Skip to main content

என் புத்தாண்டு தீர்மானங்கள்


Image result for 2019 new year resolution

புத்தாண்டு தீர்மானங்களை நிறைவேற்றித் தான் ஆக வேண்டியதில்லை. ஆனால் அவை நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தருவன. ஆகையால் இவ்வாண்டு கீழ்வரும் தீர்மானங்களை எடுக்கிறேன்.
1)   இவ்வருடம் அதிகமும் நான் கடுகுகள் வெடித்துத் துள்ளும் எண்ணெய்ச் சட்டியை போல இருந்தேன். நாற்பக்கமும் வாளைச் சுழற்றி ஒரே ரத்த சகதி தான் (முகநூலில் அல்ல நடப்புலகில்). வரும் வருடம் ஒரு நட்சத்திர ஓட்டல் வரவேற்பாளினி போல இனிமையாய் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்கப் போகிறேன். கோபம் வந்தால் கத்திக்குப் பதில் ஒரு ரோஜா.

2)   அம்மா என் குரலுக்காக எவ்வளவு ஏங்குகிறாள் என புரிந்து கொண்டேன். அவளிடம் தினமும் பேச வேண்டும்.
3)    உறவில் சிகப்பு விளக்கு எரிந்தாலும் அதை பச்சை விளக்கென்றே கருதி அணுக்கமும் நம்பிக்கையையும் காட்டப் போகிறேன். தயக்கம் கூடவே கூடாது. நானாக முன்வந்து அணுகினால் விலகினவர்கள் நெருங்கி விடுவார்கள்.
4)   ஜீனோ (என்னுடைய டேக்‌ஷ்ஹண்ட் நாய்) பங்களூருக்கு வருகிறான். இனி வரும் வருடங்களில் அவனை நன்றாய் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். அவன் என் செல்லமானதில் இருந்தே நான் அன்பைக் காட்டுவதில் காட்டிய ஆர்வத்தை அவனை வெளியே அழைத்து செல்வதில் காட்டியதில்லை. அதை 2019இல் திருத்த வேண்டும்.
5)   எதையாவது ஒரு புதுத் திறனை கற்றுக் கொள்ள வேண்டும் நான் எதைப் புதிதாய் கற்க நேரும் போதும் அது சட்டென ஒரு ஜன்னலைத் திறந்து ஒரு பூங்காவனக் காட்சியை, உதயத்தை, உற்சாகமான உலகை எனக்கு காட்டுவதுண்டு; என் எழுத்துக்கு ஒரு எதிர்பாராமையை அளித்ததுண்டு. என் முன்னுள்ள தேர்வுகள் இவை:
அ) குங்பூ
ஆ) குத்துச்சண்டை
இ) தியானம்
ஈ) யோகா
6)  யாரோடும் ஒட்டாமல் சின்ன வட்டத்துக்குள் இருப்பது என் பலவீனம். இவ்வருடம் சமூகமாக்கலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
7) என்னால் எல்லா பல விசயங்களில் சரிவிகிதமாய் அக்கறை / கவனம் செலுத்த முடியாது. எதை எடுத்துக் கொண்டாலும் எறும்பு சர்க்கரை டப்பாவுக்குள் கவிழ்ந்து விழுவது போல கவிழ்ந்து விடுவேன். 2018இல் அவ்வாறு தான் மிகுதியாய் என் வகுப்புகளுக்குள் ஆர்வம் செலுத்தி என்னை இழந்து விட்டேன். அது என் எழுத்து மீதான கவனத்தை சிதைப்பதை உணர்ந்தேன். ஆகையால் 2019இல் வகுப்புகளே எட்டப் போ! பாடமெடுப்பேன் – ஆனால் அதில் முழுமனமும் சென்று விடாதபடி பட்டும்படாமல் இருக்க முயல்வேன். பிரதானமான நேரத்தை (மாணவர்களுக்காக அன்றி) எழுத்துக்காக ஒதுக்க வேண்டும்.
8) எழுதுவதில் என்னை பறிகொடுப்பதால் வருமானத்தை அதிகம் கவனிப்பதில்லை. பெங்களூர் வாழ்க்கை கூடுதல் செலவுகளை கோருகிறது. 2018இல் என்னால் உபரி வருமான வழிகளை அடைய முடியவில்லை. அதற்கான சிரத்தையை நான் எடுக்கவில்லை. 2019இல் அதை செய்வேன். அடுத்த டிசம்பரில் என்னிடம் போதுமான தொகை சேமிப்பில் இருக்க வேண்டும். முக்கியமான இலக்கு இது.
9) இடைவிட்ட விரதத்தை (intermittent fasting) இரண்டு மாதங்களாய் பின்பற்றி வருகிறேன். 24 மணிநேரங்கள் தினமும் உண்ணாமல் இருக்க வேண்டும்; இரவுணவு மட்டுமே அருந்தலாம் என்பதே இடைப்பட்ட விரதம். 2019இல் ஞாயிறு மட்டுமே மூன்று வேளை உணவு. மூன்றாவது மாதத்தில் இருந்து ஞாயிறும் 24 மணிநேர விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அதன் பிறகு மெல்ல மெல்ல ஐந்து நாள் தொடர் விரதம் இருக்க வேண்டும் என்பது இலக்கு. அடுத்த ஆகஸ்டில் இருந்து தொடர் ஆறுநாள் விரதம் இருக்க வேண்டும் (6 நாட்கள் இரவுணவும் கூடாது) என்பது அடுத்த கட்ட இலக்கு.
10) எழுதுவதே என் பண்பாட்டுக்கான, மொழிக்கான பங்களிப்பு, என் சமூகத்துக்கான பணி, ஆகையால் சமூகத்துக்காக கூடுதலாய் நான் என்ன பண்ண வேண்டும் என யோசித்திருந்தேன். ஆனால் இவ்வருடம் ஒரு தன்னார்வ அமைப்புடன் அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளை சந்தித்தது ஒரு நல்லனுபவமாக இருந்தது. 2019இல் இத்தகைய பணிகளைத் தொடர வேண்டும். எழுதினால் மட்டும் போதாது. எழுத்தாளன் தன் எழுத்து மட்டுமே அல்ல!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...