Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

காதல் எனும் “மயக்கம்”


கவிஞர் இசை உயிர்மை இதழில் எழுதி வரும் காமத்துப்பால் உரை பத்தி அருமையான ஒரு முயற்சி. ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தில் வரும் குறள்களை எளிமையாய சுருக்கமாய் விளக்கி விட்டு அதை ஒட்டி தனது பகடியான கவித்துவமான பார்வையையும் அதை தருகிறார். ஒரு புத்தகமாய் வருகையில் இன்னும் சுவாராஸ்யமாய் இருக்கும் என நினைக்கிறேன். இம்மாத பத்தியில் அவர் குறிப்பிடும் ஒரு குறள் என் நெஞ்சை வெகுவாய் கவர்ந்து விட்டது. அதன் நுணுக்கம் மற்றும் ஓசை அழகு காரணமாய். வெகுநேரமாய் அதையே மீளமீள மனதுக்குள் சொல்லிக் கொண்டும் யோசித்தவாறும் இருந்தேன். இசை தரும் விளக்கத்துடன் பின்னர் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் தந்த விளக்கங்களையும் படித்தேன். எனக்கு அப்போது மற்றொரு புரிதல் ஏற்பட்டது. நமது தமிழ் மனத்துக்கும் இயற்கைக்குமான தனித்துவமான உறவை இக்கவிதை தொட்டுப் போகிறது. அதையே இங்கு பேசப் போகிறேன்.

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று” (1112)

இதன் அதிகாரம்நலம் புனைந்துரைத்தல்”. அதாவது காதலியின் அழகை, சிறப்பை பாராட்டி பாடுவது. இதில், காதலன் தன் நேசத்துக்குரியவளின் கண்களைப் பற்றி பாடுகிறான். மலரைப் போன்று விரிந்து ஒளிரும் கண்கள்; பல வர்ணங்கள் துள்ளும் கண்கள். இக்கண்களில் லயித்துப் போகும் அவனுக்கு தான் வெளியே பார்க்கும் செடிகளில் தோன்றும் மலர்கள் கூட மலரல்ல கண்களோ என மயக்கம் ஏற்படுகிறது.

இதைப் படிக்க ஒரு செடியில் பெண்ணின் கண்கள் விழித்து விழித்துப் பார்க்கும் ஒரு காட்சி, ஒரு சர்ரியலான காட்சி, என் முன் விரிந்தது. அதன் விசித்திரம், தனித்துவம்... ஏன் அவன் இந்த மிகையான கற்பனைக்கு செல்ல வேண்டும்? அதற்கு ஒரு சாவியாக இரண்டாவது வரியின் முதல் சொல் அமைகிறது: “பலர்காணும்”. 

தன் காதலியின் கண்கள் தான் ரசிக்க மட்டுமே என அவன் மீயுடைமை உணர்வுடன் (possessiveness) அவன் சிந்திப்பதில்லை. மாறாக, பலர் காணும் அந்த பார்வை வழி (பலரது இச்சையான பார்வை மட்டுமல்ல) தானும் அவளைக் காண வேண்டும் என எண்ணுகிறான். ஆகையால், அவளது கண்கள் பூக்களாகவும் உள்ளது, அவை இப்பிரபஞ்சம் எங்கும் விரிந்துள்ளன, உலகின் ஒவ்வொரு அங்குலத்திலும் அவளது பார்வை தன்னை நோக்கி திரும்பி இருப்பதாய் அவன் நினைக்கிறான். இந்த பார்வை மாற்றத்துக்கு காரணம் அவன் அக்கண்களே பூக்கள், பூக்களே கண்கள் என நம்பத் தொடங்குவது; அப்படி நினைப்பதற்கான நோக்கம் பூக்கள் என்பவை உலகோர் அனைவரும் கண்டு ரசிப்பவை என்பது. தன் காதலியை உலகோர் ரசிப்பதை ஏற்க அவனால் முடியாது. ஆனால் உலகோர் ரசிக்கும் ஒன்றினோடு அவளது உடலின் ரசனைக்குரிய ஒரு பாகத்தை நீட்டிபது அவனால் ஏற்கக் கூடிய ஒன்று. அதையே அவன் தன்னை அறியாமல் இங்கு செய்கிறான் எனலாம்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கேபாடலில் எனக்கு பிடித்தமான காட்சித் துணுக்கு மதுபாலா சாய்ந்து புல்வெளியை வருடியபடி செல்வது. அப்புல்வெளி அனைவருக்குமானது, அனைவரும் வருடி ரசித்துப் போவது, அதை காதலின் மிதப்பில் அவள் வருடித் தழுவும் போது தன் காதலனை உலகிடத்து வைக்கிறாள். “என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார், என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய் கேட்டு பார், உன் பேர் சொல்லுமேஎனும்ஜெண்டில்மேன்பாடல் வரியும் இதே மனநிலையை வெளிப்படுத்துவதே - காதலியை, காதலனை உலகமாய் கண்டு மனதை விரிய செய்வதற்குப் பதிலாக தன் காதல் மனதை பூக்களாய், ஜன்னல் கம்பிகளாய் இவள் நீட்டித்துக் கொள்கிறாள். இது ஒரு தனித்துவமான தமிழ் மனநிலை. நமது செவ்விலக்கியத்தில் திரும்ப திரும்ப வரும் மனப்போக்கு. தன்னையும் தான் வாழும் வெளியையும் இரண்டாக பார்ப்பது ஒரு நவீன அணுகுமுறை. ஆனால் தமிழ் செவ்வியலில் நிலமும் இயற்கையும் மனித உடலும் மனமும் தனித்த்தனி அல்ல. அவை ஒன்றே தான். அதனால் தான் ஒரு சங்கக்கவிதையில் தலைவி தான் சிறுவயதில் நீரூற்றி வளர்த்த மரத்தை தன் சகோதரியாய் பாவிக்கிறாள்; அம்மரத்தருகே இருந்து காதல் செய்ய கூசுகிறாள்

மையாத்தி எனும் சொல்லும் அழகானது. அது மயங்குதல் எனும் பொருளில் வருகிறது. ஆனால் இந்த மயக்கம் என்பது எதிர்மறையான பொருள் கொண்டது அல்ல. நவீனப் பொருளில் நாம் புரிந்து கொள்வது போல கிறக்கத்தில் போதையில் இருப்பதல்ல. மாறாக ஒன்றை இன்னொன்றாய் காண்பது, இடம்மாற்றி வைப்பது. உதாரணமாய்பொருள் மயக்கம்”, “சொல் மயக்கம்போன்ற பிரயோகங்களை சொல்லலாம். நமது முன்னோர் இந்த மயக்கத்தை ஒரு ஆழமான இருத்தலியல் நிலையாகவே கண்டிருக்க வேண்டும். தன்னை தான் வாழும் நிலத்துடன், நிலத்திலுள்ள உயிர்களுடன், இயற்கையுடன் இடமாற்றி, உலக மாந்தர்களின் பார்வையாய் தன் பார்வையையும் விரித்திடும் ஒருயாதும் ஊரே யாவரும் கேளிர்தத்துவம் நம்மவரிடையே இருந்திருக்க வேண்டும். அதுவே இதைப் போன்ற குறள்களில் வெளிப்படுகிறது. இதன் நீட்சியாகயே மையல் எனும் சொல் வருகிறது. ஒருத்தி மீதான காதலின் வழி ஒருவன் தன்னை பல்வேறு விசயங்களாய், மற்றமையாய்மாற்றி வைத்துஅறியும் போதே இன்னொருத்தி மீதான அன்பாய் அது மலர்கிறது; “மையல்தோன்றுகிறது. காதலை தமிழர்கள் எவ்வளவு அழகாய் ஆழமாய் புரிந்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள்

மேற்சொன்ன கருத்தோட்டத்துடன் பொருந்தும் மற்றொரு குறளும் இந்த அதிகாரத்தில் வருகிறது:

மதியும் மடந்தை முகனும் அறியா 
பதியின் கலங்கிய மீன்” (1116)

காதலுக்கு உரியவளின் முகம் நிலவை ஒத்தது. இது இப்போது காதலனை மயங்க வைக்கவில்லை. இயற்கையே இந்த மயக்கத்தால் குழம்புகிறது. நட்சத்திரங்கள் தமக்கு மையமான நிலா எது இவளது முகமா இந்த நிலவா எனப் புரியாமல் கலங்கி திரிகின்றன

  

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...