Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இமைப்பொழுதில் காலாவதி ஆகிப் போகிறோம்

Image result for bigg boss tamil
காலம் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் போகிறது. நான் பெங்களூர் வந்த பிறகான இரு மாதங்களில் ஊரில் எவ்வளவோ பரபரப்பான விசயங்கள் நடந்து விட்டன. குறிப்பாக பிக் பாஸ். பிக் பாஸ் ஏற்படுத்தும் சலசலப்புகள் கூட எனக்கு பேஸ்புக்கில் மேய்வதன் மூலம் மட்டுமே தெரிய வந்தது. அதனால் ஒரு அத்தியாயம் பார்த்தேன். ரொம்ப அலுப்பு. அதன் பிறகு தொடரவில்லை.

 சற்று முன் என் மனைவியிடம் பேசும் போது அவள் பிக்பாஸின் தீவிர ரசிகையாகி இருப்பதை அறிந்தேன். ஓவியாவுக்கு என்று ரசிகப் பட்டாளமே உருவாகி இருப்பதையும், வேறு பிக்பாஸ் சங்கதிகளையும் பகிர்ந்து கொண்டாள். எவ்வளவு சீக்கிரம் ஓவியாவும் காயத்ரியும் மீடியா ஆகிருதிகள் ஆகி விட்டார்கள் என்பது நினைக்க வியப்பாக இருக்கிறது. தமிழ்நாடே பித்துபிடித்தாற் போல் இவர்களை பற்றி விவாதிக்கிறது. ஆனால் துவங்கின வேகத்தில் இவர்களை கடந்தும் மறந்தும் போய் விடுவோம். என்றாலும் கூட இந்த வேகம் ஆச்சரியம் அளிக்கிறது.
 ரெண்டு நாள் டிவி பார்க்காமல், பேஸ்புக்கை சரிவர கவனிக்காமல் இருந்தால் நாம் “பின்தங்கி” போய் விடுகிறோம். என் மனைவி என்னை அதற்காக கடிந்து கொண்டாள். ரொம்ப காலாவதியாகி விட்டாயே, சாரு “ஓவியா ஒரு ஞானி” என எழுதியதை படிக்கவில்லையா என கேட்டாள். நான் ஒத்துக் கொண்டேன். காலத்தின் வேகத்தோடு பிளாட்பார்மில் ஓடி தாவி குதித்து ஏற என்னால் முடியாது. ரயில் நின்ற பின் பொறுமையாய் ஏறிக் கொள்கிறேன்.
எனக்கென்று ஒரு வேகம், போக்கு, ரிதம் உள்ளது. அதற்கு ஏற்ப தான் செயல்படுவேன். இப்போதைக்கு என் ஆர்வம் கவிதை வாசிப்பிலும், ஒரு ஆய்வு நூல் எழுதுவதிலும் உள்ளது. ஆகா ஷாஹித் அலி எனும் காஷ்மீரக் கவிஞரின் முழுத்தொகை நூலை படிக்க நேர்ந்தது. அட்டாகாசமான கவிஞன். அரசியலையும் வரலாறையும் மண்ணை இழந்த துயரத்தையும் கைவிடப்பட்ட நிலையையும் இவ்வளவு உருக்கமாய் நுணுக்கமாய் யாரும் எழுதிப் படித்ததில்லை. அவரது சில கவிதைகளை மொழியாக்கினேன். சில நாட்கள் கழித்து திருத்தியபின் வெளியிடலாம் என இருக்கிறேன்.
 சமகால ஐரோப்பிய சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றையும் கொஞ்சம் படித்தேன். Best European Fiction 2015. Dalkey Archive Press வெளியீடு. பிரஞ்சு, ஜார்ஜியா ஆகிய நாட்டுக் கதைகளை படித்தேன். சமகால கவிதைகளில் மீடியாவும் கண்காணிப்பும் முக்கிய பேசுபொருட்கள் எனத் தோன்றுகிறது. கச்சிதமாய், இலக்கியத்ததனமாய் எழுதுவதை விடுத்து லகுவாய், சரளமாய் அதே நேரம் தீவிரமாய் எழுத முயல்கிறார்கள். எகெதெரினா தொகொனிட்ஸெ எழுதிய It’s Me அழகுசாதனங்கள், அறுவை சிகிச்சைகள் மூலம் தன்னை முழுக்க இன்னொருத்தியாக மாற்றிக் கொண்டு பிரபலமான டிவி ரியாலிட்டி ஷோ நட்சத்திரத்தின் கதை. படக்கருவி முன்பும், வாழ்க்கையின் பல்வேறு தளங்களிலும் ஒரு பெண் தான் யாரென்றே அறியாத விதம் உருமாறிப் போகிற அவலத்தை பேசுகிறது இக்கதை.
 நிகலஸ் பொயஸ்ஸியின் An Unexpected Return ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கிறது. அங்கே குடியிருக்கும் ஒருவர் ஒருநாள் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போகிறார். மனிதர்கள் சகமனிதர்கள் மீது அக்கறை இழந்து விட்டார்கள் என்றும் வருந்தும் அவர் இதை கண்டிக்கும் விதமாய் தன் உடம்பின் உறுப்புகள் ஒவ்வொன்றாய் துண்டித்து அங்கு வாழ்பவர்களுக்கு அனுப்பப் போவதாய் அவன் தெரிவிக்கிறார். அவ்விதமாய் தன் கால், இமை, உதடு என ஒவ்வொன்றாய் நறுக்கி குடியிருப்பின் பல பகுதிகளிலாய் ஒரு குறிப்புடன் இடுகிறார். இது அங்குள்ள மக்களிடையே பெரும் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. அவரை கடுமையாய் வெறுப்பவர்களும் ஆதரிக்கிறவர்களும் இரு சாரிகளாய் பிரிந்து செயல்படுகிறார்கள் (பிக்பாஸை பின் தொடர்பவர்கள் போல). அனைவரும் அவரைப் பற்றியே சிந்திக்கிறார்கள், அஞ்சுகிறார்கள், அருவருப்படைகிறார்கள். அவர் செத்து விட மாட்டாரா என ஏங்கிறார்கள். ஒருநாள் அவர் திரும்பி வருகிறார். இது தான் திருப்பம். இன்றைய மீடியா கண்காணிப்புச் சூழல், மனிதர்கள் வெற்று பிம்பங்களாய் மாற்றப்படும் அவலம் ஆகியவற்றை கர்த்தரின் சிலுவையில் அறைதல், உயிர்த்தெழும்பல் ஆகியவற்றுடன் இணைத்து புதுவிதமாய் கற்பனை செய்ய முயலும் கதை இது.
 முழுத்தொகுப்பையும் படித்தபின் மற்ற கதைகள் பற்றி விரிவாய் எழுதுகிறேன்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...