Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

எண்டமூரி வீரேந்திரநாத் – துளசி தளம்

Image result for எண்டமூரி வீரேந்திரநாத் துளசி தளம்

எனக்கு வணிக நாவல்கள் படிப்பதில் தனி ஆர்வம். தட்டையான மொழி, மிகையான சித்தரிப்பு, லாஜிக் சொதப்பல்களை மீறி அந்நாவல்களின் செண்டிமெண்டுகள், அவற்றில் பொதுமக்களின் உளவியல் தெரியும் விதம், வடிவம் ஆகியற்றை கவனிக்க பிடிக்கும். நேற்று அப்படித் தான் எண்டமூரி வீரேந்திரநாத்தின் “துளசி தளம்” என்ற பேய் / திகில் நாவல் படித்தேன். மூன்னூற்று சொச்சம் பக்கங்கள். ஆனால் அரைநாளில் படிக்கும் விதம் விருட்டென்று பறக்கும் கதை.

 நாயகன் ஒரு பெரிய நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருக்கிறான். மனைவி, ஒரு குழந்தை (துளசி) என நிம்மதியான வாழ்க்கை. அவன் ஒரு தர்க்கவாதி; மந்திர தந்திரங்களை மூடநம்பிக்கை என ஒதுக்குபவன். அவனுக்கு ஒரு அதிர்ஷ்டம் வாய்க்கிறது. நிறுவனத்தின் முதலாளி வெள்ளைகாரர். அவர் தன் சொந்த நாட்டுக்கு திரும்ப முடிவெடுக்கிறார். இந்திய சட்டப்படி அவர் தன் சொத்துக்களை எடுத்து செல்ல முடியாது. அவர் அதை சட்டத்தை மீறி எடுத்துப் போக நம் நாயகன் உதவ மறுக்கிறான். இதனால் முதலாளி ஒரு காரியம் செய்கிறார். பல லட்சங்களை (இக்காலத்தில் பல கோடிகள்) நாயகனின் குழந்தை மீது எழுதி வைக்கிறார். அவளுக்கு பத்து வயது பூர்த்தியாகும் போது முழுப்பணத்துக்கும் அவள் அதிபதி. ஆனால் அதற்கு முன் அவள் இறந்து போனால் பணம் முழுக்க ஒரு அனாதை ஆசிரமத்துக்கு போய் விடும். இந்த ஆசிரமத்தை நடத்தும் சாமியார் ஒரு போலி. அவரும் இரு அடியாட்களுமாய் சொத்துக்காக குழந்தை துளசியை கொல்ல முடிவெடுக்கிறார்கள். அதற்காக ஒரிசா மாநிலத்திற்கு சென்று ஒரு மந்திரவாதியை அமர்த்துகிறார்கள். அவன் குழந்தையை கொல்ல ஒரு தீவினையை ஏவுகிறான். நாயகனின் வேலைக்காரன் ராமைய்யா இதை அறிந்து மற்றொரு மந்திரவாதியின் உதவியுடன் சூனியத்தை முறியடித்து ஏவியவனையே அது சென்று தாக்கும்விதம் செய்கிறான். ஏவிய மந்திரவாதி துடிதுடித்து செய்கிறான். அவனது குரு ஒரு படுபயங்கர மந்திரவாதி. பல நூறு ஆண்டுகளாய் யாராலும் இயலாத வித்தைகளை சாதித்தவர். அவர் காஷ்மோரா என்றொரு பூதத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதை அவர் துளசி மீது ஏவுகிறார். 21 நாட்களில் குழந்தை பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகி செத்து விடும். இதை ஆரம்பத்தில் நம்ப மறுக்கும் நாயகன் இறுதியில் குழந்தையின் கடைசி நாளன்று நம்பி ஏற்கிறான். அவன் அலைந்து திரிந்து ஒரு பக்கிரியை கண்டுபிடித்து அவரிடம் காஷ்மோராவை தடுத்து நிறுத்தும் முறையை கேட்டறிகிறான். அவர் அளிக்கும் செப்புத்தட்டுடன் ஒரிசா சென்று மந்திரவாதியை எதிர்கொண்டு அவர் துளசியின் மூச்சைப் பறிக்கும் இறுதி வித்தையை நடத்துமுன் அவரைத் தடுத்து செப்புத்தட்டால் அடிக்கிறான். கீழே சரியும் அவன் பற்கள் உடைந்து ரத்தம் சிந்துகிறான். காஷ்மோராவை ஏவியவன் தன் குருதியை பார்க்கக் கூடாது என்பது நம்பிக்கை. அவ்வாறு பார்த்தால் காஷ்மோராவை அதிருப்தியாகி விடும்; பேய்கள் ஒன்றாய் சேர்ந்து மந்திராதியின் ரத்தத்தை குடித்து கொன்று விடும். அவ்வாறே நடக்கிறது. மந்திரவாதி துடிதுடித்து இறக்கிறான். துளசி தப்பிக்கிறாள்.
இனிமேல் தான் ஒரு திருப்பம் வருகிறது. குழந்தையை மரணத்தின் விளிம்பு வரை தள்ளிய நோய் சூனியத்தால் ஏற்படவில்லை; ஒரு கருவி மூலம் ஹிப்னாடிஸ அதிர்வுகளை குழந்தைக்குள் பாய்ச்சியதனாலே இவ்வாறெல்லாம் நடந்தது என ஒரு உளவியலாளர் கண்டறிகிறார். இந்த அறிவியல் சதியை செய்தது அனாதை ஆசிரமத்தின் உரிமையாளரும் அவரது உதவியாளரான வேலைக்காரன் ராமைய்யாவும் எனும் ”படுபயங்கர” திருப்பமும் அடுத்து வருகிறது. குழந்தையின் உடலில் ஒரு தாயத்து கட்டப்பட்டுள்ளது. அது தான் ஹிப்னாடிஸ கருவியின் ஆண்டெனா போல் செயல்படுகிறது. இதை நீக்கிய நேரம் ஒரிசாவில் மந்திரவாதியும் கொல்லப்படுகிறான். உளவியலாளரும் நாயகனும் நடந்த அமானுஷ்யங்கள் அனைத்தும் அறிவியலால் விளக்கக் கூடியவையே என்கிறார்கள். ஆனால் அவர்களால் விளக்க முடியாத விசயங்களும் நாவலில் உள்ளன. இது தான் இந்நாவலில் எனக்கு பிடித்த அம்சம்.
அதாவது அமானுஷ்யங்களை சித்தரிக்கும் இடங்களில் வாசகனை அவை உண்மையே என விரேந்திரநாத் நம்ப வைக்கிறார். இல்லை அவை மூடநம்பிக்கையே எனும் வாதங்களுக்கும் இடம் அளிக்கிறார். இரண்டு கதையாடல்களும் கதைக்குள் வலுவாக உள்ளன. ஒரு வாசகர் இந்த ஹிப்னாடிசம் எல்லாம் சுத்த கதை, சூனியம் தான் எல்லா கொடுமைகளுக்கும் காரணம் என நம்பலாம். (அப்படி நம்பி தனக்கென சூனிய வித்தை செய்யுமாறு வாசகர்கள் தனக்கு கடிதம் எழுதியதை வீரேந்திரநாத் முடிவுரையில் சொல்கிறார்.) அல்லது உண்மை இதற்கு நடுவில் உள்ளது என்றும் கூறலாம். ஆச்சரியமாக இந்நாவல் எனக்கு யுவன் சந்திரசேகரின் “குள்ளச்சித்தன் சரித்திரம்” நாவலை நினைவுபடுத்தியது.
கூர்மையான, நுணுக்கமான நடையில், சுவாரஸ்யமான சம்பாஷணைகளுடன் அமைந்திருந்தால் இந்நாவல் ஒரு நல்ல இலக்கிய பிரதியாக கூட மாறி இருக்கும். வீரேந்திரநாத்தின் நம்பிக்கை என்ன என நாவலில் அவர் வெளிப்படுத்துவதில்லை. இது தான் சிறப்பு. மந்திரவாதம் பேசப்படும் இடங்களில் அவர் கதை தன்னையும் மீறி செல்ல அனுமதிக்கிறார். இலக்கிய வாசகர்களும் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...