ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார்.
ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன். சட்டை பேண்ட் போட்டாலும் இவர்கள் மனதுக்குள் சின்னக் கவுண்டர், பெரிய தேவர்கள் தாம். உடம்பைப் பார்க்கிறான், வெட்டுறா கையை, ஊர்விலக்கம் பண்றா, இதாண்டா பஞ்சாயத்து தீர்ப்பு வகையறா தான்.
கவனித்துப் பாருங்கள், பாலியல் குற்றச்சாட்டுகளில் சட்ட நடவடிக்கையை விரும்பவோ ஊக்குவிக்கவோ மாட்டார்கள். (நான் கோணங்கி பிரச்சினையில் சட்டநடவடிக்கையையே கோரினேன்.) ஆனால் மற்ற குற்றச்சாட்டுகளில் ஏன் போலீஸ் எப்.ஐ.ஆர் போடவில்லை, ஏன் கைது பண்ணவில்லை எனக் கேட்பார்கள். பாலியல் அத்துமீறலை மட்டும் சட்டப்பிரச்சினையாகப் பார்ப்பதில் இவர்களுக்கு சிரமம் உள்ளது. மனம் பாலியலில் அலைபாய்ந்து கொண்டே இருக்கும், பாலுடல் எப்போதும் பாதுகாப்பற்றது எனும் பயம் ஒரு பஞ்சாயத்து மனநிலையை இவர்களுக்குள் உருவாக்கி தக்க வைக்கிறது. இதுதான் எந்த ஆண் எந்த பெண்ணுடன் பேசுகிறான் என கவனித்துக் கொண்டே இருக்க வைக்கிறது. மீ டூ எனும் நவீன கட்டப்பஞ்சாயத்தை இந்த நிலப்பிரபுத்துவ மனநிலையின் பாசாங்கான முற்போக்கு வெளிப்பாடு எனக் காட்டவே நான் ஒரு தனி புத்தகத்தையே எழுதினேன். பாலியல் குற்றங்களை அந்தரங்கக் குற்றமாக அன்றி திருட்டு, அடிதடி, செயின் பறிப்பு, மோசடி எனும் அளவில் சாமான்யமாக கருதப் பழக வேண்டும். அப்போதே அக்குற்றங்கள் குறையும். ஒழுக்கப் பிறழ்வு, அந்தரங்க களங்கம் எனப் பார்க்கப் பார்க்க குற்றம் செய்ய மறைமுக ஊக்கமாகவே அது முடியும்.
இம்முறை பெண்ணுடலில் இருந்து ஆணுடலுக்கும் கண்காணிப்பை நீட்டித்திருக்கிறார்கள். அதை மட்டுமே என்னால் 'பாஸிட்டிவ்வாக' பார்க்க முடிகிறது.
இந்த மீடியா கட்டப்பஞ்சாயத்து அரசியலை தமிழ் ஹிந்து முன்னெடுப்பது கண்டிக்கத்தக்கது.
கருத்துகள்