முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இமைப்பொழுதில் காலாவதி ஆகிப் போகிறோம்

Image result for bigg boss tamil
காலம் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் போகிறது. நான் பெங்களூர் வந்த பிறகான இரு மாதங்களில் ஊரில் எவ்வளவோ பரபரப்பான விசயங்கள் நடந்து விட்டன. குறிப்பாக பிக் பாஸ். பிக் பாஸ் ஏற்படுத்தும் சலசலப்புகள் கூட எனக்கு பேஸ்புக்கில் மேய்வதன் மூலம் மட்டுமே தெரிய வந்தது. அதனால் ஒரு அத்தியாயம் பார்த்தேன். ரொம்ப அலுப்பு. அதன் பிறகு தொடரவில்லை.

 சற்று முன் என் மனைவியிடம் பேசும் போது அவள் பிக்பாஸின் தீவிர ரசிகையாகி இருப்பதை அறிந்தேன். ஓவியாவுக்கு என்று ரசிகப் பட்டாளமே உருவாகி இருப்பதையும், வேறு பிக்பாஸ் சங்கதிகளையும் பகிர்ந்து கொண்டாள். எவ்வளவு சீக்கிரம் ஓவியாவும் காயத்ரியும் மீடியா ஆகிருதிகள் ஆகி விட்டார்கள் என்பது நினைக்க வியப்பாக இருக்கிறது. தமிழ்நாடே பித்துபிடித்தாற் போல் இவர்களை பற்றி விவாதிக்கிறது. ஆனால் துவங்கின வேகத்தில் இவர்களை கடந்தும் மறந்தும் போய் விடுவோம். என்றாலும் கூட இந்த வேகம் ஆச்சரியம் அளிக்கிறது.
 ரெண்டு நாள் டிவி பார்க்காமல், பேஸ்புக்கை சரிவர கவனிக்காமல் இருந்தால் நாம் “பின்தங்கி” போய் விடுகிறோம். என் மனைவி என்னை அதற்காக கடிந்து கொண்டாள். ரொம்ப காலாவதியாகி விட்டாயே, சாரு “ஓவியா ஒரு ஞானி” என எழுதியதை படிக்கவில்லையா என கேட்டாள். நான் ஒத்துக் கொண்டேன். காலத்தின் வேகத்தோடு பிளாட்பார்மில் ஓடி தாவி குதித்து ஏற என்னால் முடியாது. ரயில் நின்ற பின் பொறுமையாய் ஏறிக் கொள்கிறேன்.
எனக்கென்று ஒரு வேகம், போக்கு, ரிதம் உள்ளது. அதற்கு ஏற்ப தான் செயல்படுவேன். இப்போதைக்கு என் ஆர்வம் கவிதை வாசிப்பிலும், ஒரு ஆய்வு நூல் எழுதுவதிலும் உள்ளது. ஆகா ஷாஹித் அலி எனும் காஷ்மீரக் கவிஞரின் முழுத்தொகை நூலை படிக்க நேர்ந்தது. அட்டாகாசமான கவிஞன். அரசியலையும் வரலாறையும் மண்ணை இழந்த துயரத்தையும் கைவிடப்பட்ட நிலையையும் இவ்வளவு உருக்கமாய் நுணுக்கமாய் யாரும் எழுதிப் படித்ததில்லை. அவரது சில கவிதைகளை மொழியாக்கினேன். சில நாட்கள் கழித்து திருத்தியபின் வெளியிடலாம் என இருக்கிறேன்.
 சமகால ஐரோப்பிய சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றையும் கொஞ்சம் படித்தேன். Best European Fiction 2015. Dalkey Archive Press வெளியீடு. பிரஞ்சு, ஜார்ஜியா ஆகிய நாட்டுக் கதைகளை படித்தேன். சமகால கவிதைகளில் மீடியாவும் கண்காணிப்பும் முக்கிய பேசுபொருட்கள் எனத் தோன்றுகிறது. கச்சிதமாய், இலக்கியத்ததனமாய் எழுதுவதை விடுத்து லகுவாய், சரளமாய் அதே நேரம் தீவிரமாய் எழுத முயல்கிறார்கள். எகெதெரினா தொகொனிட்ஸெ எழுதிய It’s Me அழகுசாதனங்கள், அறுவை சிகிச்சைகள் மூலம் தன்னை முழுக்க இன்னொருத்தியாக மாற்றிக் கொண்டு பிரபலமான டிவி ரியாலிட்டி ஷோ நட்சத்திரத்தின் கதை. படக்கருவி முன்பும், வாழ்க்கையின் பல்வேறு தளங்களிலும் ஒரு பெண் தான் யாரென்றே அறியாத விதம் உருமாறிப் போகிற அவலத்தை பேசுகிறது இக்கதை.
 நிகலஸ் பொயஸ்ஸியின் An Unexpected Return ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கிறது. அங்கே குடியிருக்கும் ஒருவர் ஒருநாள் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போகிறார். மனிதர்கள் சகமனிதர்கள் மீது அக்கறை இழந்து விட்டார்கள் என்றும் வருந்தும் அவர் இதை கண்டிக்கும் விதமாய் தன் உடம்பின் உறுப்புகள் ஒவ்வொன்றாய் துண்டித்து அங்கு வாழ்பவர்களுக்கு அனுப்பப் போவதாய் அவன் தெரிவிக்கிறார். அவ்விதமாய் தன் கால், இமை, உதடு என ஒவ்வொன்றாய் நறுக்கி குடியிருப்பின் பல பகுதிகளிலாய் ஒரு குறிப்புடன் இடுகிறார். இது அங்குள்ள மக்களிடையே பெரும் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. அவரை கடுமையாய் வெறுப்பவர்களும் ஆதரிக்கிறவர்களும் இரு சாரிகளாய் பிரிந்து செயல்படுகிறார்கள் (பிக்பாஸை பின் தொடர்பவர்கள் போல). அனைவரும் அவரைப் பற்றியே சிந்திக்கிறார்கள், அஞ்சுகிறார்கள், அருவருப்படைகிறார்கள். அவர் செத்து விட மாட்டாரா என ஏங்கிறார்கள். ஒருநாள் அவர் திரும்பி வருகிறார். இது தான் திருப்பம். இன்றைய மீடியா கண்காணிப்புச் சூழல், மனிதர்கள் வெற்று பிம்பங்களாய் மாற்றப்படும் அவலம் ஆகியவற்றை கர்த்தரின் சிலுவையில் அறைதல், உயிர்த்தெழும்பல் ஆகியவற்றுடன் இணைத்து புதுவிதமாய் கற்பனை செய்ய முயலும் கதை இது.
 முழுத்தொகுப்பையும் படித்தபின் மற்ற கதைகள் பற்றி விரிவாய் எழுதுகிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...