முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல் எனும் “மயக்கம்”


கவிஞர் இசை உயிர்மை இதழில் எழுதி வரும் காமத்துப்பால் உரை பத்தி அருமையான ஒரு முயற்சி. ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தில் வரும் குறள்களை எளிமையாய சுருக்கமாய் விளக்கி விட்டு அதை ஒட்டி தனது பகடியான கவித்துவமான பார்வையையும் அதை தருகிறார். ஒரு புத்தகமாய் வருகையில் இன்னும் சுவாராஸ்யமாய் இருக்கும் என நினைக்கிறேன். இம்மாத பத்தியில் அவர் குறிப்பிடும் ஒரு குறள் என் நெஞ்சை வெகுவாய் கவர்ந்து விட்டது. அதன் நுணுக்கம் மற்றும் ஓசை அழகு காரணமாய். வெகுநேரமாய் அதையே மீளமீள மனதுக்குள் சொல்லிக் கொண்டும் யோசித்தவாறும் இருந்தேன். இசை தரும் விளக்கத்துடன் பின்னர் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் தந்த விளக்கங்களையும் படித்தேன். எனக்கு அப்போது மற்றொரு புரிதல் ஏற்பட்டது. நமது தமிழ் மனத்துக்கும் இயற்கைக்குமான தனித்துவமான உறவை இக்கவிதை தொட்டுப் போகிறது. அதையே இங்கு பேசப் போகிறேன்.

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று” (1112)

இதன் அதிகாரம்நலம் புனைந்துரைத்தல்”. அதாவது காதலியின் அழகை, சிறப்பை பாராட்டி பாடுவது. இதில், காதலன் தன் நேசத்துக்குரியவளின் கண்களைப் பற்றி பாடுகிறான். மலரைப் போன்று விரிந்து ஒளிரும் கண்கள்; பல வர்ணங்கள் துள்ளும் கண்கள். இக்கண்களில் லயித்துப் போகும் அவனுக்கு தான் வெளியே பார்க்கும் செடிகளில் தோன்றும் மலர்கள் கூட மலரல்ல கண்களோ என மயக்கம் ஏற்படுகிறது.

இதைப் படிக்க ஒரு செடியில் பெண்ணின் கண்கள் விழித்து விழித்துப் பார்க்கும் ஒரு காட்சி, ஒரு சர்ரியலான காட்சி, என் முன் விரிந்தது. அதன் விசித்திரம், தனித்துவம்... ஏன் அவன் இந்த மிகையான கற்பனைக்கு செல்ல வேண்டும்? அதற்கு ஒரு சாவியாக இரண்டாவது வரியின் முதல் சொல் அமைகிறது: “பலர்காணும்”. 

தன் காதலியின் கண்கள் தான் ரசிக்க மட்டுமே என அவன் மீயுடைமை உணர்வுடன் (possessiveness) அவன் சிந்திப்பதில்லை. மாறாக, பலர் காணும் அந்த பார்வை வழி (பலரது இச்சையான பார்வை மட்டுமல்ல) தானும் அவளைக் காண வேண்டும் என எண்ணுகிறான். ஆகையால், அவளது கண்கள் பூக்களாகவும் உள்ளது, அவை இப்பிரபஞ்சம் எங்கும் விரிந்துள்ளன, உலகின் ஒவ்வொரு அங்குலத்திலும் அவளது பார்வை தன்னை நோக்கி திரும்பி இருப்பதாய் அவன் நினைக்கிறான். இந்த பார்வை மாற்றத்துக்கு காரணம் அவன் அக்கண்களே பூக்கள், பூக்களே கண்கள் என நம்பத் தொடங்குவது; அப்படி நினைப்பதற்கான நோக்கம் பூக்கள் என்பவை உலகோர் அனைவரும் கண்டு ரசிப்பவை என்பது. தன் காதலியை உலகோர் ரசிப்பதை ஏற்க அவனால் முடியாது. ஆனால் உலகோர் ரசிக்கும் ஒன்றினோடு அவளது உடலின் ரசனைக்குரிய ஒரு பாகத்தை நீட்டிபது அவனால் ஏற்கக் கூடிய ஒன்று. அதையே அவன் தன்னை அறியாமல் இங்கு செய்கிறான் எனலாம்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கேபாடலில் எனக்கு பிடித்தமான காட்சித் துணுக்கு மதுபாலா சாய்ந்து புல்வெளியை வருடியபடி செல்வது. அப்புல்வெளி அனைவருக்குமானது, அனைவரும் வருடி ரசித்துப் போவது, அதை காதலின் மிதப்பில் அவள் வருடித் தழுவும் போது தன் காதலனை உலகிடத்து வைக்கிறாள். “என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார், என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய் கேட்டு பார், உன் பேர் சொல்லுமேஎனும்ஜெண்டில்மேன்பாடல் வரியும் இதே மனநிலையை வெளிப்படுத்துவதே - காதலியை, காதலனை உலகமாய் கண்டு மனதை விரிய செய்வதற்குப் பதிலாக தன் காதல் மனதை பூக்களாய், ஜன்னல் கம்பிகளாய் இவள் நீட்டித்துக் கொள்கிறாள். இது ஒரு தனித்துவமான தமிழ் மனநிலை. நமது செவ்விலக்கியத்தில் திரும்ப திரும்ப வரும் மனப்போக்கு. தன்னையும் தான் வாழும் வெளியையும் இரண்டாக பார்ப்பது ஒரு நவீன அணுகுமுறை. ஆனால் தமிழ் செவ்வியலில் நிலமும் இயற்கையும் மனித உடலும் மனமும் தனித்த்தனி அல்ல. அவை ஒன்றே தான். அதனால் தான் ஒரு சங்கக்கவிதையில் தலைவி தான் சிறுவயதில் நீரூற்றி வளர்த்த மரத்தை தன் சகோதரியாய் பாவிக்கிறாள்; அம்மரத்தருகே இருந்து காதல் செய்ய கூசுகிறாள்

மையாத்தி எனும் சொல்லும் அழகானது. அது மயங்குதல் எனும் பொருளில் வருகிறது. ஆனால் இந்த மயக்கம் என்பது எதிர்மறையான பொருள் கொண்டது அல்ல. நவீனப் பொருளில் நாம் புரிந்து கொள்வது போல கிறக்கத்தில் போதையில் இருப்பதல்ல. மாறாக ஒன்றை இன்னொன்றாய் காண்பது, இடம்மாற்றி வைப்பது. உதாரணமாய்பொருள் மயக்கம்”, “சொல் மயக்கம்போன்ற பிரயோகங்களை சொல்லலாம். நமது முன்னோர் இந்த மயக்கத்தை ஒரு ஆழமான இருத்தலியல் நிலையாகவே கண்டிருக்க வேண்டும். தன்னை தான் வாழும் நிலத்துடன், நிலத்திலுள்ள உயிர்களுடன், இயற்கையுடன் இடமாற்றி, உலக மாந்தர்களின் பார்வையாய் தன் பார்வையையும் விரித்திடும் ஒருயாதும் ஊரே யாவரும் கேளிர்தத்துவம் நம்மவரிடையே இருந்திருக்க வேண்டும். அதுவே இதைப் போன்ற குறள்களில் வெளிப்படுகிறது. இதன் நீட்சியாகயே மையல் எனும் சொல் வருகிறது. ஒருத்தி மீதான காதலின் வழி ஒருவன் தன்னை பல்வேறு விசயங்களாய், மற்றமையாய்மாற்றி வைத்துஅறியும் போதே இன்னொருத்தி மீதான அன்பாய் அது மலர்கிறது; “மையல்தோன்றுகிறது. காதலை தமிழர்கள் எவ்வளவு அழகாய் ஆழமாய் புரிந்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள்

மேற்சொன்ன கருத்தோட்டத்துடன் பொருந்தும் மற்றொரு குறளும் இந்த அதிகாரத்தில் வருகிறது:

மதியும் மடந்தை முகனும் அறியா 
பதியின் கலங்கிய மீன்” (1116)

காதலுக்கு உரியவளின் முகம் நிலவை ஒத்தது. இது இப்போது காதலனை மயங்க வைக்கவில்லை. இயற்கையே இந்த மயக்கத்தால் குழம்புகிறது. நட்சத்திரங்கள் தமக்கு மையமான நிலா எது இவளது முகமா இந்த நிலவா எனப் புரியாமல் கலங்கி திரிகின்றன

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...