முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆங்கிலத்தில் சரளமாய் பேசுவது எப்படி?



வணக்கம் அபிலாஷ்,

எப்படி இருக்கீங்க?

நான் தமிழ் வழியில் எனது பள்ளிப் படிப்பை முழுதும் படித்தேன். அதனாலோ என்னவோ நான் சிந்திப்பது முழுதும் தமிழிலேயே நடக்கிறது என்று நினைக்கிறேன். அவ்வாறு சிந்தித்து ஆங்கிலத்திற்கு convert செய்து பேசும்போது வார்த்தைகள் கோர்வையாக வருவதில்லை. இது ப்ரெசென்டஷன் செய்யும் போதும், சில விஷயங்களை explain செய்யும்போதும் வார்த்தைகளை தேர்வு செயவதிலும், இலக்கணப் படி பேசுவதிலும் மிகுந்த சிக்கலை ஏற்படுத்துகிறது. தவறான வார்த்தைகளை நான் உதிர்த்தபிறகு எனக்கே தெரிகிறது அது தவறான வார்த்தை அல்லது இலக்கணப் பிழை உள்ள சொற்றுடர் என்று.


இதுவே ஆங்கிலத்தில் எழுதுவது எனக்கு ஒரு பிரச்னையாக இருப்பதில்லை. எழுதும் போது வார்த்தைகளை யோசித்து யோசித்து எழுத , சரி செய்ய நேரம் உள்ளதால் இந்த பிரச்சனை வருவதில்லை.

இந்த பிரச்சனையை எப்படி சரி செய்து கோர்வையாக பேசுவது?
-          ராஜா வெங்கடேஸ் (மெஸஞ்சரில்)

அன்புள்ள ராஜா வெங்கடேஸ்
// என்னவோ நான் சிந்திப்பது முழுதும் தமிழிலேயே நடக்கிறது என்று நினைக்கிறேன். அவ்வாறு சிந்தித்து ஆங்கிலத்திற்கு convert செய்து பேசும்போது வார்த்தைகள் கோர்வையாக வருவதில்லை.//
நான் கல்லூரியில் படிக்கையில் சில ஆசிரியர்களை இதையே ஆங்கிலத்தில் நாம் சரளமாய் பேச முடியாததன் காரணமாய் சொல்லி இருக்கிறார்கள்.
நான் அதைக் கேட்டு விட்டு, என் மனதில் ஓடும் மொழியை மாற்ற, ஆங்கிலத்தில் யோசிக்க முயன்றிருக்கிறேன். ஆனால் இது சற்றும் உதவவில்லை.
மனமொழி என்று ஒன்று உள்ளதா? உண்டு, ஆனால் அது நாம் வெளியே பேசும் மொழியல்ல. மனமொழி வெறும் காட்சிபூர்வ கோர்வையாய், முன்னுக்குப் பின் முரணான உணர்வுகளின் சங்கிலியாய், சிலநேரம் இன்ன மொழியென்றே அறுதியிட்டு கூற முடியாத ஒரு மொழியில் அமைந்திருக்கிறது.
உ.தா., நான் சிலநேரம் என்னுடன் பேசிக் கொள்வதுண்டு – அப்போது அது ஆங்கிலத்திலோ தமிழிலோ பெரும்பாலும் அமையும். ஆனால் எனக்குள் ஒரு உரையாடல் நடந்து கொண்டே இருக்கிறது – அது எந்த மொழியில் நடக்கிறது என நான் சத்தியமாய் அறியேன். மனத்துக்கு நம்முடன் பேச நாம் வெளிப்படையாய் பயன்படுத்தும் அளவுக்கு கராறான, கச்சிதமான முழுமையான மொழியெல்லாம் தேவையில்லை – நம் மனத்துக்குள் புழங்கும் ஒவ்வொரு சொல்லும் வெவ்வேறு உணர்ச்சிகளைத் பிரதிபலிக்கும் கண்ணாடித் துண்டுகள். நம் மனத்தில் இச்சொற்கள் லேசாய் தோன்றி விட்டுப் போனாலே ஒரு நீண்ட வாக்கியம் கூறும் பொருள், மிக சுருக்கமான வகையில், மிக வேகமாய் நமக்கு உணர்த்தப்பட்டு விடும். ஆகவே தான் நம் வாய் பேசும் மொழியை விட படுவேகமாய் மனம் நம்மிடம் பேசுகிறது. ஆகையால் தான், நாம் நாளெல்லாம் நமக்குள் பேசினாலும் களைத்துப் போவதில்லை. ஆகையால் தான் திடீரென யாராவது நம்மை சிந்தனையில் இருந்து எழுப்பி என்ன யோசித்திருந்தாய் எனக் கேட்டால் நம்மால் அப்படியே அதை சொல்ல இயல்வதில்லை.
 “மனதில் இருப்பது தான் வெளியே வருகிறது” என்பதே ஒரு பிழையான சிந்தனை. மனத்தில் உள்ள பல உணர்வுகளும் எண்ணங்களும் கலந்து கட்டி வரும் போது நமது மொழி அவற்றை வடிகட்டி புரியும்படியாய் புனைந்து காட்டுகிறது. ஆகையால் தான் பேசும் போது எந்த சொல்லை தேர்வது எனும் திகைப்பு ஏற்படுகிறது, அடுத்து எந்தவித உணர்ச்சியுடன் பேசுவது எனும் குழப்பம் வருகிறது – இதன் விளைவாகவே நம்மால் சிந்திக்கும் வேகத்தில் பேச முடிவதில்லை. சொல்லப் போனால் சிந்திப்பதை அப்படியே பேச முயன்றால் நம்மால் சரிவர பேசவே முடியாது – ஒரு வாக்கியம் நாம் பேசி முடிக்கும் முன் கேட்டிருப்பவர் வேறு வேலையை பார்க்க போய் விடுவார்.
மனம் தருவது ஒரு குறிப்பை மட்டுமே – நாம் அதைக் கொண்டு மணிக்கணிக்காய் பேச்சை வளர்க்கிறோம். நினைப்பது ஒன்று பேசுவது இன்னொன்று என்பதே எப்போதும் மனித இயல்பு – நாம் இதை உணர்வதில்லை என்பது நம்மை பைத்தியமாகாமல் காப்பாற்றுகிறது.
மேடையிலும், கூட்டங்களிலும் சரளமாய் பேசுகிறவர்கள் வாய்மொழியை மனமொழியில் இருந்து தனியாக வைத்துக் கொள்வார்கள் – ஒரு சொல்லை, ஒரு உணர்ச்சியை, ஒரு சின்ன சம்பவத்தை வைத்துக் கொண்டு அரைமணி நேரம் அலுப்பின்றி அபாரமாய் பேசுபவர்களை அறிவேன் – திட்டமிடாத நிலையில் பல கருத்துக்கள், தகவல்கள் அவர்களிடம் இருந்து பிரவாகித்துக் கொண்டிருக்கும், மொழியில் தடங்கலே இராது. இது ஆங்கிலத்திற்கு மட்டுமல்ல, எல்லா மொழிக்கும் பொருந்தும் ஒன்று. சுருக்கமாய் சொல்வதானால், அதிகம் யோசிக்காமல் பேசுகிறவனே நல்ல பேச்சாளன்.
நான் வகுப்பில் மிக சிலாகிப்பாய் சரளமாய் பேசும் பல சமயங்களில் என் மனம் சம்மந்தமில்லாத மற்றொன்றை பக்கவாட்டில் சிந்திப்பதை உணர்ந்திருக்கிறேன். எனக்கே விசித்திரமாய் இருக்கும் – என்னால் என் இரு பேச்சு ஒழுக்குகளையும் ஒழுங்குபடுத்த இயலாது; ஒன்றை தடுத்தால் இன்னொன்று நின்று விடும்.
ஆக, யோசிக்கும் மொழிக்கும் பேச்சின் சரளத்துக்கும் சம்மந்தமில்லை.
பேச்சு சரளம் ஐந்து விசயங்களைப் பொறுத்தது:
1)   சொல் வளம்
2)   நம்முடன் உரையாடுபவருடன் மனம் ஒன்றி, தன்னை மறந்து பேசும் பாங்கு (அறிவார்ந்த கவனத்துடன் அன்றி உணர்ச்சிகரமான ஆவேசத்தில் உரையாடுவது).
3)    பேசுவதே முக்கியம் பேச்சின் சரித்தன்மை அல்ல எனும் நிலைப்பாடு உங்களை தங்குதடையின்றி பேச வைக்கும்.
4)   நினைவுத்திறன் – நினைவுத்திறன் வலுவாய் உள்ளவர்கள் எம்மொழியையும் வேகமாய் கற்று பயில்வதைக் கண்டிருக்கிறேன்.
5)   தொடர்ந்து யாரிடமாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும் எனும் ஆவல் – பெண்கள் ஆண்களை விட நன்றாய் ஆங்கிலம் பேசுவதற்கு, ஆங்கிலம் மட்டுமல்லாமல் எம்மொழியிலும் அவர்கள் ஆட்சி செலுத்துவதற்கு இந்த பேச்சார்வம் ஒரு முக்கிய காரணம். ஆண்களில் பலர் மௌனிகள் ஆகையால் ஆங்கில சரளம் பெற சிரமப்படுவார்கள்.
பேச்சு மொழி ஒரு ஆறு – அதில் குதித்து கைகாலை அடித்தாலே நீந்தக் கற்க முடியும். அச்சமின்றி குதித்து விடுங்கள். நீங்கள் குறிப்பிடும் அந்த  கோர்வையின்மை சரியாகி விடும். கூடவே, பேச்சை அடுத்தவருக்கான எதிர்வினையாய் வைத்துக் கொள்ளுங்கள் – நீங்களே திட்டமிட்டு ஒன்றை சொல்ல முயலாதீர்கள். அப்படி எதிர்வினையாற்றும் போது, உங்கள் உணர்ச்சிநிலைக்கு மட்டுமே கவனம் செலுத்துங்கள். வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...