Skip to main content

ஐ.பி.எல் 2017 – மூன்றாவது வாரம்


ஐ.பி.எல் 2017இன் ஆட்டங்கள் மூன்றாவது வாரத்தை கடக்கையில் எதிர்பார்த்தது போல் மும்பை மற்றும் கொல்கொத்தா அணிகள் தலா பத்து மற்றும் எட்டு புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன. இந்த அணிகளுடன் play offs எனப்படும் இறுதிப் போட்டிக்கான தேர்வுப் போட்டிகளில் பங்கு பெறப் போகும் அணிகள் எவை என்பது தான் இப்போதுள்ள ஒரே கேள்வி. தொடரின் துவக்கத்தில் கச்சிதமான கட்டுப்பாட்டான அணியாக தென்பட்ட பூனே எதிர்பாராத விதமாய் படுபாதாளத்துக்கு சென்று விட்டது. எப்போதுமே திறமையை விட திட்டமிடலையும் உழைப்பையும் அணி ஒற்றுமையையும் முதன்மையாய் கருதும் ஹைதராபாத் அணி இந்த இயல்புகள் காரணமாய் மூன்றாவது இடத்தில் உள்ளது.

 தாஸ்மாக்கில் இருந்த வெளிப்பட்ட குடிமகன் போல தட்டுத்தடுமாறி தொடரை ஆரம்பித்த தில்லி அணி இப்போது நிதானமாய் (சின்ன தலைவலியுடன்) நடை போட ஆரம்பித்துள்ளது. தில்லி இப்போது நான்காவது இடத்தில் உள்ளது. இந்த மூன்றாவது நான்காவது இடங்களை வரும் வாரங்களில் பஞ்சாப், பங்களூர், பூனே, குஜராத் ஆகிய அணிகளில் இரண்டு அணிகளில் பிடிக்கலாம். சரி இவ்வாரத்து ஆட்டங்களில் ஹைலைட் என்னென்ன? பார்ப்போம்.
ஆட்டம் 18:
தில்லி முதலில் ஆடி 168 அடித்தது. அடுத்து களமிறங்கிய கொல்கொத்தா 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து திருமணத்தன்று மாப்பிள்ளை ஓடிப் போன மணப்பெண் போல் தவித்தது. அப்போது ஆட வந்த மனீஷ் பாண்டே தன் கூட்டாளியான யூசுப் பதானுடன் புத்திசாலித்தனமாய் நிதானமாய் ஆடி49 பந்துகளில் 69 அடித்தார். பதான் 39 பந்துகளில் 59 அடித்தார். பதான் மத யானை போல் பிளிறிய ஓவர்களில் பாண்டே நிதானம் காத்தார். ஆனால் பதான் வெளியேறிய பின் பாண்டே இறுதி வரை நின்றாடி ஆட்டத்தை வென்று கொடுத்தார். கடைசி ஓவரில் கொல்கொத்தா வெல்ல 9 ரன்கள் தேவை. தில்லி அணிக்காக அமித் மிஷ்ரா கால்சுழல் பந்து வீச வருகிறார். வோக்ஸ் பேட்டிங் செய்கிறார். (பண்டே மறுமுனையில்) ஒரு காற்றில் மிதக்கும் கால்சுழல் மூலம் வோக்ஸை முறியடித்து ஸ்டம்பிங் முறையில் வெளியேற்றுகிறார் மிஷ்ரா. அடுத்து ஆட வரும் நரைன் ஒரு சிங்கிள் எடுத்து மறுமுனைக்கு செல்ல பாண்டே ஆட வருகிறார். மூன்று பந்துகளில் எட்டு ரன்கள் வேண்டும். மிஷ்ரா தன் பந்துகளை off ஸ்டம்பில் முழுநீளத்தில் வைடாக வீசுகிறார் என்பதை கவனித்த பாண்டே தயாராகிறார். அதே போல் பந்து வருகிறது. அதை பாண்டே சற்றும் துவளாமல் கிட்டத்தட்ட நேராக ஒரு சிக்ஸர் அடிக்கிறார். அடுத்த பந்தில் கூலாக இரட்டை ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை வெல்கிறார். இப்படி நிதானமாய் ஆடுவதில் பாண்டே ஓரளவு தோனிக்கு நிகரானவர். ஒரு சிறந்த பேட்ஸ்மேனை ஒரு நல்ல பேட்ஸ்மேனில் இருந்து வித்தியாசப்படுத்துவது முதிர்ச்சியும் நிதானமும். பாண்டேவிடம் இந்த இரண்டும் ஏராளமாய் உள்ளன.
பாண்டேவின் பேட்டிங் ஸ்டான்ஸ் (பேட்டிங்கின் போது நிற்கும் பாணி) வித்தியாசமானது. அவருக்கு கிட்டத்தட்ட காலாட்டமே இல்லை. ஆனால் அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு கிரீஸில் இடம் வலமாய் நகர்ந்தபடி இருப்பார். கால் பக்கம் நிற்பவர் பந்து வரும் போது off ஸ்டம்பில் நிற்பார். இதனால் அவருக்கு திட்டமிட்டு பந்து வீசுவது சிரமம். பவுன்சரைக் கூட அவர் நேராக பவுண்டரை அடிப்பதுண்டு; இது பார்க்க டென்னிஸ் ஷாட் போல இருக்கும்.
ஆட்டம் 19
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 159 அடித்த ஹைதராபாத் அணி வென்றது. ஆனாலும் இலக்கை விரட்டி ஆடிய பஞ்சாப் அணிக்காக அதன் துவக்க வீரர் மனன் வோரா அபாரமாய் ஆடி 95 அடித்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய இன்னொரு பக்கம் அவர் எதிர்த்தடித்தபடியே இருந்தார். எட்டு விக்கெட்டுகள் விழுந்த பின்னர் கூட பஞ்சாப் வெல்லும் சாத்தியம் இருந்தது. ஆனால் ஒன்பதாவதாக வந்த கரியப்பா சமயோஜிதமின்றி ஆடியதால் ஆட்டம் பஞ்சாபின் கைநழுவிப் போனது.


ஆட்டம் 20
குஜராத்துக்கு எதிராக பெங்களூர் வென்ற இந்த ஆட்டத்தின் சிறப்பு கிறிஸ் கெய்ல் 38 பந்துகளில் அடித்த 77. கடந்த ஐ.பி.எல்லில் இருந்து தொடர்ந்து சொதப்பலாகவே ஆடி வந்த கெயில் இந்த ஆட்டத்தில் ராமாயண கும்பகர்ணன் போல் விழித்துக் கொண்டார். அவர் இடது கை சுழலர் ஜடேஜாவை தோலுரித்து தொங்க போட்டது காண உண்மையிலேயே பரிதாபமாய் இருந்தது.
அதே ஆட்டத்தில் குஜராத்துக்காக இஷான் கிஷன் 16 பந்துகளில் அடித்த 39 ஒரு முக்கியமான இன்னிங்ஸ். கிஷான் ஒரு அற்புதமான இளம் திறமையாளர். பார்க்க பானிபூரி விற்கும் ஒல்லிப் பையன் போல் தெரிந்தாலும் உள்ளூர் ஆட்டங்களில் அபாரமான சிக்ஸர்களை ஒற்றைக் கையில் அடிக்கக் கூடியவர். வருங்கால இந்திய அணியில் இடம்பெற்று நிச்சயம் கலக்கப் போகிறவர் இவர்.
ஆட்டம் 21
இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ஹைதராபாத அணி வென்றது. அதற்கு அடித்தளம் இட்டது வில்லியம்சன் 51 பந்துகளில் அடித்த 89. வில்லியம்சம் புஜபராக்கிரம பேட்ஸ்மேன் அல்ல. குழந்தை முகமும் மெல்லிய உடலும் கொண்டவர். தனது டைமிங் மற்றும் அபாரமான காலாட்டம் மூலம் துல்லியமாய் களத்தடுப்பை பிளந்து பவுண்டரிகள் வீசுபவர். பூங்கொத்தால் அடித்தே கொல்வது போல் மென்மையான நளினமாய் சிக்ஸர்களால் நாசம் செய்யக் கூடியவர். அவரது 89 ஒரு அழகிய சூறாவளி.
இதே ஆட்டத்தில் இரண்டாவதாய் ஆடிய தில்லி அணி வெல்லும் வாய்ப்பிருந்தது. ஆனால் ஒரு முக்கியமான கட்டத்தில் கருண் நாயர் ரன் அவுட் ஆக ஆட்டம் தலைகீழானது. இதை அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்துகளில் 50 அடித்து இறுதி வரை போராடினார். ஆனாலும் ஹைதராபாத் 15 ரன்களில் வென்றது.
 ஷ்ரேயாஸ் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் ஆடும் இளம் நட்சத்திரம். மும்பையில் வளர்ந்த தமிழர். உள்ளூர் போட்டிகளில் ரன்களை மலை மலையாய் குவிப்பவர். சமீபமாய் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வானவர். இவரது தனித்தன்மை புத்திசாலித்தனமான ஆட்டம் மற்றும் போராட்ட குணம்.
இந்த ஆட்டத்தில் ஹைதராபாதுக்காக வீசும் புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல் மற்றும் முகமத் சிராஜின் பந்து வீச்சை தனியாக பாராட்ட வேண்டும். இந்த ஐ.பி.எல்லில் புவனேஷ்வர் அபாரமான ஆட்டநிலையில் இருக்கிறார். யார்க்கர், மெதுவான பந்து, முழுநீளப்பந்து என மிகுந்த கட்டுப்பாட்டுடன் வீசுகிறார். ஹைதராபாதுக்காக ஒவ்வொரு ஆட்டத்திலும் இவர் பந்து வீசிய ஓவர்கள் திருப்பு முனையாய் அமைந்தன. இதே போல் சித்தார்த் கவுலின் யார்க்கர்களும் சிராஜின் வேகமும் ஆக்ரோஷமும் மிகவும் கவர்ந்தன. சிராஜ் ஹைதராபாதை பூர்வீகமாய் கொண்டவர். ஏழை. கடுமையாய் போராடி மேலே வந்தவர்.இவர் மேலும் உழைத்து ஒரு நாள் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

ஆட்டம் 22
இந்த ஆட்டத்தின் சிறப்பு பஞ்சாபின் 198 ரன்களை வெறும் 15. 3 ஓவர்களில் மும்பை அணி தவிடு பொடியாக்கி எட்டியது தான். பஞ்சாப் அணிக்காக ஹஷிம் ஆம்லா 60 பந்துகளில் அடித்த சதமும் ஒரு அபாரமான இன்னிங்ஸ்.

ஆட்டம் 23
இந்த ஆட்டத்திலும் கொல்கொத்தாவின் 187 ரன்களை குஜராத் 18.2 ஓவர்களில் சுலபத்தில் எட்டியது. தொடர்ந்து சறுக்கி வரும் குஜராத்தின் முக்கியமான வெற்றி இது. குஜராத்துக்காக ரெய்னா 46 பந்துகளில் 84 அடித்தார்.

இப்போட்டியில் பஸில் தம்பி எனும் இளம் வேக வீச்சாளர் மிகவும் கவர்ந்தார். சிராஜைப் போல் இவரும் ஒரு நம்பிக்கையூட்டும் திறமையாளர்.

நன்றி: கல்கி

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...