Skip to main content

பிக்பாஸுக்கு வெளியே உள்ள தனிமை


Image result for bigg boss tamil

பிக்பாஸிடம் வாக்குமூல அறையில் பேசிய ரித்விகா, இறுதி நாளுக்குப் பின், பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேறின பின் தன் (கழுத்தில் மாட்டின) மைக்கை மிகவும் மிஸ் பண்ணப் போவதாய் சொன்னார். “இந்த மைக் என்னோட குழந்தை; இதை பெட்ஷீட் போர்த்தி தூங்கவெல்லாம் வச்சிருக்கேன்” என்றார். திரும்பத் திரும்ப மைக்கையும் பிக்பாஸ் வீட்டையும் பற்றி மிகுந்த ஏக்கத்துடன் பேசிக் கொண்டு போனார். அதன் பிறகு ஐஸ்வர்யா, ஜனனி என ஒவ்வொருவர் உரையாடும் போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேனால் தாம் எவ்வளவு தனிமையாய் உணர்வோம் என விசனப்பட்டார்கள். ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மஹத், ஷாரிக், நித்யா போன்றோரும் திரும்ப வந்து சில மணிநேரம் பிக்பாஸ் வீட்டில் கழிக்கையில் (ஒன்று), வெளியே எந்தளவு தனிமையாய் இருந்து பிக்பாஸை மிஸ் பண்ணினோம் என சொல்கிறார்; (இரண்டு) “நாங்க பிக்பாஸ் வீட்டிலேயே இருக்கிறோம்; பிக்பாஸ் எங்களை வெளியேற்றாதீங்க” என கெஞ்சுகிறார்கள். எனக்கு இந்த பார்வையே ரொம்ப விசித்திரமாய் பட்டது.

வெளியுலகில் உங்களோட பேச பழக உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உற்ற உறவினர்கள் உண்டு. இங்கோ ஒன்றிரண்டு பேரைத் தவிர நீங்கள் இதயம் கனிந்து பேச ஆளில்லை. உங்களுக்கு கட்டளையிடும் பிக்பாஸின் குரல் யாரென அறிய மாட்டீர்கள். உங்கள் மைக் என்பது உங்கள் குரல்களை வெளியுலகுக்கு 24*7 கொண்டு போகும் ஒரு கருவி. உலகமே உங்களைப் பார்த்து மதிப்பிட இந்த உலகிலேயே மிக மிக தனிமையானவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் ஏன் இந்த பிக்பாஸ் வீட்டில் இவ்வளவு சௌகர்யமாய் தன்னம்பிக்கையாய் திருப்தியாய் உணர்கிறீர்கள்? ஏன் வெளியுலகுக்கு மீள இந்தளவு தயங்குகிறீர்கள், கலங்குகிறீர்கள்? அது பற்றி ஏன் பதற்றமுறுகிறீர்கள்?
ஒன்று, பிக்பாஸ் வீட்டினுள் ஐந்து பேர் மத்தியில் வாழ்ந்தாலும் உங்களை ஐந்து கோடிக்கு மேல் மக்கள் பார்க்கக் கூடும் எனும் அங்கீகாரம், அது தரும் மக்கள் திரளின் மையமாய் உணரும் திருப்தியே தனி.
 ஒருவிதத்தில் அது ஒரு போலியான சமூகமாக்கல் மகிழ்ச்சி – இந்த பார்வையாளர்கள் யார், அவர்கள் உண்மையிலேயே உங்களை பொருட்படுத்துகிறார்களா, உங்களின் பால் அக்கறை கொண்டுள்ளார்களா, அது உண்மையான நிஜமான உறவா என்றெல்லாம் கேட்டால் “இல்லை” என்றே பதில் வரும். “பிக்பாஸ்” முடிந்த பின் ஒரு நெடுந்தொடர் அந்த இடத்தை எடுத்துக் கொள்ளும். பிக்பாஸ் பார்வையாளர்கள் நிச்சயம் மக்கள் மனதில் சற்று காலம் இருப்பார்கள்; ஆனால் ஒரு வாரத்திற்குப் பின் மக்கள் ஐஷ்வர்யா, ஜனனி, ரித்விகா பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
அடுத்து, வெளிவாழ்வில் நாம் முயற்சி எடுக்காவிடில் யார் கண்ணிலும் பட மாட்டோம்; யார் கவனத்தையும் கவர மாட்டோம். நாம் ஒதுங்கி விட்டால் மக்கள் நம்மை மறந்தே விடுவார்கள். ஆனால் பிக்பாஸ் வீட்டிலோ நாம் என்ன செய்தாலும் இல்லாவிடிலும் நாம் மக்கள் கவனத்தில் இருந்து கொண்டே இருப்போம். இது பங்கேற்பாளர்களுக்கு தம்மைப் பற்றி ஒரு மிகையுணர்வை அளிக்கும். அவர்களின் அற்ப சச்சரவுகள், சொந்த கவலைகள், குத்துப்பாட்டுக்கு அவர்கள் ஆடும் அரைகுறை நடனங்கள், அவர்களின் உளறல்கள் என எல்லாவற்றுக்கும் அவ்வளவு மதிப்பு, முக்கியத்துவம், சமூக இடம் கிடைக்கிறது. ஐஷ்வர்யா தலையை சொறிந்தாலே அதை கோடிக்கணக்கானோர் உற்று கவனிக்கிறார்கள்; இதையே அவர் தன் வீட்டில் தனியாய் உட்கார்ந்து கண்ணாடி முன்னிருந்து செய்தால் என்ன மதிப்பு?
ஆக இந்த மிகைப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் இருந்து சட்டென ஒருநாள் துண்டிக்கப்பட்டு எளிய இயல்பு வாழ்க்கைக்கு இவர்கள் திரும்ப அனுப்பப்படும் போது உண்மையிலேயே அவர்களுக்கு அது பெரிய அதிர்ச்சியாய் இருக்கும்; தாம் ஒரே நாளில் மதிப்பற்று போனதாய் மனம் உடைந்து போவார்கள். இதனால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் திரும்ப தற்காலிகமாய் வரும் போது அவர்களின் முகம் ஏக்கத்தில் வாடிப் போய் தெரிகிறது.
ரித்விகா தன் மைக்கை குழந்தையாய் கருதுவதாய் சொன்னதை நான் நம்மில் பலரும் நம் செல்போனை ஒரு உற்ற நண்பனாய், காதலியாய், உடலின் உறுப்பார் கருதுவது போன்ற மனநிலை என்றே பார்க்கிறேன். செல்போன் நாம் ஒரே சமயம் தனியாகவும் பல்லாயிரம் பேருடனும் இருப்பதாய் ஒரு பாவனையான பாதுகாப்புணர்வை அளிக்கிறது – நீ தனியாய் இல்லை என அது நம்மிடம் மீள் மீள சொல்கிறது. பிக்பாஸ் வீட்டில் அந்த மைக்கே அவர்களின் செல்போன் – அதுவே அவர்களின் குரல், அவர்களின் அடையாளம், அவர்களின் மையம். அதில்லாமல் அந்த வீட்டுக்குள் அவர்கள் ஒன்றுமே இல்லாமல் ஆகி விடுவார்கள்.
இப்படி இல்லாத ஒரு உலகத்துக்காய் வாழ்வது, கண்காணாத இதயங்களின் அன்புக்காய் விழியை திறந்து வைத்து தேடுவது ஒரு அவலம். அது நம் காலத்தின் அவலம். இது நம் அனைவரின் அவலம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...