Skip to main content

வீடு என்பது வீடு அல்ல

Image result for poetics of space

இப்போதெல்லாம் மாலை நான்கு மணிக்கு வேலை முடிந்த பின் நூலகம் சென்று விடுகிறேன். இந்த வாரம் முழுக்க நூலகத்திலே கூடுகட்டினேன். ஆங்கிலத்தில் ஒரு ஆய்வு நூலுக்கான ஆரம்ப கட்ட பணியில் இருக்கிறேன். வீடு, அறை ஆகிய உருவகங்கள் தமிழ் கவிதை மற்றும் கதைகளில் கடந்த முப்பதாண்டுகளில் எப்படி மாறி வந்துள்ளன, இம்மாற்றங்களின் சமூக, அரசியல் பின்னணி என்ன, உளவியல் என்ன என்பது ஆய்வுத் தலைப்பு.

 எந்த ஆய்வின் துவக்கத்திலும் அத்தலைப்பில் அதுவரையில் வெளிவந்த விமர்சன / ஆய்வு நூல்களைப் படித்து சாராம்சப்படுத்தி எழுத வேண்டும். இதை literature survey என்பார்கள். இங்கே பல்கலையில் சேர்ந்த இரண்டாம் வாரத்தில் இதை துவங்கினேன். அதன் பிறகு மூன்று வாரங்கள் தடைபட்டு மீண்டும் ஆரம்பித்தேன். குறிப்பாய் கடந்த பத்து நாட்களும் முழுமூச்சாய் இவ்வேலை தான்.
வீடு எனும் உருவகம் பற்றி வந்துள்ள ஆய்வுகளைப் படிக்க அவ்வளவு சுவாரஸ்யம். குறிப்பாய் கேஸ்டன் பேக்கிலர்ட் (Gaston Bachelard) என்பவரின் Poetics of Space எனும் நூல். மனித பிரக்ஞைக்கும் வீட்டுக்குமான உறவு என்ன என்பது தான் இந்நூலின் மையப்புள்ளி. மிக கவித்துவமான மொழியில் வீடு குறித்த தன் மனப்பதிவுகளை, அவதானிப்புகளை, தத்துவ புரிதல்களை மாய்ந்து மாய்ந்து சொல்லிப் போகிறார்.
 வேறெந்த தத்துவ, ஆய்வு நூலும் இவ்வளவு சிலாக்கியமாய் இருந்து நான் கண்டதில்லை. சதா புன்னகையும் நெகிழ்வுமாய் இந்நூலைப் படித்தேன். (யாராவது இந்நூலின் ஒரு பகுதியையாவது தமிழில் மொழியாக்க வேண்டும்.)
வீடு நமக்கு ஏன் அவசியம்? உறைவிடமாக மட்டுமல்ல. நம் சுயத்தை கட்டமைக்க வீடு எனும் வடிவம் கட்டாயம் தேவை. மனிதனால் உண்மையில் எங்கும் தங்க முடியும். நடைபாதையில் கூடாரம் அமைத்து கூட வாழலாம். ஒன்றும் குறைந்து விடாது. ஆனால் நம்மைச் சுற்றி நான்கு சுவர்கள் அவசியம். அதுவே நம்மை வெட்டவெளியில் இருந்து தனிமைப்படுத்தி நமது தனிப்பட்ட சுயத்தை உறுதிப்படுத்த உதவுகிறது.
 நான் முன்பு வேலைக்கு போகும் வழியில் நடைபாதையில் கடை போட்டிருப்பவர்கள் மதிய வேளையில் சுவரை நோக்கி திரும்பி அமர்ந்து சாப்பிடுவதை பார்ப்பேன். ஏன் அவர்கள் அப்படி அமர்கிறார்கள்? சுவருக்கு எதிரே அமரும் போது தான் ஒரு அறையில் இருப்பதான பிரமை ஏற்படுகிறதா? திரும்பி ரோட்டை நோக்கி இருந்து உண்டால் அந்தரங்கமான நேரமாய் உணவு வேளை இல்லாமல், ஒரு பொதுவெளியில் செய்யும் சடங்கு போல் ஆகி விடும். ஒரு சுவர் ஒரு வீட்டை உருவாக்க போதும் நமக்கு. அதே போல் ஆழ்வார்பேட்டை சிக்னல் தாண்டியதும் ஒரு ஓட்டல் வாசலில் இரண்டு சிறுமிகள் பொம்மை விற்பார்கள். ஒருநாள் அதில் ஒருவள் சட்டென நடைபாதையில் திரும்பி அமர்ந்து ஒன்றுக்கு போகத் துவங்கினாள். அவளுக்கு அப்போது வெட்டவெளியில் ஆடையை அவிழ்க்கிறோம் எனும் உணர்வில்லை. திரும்பி அமர்ந்ததும் அவள் முன் சுவர் இருக்கிறது. தான் ஒரு மூலையில் இருப்பதாய் கற்பித்துக் கொள்கிறாள். அது அவளுக்கு ஒரு கழிப்பறையாக மாறுகிறது. பல சமயங்களில் நமது வீடும், அறையும், அதன் அந்தரங்கமும் நம் மனதுக்குள் தான் உள்ளது. பேக்கிலர்ட் இதைப் பற்றி பல இலக்கிய உதாரணங்களுடன் விவரிக்கிறார்.
எத்தனையோ நாட்கள் ஜன்னல் கம்பிகளை பற்றி நின்றபடி மழை கொட்டுவதையும் மின்னல் வெட்டுவதையும் புயலில் மரங்கள் தலைவிரிக் கோலமாய் ஆடுவதையும் பார்த்து சிலாகித்திருக்கிறோம். ஆனால் இதே மழையை நாம் வீட்டுக்கு வெளியே நின்று நனைந்தபடி நின்று ரசிக்க இயலாது. சொல்லப் போனால் பெருமழையின் போது தான் வீட்டுக்குள் இருக்கும் அனுபவம் அவ்வளவு ரசனையாக, சிலாகிப்பாக, சுகமாக இருக்கிறது. வீட்டை அழகாய் மாற்றுவது வீடு அல்ல; வீட்டுக்கு வெளியே உள்ள வெட்டவெளி, இயற்கை, அதன் அகன்ற, நிலையற்ற, ஆபத்தான சூழல். இதைப் பற்றி பேசும் பேக்கிலர்ட் எப்படி பனிக்காலத்தில் வீட்டுக்குள் இருக்கும் ஒருவன் வெளியே மழையும் புயலும் அடிக்க வேண்டும் என ஏங்குகிறான் என விவரிக்கிறார். இந்த இடம் அபாரமாய் உள்ளது.
பொதுவாக காதலர்கள் தம் எதிர்காலம் பற்றி பேசும் போது ”நமக்கு என ஒரு கூடு கட்ட வேண்டும்” என சொல்வார்கள் என கூறும் பேக்கிலர்ட் இது எவ்வளவு அபத்தமானது என விளக்குகிறார். கூடு என்பது பறவைகள் ஜோடியாய் வாழ்வதற்கானது அல்ல. ஜோடி சேர்ந்த பின் முட்டையிடுவதற்கான, குஞ்சுகள் பொரிந்து வளர்வதற்கான ஒரு தற்காலிக அமைப்பு. மனிதர்களைப் போல் அல்லாது பறவைகள் வெட்டவெளியில் தான் புணர்கின்றன. அப்படி இருக்க, காதல் அந்தரங்கத்துக்கான ஒரு வீடாக எப்படி கூடை நாம் புரிந்து கொள்கிறோம் என அவர் கேட்கிறார். கூடுகள் மீது மனிதனுக்கு பல நூற்றாண்டுகளாய் தனி ஆர்வமும், வியப்பும் உள்ளது என சொல்கிறார். கூடுகளை நம் கற்பனையில் புதுவிதமாய் கட்டியெழுப்புகிறோம். வீடு ஒரு உருவகம் என்றால் கூடு ஒரு ஆதி பிம்பம் (primal image) என்கிறார். கூட்டை அடிப்படையாய் வைத்து தான் வீடு குறித்த சித்திரத்தை மனதில் எழுப்புகிறோம்.
ஓடு என்பது கூட்டை போன்றே ஒரு ஆதி பிம்பம் எனக் கூறுகிறார் பேக்கிலர்ட். ஒரு முடிவை எடுக்கும் முன், ஒரு புது அனுபவத்தை எதிர்கொள்ளும் போதும் நமது மனம் கொள்ளும் தடுமாற்றம், தத்தளிப்பு ஆகியவற்றை ஒரு நத்தையோ ஆமையோ தன் ஓட்டில் இருந்து எட்டிப் பார்த்து உள்ளே சட்டென இழுத்துக் கொள்ளும் காட்சியை அடிப்படையாய் கொண்டே கற்பனை செய்கிறோம் என்கிறார். இது ரொம்ப சுவாரஸ்யமான ஒரு அவதானிப்பு. ஒரு அழகான பெண் உங்களுக்கு சற்று பின்னே ஒரு இருக்கையில் இருக்கிறார். அவ்வப்போது நாசுக்காய் அவளை கவனிக்கிறீர்கள். அப்போது உங்கள் மனம் எப்படி செயல்படுகிறது எனக் கேட்டால் எப்படி விளக்குவீர்கள்? அடிக்கடி எட்டிப் பார்த்து தலையை உள்ளே இழுத்து மீண்டும் திரும்பிப் பார்த்து … உங்கள் மனம் ஒரு நத்தையை போன்றே இருக்கிறது. வேறெப்படியும் நம்மால் இதை கற்பனை செய்ய இயலாது. நமது பிரக்ஞை குறித்த நம்பிக்கைகள் இது போன்ற ஆதி உருவகங்களில் பதிந்து போயுள்ளன. பறவையை, நத்தையை, ஆமையைக் கண்டு தான் ஆதிமனிதன் தன் பிரக்ஞையை வடிவமைத்திருக்கிறான் எனலாம்.

நான் என் வாழ்க்கையில் படித்த மிகச்சிறந்த நூல்களில் ஒன்று Poetics of Space என்பேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...