Skip to main content

காதல் எனும் “மயக்கம்”


கவிஞர் இசை உயிர்மை இதழில் எழுதி வரும் காமத்துப்பால் உரை பத்தி அருமையான ஒரு முயற்சி. ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தில் வரும் குறள்களை எளிமையாய சுருக்கமாய் விளக்கி விட்டு அதை ஒட்டி தனது பகடியான கவித்துவமான பார்வையையும் அதை தருகிறார். ஒரு புத்தகமாய் வருகையில் இன்னும் சுவாராஸ்யமாய் இருக்கும் என நினைக்கிறேன். இம்மாத பத்தியில் அவர் குறிப்பிடும் ஒரு குறள் என் நெஞ்சை வெகுவாய் கவர்ந்து விட்டது. அதன் நுணுக்கம் மற்றும் ஓசை அழகு காரணமாய். வெகுநேரமாய் அதையே மீளமீள மனதுக்குள் சொல்லிக் கொண்டும் யோசித்தவாறும் இருந்தேன். இசை தரும் விளக்கத்துடன் பின்னர் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் தந்த விளக்கங்களையும் படித்தேன். எனக்கு அப்போது மற்றொரு புரிதல் ஏற்பட்டது. நமது தமிழ் மனத்துக்கும் இயற்கைக்குமான தனித்துவமான உறவை இக்கவிதை தொட்டுப் போகிறது. அதையே இங்கு பேசப் போகிறேன்.

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று” (1112)

இதன் அதிகாரம்நலம் புனைந்துரைத்தல்”. அதாவது காதலியின் அழகை, சிறப்பை பாராட்டி பாடுவது. இதில், காதலன் தன் நேசத்துக்குரியவளின் கண்களைப் பற்றி பாடுகிறான். மலரைப் போன்று விரிந்து ஒளிரும் கண்கள்; பல வர்ணங்கள் துள்ளும் கண்கள். இக்கண்களில் லயித்துப் போகும் அவனுக்கு தான் வெளியே பார்க்கும் செடிகளில் தோன்றும் மலர்கள் கூட மலரல்ல கண்களோ என மயக்கம் ஏற்படுகிறது.

இதைப் படிக்க ஒரு செடியில் பெண்ணின் கண்கள் விழித்து விழித்துப் பார்க்கும் ஒரு காட்சி, ஒரு சர்ரியலான காட்சி, என் முன் விரிந்தது. அதன் விசித்திரம், தனித்துவம்... ஏன் அவன் இந்த மிகையான கற்பனைக்கு செல்ல வேண்டும்? அதற்கு ஒரு சாவியாக இரண்டாவது வரியின் முதல் சொல் அமைகிறது: “பலர்காணும்”. 

தன் காதலியின் கண்கள் தான் ரசிக்க மட்டுமே என அவன் மீயுடைமை உணர்வுடன் (possessiveness) அவன் சிந்திப்பதில்லை. மாறாக, பலர் காணும் அந்த பார்வை வழி (பலரது இச்சையான பார்வை மட்டுமல்ல) தானும் அவளைக் காண வேண்டும் என எண்ணுகிறான். ஆகையால், அவளது கண்கள் பூக்களாகவும் உள்ளது, அவை இப்பிரபஞ்சம் எங்கும் விரிந்துள்ளன, உலகின் ஒவ்வொரு அங்குலத்திலும் அவளது பார்வை தன்னை நோக்கி திரும்பி இருப்பதாய் அவன் நினைக்கிறான். இந்த பார்வை மாற்றத்துக்கு காரணம் அவன் அக்கண்களே பூக்கள், பூக்களே கண்கள் என நம்பத் தொடங்குவது; அப்படி நினைப்பதற்கான நோக்கம் பூக்கள் என்பவை உலகோர் அனைவரும் கண்டு ரசிப்பவை என்பது. தன் காதலியை உலகோர் ரசிப்பதை ஏற்க அவனால் முடியாது. ஆனால் உலகோர் ரசிக்கும் ஒன்றினோடு அவளது உடலின் ரசனைக்குரிய ஒரு பாகத்தை நீட்டிபது அவனால் ஏற்கக் கூடிய ஒன்று. அதையே அவன் தன்னை அறியாமல் இங்கு செய்கிறான் எனலாம்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கேபாடலில் எனக்கு பிடித்தமான காட்சித் துணுக்கு மதுபாலா சாய்ந்து புல்வெளியை வருடியபடி செல்வது. அப்புல்வெளி அனைவருக்குமானது, அனைவரும் வருடி ரசித்துப் போவது, அதை காதலின் மிதப்பில் அவள் வருடித் தழுவும் போது தன் காதலனை உலகிடத்து வைக்கிறாள். “என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார், என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய் கேட்டு பார், உன் பேர் சொல்லுமேஎனும்ஜெண்டில்மேன்பாடல் வரியும் இதே மனநிலையை வெளிப்படுத்துவதே - காதலியை, காதலனை உலகமாய் கண்டு மனதை விரிய செய்வதற்குப் பதிலாக தன் காதல் மனதை பூக்களாய், ஜன்னல் கம்பிகளாய் இவள் நீட்டித்துக் கொள்கிறாள். இது ஒரு தனித்துவமான தமிழ் மனநிலை. நமது செவ்விலக்கியத்தில் திரும்ப திரும்ப வரும் மனப்போக்கு. தன்னையும் தான் வாழும் வெளியையும் இரண்டாக பார்ப்பது ஒரு நவீன அணுகுமுறை. ஆனால் தமிழ் செவ்வியலில் நிலமும் இயற்கையும் மனித உடலும் மனமும் தனித்த்தனி அல்ல. அவை ஒன்றே தான். அதனால் தான் ஒரு சங்கக்கவிதையில் தலைவி தான் சிறுவயதில் நீரூற்றி வளர்த்த மரத்தை தன் சகோதரியாய் பாவிக்கிறாள்; அம்மரத்தருகே இருந்து காதல் செய்ய கூசுகிறாள்

மையாத்தி எனும் சொல்லும் அழகானது. அது மயங்குதல் எனும் பொருளில் வருகிறது. ஆனால் இந்த மயக்கம் என்பது எதிர்மறையான பொருள் கொண்டது அல்ல. நவீனப் பொருளில் நாம் புரிந்து கொள்வது போல கிறக்கத்தில் போதையில் இருப்பதல்ல. மாறாக ஒன்றை இன்னொன்றாய் காண்பது, இடம்மாற்றி வைப்பது. உதாரணமாய்பொருள் மயக்கம்”, “சொல் மயக்கம்போன்ற பிரயோகங்களை சொல்லலாம். நமது முன்னோர் இந்த மயக்கத்தை ஒரு ஆழமான இருத்தலியல் நிலையாகவே கண்டிருக்க வேண்டும். தன்னை தான் வாழும் நிலத்துடன், நிலத்திலுள்ள உயிர்களுடன், இயற்கையுடன் இடமாற்றி, உலக மாந்தர்களின் பார்வையாய் தன் பார்வையையும் விரித்திடும் ஒருயாதும் ஊரே யாவரும் கேளிர்தத்துவம் நம்மவரிடையே இருந்திருக்க வேண்டும். அதுவே இதைப் போன்ற குறள்களில் வெளிப்படுகிறது. இதன் நீட்சியாகயே மையல் எனும் சொல் வருகிறது. ஒருத்தி மீதான காதலின் வழி ஒருவன் தன்னை பல்வேறு விசயங்களாய், மற்றமையாய்மாற்றி வைத்துஅறியும் போதே இன்னொருத்தி மீதான அன்பாய் அது மலர்கிறது; “மையல்தோன்றுகிறது. காதலை தமிழர்கள் எவ்வளவு அழகாய் ஆழமாய் புரிந்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள்

மேற்சொன்ன கருத்தோட்டத்துடன் பொருந்தும் மற்றொரு குறளும் இந்த அதிகாரத்தில் வருகிறது:

மதியும் மடந்தை முகனும் அறியா 
பதியின் கலங்கிய மீன்” (1116)

காதலுக்கு உரியவளின் முகம் நிலவை ஒத்தது. இது இப்போது காதலனை மயங்க வைக்கவில்லை. இயற்கையே இந்த மயக்கத்தால் குழம்புகிறது. நட்சத்திரங்கள் தமக்கு மையமான நிலா எது இவளது முகமா இந்த நிலவா எனப் புரியாமல் கலங்கி திரிகின்றன

  

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...