உட்கார இடம் இன்றி நான் வெளியே வந்தேன். அப்படித் தான் நான் அவனைப் பார்த்தேன். எங்கே? டென்னிஸ் ஆடுகளத்தில். அது உதைப்பந்து மைதானத்தை ஒட்டிய பூங்காவுக்குப் பின்னால்
இருந்தது. அதனை ஒட்டிய வழியே சென்றால் சுலபத்தில் நூலகமும், நான் அடிக்கடி ஹாட் சாக்லேட் அருந்தும் கடையும் வந்து விடும். நூலகத்துக்கு முன்னால் மேலாண்மை, சட்டம் ஆகிய துறை மாணவர்களின் வகுப்பறைகள் இருந்தன. ஆகையால் அவர்களில் கணிசமானோர் ஓய்வு வேளைகளில் அந்த கடை வாயிலிலோ
அல்லது ஆடுகளத்திலோ தான் இருப்பார்கள். அவர்களுடையது ஒரு தனி உலகம். நான் அதிகம் அங்கே
செல்வதில்லை.
ஆனால் அன்று பிரதான அரங்கத்தில் இசைப் போட்டிகள் நடந்ததால்
ஆடுகளம் நடமாட்டம் குறைவாய், சற்றே அமைதியாய்
இருந்தது. டொப் தப் எனும் பந்துகள் இதமாய் தட்டுப்படும்
ஒலி மட்டுமே. இடையிடையே பையன்கள் இந்தியில் பேசி சிரித்தார்கள். நான் ஹாட் சாக்லேட் வாங்கிக் கொண்டு காலி சிமிண்ட் இருக்கையில்
அமர்ந்து, கால் மேல் கால் போட்டு புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். மரங்களில் இருந்து மென்காற்று என் காதுமடல்களைத் தொட்டு மறைத்த
மயிர்க்கற்றையை அசைத்து குறுகுறுக்க வைத்தது. பின்னங்கழுத்து சிலிர்த்தது. நாவலின் கதையில் ஒரு திகிலூட்டும் திருப்பம். நாயகி அலறுகிறாள். அவள் கண்முன் திட்டுத்திட்டாய் குருதிப் பூக்கள். யாரோ அழைக்கும் உணர்வு. நிமிர்ந்து பார்த்த போது அவன் சர்வீஸுக்கு தயாராவதைப் பார்த்தேன்.
நீளமான சுருள் மயிரை பானி டெயிலாக கட்டி இருந்தான். கோலிக்குண்டு போல் அசையும் தொண்டைக்குழி. நீள மூக்கு. அழகான நீண்ட கண்கள். என்னைக் கண்டு
அவன் புன்னகைப்பது போல் தோன்றியது. மீண்டும் பார்த்தேன். ஆமாம், இல்லை என ரெண்டுமே
தோன்றியது. அந்த கம்பீரத்தின் மத்தியிலும் அவனது அசைவுகளில்
ஒரு வேடிக்கைத் தன்மை இருந்தது. திருகாணிகள் பாதி
கழன்று கைகால்கள் ஆட்டம் காணும் ஒரு எந்திர பொம்மை போல் அசைந்தான். நெளியும் தழல் போல் ஒரு உருவம்.
என்னை அவன் நேரடியாய் கவனிக்காவிடிலும் அவன் ஏனோ
பதற்றமாகிக் கொண்டே வந்தான். முதல் செர்வில்
அவன் கையில் இருந்து ரேக்கெட் நழுவியது. அவனை கலாய்த்தபடி ஓரமாய் இருந்த அவன் நண்பர்கள் இப்போது எதையோ எதிர்பார்த்து
சிரித்தபடி மெல்ல கைத்தட்ட துவங்கினர். அவன் அவர்களை நோக்கி வெட்கத்துடன் சிரித்து விட்டு ரேக்கெட்டை உறுதியாய் பற்றிக்
கொண்டு லேசாய் முதுகை பின்னால் வளைத்து ஸ்டைலாய் பந்தை அடித்தான். அந்த வெட்கச் சிரிப்பை பார்த்த நொடி எனக்கு அவனது நெற்றியில்
வருடி, முடிக்கற்றைகளை கோதி ஒதுக்கி, உச்சந்தலையில் விரல்களால் நீவி விட வேண்டும் எனத் தோன்றியது. உடனே கண்களை தாழ்த்திக் கொண்டு வாசிப்பது போல் பாவனை செய்தேன்.
இந்த அரைநொடியில் பந்து எங்கே போயிற்று என்பதை
நான் கவனிக்க வில்லை. பந்து வலையைத்
தாண்டி என் காலடியருகே ஒரு பூனைக்குட்டி போல் வந்து பதுங்கிக் கொண்டது. நான் தொடர்ந்து ஒன்றுமே நடக்காதது போல் பாவித்தபடி கால்களை
உள்ளிழுத்தேன். பந்து மேலும் உருண்டு தன் சொரசொர கன்னத்தால் என்
கணுக்காலில் தேய்த்தது. புத்தகத்தில்
பார்வையை பதித்து அது வழுக்கி வழுக்கி செல்ல பிடித்து வைத்துக் கொண்டிருந்தேன். அவன் நடந்து வரும் போது கழுத்து, தோள்கள், முழங்கை, மணிக்கட்டு என தனித்தனியாய் அசைந்தன; மெல்ல நடனமாடி வருவது போன்ற நடை. ஒரு நொடி குழம்பி நின்று விட்டு என் காலடியை நோக்கி குனிந்தான். அவன் நண்பர்களின் சிரிப்பொலி கேட்ட்து.
நான் தன்னிச்சையாய் எம்பி எழுந்தேன். தாவி தள்ளிச் சென்று நின்றேன். அவன் “சாரி சாரி” என்றபடி பந்தைப் பொறுக்கிக் கொண்டான். நான் என்னையறியாது சிரித்து விட்டேன். அவன் மீண்டும் லஜ்ஜையாய் புன்னகைத்து விட்டு தோளை பின்னால்
சாய்த்து நடந்து அகன்றான். தன்னிடத்துக்கு
மீண்டும் சென்று செர்வ் செய்ய ஆரம்பித்தான்.
துல்லியமான அமைதி. நான் இம்முறை அவனை கவனித்தேன். அடித்தான். பந்து இம்முறையும் வெளியே தெறித்து உருண்டோடி சரியாக என் காலருகே வந்து கணுக்காலை
சன்னமாய் முத்தமிட்டது. நான் பந்தைப்
பொறுக்கி அவனை நோக்கிப் போட்டேன். கௌரவமாய் அதைப்
பெற்று ஒன்றுமே நடக்காதது போல் மீண்டும் சர்வீஸ் ஆரம்பித்தான். இம்முறை நான் வலையருகே சென்று நின்றேன். பந்து துள்ளி வந்து என் இடுப்பைத் தொட்டு இன்னும் கொஞ்சம்
எம்பவா எனக் கேட்டது. கையில் சுலபமாய்
பற்றி திரும்ப வீசினேன். அவன் நண்பர்கள்
விளையாட்டை எங்கள் இருவருக்கானதாய் கருதி ரசிக்கத் துவங்கினர்.
சற்று நேரத்தில் இருள் கவிந்தது. லேசான தூறல். என் இமையில் ஒரு சின்ன துளி தங்கி ஏழு வர்ணங்களை ஜொலித்தது. துப்பட்டாவால் முகத்தை துடைத்தபடி அவனைத் தேடினேன். எங்கும் இல்லை.
அடுத்தடுத்த நாட்களும் நான் அங்கே வரத் தொடங்கினேன். அவன் சில நேரம் பார்வையாளர்களில் ஒருவனாய் இருப்பான், சில நேரம் பயிற்சியில் ஈடுபடுவான். ஓரிரு முறை நாங்கள் தேநீர்க் கடையில் எதிர்கொண்ட போது புன்னகை
பரிமாறிக் கொள்ளவில்லை. என்னை பரிச்சயமே
இல்லை என்பது போல் காட்டிக் கொண்டான்.