Skip to main content

இலக்கிய மோதல்களின் பின்னுள்ள ஒற்றுமை


Image result for காலச்சுவடு கண்ணன்
நான் மாணவர்களுடன் இணைந்து சமீபத்தில் கொண்டு வந்த ஆங்கில மொழியாக்க தொகுப்பில் தமிழில் இருந்த இடம்பெற்றிருந்த மூன்று சிறுகதையாளர்களில் சு.ராவும் ஒருவர். விற்பனைக்கு இல்லை, உள்சுற்றுக்கு மட்டுமே இல்லை என்பதால் நாங்கள் அனுமதி பெறுவதைப் பற்றி கவலைப்படவில்லை. முடிந்த அளவுக்கு படைப்பாளிகளை அணுகி தகவல் சொன்னோம். தமிழில் பு.பியின், ஜி.நாகராஜனின் பதிப்புரிமை யாரிடம் எனத் தெரியவில்லை. ஆனால் சு.ராவின் பதிப்புரிமை காலச்சுவடிடம் – கண்ணனிடம் – என அறிவேன். அவரை என் பதின்வயதில் இருந்தே அறிவேன். ஆனால் நான் எழுத்தாளனாய் அறிமுகமாகி வளர்ந்து வந்தது காலச்சுவடின் போட்டிப் பதிப்பகமான உயிர்மையில். இலக்கிய குழுக்களில் காலச்சுவடும் உயிர்மையும் இன்றும் பேசிக் கொள்ளாத முரண் குழுக்களே. ஆகையால் கண்ணனை எப்படி அணுகி இதைப் பற்றி சொல்வது, அவர் அனுமதி மறுப்பாரா என்றெல்லாம் குழப்பங்கள், தயக்கம், ஒரு விள்ளல் பயம்.

 மெஸஞ்சரில் அவரிடம் எண் வாங்கி வைத்துக் கொண்டேன். அவர் நேர்மறையாய் பேசினால் அவரை வெளியீட்டின் போது சில சொற்கள் (வீடியோ சாட்டில்) பேச வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் நான் முறையாக முன்னமே தெரிவிக்கவில்லை என அவர் யோசித்தால் என்ன செய்வது? இப்படியே மனத்துக்குள் வலை பின்னிப் பின்னி தள்ளிப் போட்டு புத்தக வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு வேறுவழியின்றி அவரை அழைத்தேன். கிடைக்கவில்லை. அவர் விமானத்தில் இருந்ததாய் பின்னர் குறுஞ்செய்திஅனுப்பினார். நீண்ட நேர தயக்கத்திற்கு பிறகு, ஒரு நாள் தள்ளிப் போட்டு, அழைத்தேன். அவர் கனிவாக பேசினார். புத்தக வெளியீடு வேளையில் தனக்கு ஒரு கூட்டம் உள்ளதால் அப்போது பேச இயலாது என்றார். எனக்கு அவர் இதை எடுத்துக் கொண்ட விதம் சற்று ஆச்சரியமாகவும் நிறைய மகிழ்ச்சியாகவும் இருந்தது. புத்தக வெளியீடு சிறப்பாக நடந்தது. ஒரு பிரதியை கையெழுத்திட்டு அவருக்கு அனுப்பி வைத்தேன். அதைப் பெற்ற பிறகு கண்ணன் இன்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்:
 I received the signed copy of Dispossed. Wonderful attempt. Will take a careful look at it after the book fair. Thank you.
காலச்சுவடு மொழிபெயர்ப்பை முறையான வகையில், பதிப்புரிமை பெற்று, சில நேரம் நல்கைகள் பெற்று, செய்து உலக இலக்கிய படைப்புகளை தொடர்ந்து தமிழில் கொண்டு வரும் ஒரு பதிப்பகம். நாங்கள் செய்வது தமிழில் எண்பதுகள் வரை  நடைபெற்ற மொழியாக்க இயக்கத்தின் தொடர்ச்சி. (தனிப்பட்ட வகையில், விதிமுறைகள், முறைமைகள் பற்றி அக்கறைப்படாமல் இலக்கிய பயன்பாட்டுக்காக மட்டுமே செய்து வந்த மொழியாக்கம்). இன்று மொழியாக்கம் கார்ப்பரேட்மயமாகிய பின் தனிப்பட்ட முறையில் யாரும் பிடித்த படைப்பை மொழியாக்க முடியாத நிலை உள்ளது. ஆனால் இப்படி சிறிய வட்டங்களில் முறைமையின்றி நிகழும் மொழிபெயர்ப்பு பணிகளும் – முறையான மொழியாக்க பதிப்புக்கு இணையாக - அத்தியாவசியமானவை. இதை கண்ணன் அறிந்துள்ளார் என்பது எனக்கு உவகையளித்தது.
 எனக்கு இதைப் பற்றி யோசிக்கையில் ஜெயமோகன் குழுச்சண்டை பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. குழு சார்ந்த மோதல்களே தமிழில் சிறந்த இலக்கிய இயக்கங்கள் தோன்ற, படைப்புகள் எழுதப்பட ஊக்கியாக அமைந்தன என்றார் ஜெ.மோ. குழு என்பது தனிப்பட்ட பிரிவு அல்ல, அது மாறுபட்ட பார்வையின், நிலைப்பாட்டின் அணிவகுப்பு. லட்சியமும், நிலைப்பாடும் இரு சாராரை பிரிக்கும் போதும் இலக்கியத்தின், பண்பாட்டின் பாலுள்ள பிடிப்பு இந்த குழுவினருக்கு பரஸ்பரம் அன்பும் மரியாதையும் கொள்ள வைக்கிறது. அவர்கள் பிரிந்திருக்கும் போதும் ஒரே லட்சியத்துக்காகத் தான் பணி செய்கிறார்கள். முரண் என்பது முகக்களிம்பு போன்ற ஒன்று மட்டுமே. ஆகையால், பெண்ணிய கவிதைகளை கடுமையாய் சாடும் ஜெ.மோ லீனாவை விஷ்ணுபுரம் விழாவில் பேச வைப்பார். லீனாவும் செல்வார். எனக்கு முந்தைய தலைமுறையினரிடம் இப்படி முரணை தனிப்பட்ட விரோதமாய் எடுத்துக் கொள்ளாத மாண்பை காண்கிறேன். இது மெச்சத்தக்க ஒன்று. கண்ணனிடமும் ஜெயமோகனிடமும் இந்த மாண்பை நான் பார்க்கிறேன்.
படைப்பாளி தனிமனிதன் அல்ல. படைப்புலகில் தனிமனிதர்களே இல்லை. தனிமனித கோபங்களும் பார்வைகளும் வெறும் பாவனைகளே. அதைக் கடந்து நாம் எப்போதுமே கைகோர்க்கிறோம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...