“நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்”
என்பதில் உள்ள மீள்கூறல் மனுஷ்யபுத்திரனின் வாசகர்களுக்கு வெகுவாய் பரிச்சயமானது. பாப்லோ நெருடாவை நினைவுபடுத்துவது. (தமிழில் பெரும்பாலான நவீன கவிஞர்கள் இந்த மீள்கூறல் உத்தியை தவிர்க்கிறார்கள்; ஆனால் வைரமுத்து, அப்துல் ரகுமான், தமிழன்பன் போன்ற வானம்பாடிகள் இதை தாராளமாய் எடுத்தாண்டிருக்கிறார்கள்.) ஒரு பெரும் மக்கள் திரளை நோக்கி ஒருவன் உரையாற்றும் தொனியை இது மனுஷ்யபுத்திரன் கவிதைகளுக்கு தருகிறது என்கிறார் ஜெயமோகன் (“கடவுளற்றவனின் பக்திக் கதைகள்: மனுஷ்யபுத்திரன் கவியுலகு”). இங்கே வெகு அந்தரங்கமான ஒரு துயர கவிதையில் தனிமையை இன்னும் உக்கிரமாக்கவும் மனுஷ்யபுத்திரன் இந்த உத்தியை பிரயோகிக்கிறார்.
அடுத்து அவரது சொற்தேர்வை பார்ப்போம்.
“ஒவ்வொரு நாளும்
வேறுவேறு இடங்களில் பிரிகின்றன”
இங்கு அவர் எதுகையை கொண்டு வர நினைத்திருந்தால் ”வெவ்வேறு” என எழுதியிருக்கலாம். இசை ஒழுங்கு மீது மனுஷ்யபுத்திரனுக்கு ஒவ்வாமை இல்லை. ஆனால் அவர் ஏன் செய்யவில்லை? இங்கு எதுகை அமையாமல் இடறுகிறது. அது சற்றே நிரடுகிறது. பிறகு ஏன் மனுஷ்யபுத்திரன் இச்சொல்லை தேர்கிறார்?
“வெவ்வேறு” எனும் சொல் சன்னமானது; வேகமாய் ஒழுங்கிச் செல்வது; மேலும் எதுகையானால் அச்சொல்லில் நாம் நின்று யோசிக்க மாட்டோம். இந்த இடத்தில் பிரிவின் கனம் கூடி வர வேண்டுமெனில் ஒரு கனத்த சொல் வேண்டும். ஆகையால் “வேறுவேறு” பொருத்தம். அச்சொல் சோற்றிடையே நாம் கடித்த சிறு கல்லைப் போல் உறுத்துகிறது.
அதே போல இக்கவிதையில் “வாழ்விடங்களுக்கு”, “துயரங்களெங்கும்”, “நீங்குதலின்”, “இல்லாமலாகும்” போன்று 15 கனத்த ஓசை கொண்ட நீண்ட சொற்கள் வருகின்றன. தமிழுக்கே உரித்தான பெயர்ச்சொல் + வினையுரிச்சொல் ஜோடிச்சொற்களை நிறைய பயன்படுத்துகிறார் (உ.தா, “துயரங்களெங்கும்”, “நமக்கிடையே”). இதைப் போன்றே பன்மைச் சொற்களும் (”நிலங்களின், ”வாழ்விடங்களுக்கு”) வருகின்றன. ”அந்தி இருள்” என எழுத முடிகிற இடத்தில் “அந்தியின் இருள்” என்கிறார். இவை எல்லாம் சேர்ந்து இக்கவிதையை நீங்கள் உரக்க படிக்கிறீர்கள் என்றால் வேகமாய், ஜிலுஜிலுவென வாசித்துப் போக முடியாது. உங்கள் வாசிப்பின் கால அளவு நீள்கிறது. நீண்டு செல்லும் உணர்ச்சி என்றுமே துயரம் தானே! இப்படி இக்கவிதையை சொற்தேர்வின் வழியே மட்டுமே, கனத்த தொனியை ஏற்படுத்தி, நம் மனதுக்குள் கசப்பேற செய்கிறார் மனுஷ்யபுத்திரன்.
இனி கவிதையின் இறுதி வரி.
“ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது”
இது பிரிகிற அந்த காதல் ஜோடியின் கையைப் பற்றியபடி ஒரு குழந்தை நடந்து வருகிற தோற்றப்பிழையை உருவாக்குகிறது. அதுவும் குழந்தையாகிய சிறு துயரம் மிக அமைதியாய் நடந்து வருகிறது. உடைந்த குடும்பங்களில் தான் அப்படி நிகழும். இங்கே குடும்பமே இல்லை; ஆனாலும் கற்பனையில் ஒரு குடும்பம் இருக்கிறது. அது அவர்கள் “தூக்கிய வளர்த்த துயரமாக” இருக்கிறது. இந்த நெகிழ்ச்சியான உருவகத்தில் என் கவனத்தை நெருடிய விசயம் “ஒரு வார்த்தை பேசாமல் / மௌனமாக”.
ஒரு வார்த்தை பேசாமல் என்றாலே மௌனம் தானே? ஏன் மீள சொல்ல வேண்டும்? அதே போல “நம்முடன்” என்பதில் “உடன்” இருக்கிறதே; அதை திரும்ப “கூடவே” என ஏன் அதே வாக்கியத்தில் சொல்ல வேண்டும்?
ஒரு காரணம் உள்ளது.
இவ்வாக்கியத்தை
ஒருவேளை “நம்முடன் /
மௌனமாக நடந்து வருகிறது” என திருத்தினால் (சலூனில் முடிவெட்டி வந்த குழந்தை
போல) வாக்கியம் ஜீவனற்று போகிறது; ஏனெனில்
“ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது”
என்பதில் மீள ஒலிக்கும் அச்சொற்கள் நேர்பொருளுக்கு தேவையில்லை தான். ஆனாலும் கவிதையின் தனிமை தொனியை அடர்த்தியாக்க, நகைமுரணை தீவிரமாக்க, உங்கள் விழியோரம் துளிர்க்கும் அந்த ஒற்றைக் கண்ணீர்த்
துளியை கனத்துப் போக செய்ய அச்சொற்கள் மிகையாய் தோன்றி மீள ஒலிப்பது அவசியமாகிறது.
ஆகையால் நண்பர்களே … இதற்கு மேல் நான் சொற்களை இறைக்கப் போவதில்லை.