Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

எழுத்தாளனின் மிகப்பெரிய சவால்


 Image result for ஜெயமோகன்Image result for எஸ்.ராமகிருஷ்ணன்
எழுத்தாளர்கள் mood பற்றி பேசுவார்கள். நல்ல மூட் அமைய அவர்கள் தவமிருப்பார்கள். நீங்கள் எழுத்தாளன் என்றால், எழுதுவதற்கான ஊக்கமிக்க அந்த மனநிலையில் உணர்ச்சிகளால் ததும்பியபடி அதேவேளை உணர்ச்சிகளால் பாதிக்கப்படாமல் இருப்பீர்கள். ஒரு காதலைப் பிரிந்த வேதனையில் எழுத முடியாது; ஆனால் காலம் கடந்த பின் அந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கான ஒரு தவிப்பு உங்களுக்கு ஏற்படுகையில் நீங்கள் அதை சிறப்பாய் எழுத முடியும்.
ஒரு நண்பரிடம் இதைப் பற்றி மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது இமையம் பற்றி குறிப்பு வந்தது. அவரது மகன் நலமற்றிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் சிகிச்சைக்காக நிறைய பணம் செலவழித்திருக்கிறார். அதை விட முக்கியமாய் அவர் எந்தளவு உக்கிரமான உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டிருப்பார்! அவநம்பிக்கையின் நம்பிக்கையின் எல்லைகளுக்கு இடையில் எந்தளவு ஊசலாடியபடி தவித்திருப்பார்!

இந்த நிலையிலும் இமையம் எழுத்தில் ஊக்கம் குறையாமல் அதி தீவிரமாய் எழுதியபடி இருப்பார். அதனால் தான் அவர் மாமனிதர்.
எல்லா மனிதர் வாழ்விலும் இது போன்ற சோகங்கள், வேதனைகள் வரும் என்றாலும் எழுத்தாளர்களே இவற்றால் மிக அதிகமாய் கலங்கி உளம் குலைந்து போகிறவர்களாய் இருப்பார்கள்.
இன்னொரு பக்கம் வாழ்க்கை நிதானமாய் பெரிய விபத்துகள் இன்றி நேர்கோட்டில் சென்று கொண்டிருந்தாலும் எழுத்து வாழ்வில் தொடர்ந்து உன்னிப்பாய் செயல்பட முடியாது. மனதுக்குள் ஏதோ ஒரு ஸ்விட்ச் இருக்கிறது; அதை கடவுள் அணைத்து விடுவார். மனம் இருண்டு விடும். வாழ்க்கை இருண்டு விடும். தத்தளிப்பே அன்றாட வாழ்க்கைப் போராட்டமாக இருக்கும்.
பிரச்சனைகள் இப்படி புறமிருந்தும் உள்ளுக்குள் இருந்தும் தோன்றி நம்மை தாக்கி நிலைகுலைய செய்யும். இதன் நடுவில் ஒரு எழுத்தாளன் தன்னை தக்க வைப்பது தான் ஆகப்பெரிய சவால் என்றார் நண்பர்.
நான் உடன்பட்டேன். ஆனாலும் உண்மையான சவால் இது கூட அல்ல.
போனில் battery saving mode இருப்பது போல படைப்பாளிக்குள்ளும் ஒன்று உண்டு. அவன் சில ஆண்டுகள் முக்கியமாய் தீவிரமாய் எதையும் எழுதாமல் வெறுமனே படிப்பது, கூட்டங்களுக்கு சென்று நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, முகநூலில் கிறுக்குவது என மிதமாய் இருப்பான். சட்டென சிலர் இந்த மிதநிலையில் இருந்து மீண்டு வந்து முக்கியமான நூல்களாய் – ஒரு அட்டகாசமான கவிதைத் தொகுப்பு, நாவல் என – எழுதுவார்கள். ஆனால் பலரும் இதில் இருந்து மீள மாட்டார்கள். அதனாலே கணிசமான எழுத்தாளர்களின் படைப்பு வாழ்வில் உச்சம் என ஒரு வருடமோ சில வருடங்களோ மட்டுமே இருக்கும். முப்பது வருட எழுத்தாள வாழ்வில் நான்கு ஐந்து வருடங்களுக்கு மேல் வெறியுடன் எதையும் எழுதவோ இயங்கவோ மாட்டார்கள். ஒருவர் நாவல் எழுதுவதை நிறுத்தி விட்டு வெறும் கூட்டங்களாய் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தால் எனக்கு அவரைக் கண்டு வருத்தமாய் இருக்கும். இது எழுத்தாளனுக்கு சாபக்கேடான பருவம்.
துயரக் கடலை நீந்தி வருவதை விட இந்த மிதநிலையை தாண்டி வருவதே ஆகப்பெரிய சவால் என நண்பரிடம் சொன்னேன். நம் முன்னோடிகளில் பிரமிள், கா.ந.சு, ஆத்மாநாம், தி.ஜா, லா.ச.ரா, சு.ரா என பலரும் எண்ணெய் வற்றாத சுடர் விளக்காய் நீண்ட காலம் எரிந்திருக்கிறார்கள். புயலிலும் மழையிலும் கெடாத சுடராய் நிலைத்திருக்கிறார்கள்.
சரி, அது வேறொரு காலம். இன்றைய காலம் நிரந்தரமின்மையின் காலம் என்றார் நண்பர். அவர்களை நம்முடன் ஒப்பிட முடியாது என்றார். இல்லை நம் காலத்திலும் எஸ்.ரா, ஜெயமோகன் ஆகியோர் இப்படியான சாதனையாளர்களே என்றேன்.
கட்டுரைகளைக் கூட தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க முடியும். ஆனால் சிறுகதை மற்றும் நாவலில் தொடர்ந்து இயங்குவது மிக மிக சிரமம். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல மனித மனத்தால் தொடர்ந்து உக்கிரமான நடவடிக்கைகளில் தோய முடியாது. தொடர்ந்து எழுத்தில் கவனத்தை தக்க வைத்து, நம்மை மீளுருவாக்கம் செய்வதற்கு துணிந்தால் மட்டுமே கால் நூற்றாண்டுக்கு மேலாக நாவல்கள் எழுத முடியும்.
வெறுமனே எழுத்துப் பயிற்சி இருந்தால் மட்டும் போதாது. மட்டுப்படாத அபாரமான மன ஆற்றல், தளராது ஓடும் ஆற்றல் வேண்டும். பெரும் கொந்தளிப்பான சிக்கல்கள் ஏற்படும் போது முழுக்க தடுமாறி நம் எழுத்தாளுமையை அதில் இழந்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளும் திறமை வேண்டும்.
நமது அன்றாட வாழ்க்கை எழுத்துப் பணிக்கு நேர் எதிரான களத்தில் இயங்கும் ஒன்று. இங்கு செல்லுபடியாகும் உணர்ச்சிகள், கருத்துக்களுக்கு அங்கு சற்றும் மதிப்பிராது. ஆக, நீங்கள் இரண்டு மனிதர்களாக ஒரே சமயம் இருக்க முடிய வேண்டும். ஒரு சின்ன அலுவலக வேலைக்காக ஐந்து மணி நேரத்துக்கு மேல் உழைத்து விட்டு, உங்கள் நாவலில் அதை விட உக்கிரமான ஒரு விசயத்துக்காக - அலுவலக வேலைக்கான மனநிலையில் இருந்து முழுக்க மாறி - மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்க வேண்டும்.
நீங்கள் பத்து வருடங்களில் ஐந்து நாவல்கள் எழுதுவது என்பது வெறுமனே 2500 பக்கங்களை தட்டச்சு செய்வது மட்டும் அல்ல; பக்கம் பக்கமாய் சொற்களை வடிப்பது மட்டும் அல்ல; கற்பனை செய்வதும் மனதை ஒருமுகப்படுத்தும் மட்டும் அல்ல. பத்து வருடங்களும் புதுப்புது கனவுகளை வளர்த்து அவற்றினுள் வாழ்வது. கனவுகளை நம்புவது, கனவுகளுக்காய் எல்லா அன்றாட பிரச்சனைகளையும் கடந்து உற்சாகமாய் உழைப்பது. இது தான் மிக மிக சிரமம்.
அதுவும் இவ்வளவு உழைத்த பின் சமூகம் உங்களை யாரென்றே திரும்பிப் பார்க்காமல் இருக்கும் போது, தளராமல் அடுத்த கனவொன்றை பின் தொடர்ந்து போக வேண்டும்.
நம் முன்னோடிகளும் ஜெயமோகன் போன்ற சமகால எழுத்தாளுமைகளும் இதற்காகவே போற்றத் தக்கவர்கள்!


Comments

Sivaprakash said…
Salute to all Writers!

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...