Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

டி.ஐ.ஜி ரூபாவும் சசிகலாவும் - செல்வந்தர்களை வழிபடுவதன் சிக்கல்

Image result for roopa ias + sasikala

சமீபத்தில் சசிகலாவை சிறைவைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் ஊழல்களை டி.ஐ.ஜி ரூபா மீடியா முன்பு அம்பலப்படுத்த பெரும் சர்ச்சையானது. சிறை அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும், சசிகலாவுக்கு நட்சத்திர சலுகைகள் வழங்கப்படுவதாகவும் கூறினார். சசிகலாவுக்கு என்று தனியாக வரவேற்பாளர் அறை, சமையலறை, ஏஸி வசதி கொண்ட இடம், அங்கு அவருக்கு சமைக்கவும் பணி செய்யும் வேலையாட்களாக சிறைக்கைதிகள், டிவி, மொபைல் போன் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளதாகவும், தினமும் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவு அவருக்கு வழங்கப்படுவதாகவும் ரூபா குற்றம் சாட்டினார். ரூபா இது குறித்து விசாரணை நடத்தும் போது பதிவு செய்த காணொளிகளை சிறை அதிகாரிகளே அழித்து விட்டதாகவும், சி.சி டிவி பதிவு உள்ளிட்ட ஆதாரங்களையும் அழித்து விட்டதாகவும் சாடினார்.

 ரூபாவின் மீடியா பேட்டிகள் அவர் சிறைக்குள் சசிகலாவை விட அதிகாரமற்றவராக தனிமைப்படுத்தப்பட்டவராக உள்ளதை காட்டின. ரூபா தன் உயரதிகாரி ராவே ஊழலில் பங்குபெற்றதாய் கூறிய நிலையில் அவருக்கு பெரும் சிக்கல்கள் வரப் போகின்றன என நான் ஊகித்தேன். எதிர்பார்த்தது போல இன்று அவர் போக்குவரத்துத் துறைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.
 கர்நாடக மாநில முதல்வர் சீதராமையாவே ரூபாவை கண்டித்துள்ளார். ஏனாம்? அதிகாரபூர்வ சேதிகளை மீடியாவிடம் கொண்டு சென்றதற்கு. அவர் இத்தகைய விபரங்களை தன் உயரதிகாரிகளிடம் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என முதல்வர் கூறுகிறார். ஆனால் உயரதிகாரியே லஞ்சம் பெறும் போது யாரிடம் செல்வதாம்?
மும்பை குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளே தனி மரியாதையுடன் செல்வாக்குடன் சிறைக்குள்ளும் வெளியிலும் செயல்படும் காலம் இது. அப்படி இருக்க சசிகலாவின் படோப நிலையில் எந்த வியப்பும் இல்லை. இது ஆதாரமான இன்னொரு சிக்கலை காட்டுகிறது.
 பெரும்பணக்காரர்களுக்கு அபரிதமான அந்தஸ்தும் செல்வாக்கும் அந்தஸ்தும் அளிக்கும் சமூகம் நமது. அப்பணக்காரர் சிறை சென்றால் மட்டும் அவரை எப்படி வேறுவிதமாய் நடத்த முடியும்? அப்போதும் அவர் பணக்காரர் தானே? சிறையில் மட்டும் அவரை எப்படி ஏழைக் கைதிகளுக்கு இணையாக நடத்த இயலும்? இது முரண் இல்லையா? குற்றம் எப்படி அனைத்துக் கைதிகளையும் சமமாக்கும்? அது சாத்தியம் எனில் ஒழுக்க அடிப்படையில் தானே இங்கு சமூகத்தில் அனைவரும் நடத்தப்பட வேண்டும்? மதுவே அருந்தாத, உபத்திரம் செய்யாத ஏழை இருக்கிறார், இன்னொரு பக்கம் மது அருந்தும், அடுத்தவர்களை வம்புக்கிழுக்கும் பணக்காரர் இருக்கிறார் (ஒரு பேச்சுக்கு). எங்காவது ஏழையை கும்பிட்டு போற்றி விட்டு பணக்காரரை கண்டித்து ஒதுக்குவோமா? நிச்சயமாய் மாட்டோம். அம்பானிக்கும் விஜய் மால்யாவுக்கும் இவ்வளவு மதிப்பையும் கவனத்தையும் சமூக அதிகாரத்தையும் நாம் அளிக்க காரணம் என்ன? அவர்கள் செல்வத்தை உற்பத்தி செய்கிறார்கள் என்பது. இதே மதிப்பு ஒரு சமூகப் போராளிக்கோ தொண்டாளனுக்கோ நம் சமூகம் அளிக்காது. செல்வத்தை உற்பத்தி செய்கிறவன் சமூகத்தின் மையத்திலும் சமூகத்தின் மேம்பாட்டுக்காக பாடுபடுகிறவன் விளிம்பிலும் இருக்கிறான்.
 நாற்பது, ஐம்பதுகளில் நிலைமை நேர்மாறாக இருந்தது. இன்று இந்த போக்குக்கு ஒரு நல்ல உதாரணம் தமிழில் கடந்த 20 வருடங்களில் வெளிவரும் வாழ்க்கைக்கதை நூல்கள். கார்ப்பரேட் முதலாளிகள், வியாபார காந்தங்கள், செல்வத்தை பெருக்கும் வித்தை கற்றவர்களின் வாழ்க்கையை விளக்கும் நூல்கள் இவ்விரு பத்தாண்டுகளில் மிக அதிகமாய் வெளிவந்துள்ளன. விற்றுள்ளன. கிழக்குப் பதிப்பக நூல்கள் ஒரு சிறந்த உதாரணம். மாறாக, எண்பதுகளுக்கு முன்பு நாம் சிந்தனையாளர்கள், ஞானிகள், அறிஞர்கள், தலைவர்களின் வாழ்க்கையைப் பற்றி படிக்க விரும்பினோம்.
இப்படியான ஒரு சமூகத்தில் ஒரு செல்வந்தர் சிறைக்கு செல்லும் போது அவர் திடுமென ஏழையாவதில்லை (ஒரு மத்திய வர்க்க ஆள் சிறை சென்றால் வேலையை இழந்து ஆண்டியாகி விடுவார்.) செல்வந்தர் சிறையிலும் செல்வந்தர் தான். சிறை அதிகாரிகள் அவருக்கு வெளியில் உள்ள மதிப்பை தானே உள்ளேயும் அளிப்பார்கள். மேலும் அவரை அண்டி, கையூட்டு பெற்று தாமும் “வளர” விரும்புவார்கள். சிறை என்பது சமூகத்தின் ஒரு பிரதிபலிப்பு தானே. பொதுப்போக்குகளில் இருந்து அது மட்டும் எப்படி விடுபட்டிருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியும்? இது ஊழல் சம்மந்தமான ஒரு பிரச்சனை அல்ல. விழுமியங்களை முழுக்க துறந்து, செல்வத்தை மட்டுமே வழிபடும் ஒரு சமூகத்தின் கண்மூடித்தனத்தின் பிரச்சனை இது.
பெரும் நிறுவனங்களை கட்டியமைத்து நிதியை பெருக்கி லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கிற முதலாளிகளை நான் குறைத்து மதிப்பிடவோ சிறுமைப்படுத்தவோ முயலவில்லை. பணம் சம்பாதிப்பதோ தொழில்வளத்தை பெருக்குவதோ குற்றம் என நான் கருதவில்லை. ஆனால் ஒரு சமூகத்தின் பிரதானப் போக்கே பணத்தை வழிபடுவதாய் மாறக் கூடாது என்கிறேன். அப்படி மாறும் போது சசிகலாக்களையும் மால்யாக்களையும் குற்றவாளிகள் என பழிப்பது சிக்கலாகும். பண்புகளை புறமொதுக்கும் சமூகம் சசிகலா என வரும் போது மட்டும் நல்லத்தனமாய் நடந்து கொள்ள முடியாது. இத்தனை நாட்கள் மால்யாவை கொண்டாடி விட்டு இன்று அவரை சிறையில் தள்ளு என கோர முடியாது.

சீதராமையாவே தலையிட்டு ஊழல்வாதிகளை காப்பாற்றியிருப்பது இன்னொரு விசயத்தை தெளிவுபடுத்துகிறது. அதிகார படிநிலையை பேணுவது முதல்வருக்கு அவசியம். சிறை எனும் பிரம்மாண்ட அமைப்பு ஒரு அரசின் இடது கை எனலாம் (காவல் துறை வலது கை). ஆக சிறைத்துறையை கேவலப்படுத்துவது முதல்வரையே காறித்துப்புவதற்கு சமம். சிறைத்துறையின் செங்கற்களை அசைத்தால் அது முதல்வரின் நாற்காலியின் கால்களை ஆட வைக்கும். அல்தூசர் இந்த அமைப்பை Repressive State Apparatus என்றார். அரசின் மீதுள்ள மக்களின் நம்பிக்கையும் அச்சமும் சிறைத்துறையின் செயல்பாடு சம்மந்தமான கருத்தமைவுகளில் தான் உறைகின்றன. மக்கள் சிறையை மதிக்கவில்லை, அஞ்சவில்லை என்றால் முதல்வரையும் மதிக்கவோ அஞ்சவோ மாட்டார்கள்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...