்சி எதிர்ப்புகள் பற்றி மைய அரசுக்கு தொடர்ந்து செய்திகள் அனுப்புவது, மாநில அரசை கவிழ்க்கும் சதித்திட்டங்கள் தீட்டுவது தான் ஆளுநரின் பணி. ஆளுநர் என்பவர் ஒரு கௌரமான ஒற்றர் படை தலைவர். இந்தியாவில் இதுவரை தானாகவே அரசுகள் கவிழ்ந்ததில்லை. மத்திய அரசின் தூண்டுதலால், ஆளுநரின் ஒருங்கிணைப்புகளால் தான் அரசுகள் கவிழ்கின்றன. ஆக அரசு கவிழ்ந்தால் ஆட்சியை கையில் எடுக்க ஆளுநர் எனும் வாதம் பிழையானது. ஆளுநர் இல்லாவிட்டால் ஆட்சியே கவிழாது. இந்த பதவி ஒரு அதிகார துஷ்பிரயோக மார்க்கம் என அம்பேத்கர் யோசிக்கவில்லையா?


இந்த சட்டங்களை அம்பேத்கர் எழுதி 27 வருடங்களில் இந்திரா காந்தி இதே சட்டத்தை பயன்படுத்தி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். ஏன் இத்தகைய ஒரு அதிகாரம் ஒரு தனிநபருக்கு கிடைக்கும் விதமாய் அம்பேத்கர் இயற்றினார்? அன்றைய காலத்தில் இந்தியா துண்டுதுண்டாய் சிதறிப் போகும் நிலை இருந்தது. அல்லது அப்படி ஒரு அச்சம் இருந்தது. அதே போல் சமூகம் முழுக்க கல்வி பெற்று, அறிவியல் பொருளாதார வளர்ச்சி பெறும் வரை ஒரு வலுவான (கிட்டத்தட்ட சர்வாதிகார வலிமை கொண்ட) அரசு தேவை என அம்பேத்கர் நம்பி இருக்கலாம். அல்லது அப்படி நம்பியவர்கள் அவர் மீது கடும் அழுத்தம் செலுத்தி இருக்கலாம். விளைவாக நெருக்கடி நிலை, ஆளுநர் பதவி போன்ற மைய அரசு அதிகார துஷ்பிரயோகங்களுக்கு இடம் அளிக்கும் சட்டப்பிரிவுகளை அவர் அனுமதித்தார்.


அம்பேத்கர் ஒரு நடுநிலையாளராக இருந்ததன் விளைவே மதவாதமும் சர்வாதிகாரமும் இங்கே தலைதூக்க வித்திட்டது. ஆனால் அவர் இடத்தில் ஒரு முழுமையான வலதுசாரி இருந்து நம் சட்டங்களை இயற்றியிருந்தால் என்னவாகி இருக்கும் யோசியுங்கள். பாகிஸ்தான் போல் நம் தேசம் ஒரு ஹிந்துஸ்தான் ஆகியிருக்கும். அந்த விதத்தில் அம்பேத்கர் கையில் சட்டம் இயற்றும் பொறுப்பு சென்றது நம் அதிர்ஷ்டம் தான். அம்பேத்கரால் முழுமையாக அம்பேத்கராக இருக்க இயலவில்லை என்பது தான் துரதிஷ்டம்!


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...