Skip to main content

பிக்பாஸ், துயரத்தை ஏன் கூவி விற்கிறீர்கள்?


உங்களது வாழ்க்கையின் மறக்க முடியாத சம்பவத்தை சொல்லுங்கள், இழப்பை சொல்ல்லுங்கள்என்பது போன்ற ஒப்பாரி டாஸ்குடன் பிக்பாஸ் மிக மிக செயற்கையாக ஆரம்பித்துள்ளது. இந்த டாஸ்கில் பகிரப்படும் துயரக்கதைகளில் வெளிப்படும் உணர்ச்சிகள் உண்மையாக இருக்கலாம்; அவை நம்மை மிகவும் நெகிழவும் கண்களை நிறைக்கவும் செய்யலாம். ஆனால் இது எவ்வளவு ஆபத்தான பண்பாட்டை உருவாக்குகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ரியாலிட்டி ஷோவின் அடிப்படையான பிரச்சனை அது ரியாலிட்டியும் அல்ல ஷோவும் அல்ல என்பது. அதன் இடைப்பட்ட தன்மையே நம்மை அதை நோக்கி அதிகமாய் ஈர்க்கிறது. உதாரணத்திற்கு, மோகன் வைத்தி ஒரு பூங்காவிலோ திருமண வீட்டிலோ நம்மை சந்தித்து தன் மனைவி இறந்த சம்பவத்தையோ தன் மகனின் ஊனத்தின் அவலத்தையோ தேம்பித் தேம்பி அழுதபடி சொன்னால் அந்த துயரத்தின் தாக்கத்தை நம்மால் தாங்கி கொள்ள முடியாது. இப்போதெல்லாம் யாராவது துயரத்தை நேரடியாய் பேசினாலே அவர்களை தவிர்த்து விடுகிறோம். சட்டென அந்த அழுத்தமான கனத்த உணர்வுநிலையில் இருந்து வேடிக்கை மனநிலைக்கு தாவிட தவிக்கிறோம். நாம் இன்று சினிமாவிலோ இலக்கியத்திலோ மிக கனமான துயரக் கதைகளை படிக்க தயாராக இல்லை. பிரச்சனை துயரத்த்தில் இல்லை, நிஜத்தின் தீவிரத்தில் இருக்கிறது. நம்மால் நிஜமாக தோன்றும் துக்கத்தை இன்று தாள முடிவதில்லை; ஆனால் கட்டமைக்கப்பட்டதாய் தொனிக்கும் துக்கத்தை உடனடியாய் ஏற்றுக் கொள்கிறோம். இந்த மனநிலையைத் தான் விஜய் டிவி போன்ற நிறுவனங்கள் சுரண்டுகின்றன.
ஆக, இப்படியான டாஸ்குகளைக் கண்டு நாமும் கண்ணீர் வடித்துபாவம்லஎன உச்சுக் கொட்டும் போது நாம் வாழ்க்கையில் இருந்து, நிஜமான தீவிரமான உணர்ச்சிகளில் இருந்து விலகி, மேலும் மேலும் வடிகட்டி பதப்படுத்தப்பட்ட அனுபவங்களுக்கு மட்டும் எதிர்வினையாற்றுகிறவர்களாக ஆகிறோம். இது தான் பிக்பாஸ் துயரக் காவியங்களில் திளைப்பதன் ஆபத்து
அடுத்து, லைட்ஸ் ஆன் என கட்டளையிட்டதும் அழுது தேம்ப தேம்புவது நடிப்பா அல்லது நிஜமா? டாஸ்குகள் ஆரம்பிக்கும் முன்னரே சில பங்கேற்பாளர்கள் அழவும் பதறவும் தயாராகி வருவதைக் காண்கிறோம். டாஸ்க் துவங்கியதும் அவர்கள் ஒரு நடிகர்களைப் போல கண்ணீர் விட்டு வசனம் பேசத் துவங்குகிறார்கள். முடிந்து அனைவரும் கைத்தட்டியதும் மகிழ்ச்சியாய் புன்னகைக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் எத்தனை பேரால் இப்படி ஒரு துயர நினைவுக்குள் புகுந்து பயணித்து நொடியில் அதில் இருந்து மீண்டும் சகஜமாக முடியும்? பிக்பாஸில் அனைவராலும் முடிகிறது
மேலும் துயரத்தை ஒரு நிகழ்த்துதலாக்கும் போது அது கலையும் அல்ல நிஜமும் அல்ல என்றாகிறது. ஒரு நிகழ்த்துதல் கலைஞனாக உங்களுக்கு உங்கள் கலை மீதுள்ள சுதந்திரம் பிக்பாஸில் ஒப்பாரி வைப்பவர்களுக்கு இல்லை. பேஸ்புக்கில் அனுபவக் கதைகளை பகிர்கிறவர்களுக்கு கூட தம்மையே பகடி பண்ணவும் விமர்சனத்தை உட்பொதியவும் சுதந்திரம் உண்டு. ஆனால் பிக்பாஸில் நீங்கள் தவிர்க்க முடியாமல் மரணம், கருக்கலைப்பு, வேலை இழந்தது, வீட்டை விற்றது, கடனில் அவஸ்தைப்பட்டது என ஒரு நெஞ்சைப்பிசையும் அனுபவத்தை கதறக் கதற சொல்லியே ஆக வேண்டும். அது உங்கள் நிலைப்பை பாதிக்கும் நிகழ்த்துதல் ஆகும். ஒவ்வொரு நாள் நீங்கள் பிக்பாஸில் கூடுதலாய் நிலைக்கும் போது லட்சக்கணக்கில் கூடுதலாய் சம்பாதிக்கிறீர்கள். இப்படி பணமும் வெற்றியும் தரும் அழுத்தத்தால் ஒருவர் தன் சுய இழப்பை ஒப்பாரி வைத்து அடுத்தவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவது மிகவும் ஆபாசமானது.

இறுதியாக, இப்படி ஒப்பாரி வைப்பவர்கள் நம் நண்பர்கள் அல்ல. சிலரது சோகக் கதைகளை நாம் பேஸ்புக்கிலோ ஒரு பத்திரிகைப் பேட்டியிலோ படிக்கையில் அந்த நபர் மீது நமக்கு அணுக்கமும் பிரியமும் தோன்றுகிறது. அவர்களுடன் நட்பு பாராட்ட அவர்களது கலைப்பயணத்தை தொடர நாம் விரும்புகிறோம். ஆனால் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் நமது நண்பர்கள் ஆக முடியாது. அவர்கள் கலைஞர்களும் அல்ல. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறவர்களும் அல்ல. அவர்களிடம் நமக்கு அணுக்கம் தோன்றும் போதே அவர்கள் நம்மிடம் இருந்த்து வெகுதொலைவுக்கு விலகிச் செல்கிறார்கள். உதாரணமாய், பிக்பாஸில் மிகப்பெரிய புகழை அடைந்த ஓவியா ஏன் ஒரு நடிகையாக இப்போது எந்த இடத்தில் இல்லை? ஏன் அவர் மக்களுடன் அன்றாடம் உரையாடுகிறவராக இல்லை? ஓவியா மீது ஜனங்களுக்கு உருவான ஈர்ப்பு ஒரு பொய்த்தோற்றத்தின் மீதுள்ள ஈர்ப்பே. எத்தனை ஆண்டுகள் வடிவேலு சினிமாவில் இருந்து காணாமல் போனாலும் அவர் மக்கள் மனதிலேயே இருக்கிறார். ஆனால் ரியாலிட்டி ஷோ பிரபலங்களால் சில நிமிடங்கள் கூட அவ்வாறு நிலைக்க முடியாது

இப்படி எந்த விதத்திலும் நம்முடன் இருக்க இயலாது, எந்த உறவும் ஸ்தாபிக்காத ஒருவரது பேரிழப்புகளை நாம் மனம் கனிந்து கேட்கும் போது அந்த இழப்புணர்வுகள் மட்டும் எப்படி நம்முடன் இருக்கும் சொல்லுங்கள்? இந்த அனுபவப் பகிர்வுகளுக்கும் போர்னோ நடிப்புக்கும் வித்தியாசம் பெரிதில்லை. போர்னோவிலும் செக்ஸ் முழுக்க நடிப்புமில்லை, முழுக்க உண்மையும் இல்லை. போர்னோ போதைக்கு ஆட்படுவதைப் போன்றே ரியாலிட்டி ஷோ ஒப்பாரிகளுக்கு அடிமையாவதும் நல்லதல்ல.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...