Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

டி.ஐ.ஜி ரூபாவும் சசிகலாவும் - செல்வந்தர்களை வழிபடுவதன் சிக்கல்

Image result for roopa ias + sasikala

சமீபத்தில் சசிகலாவை சிறைவைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் ஊழல்களை டி.ஐ.ஜி ரூபா மீடியா முன்பு அம்பலப்படுத்த பெரும் சர்ச்சையானது. சிறை அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும், சசிகலாவுக்கு நட்சத்திர சலுகைகள் வழங்கப்படுவதாகவும் கூறினார். சசிகலாவுக்கு என்று தனியாக வரவேற்பாளர் அறை, சமையலறை, ஏஸி வசதி கொண்ட இடம், அங்கு அவருக்கு சமைக்கவும் பணி செய்யும் வேலையாட்களாக சிறைக்கைதிகள், டிவி, மொபைல் போன் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளதாகவும், தினமும் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவு அவருக்கு வழங்கப்படுவதாகவும் ரூபா குற்றம் சாட்டினார். ரூபா இது குறித்து விசாரணை நடத்தும் போது பதிவு செய்த காணொளிகளை சிறை அதிகாரிகளே அழித்து விட்டதாகவும், சி.சி டிவி பதிவு உள்ளிட்ட ஆதாரங்களையும் அழித்து விட்டதாகவும் சாடினார்.

 ரூபாவின் மீடியா பேட்டிகள் அவர் சிறைக்குள் சசிகலாவை விட அதிகாரமற்றவராக தனிமைப்படுத்தப்பட்டவராக உள்ளதை காட்டின. ரூபா தன் உயரதிகாரி ராவே ஊழலில் பங்குபெற்றதாய் கூறிய நிலையில் அவருக்கு பெரும் சிக்கல்கள் வரப் போகின்றன என நான் ஊகித்தேன். எதிர்பார்த்தது போல இன்று அவர் போக்குவரத்துத் துறைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.
 கர்நாடக மாநில முதல்வர் சீதராமையாவே ரூபாவை கண்டித்துள்ளார். ஏனாம்? அதிகாரபூர்வ சேதிகளை மீடியாவிடம் கொண்டு சென்றதற்கு. அவர் இத்தகைய விபரங்களை தன் உயரதிகாரிகளிடம் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என முதல்வர் கூறுகிறார். ஆனால் உயரதிகாரியே லஞ்சம் பெறும் போது யாரிடம் செல்வதாம்?
மும்பை குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளே தனி மரியாதையுடன் செல்வாக்குடன் சிறைக்குள்ளும் வெளியிலும் செயல்படும் காலம் இது. அப்படி இருக்க சசிகலாவின் படோப நிலையில் எந்த வியப்பும் இல்லை. இது ஆதாரமான இன்னொரு சிக்கலை காட்டுகிறது.
 பெரும்பணக்காரர்களுக்கு அபரிதமான அந்தஸ்தும் செல்வாக்கும் அந்தஸ்தும் அளிக்கும் சமூகம் நமது. அப்பணக்காரர் சிறை சென்றால் மட்டும் அவரை எப்படி வேறுவிதமாய் நடத்த முடியும்? அப்போதும் அவர் பணக்காரர் தானே? சிறையில் மட்டும் அவரை எப்படி ஏழைக் கைதிகளுக்கு இணையாக நடத்த இயலும்? இது முரண் இல்லையா? குற்றம் எப்படி அனைத்துக் கைதிகளையும் சமமாக்கும்? அது சாத்தியம் எனில் ஒழுக்க அடிப்படையில் தானே இங்கு சமூகத்தில் அனைவரும் நடத்தப்பட வேண்டும்? மதுவே அருந்தாத, உபத்திரம் செய்யாத ஏழை இருக்கிறார், இன்னொரு பக்கம் மது அருந்தும், அடுத்தவர்களை வம்புக்கிழுக்கும் பணக்காரர் இருக்கிறார் (ஒரு பேச்சுக்கு). எங்காவது ஏழையை கும்பிட்டு போற்றி விட்டு பணக்காரரை கண்டித்து ஒதுக்குவோமா? நிச்சயமாய் மாட்டோம். அம்பானிக்கும் விஜய் மால்யாவுக்கும் இவ்வளவு மதிப்பையும் கவனத்தையும் சமூக அதிகாரத்தையும் நாம் அளிக்க காரணம் என்ன? அவர்கள் செல்வத்தை உற்பத்தி செய்கிறார்கள் என்பது. இதே மதிப்பு ஒரு சமூகப் போராளிக்கோ தொண்டாளனுக்கோ நம் சமூகம் அளிக்காது. செல்வத்தை உற்பத்தி செய்கிறவன் சமூகத்தின் மையத்திலும் சமூகத்தின் மேம்பாட்டுக்காக பாடுபடுகிறவன் விளிம்பிலும் இருக்கிறான்.
 நாற்பது, ஐம்பதுகளில் நிலைமை நேர்மாறாக இருந்தது. இன்று இந்த போக்குக்கு ஒரு நல்ல உதாரணம் தமிழில் கடந்த 20 வருடங்களில் வெளிவரும் வாழ்க்கைக்கதை நூல்கள். கார்ப்பரேட் முதலாளிகள், வியாபார காந்தங்கள், செல்வத்தை பெருக்கும் வித்தை கற்றவர்களின் வாழ்க்கையை விளக்கும் நூல்கள் இவ்விரு பத்தாண்டுகளில் மிக அதிகமாய் வெளிவந்துள்ளன. விற்றுள்ளன. கிழக்குப் பதிப்பக நூல்கள் ஒரு சிறந்த உதாரணம். மாறாக, எண்பதுகளுக்கு முன்பு நாம் சிந்தனையாளர்கள், ஞானிகள், அறிஞர்கள், தலைவர்களின் வாழ்க்கையைப் பற்றி படிக்க விரும்பினோம்.
இப்படியான ஒரு சமூகத்தில் ஒரு செல்வந்தர் சிறைக்கு செல்லும் போது அவர் திடுமென ஏழையாவதில்லை (ஒரு மத்திய வர்க்க ஆள் சிறை சென்றால் வேலையை இழந்து ஆண்டியாகி விடுவார்.) செல்வந்தர் சிறையிலும் செல்வந்தர் தான். சிறை அதிகாரிகள் அவருக்கு வெளியில் உள்ள மதிப்பை தானே உள்ளேயும் அளிப்பார்கள். மேலும் அவரை அண்டி, கையூட்டு பெற்று தாமும் “வளர” விரும்புவார்கள். சிறை என்பது சமூகத்தின் ஒரு பிரதிபலிப்பு தானே. பொதுப்போக்குகளில் இருந்து அது மட்டும் எப்படி விடுபட்டிருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியும்? இது ஊழல் சம்மந்தமான ஒரு பிரச்சனை அல்ல. விழுமியங்களை முழுக்க துறந்து, செல்வத்தை மட்டுமே வழிபடும் ஒரு சமூகத்தின் கண்மூடித்தனத்தின் பிரச்சனை இது.
பெரும் நிறுவனங்களை கட்டியமைத்து நிதியை பெருக்கி லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கிற முதலாளிகளை நான் குறைத்து மதிப்பிடவோ சிறுமைப்படுத்தவோ முயலவில்லை. பணம் சம்பாதிப்பதோ தொழில்வளத்தை பெருக்குவதோ குற்றம் என நான் கருதவில்லை. ஆனால் ஒரு சமூகத்தின் பிரதானப் போக்கே பணத்தை வழிபடுவதாய் மாறக் கூடாது என்கிறேன். அப்படி மாறும் போது சசிகலாக்களையும் மால்யாக்களையும் குற்றவாளிகள் என பழிப்பது சிக்கலாகும். பண்புகளை புறமொதுக்கும் சமூகம் சசிகலா என வரும் போது மட்டும் நல்லத்தனமாய் நடந்து கொள்ள முடியாது. இத்தனை நாட்கள் மால்யாவை கொண்டாடி விட்டு இன்று அவரை சிறையில் தள்ளு என கோர முடியாது.

சீதராமையாவே தலையிட்டு ஊழல்வாதிகளை காப்பாற்றியிருப்பது இன்னொரு விசயத்தை தெளிவுபடுத்துகிறது. அதிகார படிநிலையை பேணுவது முதல்வருக்கு அவசியம். சிறை எனும் பிரம்மாண்ட அமைப்பு ஒரு அரசின் இடது கை எனலாம் (காவல் துறை வலது கை). ஆக சிறைத்துறையை கேவலப்படுத்துவது முதல்வரையே காறித்துப்புவதற்கு சமம். சிறைத்துறையின் செங்கற்களை அசைத்தால் அது முதல்வரின் நாற்காலியின் கால்களை ஆட வைக்கும். அல்தூசர் இந்த அமைப்பை Repressive State Apparatus என்றார். அரசின் மீதுள்ள மக்களின் நம்பிக்கையும் அச்சமும் சிறைத்துறையின் செயல்பாடு சம்மந்தமான கருத்தமைவுகளில் தான் உறைகின்றன. மக்கள் சிறையை மதிக்கவில்லை, அஞ்சவில்லை என்றால் முதல்வரையும் மதிக்கவோ அஞ்சவோ மாட்டார்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...