கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா?
பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை.
ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்தியாவின் கவனத்துக்குப் போகிறது. அதற்கு இங்கேயே தொடர்ந்து வள்ளுவரின் புகழ் பாடி, சிலை வைத்து அவ்வளவு உயரத்துக்குத் தூக்கி வைக்க வேண்டி இருக்கிறது, அதைக் கண்டு அரசியல் சின்னமாக அவரைப் பயன்படுத்தலாம் என ஒரு தேசியக் கட்சி நினைக்க வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் நடந்திருக்காது. மாநிலக் கட்சிகள் புதுமைப்பித்தனுக்கோ நகுலனுக்கோ மௌனிக்கோ சிலை வைத்து அவரை தொடர்ந்து புகழ்ந்திருந்தால், மோடி அவர்களது பெயரை பாராளுமன்றத்தில் தாகூருக்கு இணையாக வைத்துப் பேசியிருப்பார். ராகுல் காந்தி கேரளாவுக்குச் சென்று எம்.டியைச் சந்தித்ததைப் போல தமிழ்நாட்டில் வந்து படைப்பாளிகளைச் சந்தித்திருப்பார். அவர்கள் உடனே அவர் காலில் விழுந்திருக்கும், அவர் இவர்கள் ஏன் இப்படி முதுகெலும்பு இல்லாமல் பலவீனமாக உள்ளார்கள் எனக் கருதும் ஆபத்து உண்டு என்றாலும் அதனால் தேசிய அளவில் ஏதோ ஒரு கவனம் இருந்திருக்கும்.
தமிழ் பேசாத மாநிலங்களில் நம்மைத் தமிழ் எழுத்தாளராகச் சொல்லிக் கொள்ளும்போது கிடைக்கும் மரியாதை தமிழ்நாட்டில் நமக்குக் கிடைப்பதில்லை. இந்த நிலையில் வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்ததால்தான் நம் பெயர் கெட்டுவிடப் போகிறதா?
இவ்வளவு இலக்கிய அக்கறை உள்ளவர்கள் பாரபட்சம் பார்க்காமல், குழு அரசியல் செய்யாமல், அதிகாரிகள், தலைவர்களின் கால்களைப் பிடிக்காமல் இலக்கிய மொழிபெயர்ப்பு, விமர்சனம் என ஆங்கில ஊடகங்களைக் கைப்பற்ற வேண்டும். முன்பு க.நா.சுவும், செல்லப்பாவும் செய்ததைப் போல பலன் கருதாமல் இலக்கியத்துக்காகத் தொண்டாற்ற வேண்டும். நமக்கு நாம்தான் எதிரி. வைரமுத்து அல்லர்.
Comments