Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இலக்கிய மோதல்களின் பின்னுள்ள ஒற்றுமை


Image result for காலச்சுவடு கண்ணன்
நான் மாணவர்களுடன் இணைந்து சமீபத்தில் கொண்டு வந்த ஆங்கில மொழியாக்க தொகுப்பில் தமிழில் இருந்த இடம்பெற்றிருந்த மூன்று சிறுகதையாளர்களில் சு.ராவும் ஒருவர். விற்பனைக்கு இல்லை, உள்சுற்றுக்கு மட்டுமே இல்லை என்பதால் நாங்கள் அனுமதி பெறுவதைப் பற்றி கவலைப்படவில்லை. முடிந்த அளவுக்கு படைப்பாளிகளை அணுகி தகவல் சொன்னோம். தமிழில் பு.பியின், ஜி.நாகராஜனின் பதிப்புரிமை யாரிடம் எனத் தெரியவில்லை. ஆனால் சு.ராவின் பதிப்புரிமை காலச்சுவடிடம் – கண்ணனிடம் – என அறிவேன். அவரை என் பதின்வயதில் இருந்தே அறிவேன். ஆனால் நான் எழுத்தாளனாய் அறிமுகமாகி வளர்ந்து வந்தது காலச்சுவடின் போட்டிப் பதிப்பகமான உயிர்மையில். இலக்கிய குழுக்களில் காலச்சுவடும் உயிர்மையும் இன்றும் பேசிக் கொள்ளாத முரண் குழுக்களே. ஆகையால் கண்ணனை எப்படி அணுகி இதைப் பற்றி சொல்வது, அவர் அனுமதி மறுப்பாரா என்றெல்லாம் குழப்பங்கள், தயக்கம், ஒரு விள்ளல் பயம்.

 மெஸஞ்சரில் அவரிடம் எண் வாங்கி வைத்துக் கொண்டேன். அவர் நேர்மறையாய் பேசினால் அவரை வெளியீட்டின் போது சில சொற்கள் (வீடியோ சாட்டில்) பேச வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் நான் முறையாக முன்னமே தெரிவிக்கவில்லை என அவர் யோசித்தால் என்ன செய்வது? இப்படியே மனத்துக்குள் வலை பின்னிப் பின்னி தள்ளிப் போட்டு புத்தக வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு வேறுவழியின்றி அவரை அழைத்தேன். கிடைக்கவில்லை. அவர் விமானத்தில் இருந்ததாய் பின்னர் குறுஞ்செய்திஅனுப்பினார். நீண்ட நேர தயக்கத்திற்கு பிறகு, ஒரு நாள் தள்ளிப் போட்டு, அழைத்தேன். அவர் கனிவாக பேசினார். புத்தக வெளியீடு வேளையில் தனக்கு ஒரு கூட்டம் உள்ளதால் அப்போது பேச இயலாது என்றார். எனக்கு அவர் இதை எடுத்துக் கொண்ட விதம் சற்று ஆச்சரியமாகவும் நிறைய மகிழ்ச்சியாகவும் இருந்தது. புத்தக வெளியீடு சிறப்பாக நடந்தது. ஒரு பிரதியை கையெழுத்திட்டு அவருக்கு அனுப்பி வைத்தேன். அதைப் பெற்ற பிறகு கண்ணன் இன்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்:
 I received the signed copy of Dispossed. Wonderful attempt. Will take a careful look at it after the book fair. Thank you.
காலச்சுவடு மொழிபெயர்ப்பை முறையான வகையில், பதிப்புரிமை பெற்று, சில நேரம் நல்கைகள் பெற்று, செய்து உலக இலக்கிய படைப்புகளை தொடர்ந்து தமிழில் கொண்டு வரும் ஒரு பதிப்பகம். நாங்கள் செய்வது தமிழில் எண்பதுகள் வரை  நடைபெற்ற மொழியாக்க இயக்கத்தின் தொடர்ச்சி. (தனிப்பட்ட வகையில், விதிமுறைகள், முறைமைகள் பற்றி அக்கறைப்படாமல் இலக்கிய பயன்பாட்டுக்காக மட்டுமே செய்து வந்த மொழியாக்கம்). இன்று மொழியாக்கம் கார்ப்பரேட்மயமாகிய பின் தனிப்பட்ட முறையில் யாரும் பிடித்த படைப்பை மொழியாக்க முடியாத நிலை உள்ளது. ஆனால் இப்படி சிறிய வட்டங்களில் முறைமையின்றி நிகழும் மொழிபெயர்ப்பு பணிகளும் – முறையான மொழியாக்க பதிப்புக்கு இணையாக - அத்தியாவசியமானவை. இதை கண்ணன் அறிந்துள்ளார் என்பது எனக்கு உவகையளித்தது.
 எனக்கு இதைப் பற்றி யோசிக்கையில் ஜெயமோகன் குழுச்சண்டை பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. குழு சார்ந்த மோதல்களே தமிழில் சிறந்த இலக்கிய இயக்கங்கள் தோன்ற, படைப்புகள் எழுதப்பட ஊக்கியாக அமைந்தன என்றார் ஜெ.மோ. குழு என்பது தனிப்பட்ட பிரிவு அல்ல, அது மாறுபட்ட பார்வையின், நிலைப்பாட்டின் அணிவகுப்பு. லட்சியமும், நிலைப்பாடும் இரு சாராரை பிரிக்கும் போதும் இலக்கியத்தின், பண்பாட்டின் பாலுள்ள பிடிப்பு இந்த குழுவினருக்கு பரஸ்பரம் அன்பும் மரியாதையும் கொள்ள வைக்கிறது. அவர்கள் பிரிந்திருக்கும் போதும் ஒரே லட்சியத்துக்காகத் தான் பணி செய்கிறார்கள். முரண் என்பது முகக்களிம்பு போன்ற ஒன்று மட்டுமே. ஆகையால், பெண்ணிய கவிதைகளை கடுமையாய் சாடும் ஜெ.மோ லீனாவை விஷ்ணுபுரம் விழாவில் பேச வைப்பார். லீனாவும் செல்வார். எனக்கு முந்தைய தலைமுறையினரிடம் இப்படி முரணை தனிப்பட்ட விரோதமாய் எடுத்துக் கொள்ளாத மாண்பை காண்கிறேன். இது மெச்சத்தக்க ஒன்று. கண்ணனிடமும் ஜெயமோகனிடமும் இந்த மாண்பை நான் பார்க்கிறேன்.
படைப்பாளி தனிமனிதன் அல்ல. படைப்புலகில் தனிமனிதர்களே இல்லை. தனிமனித கோபங்களும் பார்வைகளும் வெறும் பாவனைகளே. அதைக் கடந்து நாம் எப்போதுமே கைகோர்க்கிறோம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...