முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கிய மோதல்களின் பின்னுள்ள ஒற்றுமை


Image result for காலச்சுவடு கண்ணன்
நான் மாணவர்களுடன் இணைந்து சமீபத்தில் கொண்டு வந்த ஆங்கில மொழியாக்க தொகுப்பில் தமிழில் இருந்த இடம்பெற்றிருந்த மூன்று சிறுகதையாளர்களில் சு.ராவும் ஒருவர். விற்பனைக்கு இல்லை, உள்சுற்றுக்கு மட்டுமே இல்லை என்பதால் நாங்கள் அனுமதி பெறுவதைப் பற்றி கவலைப்படவில்லை. முடிந்த அளவுக்கு படைப்பாளிகளை அணுகி தகவல் சொன்னோம். தமிழில் பு.பியின், ஜி.நாகராஜனின் பதிப்புரிமை யாரிடம் எனத் தெரியவில்லை. ஆனால் சு.ராவின் பதிப்புரிமை காலச்சுவடிடம் – கண்ணனிடம் – என அறிவேன். அவரை என் பதின்வயதில் இருந்தே அறிவேன். ஆனால் நான் எழுத்தாளனாய் அறிமுகமாகி வளர்ந்து வந்தது காலச்சுவடின் போட்டிப் பதிப்பகமான உயிர்மையில். இலக்கிய குழுக்களில் காலச்சுவடும் உயிர்மையும் இன்றும் பேசிக் கொள்ளாத முரண் குழுக்களே. ஆகையால் கண்ணனை எப்படி அணுகி இதைப் பற்றி சொல்வது, அவர் அனுமதி மறுப்பாரா என்றெல்லாம் குழப்பங்கள், தயக்கம், ஒரு விள்ளல் பயம்.

 மெஸஞ்சரில் அவரிடம் எண் வாங்கி வைத்துக் கொண்டேன். அவர் நேர்மறையாய் பேசினால் அவரை வெளியீட்டின் போது சில சொற்கள் (வீடியோ சாட்டில்) பேச வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் நான் முறையாக முன்னமே தெரிவிக்கவில்லை என அவர் யோசித்தால் என்ன செய்வது? இப்படியே மனத்துக்குள் வலை பின்னிப் பின்னி தள்ளிப் போட்டு புத்தக வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு வேறுவழியின்றி அவரை அழைத்தேன். கிடைக்கவில்லை. அவர் விமானத்தில் இருந்ததாய் பின்னர் குறுஞ்செய்திஅனுப்பினார். நீண்ட நேர தயக்கத்திற்கு பிறகு, ஒரு நாள் தள்ளிப் போட்டு, அழைத்தேன். அவர் கனிவாக பேசினார். புத்தக வெளியீடு வேளையில் தனக்கு ஒரு கூட்டம் உள்ளதால் அப்போது பேச இயலாது என்றார். எனக்கு அவர் இதை எடுத்துக் கொண்ட விதம் சற்று ஆச்சரியமாகவும் நிறைய மகிழ்ச்சியாகவும் இருந்தது. புத்தக வெளியீடு சிறப்பாக நடந்தது. ஒரு பிரதியை கையெழுத்திட்டு அவருக்கு அனுப்பி வைத்தேன். அதைப் பெற்ற பிறகு கண்ணன் இன்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்:
 I received the signed copy of Dispossed. Wonderful attempt. Will take a careful look at it after the book fair. Thank you.
காலச்சுவடு மொழிபெயர்ப்பை முறையான வகையில், பதிப்புரிமை பெற்று, சில நேரம் நல்கைகள் பெற்று, செய்து உலக இலக்கிய படைப்புகளை தொடர்ந்து தமிழில் கொண்டு வரும் ஒரு பதிப்பகம். நாங்கள் செய்வது தமிழில் எண்பதுகள் வரை  நடைபெற்ற மொழியாக்க இயக்கத்தின் தொடர்ச்சி. (தனிப்பட்ட வகையில், விதிமுறைகள், முறைமைகள் பற்றி அக்கறைப்படாமல் இலக்கிய பயன்பாட்டுக்காக மட்டுமே செய்து வந்த மொழியாக்கம்). இன்று மொழியாக்கம் கார்ப்பரேட்மயமாகிய பின் தனிப்பட்ட முறையில் யாரும் பிடித்த படைப்பை மொழியாக்க முடியாத நிலை உள்ளது. ஆனால் இப்படி சிறிய வட்டங்களில் முறைமையின்றி நிகழும் மொழிபெயர்ப்பு பணிகளும் – முறையான மொழியாக்க பதிப்புக்கு இணையாக - அத்தியாவசியமானவை. இதை கண்ணன் அறிந்துள்ளார் என்பது எனக்கு உவகையளித்தது.
 எனக்கு இதைப் பற்றி யோசிக்கையில் ஜெயமோகன் குழுச்சண்டை பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. குழு சார்ந்த மோதல்களே தமிழில் சிறந்த இலக்கிய இயக்கங்கள் தோன்ற, படைப்புகள் எழுதப்பட ஊக்கியாக அமைந்தன என்றார் ஜெ.மோ. குழு என்பது தனிப்பட்ட பிரிவு அல்ல, அது மாறுபட்ட பார்வையின், நிலைப்பாட்டின் அணிவகுப்பு. லட்சியமும், நிலைப்பாடும் இரு சாராரை பிரிக்கும் போதும் இலக்கியத்தின், பண்பாட்டின் பாலுள்ள பிடிப்பு இந்த குழுவினருக்கு பரஸ்பரம் அன்பும் மரியாதையும் கொள்ள வைக்கிறது. அவர்கள் பிரிந்திருக்கும் போதும் ஒரே லட்சியத்துக்காகத் தான் பணி செய்கிறார்கள். முரண் என்பது முகக்களிம்பு போன்ற ஒன்று மட்டுமே. ஆகையால், பெண்ணிய கவிதைகளை கடுமையாய் சாடும் ஜெ.மோ லீனாவை விஷ்ணுபுரம் விழாவில் பேச வைப்பார். லீனாவும் செல்வார். எனக்கு முந்தைய தலைமுறையினரிடம் இப்படி முரணை தனிப்பட்ட விரோதமாய் எடுத்துக் கொள்ளாத மாண்பை காண்கிறேன். இது மெச்சத்தக்க ஒன்று. கண்ணனிடமும் ஜெயமோகனிடமும் இந்த மாண்பை நான் பார்க்கிறேன்.
படைப்பாளி தனிமனிதன் அல்ல. படைப்புலகில் தனிமனிதர்களே இல்லை. தனிமனித கோபங்களும் பார்வைகளும் வெறும் பாவனைகளே. அதைக் கடந்து நாம் எப்போதுமே கைகோர்க்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...