முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எண்டமூரி வீரேந்திரநாத் – துளசி தளம்

Image result for எண்டமூரி வீரேந்திரநாத் துளசி தளம்

எனக்கு வணிக நாவல்கள் படிப்பதில் தனி ஆர்வம். தட்டையான மொழி, மிகையான சித்தரிப்பு, லாஜிக் சொதப்பல்களை மீறி அந்நாவல்களின் செண்டிமெண்டுகள், அவற்றில் பொதுமக்களின் உளவியல் தெரியும் விதம், வடிவம் ஆகியற்றை கவனிக்க பிடிக்கும். நேற்று அப்படித் தான் எண்டமூரி வீரேந்திரநாத்தின் “துளசி தளம்” என்ற பேய் / திகில் நாவல் படித்தேன். மூன்னூற்று சொச்சம் பக்கங்கள். ஆனால் அரைநாளில் படிக்கும் விதம் விருட்டென்று பறக்கும் கதை.

 நாயகன் ஒரு பெரிய நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருக்கிறான். மனைவி, ஒரு குழந்தை (துளசி) என நிம்மதியான வாழ்க்கை. அவன் ஒரு தர்க்கவாதி; மந்திர தந்திரங்களை மூடநம்பிக்கை என ஒதுக்குபவன். அவனுக்கு ஒரு அதிர்ஷ்டம் வாய்க்கிறது. நிறுவனத்தின் முதலாளி வெள்ளைகாரர். அவர் தன் சொந்த நாட்டுக்கு திரும்ப முடிவெடுக்கிறார். இந்திய சட்டப்படி அவர் தன் சொத்துக்களை எடுத்து செல்ல முடியாது. அவர் அதை சட்டத்தை மீறி எடுத்துப் போக நம் நாயகன் உதவ மறுக்கிறான். இதனால் முதலாளி ஒரு காரியம் செய்கிறார். பல லட்சங்களை (இக்காலத்தில் பல கோடிகள்) நாயகனின் குழந்தை மீது எழுதி வைக்கிறார். அவளுக்கு பத்து வயது பூர்த்தியாகும் போது முழுப்பணத்துக்கும் அவள் அதிபதி. ஆனால் அதற்கு முன் அவள் இறந்து போனால் பணம் முழுக்க ஒரு அனாதை ஆசிரமத்துக்கு போய் விடும். இந்த ஆசிரமத்தை நடத்தும் சாமியார் ஒரு போலி. அவரும் இரு அடியாட்களுமாய் சொத்துக்காக குழந்தை துளசியை கொல்ல முடிவெடுக்கிறார்கள். அதற்காக ஒரிசா மாநிலத்திற்கு சென்று ஒரு மந்திரவாதியை அமர்த்துகிறார்கள். அவன் குழந்தையை கொல்ல ஒரு தீவினையை ஏவுகிறான். நாயகனின் வேலைக்காரன் ராமைய்யா இதை அறிந்து மற்றொரு மந்திரவாதியின் உதவியுடன் சூனியத்தை முறியடித்து ஏவியவனையே அது சென்று தாக்கும்விதம் செய்கிறான். ஏவிய மந்திரவாதி துடிதுடித்து செய்கிறான். அவனது குரு ஒரு படுபயங்கர மந்திரவாதி. பல நூறு ஆண்டுகளாய் யாராலும் இயலாத வித்தைகளை சாதித்தவர். அவர் காஷ்மோரா என்றொரு பூதத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதை அவர் துளசி மீது ஏவுகிறார். 21 நாட்களில் குழந்தை பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகி செத்து விடும். இதை ஆரம்பத்தில் நம்ப மறுக்கும் நாயகன் இறுதியில் குழந்தையின் கடைசி நாளன்று நம்பி ஏற்கிறான். அவன் அலைந்து திரிந்து ஒரு பக்கிரியை கண்டுபிடித்து அவரிடம் காஷ்மோராவை தடுத்து நிறுத்தும் முறையை கேட்டறிகிறான். அவர் அளிக்கும் செப்புத்தட்டுடன் ஒரிசா சென்று மந்திரவாதியை எதிர்கொண்டு அவர் துளசியின் மூச்சைப் பறிக்கும் இறுதி வித்தையை நடத்துமுன் அவரைத் தடுத்து செப்புத்தட்டால் அடிக்கிறான். கீழே சரியும் அவன் பற்கள் உடைந்து ரத்தம் சிந்துகிறான். காஷ்மோராவை ஏவியவன் தன் குருதியை பார்க்கக் கூடாது என்பது நம்பிக்கை. அவ்வாறு பார்த்தால் காஷ்மோராவை அதிருப்தியாகி விடும்; பேய்கள் ஒன்றாய் சேர்ந்து மந்திராதியின் ரத்தத்தை குடித்து கொன்று விடும். அவ்வாறே நடக்கிறது. மந்திரவாதி துடிதுடித்து இறக்கிறான். துளசி தப்பிக்கிறாள்.
இனிமேல் தான் ஒரு திருப்பம் வருகிறது. குழந்தையை மரணத்தின் விளிம்பு வரை தள்ளிய நோய் சூனியத்தால் ஏற்படவில்லை; ஒரு கருவி மூலம் ஹிப்னாடிஸ அதிர்வுகளை குழந்தைக்குள் பாய்ச்சியதனாலே இவ்வாறெல்லாம் நடந்தது என ஒரு உளவியலாளர் கண்டறிகிறார். இந்த அறிவியல் சதியை செய்தது அனாதை ஆசிரமத்தின் உரிமையாளரும் அவரது உதவியாளரான வேலைக்காரன் ராமைய்யாவும் எனும் ”படுபயங்கர” திருப்பமும் அடுத்து வருகிறது. குழந்தையின் உடலில் ஒரு தாயத்து கட்டப்பட்டுள்ளது. அது தான் ஹிப்னாடிஸ கருவியின் ஆண்டெனா போல் செயல்படுகிறது. இதை நீக்கிய நேரம் ஒரிசாவில் மந்திரவாதியும் கொல்லப்படுகிறான். உளவியலாளரும் நாயகனும் நடந்த அமானுஷ்யங்கள் அனைத்தும் அறிவியலால் விளக்கக் கூடியவையே என்கிறார்கள். ஆனால் அவர்களால் விளக்க முடியாத விசயங்களும் நாவலில் உள்ளன. இது தான் இந்நாவலில் எனக்கு பிடித்த அம்சம்.
அதாவது அமானுஷ்யங்களை சித்தரிக்கும் இடங்களில் வாசகனை அவை உண்மையே என விரேந்திரநாத் நம்ப வைக்கிறார். இல்லை அவை மூடநம்பிக்கையே எனும் வாதங்களுக்கும் இடம் அளிக்கிறார். இரண்டு கதையாடல்களும் கதைக்குள் வலுவாக உள்ளன. ஒரு வாசகர் இந்த ஹிப்னாடிசம் எல்லாம் சுத்த கதை, சூனியம் தான் எல்லா கொடுமைகளுக்கும் காரணம் என நம்பலாம். (அப்படி நம்பி தனக்கென சூனிய வித்தை செய்யுமாறு வாசகர்கள் தனக்கு கடிதம் எழுதியதை வீரேந்திரநாத் முடிவுரையில் சொல்கிறார்.) அல்லது உண்மை இதற்கு நடுவில் உள்ளது என்றும் கூறலாம். ஆச்சரியமாக இந்நாவல் எனக்கு யுவன் சந்திரசேகரின் “குள்ளச்சித்தன் சரித்திரம்” நாவலை நினைவுபடுத்தியது.
கூர்மையான, நுணுக்கமான நடையில், சுவாரஸ்யமான சம்பாஷணைகளுடன் அமைந்திருந்தால் இந்நாவல் ஒரு நல்ல இலக்கிய பிரதியாக கூட மாறி இருக்கும். வீரேந்திரநாத்தின் நம்பிக்கை என்ன என நாவலில் அவர் வெளிப்படுத்துவதில்லை. இது தான் சிறப்பு. மந்திரவாதம் பேசப்படும் இடங்களில் அவர் கதை தன்னையும் மீறி செல்ல அனுமதிக்கிறார். இலக்கிய வாசகர்களும் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

கருத்துகள்

மகேஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
இவரின் "வம்சி கிருஷ்ணா" நாவல் படித்துப் பாருங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...