முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீடு என்பது வீடு அல்ல

Image result for poetics of space

இப்போதெல்லாம் மாலை நான்கு மணிக்கு வேலை முடிந்த பின் நூலகம் சென்று விடுகிறேன். இந்த வாரம் முழுக்க நூலகத்திலே கூடுகட்டினேன். ஆங்கிலத்தில் ஒரு ஆய்வு நூலுக்கான ஆரம்ப கட்ட பணியில் இருக்கிறேன். வீடு, அறை ஆகிய உருவகங்கள் தமிழ் கவிதை மற்றும் கதைகளில் கடந்த முப்பதாண்டுகளில் எப்படி மாறி வந்துள்ளன, இம்மாற்றங்களின் சமூக, அரசியல் பின்னணி என்ன, உளவியல் என்ன என்பது ஆய்வுத் தலைப்பு.

 எந்த ஆய்வின் துவக்கத்திலும் அத்தலைப்பில் அதுவரையில் வெளிவந்த விமர்சன / ஆய்வு நூல்களைப் படித்து சாராம்சப்படுத்தி எழுத வேண்டும். இதை literature survey என்பார்கள். இங்கே பல்கலையில் சேர்ந்த இரண்டாம் வாரத்தில் இதை துவங்கினேன். அதன் பிறகு மூன்று வாரங்கள் தடைபட்டு மீண்டும் ஆரம்பித்தேன். குறிப்பாய் கடந்த பத்து நாட்களும் முழுமூச்சாய் இவ்வேலை தான்.
வீடு எனும் உருவகம் பற்றி வந்துள்ள ஆய்வுகளைப் படிக்க அவ்வளவு சுவாரஸ்யம். குறிப்பாய் கேஸ்டன் பேக்கிலர்ட் (Gaston Bachelard) என்பவரின் Poetics of Space எனும் நூல். மனித பிரக்ஞைக்கும் வீட்டுக்குமான உறவு என்ன என்பது தான் இந்நூலின் மையப்புள்ளி. மிக கவித்துவமான மொழியில் வீடு குறித்த தன் மனப்பதிவுகளை, அவதானிப்புகளை, தத்துவ புரிதல்களை மாய்ந்து மாய்ந்து சொல்லிப் போகிறார்.
 வேறெந்த தத்துவ, ஆய்வு நூலும் இவ்வளவு சிலாக்கியமாய் இருந்து நான் கண்டதில்லை. சதா புன்னகையும் நெகிழ்வுமாய் இந்நூலைப் படித்தேன். (யாராவது இந்நூலின் ஒரு பகுதியையாவது தமிழில் மொழியாக்க வேண்டும்.)
வீடு நமக்கு ஏன் அவசியம்? உறைவிடமாக மட்டுமல்ல. நம் சுயத்தை கட்டமைக்க வீடு எனும் வடிவம் கட்டாயம் தேவை. மனிதனால் உண்மையில் எங்கும் தங்க முடியும். நடைபாதையில் கூடாரம் அமைத்து கூட வாழலாம். ஒன்றும் குறைந்து விடாது. ஆனால் நம்மைச் சுற்றி நான்கு சுவர்கள் அவசியம். அதுவே நம்மை வெட்டவெளியில் இருந்து தனிமைப்படுத்தி நமது தனிப்பட்ட சுயத்தை உறுதிப்படுத்த உதவுகிறது.
 நான் முன்பு வேலைக்கு போகும் வழியில் நடைபாதையில் கடை போட்டிருப்பவர்கள் மதிய வேளையில் சுவரை நோக்கி திரும்பி அமர்ந்து சாப்பிடுவதை பார்ப்பேன். ஏன் அவர்கள் அப்படி அமர்கிறார்கள்? சுவருக்கு எதிரே அமரும் போது தான் ஒரு அறையில் இருப்பதான பிரமை ஏற்படுகிறதா? திரும்பி ரோட்டை நோக்கி இருந்து உண்டால் அந்தரங்கமான நேரமாய் உணவு வேளை இல்லாமல், ஒரு பொதுவெளியில் செய்யும் சடங்கு போல் ஆகி விடும். ஒரு சுவர் ஒரு வீட்டை உருவாக்க போதும் நமக்கு. அதே போல் ஆழ்வார்பேட்டை சிக்னல் தாண்டியதும் ஒரு ஓட்டல் வாசலில் இரண்டு சிறுமிகள் பொம்மை விற்பார்கள். ஒருநாள் அதில் ஒருவள் சட்டென நடைபாதையில் திரும்பி அமர்ந்து ஒன்றுக்கு போகத் துவங்கினாள். அவளுக்கு அப்போது வெட்டவெளியில் ஆடையை அவிழ்க்கிறோம் எனும் உணர்வில்லை. திரும்பி அமர்ந்ததும் அவள் முன் சுவர் இருக்கிறது. தான் ஒரு மூலையில் இருப்பதாய் கற்பித்துக் கொள்கிறாள். அது அவளுக்கு ஒரு கழிப்பறையாக மாறுகிறது. பல சமயங்களில் நமது வீடும், அறையும், அதன் அந்தரங்கமும் நம் மனதுக்குள் தான் உள்ளது. பேக்கிலர்ட் இதைப் பற்றி பல இலக்கிய உதாரணங்களுடன் விவரிக்கிறார்.
எத்தனையோ நாட்கள் ஜன்னல் கம்பிகளை பற்றி நின்றபடி மழை கொட்டுவதையும் மின்னல் வெட்டுவதையும் புயலில் மரங்கள் தலைவிரிக் கோலமாய் ஆடுவதையும் பார்த்து சிலாகித்திருக்கிறோம். ஆனால் இதே மழையை நாம் வீட்டுக்கு வெளியே நின்று நனைந்தபடி நின்று ரசிக்க இயலாது. சொல்லப் போனால் பெருமழையின் போது தான் வீட்டுக்குள் இருக்கும் அனுபவம் அவ்வளவு ரசனையாக, சிலாகிப்பாக, சுகமாக இருக்கிறது. வீட்டை அழகாய் மாற்றுவது வீடு அல்ல; வீட்டுக்கு வெளியே உள்ள வெட்டவெளி, இயற்கை, அதன் அகன்ற, நிலையற்ற, ஆபத்தான சூழல். இதைப் பற்றி பேசும் பேக்கிலர்ட் எப்படி பனிக்காலத்தில் வீட்டுக்குள் இருக்கும் ஒருவன் வெளியே மழையும் புயலும் அடிக்க வேண்டும் என ஏங்குகிறான் என விவரிக்கிறார். இந்த இடம் அபாரமாய் உள்ளது.
பொதுவாக காதலர்கள் தம் எதிர்காலம் பற்றி பேசும் போது ”நமக்கு என ஒரு கூடு கட்ட வேண்டும்” என சொல்வார்கள் என கூறும் பேக்கிலர்ட் இது எவ்வளவு அபத்தமானது என விளக்குகிறார். கூடு என்பது பறவைகள் ஜோடியாய் வாழ்வதற்கானது அல்ல. ஜோடி சேர்ந்த பின் முட்டையிடுவதற்கான, குஞ்சுகள் பொரிந்து வளர்வதற்கான ஒரு தற்காலிக அமைப்பு. மனிதர்களைப் போல் அல்லாது பறவைகள் வெட்டவெளியில் தான் புணர்கின்றன. அப்படி இருக்க, காதல் அந்தரங்கத்துக்கான ஒரு வீடாக எப்படி கூடை நாம் புரிந்து கொள்கிறோம் என அவர் கேட்கிறார். கூடுகள் மீது மனிதனுக்கு பல நூற்றாண்டுகளாய் தனி ஆர்வமும், வியப்பும் உள்ளது என சொல்கிறார். கூடுகளை நம் கற்பனையில் புதுவிதமாய் கட்டியெழுப்புகிறோம். வீடு ஒரு உருவகம் என்றால் கூடு ஒரு ஆதி பிம்பம் (primal image) என்கிறார். கூட்டை அடிப்படையாய் வைத்து தான் வீடு குறித்த சித்திரத்தை மனதில் எழுப்புகிறோம்.
ஓடு என்பது கூட்டை போன்றே ஒரு ஆதி பிம்பம் எனக் கூறுகிறார் பேக்கிலர்ட். ஒரு முடிவை எடுக்கும் முன், ஒரு புது அனுபவத்தை எதிர்கொள்ளும் போதும் நமது மனம் கொள்ளும் தடுமாற்றம், தத்தளிப்பு ஆகியவற்றை ஒரு நத்தையோ ஆமையோ தன் ஓட்டில் இருந்து எட்டிப் பார்த்து உள்ளே சட்டென இழுத்துக் கொள்ளும் காட்சியை அடிப்படையாய் கொண்டே கற்பனை செய்கிறோம் என்கிறார். இது ரொம்ப சுவாரஸ்யமான ஒரு அவதானிப்பு. ஒரு அழகான பெண் உங்களுக்கு சற்று பின்னே ஒரு இருக்கையில் இருக்கிறார். அவ்வப்போது நாசுக்காய் அவளை கவனிக்கிறீர்கள். அப்போது உங்கள் மனம் எப்படி செயல்படுகிறது எனக் கேட்டால் எப்படி விளக்குவீர்கள்? அடிக்கடி எட்டிப் பார்த்து தலையை உள்ளே இழுத்து மீண்டும் திரும்பிப் பார்த்து … உங்கள் மனம் ஒரு நத்தையை போன்றே இருக்கிறது. வேறெப்படியும் நம்மால் இதை கற்பனை செய்ய இயலாது. நமது பிரக்ஞை குறித்த நம்பிக்கைகள் இது போன்ற ஆதி உருவகங்களில் பதிந்து போயுள்ளன. பறவையை, நத்தையை, ஆமையைக் கண்டு தான் ஆதிமனிதன் தன் பிரக்ஞையை வடிவமைத்திருக்கிறான் எனலாம்.

நான் என் வாழ்க்கையில் படித்த மிகச்சிறந்த நூல்களில் ஒன்று Poetics of Space என்பேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...