Skip to main content

மும்முறை தலாக் விவகாரத்தில் சட்டத்தின் எல்லை என்ன?


மேற்சொன்ன விசயம் பற்றி ஒரு சுவாரஸ்யமான தெளிவான கட்டுரை இன்றைய ஆங்கில ஹிந்துவில் வெளியாகி உள்ளது (Triple Talaq and the Constitution). தில்லியை சேர்ந்த வழக்கறிஞர் கௌதம் பாட்டியா எழுதியிருக்கிறார். உச்சநீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை இன்று ஆரம்பிக்க இருக்கிறது. மோடி இவ்வழக்கு பற்றி கருத்து சொன்னது (இஸ்லாமிய சகோதரிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்) இஸ்லாமிய தனிப்பட்ட சட்டங்களுக்கு எதிரான பா.ஜ.க நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. சிறுபான்மையினருக்கு என்று தனிப்பட்ட உரிமைகள் இருக்கக் கூடாது, அனைத்தும் அனைவருக்கும் பொதுவாக இந்நாட்டில் இருக்க வேண்டும் எனும் பா.ஜ.க வாதத்தின் பின்னால் உள்ள துர்நோக்கம் இஸ்லாமியருக்கு அளவுக்கு அதிகமான சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் காங்கிரஸின் முற்போக்கு ஆட்சி அளித்து விட்டது; அவர்களை நாங்கள் வழிக்கு கொண்டு வருவோம் எனும் சேதியை பெரும்பான்மை இந்துக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் இந்த மும்முறை தலாக் விவகாரத்தை பயன்படுத்துகிறார்கள். அதே சமயம் பா.ஜ.க ஆட்சி நடந்த மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட கலவரங்களில் இஸ்லாமியர் கொல்லப்பட்டு ஒடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளை மூடி மறைத்து இஸ்லாமியர் ஒடுக்கப்பட்டோர் அல்ல அத்துமீறி வசதிகளை, சுதந்திரத்தை அனுபவிக்கும் தரப்பினர் எனும் பிம்பத்தையும் ஏற்படுத்த இவ்வழக்கு பா.ஜ.கவுக்கு உதவும். இஸ்லாமியர் பிற்போக்கானவர்கள் எனும் தோற்றத்தை ஏற்படுத்தவும் பயன்படும். எப்படி நோக்கினும் இந்துத்துவர்களுக்கு லாபம் அதிகம். இந்த அரசியல் சூழலில் சட்டம் இவ்வழக்கை எப்படி நோக்க முடியும் என கௌதம் விவாதிக்கிறார்.

அவர் இரண்டு கோணங்களை முன்வைக்கிறார்:
1)   நீதிமன்றம் இஸ்லாமிய தனிச்சட்டங்களை தன்னளவில் அங்கீகரித்து, அவற்றுக்குள் சிறு மாற்றங்களை ஏற்படுத்தி நவீனப்படுத்துவது. ஆனால் விவாகரத்து வழங்கும் ஏற்பாடுகளை நிர்வகிக்கும் உரிமையை சமூகத் தலைவர்கள், மூத்தோர் மற்றும் மத அறிஞர்களிடம் விட்டு விடுவது. இக்கோணத்தில் அணுகினால், இஸ்லாமிய சட்டமே மும்முறை தலாக்கை ஏற்கவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியும்.
2)   1951இல் பம்பாய் உயர்நீதிமன்றம் இது குறித்து ஒரு தீர்ப்பு வழங்கிய போது எழுதப்படாத இஸ்லாமிய தனிச்சட்டங்களை சட்டமாய் அங்கீகரிக்க முடியாது. ஆகையால் அவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது என பட்டும்படாமல் ஒரு தீர்ப்பளித்தது. இப்படியான தனிச்சட்டங்கள் அல்லது வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் பின்பற்றப் படுவது ஒரு தனிமனிதனின் உரிமைகளை பறிப்பதாக மாறினால் என்ன செய்வது எனும் சிக்கலான கேள்வியை இத்தீர்ப்பு எழுப்புகிறது. உதாரணமாய், ஒரு சமுதாயத்தில் பதினைந்து வயதானவுடன் பெண்களை திருமணம் முடித்து விடும் வழக்கம் இருக்கலாம். இது எழுதப்படாத எங்கள் தனிச்சட்டம் என அச்சமுதாய அறிஞர்கள் வாதிடலாம். அப்போது சட்டம் என்ன செய்யும்? இது பற்றி பேசும் கௌதம் இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன்பான பிரிட்டிஷ் அரசு பல மதச்சட்டங்களை தன் கோணத்தில் அர்த்தப்படுத்தி எழுதப்பட்ட சட்டமாக மாற்றி உள்ளதை குறிப்பிடுகிறார். அதாவது நம் நீதிமன்றங்கள் (சுதந்திரத்துக்கு முன்பு) எழுதப்படாத தனிச்சட்டங்களளில் தலையிட்டுள்ளன. இதை ஒரு முன்மாதிரியாய் கொண்டு உச்சநீதிமன்றம் தலாக் விவகாரத்தில் தீர்ப்பளிக்கலாம் எனவும், 1951 தீர்ப்பை முன்மாதிரியாய் கொண்டு தலையிட மறுக்கலாம் என்றும் இரு சாத்தியங்களை சுட்டுகிறார். இவ்விரண்டில் எது சரி?
மும்முறை தலாக் அபத்தமானது என அனைவரும் அறிவோம். விவாகரத்து பெறுவதற்கு குரான் பரிந்துரைக்கும் முறை நடைமுறை சார்ந்தது; நவீனமானது. அது பல முறை இரு தரப்பினருக்கும் இடையில் சமரசங்கள் செய்வதற்கான வாய்ப்பை, கால அவகாசத்தை அளிக்கிறது. கர்ப்பமாய் இருக்கும் பெண்ணை விவாகரத்து செய்வதை தடை செய்கிறது. மும்முறை தலாக் இஸ்லாமிய தனிச்சட்டத்தில் வந்துள்ள ஒரு மாற்றம்; ஒரு புதுமை. இதை தடை செய்ய இஸ்லாமிய அறிஞர்களும் சமூகத்தலைவர்களும் முன்வராத பட்சத்தில் நீதிமன்றம் தலையிடுவது தவிர்க்க முடியாது.
ஆனால் நீதிமன்றம் இத்தலையீட்டை செய்யும் அதே வேளையில் திருமணம் மற்றும் விவாகரத்தை அந்த சமூகத்தின் தனிசட்டங்கள் வழிநடத்த தொடர்ந்து அனுமதிப்பதே நல்லது. அதாவது, பொதுச்சட்டங்களுக்குள் இஸ்லாமியரையும் திணிக்கும் நிலை ஏற்படக் கூடாது. ஏனென்று சொல்கிறேன்.
திருமணம் என்பது ஒரு செயற்கையான உறவு. பல பத்தண்டுகள் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது இயற்கையானது அல்ல. மனித இயல்பே சில மாதங்களில் துணை மீது அலுப்பு கொண்டு வேறு துணையை நாடுவது. ஒரு அப்பாவுக்கு தன் குழந்தை மீது நீடித்த அன்பு இயல்பாகவே இருக்கும். ஆனால் மனைவி மீது இயல்பான நீடித்த ஈர்ப்பு இருக்காது. வேறு பெண்கள் மீது ஆர்வம் ஏற்பட்டபடியே இருக்கும். இதையே ஒரு பெண்ணுக்கும் சொல்லலாம். நமது மரபணுக் குட்டையை விரிவாக்குவதற்கான இயற்கை நமக்கு அளிக்கும் தூண்டுதலே இதற்கு காரணம். அதாவது தலாக் சொல்லத் தூண்டுவது ஒரு ஆணின் (அல்லது பெண்ணின்) இச்சை (அல்லது வெறுப்பு) அல்ல; இயற்கையின் ஆதிமனம் தான்.
இந்த தூண்டுதலை மீறி பல்லாண்டுகளாய் கோடிக்கணக்கான ஜோடிகள் இங்கே இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். சட்டத்தின் தூண்டுதலாலா? இல்லை. முழுக்க முழுக்க சமுதாய கட்டாயம், ஆதரவு, மதிப்பு தாம் காரணம். அதே போல சொத்தை பாதுகாக்கும் விழைவு, பிள்ளைகளை வளர்த்து நிலைப்படுத்தும் நோக்கம் ஆகியவையும் திருமண உறவை பாதுகாக்கின்றன. ஆனால் இன்று நாம் நவீனப்பட்ட பின், ஆணும் பெண்ணும் வேலை செய்து சுதந்திரமாய் வாழும் சூழலில் சமூக மதிப்பு, அழுத்தம், சொத்து ஆகிய கட்டாயங்கள் பின்னடைவு கொள்கிகின்றன. தனிமனிதனின் மகிழ்ச்சி, நிம்மதி, உரிமை ஆகியவையே அதிக முக்கியம் என மக்கள் நம்பத் தொடங்கி இருக்கிறார்கள். விளைவாக இன்று விவாகரத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு ஆகியிருக்கிறது. முப்பதுகளில் விவாகரத்தாகி தனியாக வாழ்கிறவர்களை நான் இன்று அதிகமாய் பார்க்கிறேன். இது திருமணத்தை வெறுமனே ஒரு சட்டரீதியான ஒப்பந்தமாய் மட்டுமே பார்ப்பதன் விளைவே. (இன்னொரு காரணம் நகரமயமாதலும், திருமண ஜோடி உறவினர், சமூகத்தினரிடம் இருந்து விலகி தனிக்குடும்பமாய் வெளிமண்ணில் வாழ்வது.) இந்த விவாகரத்துகள். வரும் ஆண்டுகளில் இந்து சமூகத்தில் திருமண அமைப்பே கடும் உருக்குலைவை சந்திக்க போகிறது. இதைத் தடுக்க முதல் தேவை திருமணம் ஒரு சமூக நிகழ்வாய் நீடிப்பதே.
அதாவது திருமணம் செய்வதில் இருந்து மணமுறிவு வரை சமூகத்தில் மூத்தோர், உறவினர், நண்பர்களின் ஆகியோரின் தலையீடு இருக்க வேண்டும். வெறுமனே நீதிமன்றத்தில் சென்று கோரிக்கை விடுத்து ரத்து செய்கிற விவகாரமாய் இருக்க கூடாது.

இஸ்லாமிய சமூகங்களில் தனிமனித விவகாரங்களில் பொது சமூக பங்களிப்பு அதிகமாய் உள்ளது ஒரு நேர்மறையான விசயம். என் அடுக்ககத்தில் ஒருமுறை ஒரு இஸ்லாமியரின் மரணம் நடந்த போது துக்கம் அனுசரிக்க வந்த பல நூறு மக்கள் எங்கள் பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தார்கள். இதே ஒற்றுமையை நீங்கள் ஒரு இந்து மரிக்கும் போது காண முடியாது. பக்கத்தில் வீட்டில் உள்ளோர் கூட பல சமயங்களில் மரணத்துக்கு துக்கம் விசாரிக்க வருவதில்லை. இஸ்லாமியர் இந்த ஒற்றுமையை தக்க வைக்க வேண்டும். நவீனப்படும் சாக்கில் அவர்கள் பொதுச்சட்டங்களுக்குள் மாட்டிக் கொள்ளக் கூடாது. தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையில் ஒரு உடைக்க முடியாத பந்தம் இருக்க வேண்டும். அதற்கு மத தனிச்சட்டங்கள் உதவும். தனிமனித வாழ்வில் மதத்தின் குறுக்கீடும் உதவும். இதை இஸ்லாமியர் பாதுகாக்க வேண்டும்! இந்துக்கள் செய்த தவறை அவர்கள் செய்யக் கூடாது!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...