Skip to main content

மொழித் திணிப்பு 1


இந்தியை ஒரே தேசிய (அரசாங்க) மொழியாக்கி அனைத்து மாநிலத்தவரும் கற்க செய்யலாமா எனும் விவாதம் நடந்து வருகிறது. இரு தரப்பு வாதங்களையும் பொறுமையாக கேட்டால் இது பண்பாடு vs நடைமுறை தேவைகளுக்கு இடையிலான மோதல் என புரியும். எது முக்கியம்? பண்பாடா நடைமுறையா? இந்தியை 50% மேல் இந்தியர்கள் பேசுகிறார்கள் என ஒரு வாதம். இல்லையில்லை, இந்தி பேசும் மாநிலங்களில் கூட பல வட்டார மொழிகளே பிரதானமாய் பேசப்படுகின்றன. இந்தி ஒரு பொது தொடர்பு சாதனம் மட்டுமே என இன்னொரு வாதம். தென்னிந்தியர்கள் இந்தி பேசி என்ன நடைமுறை பயன்? இது ஒரு வாதம். இல்லை இல்லை, இந்தி அறிந்தால் தான் தேசிய ஒருமைப்பாடு நிகழும் என பதில் வாதம்.

 ஆனால் பண்பாடா நடைமுறையா என ஒரு போட்டி நடந்தால் பின்னது தான் வெல்லும்.
அனைவருக்குமான ஒற்றை தேசிய அடையாளம் உருவாக்க அனைவருக்குமான ஒற்றை பண்பாடு வேண்டும். இந்திய ஹிந்து தேசியம் பரவலாக இந்தியோ சமிஸ்கிருதமோ பரவலாக்கப்படுவது அவசியம். பசு என்பதும் ராமன் என்பதும் அனைத்து மாநிலங்களின் ஒருமித்த செண்டிமெண்டாக வேண்டும். இது பா.ஜ.கவின் அரசியல் தேவை. இன்னொரு பக்கம் இந்தி மொழி தேசியவாதிகள் இந்தி சர்வ வல்லமை பெறும் நாளுக்காக தவமிருக்கிறார்கள். இது பண்பாட்டுத் தேவை. தமிழ் மக்கள் கண்ணனையும் ராமனையும் கூட ஏற்றுக் கொள்ளும் காலம் எதிர்காலத்தில் வரலாம் (இப்போதே எங்கெங்கு நோக்கினும் பாபா கோயில்கள்). ஆனால் மக்கள் இந்த பண்பாட்டு தேசியத்தை மொழி அளவில் ஏற்க ஒரு நடைமுறை பயன் அவசியம். இதைத் தான் இந்தி ஆர்வலர்கள், வடக்கத்திய தேசியர்கள் புரிந்து கொள்ளவில்லை.
 இந்தியை அரசு பயன்பாட்டு மொழியாக்கினாலோ, பெயர்ப்பலகைகளை இந்திப்படுத்தினாலோ மைல்கற்களில் இந்தியை பொறுத்தாலோ மக்கள் அதை சிறிய எரிச்சலுடன் புறக்கணிப்பார்கள்.
எந்த மாதிரி நடைமுறை பயன்? தமிழர்கள் ஏன் பிரஞ்சு கற்கிறார்கள்? இப்போது ஏன் மாண்டரின் மொழியின் பின்னால் செல்கிறார்கள்? வேலை, வசதி, பணம். பொறியியல் படிப்பதை விட ஜப்பானிய மொழி கற்றால் கைநிறைய சம்பாதிக்கலாம். மத்திய அரசு ஒரு லட்சம் இந்தி ஆசிரிய / இந்தி மொழிபெயர்ப்பாளர்கள் பதவிகளை தமிழகத்தில் உருவாக்கட்டும். தமிழை தாய்மொழியாகக் கொண்டு, இந்தியை இரண்டாம் மொழியாக கற்றவர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர் என அறிவிக்கட்டும். துவக்க சம்பளமே ஐம்பதாயிரம் என சொல்லட்டும். ஐந்து வருடம் வேலை பார்த்தால் ஒரு லட்சம் என சொல்லட்டும். இந்தி மவுசு அதிகமாவதை பார்ப்பீர்கள். அதே போல தமிழ் பள்ளி மாணவர்கள் உத்தர பிரதேசத்திலோ தில்லியிலோ சில வருடங்கள் தங்கி படிப்பதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கட்டும். அங்கு அவர்கள் இந்தியை ஒரு பாடமாய் கற்க வேண்டும் என சட்டம் உருவாக்கட்டும். மாதம் அதற்கு 30,000 உதவித் தொகை அளிக்கட்டும். அதே போல் இந்தி பேசும் மாணவர்களும் இங்கு வந்து தங்கி தமிழ் கற்க தேவையை உருவாக்கட்டும். நான் பரிந்துரைப்பது ஒரு 10% மக்களை இந்தியை நோக்கி ஈர்க்கும் விசயம். இதை விட பரவலாய் இந்தியை கொண்டு சேர்க்கும் திட்டங்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும். முக்கியமாய், மக்களுக்கு அதனால் பொருளாதார பலன் இருக்க வேண்டும்.
ஆனால் இந்த பண்பாட்டை நடைமுறைத் தேவையாக மாற்றுவதிலும் ஒரு எல்லை உண்டு. இந்தி எப்படியும் ஆங்கிலமோ ஜெர்மனோ அல்ல. இல்லாத ஒரு பொருளாதார நடைமுறை பயனை அதன் மேல் ஓரளவுக்கு மேல் திணிக்க முடியாது. ஆக, இந்தியை ஓரளவு தெற்கே பரவ வைக்கலாம். ஆனால் மிகக்கொஞ்சம் தான் முடியும். மைல்கற்களில், பெயர்ப்பலகைகளில், தஸ்தாவேஜுகளில் இந்தியை திணித்தால் மயிரளவு கூட இந்தி வளராது.
வடநாட்டு பண்பாடு கூட ஏனோ இங்கே ஆர்வம் கிளப்புவதில்லை. இந்தி படங்களைக் காண இன்னமும் சென்னை வாழ் மார்வாரிகள் மட்டுமே படையெடுக்கிறார்கள். தமிழர்கள் அல்ல. இது இந்தி வெறுப்பினால் அல்ல. என் சகோதரி பாலிவுட் படம் பார்த்து தான் இந்தி கற்றுக் கொண்டார். எனக்கு சின்ன வயதில் இருந்தே பாலிவுட் படங்கள் அலுப்பூட்டின. நான் அவற்றை பார்க்கவும் முயலவில்லை. இந்தி படப் பாடல்களில் எனக்கு சமீபமாய் தான் ஆர்வம் ஏற்படுகிறது. நான் சந்திக்கும் பெரும்பாலான கேரள நண்பர்களுக்கு பாலிவுட் படங்களில் தமிழர்களை விட ஆர்வமிருக்கிறது. என் மனைவிக்கு ஓரளவு தெலுங்கு புரிகிறது. காரணம் தெலுங்குப் படங்கள்.

ஒரு புது மொழியை நீங்கள் அந்நிய சமூகத்துக்கு அறிமுகம் செய்யும் போது தேனில் தோய்த்து நாவில் வைக்க வேண்டும். தொண்டைக்குள் திணிக்கக் கூடாது. அதை இசை, நாடகம், சினிமா, கதை, மதம் சார்ந்த கதையாடல் (ஆன்மீக சொற்பொழிவுகள், இசை) என எப்படியும் செய்யலாம். எப்போதுமே மனிதனுக்கு ஒரு அயல் பண்பாட்டை, மொழியை அறிய ஆர்வமுள்ளது. ஒரு புது சொல்லை அறியும் போது ஒரு புதிய மனிதனுடன் கைகோர்க்கிறோம். புது அனுபவங்களை பகிர்கிறோம். ஆனால் ஒரு புது மொழி அறிமுகமாகும் போது எளிமையாக, சுவாரஸ்யமாக, உற்சாகமாக, பொழுதுபோக்காக அது அமைய வேண்டும். இந்திய விடுதலைக்கு பின் மத்திய அரசுகள் இதற்கான எந்த முயற்சியையும் எடுத்ததாக தெரியவில்லை. பாலிவுட் சினிமா அளவுக்கு கூட இவர்கள் இந்தி பரவலாக்கத்துக்காக கல் சுமக்கவில்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...