முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிஷிமா- தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்? (3)

மிஷிமாவுக்கு மன்னர் மீது தனிப்பட்ட பிரியமோ மன்னராட்சி மீது மயக்கமோ இல்லை. ஆனால் நவீன கார்ப்பரேட் தாக்கம், எந்திரமயமாக்கலால் மக்கள் அடிமையாகி, ஆன்ம சாரத்தை இழக்கும் நிலை, பாண்பாட்டு வேர்கள் அறுக்கப்பாட்டு சமூகம் மலினப்படும் சூழல் ஆகியவற்றை எதிர்ப்பதற்காக அவர் மன்னரை, அவர் மீதான வழிபாட்டை, ஒரு குறியீடாக பயன்படுத்துகிறார். இந்த செப்புக்கு மூலம் மிஷிமா தெரிவித்த உண்மையானது ஹைடெக்கார் தனது தத்துவத்தில் பேசியது தான். நீட்சே ஜெர்மனியில் இருந்தபடிகடவுள் இறந்து விட்டார், மீமனிதன் தோன்ற வேண்டிய காலம் அருகாமையில் உள்ளதுஎன அறைகூவியது தான்.

ராணுவம் என்பது அன்றாடம் மரணத்துடன், பௌதீகமான போராட்டங்களுடன் சம்மந்தப்பட்டது; இதை நவீன கார்ப்பரேட் யுகத்தின் குளிர்பதனப்பெட்டிக்குள் இருக்கும் காய்கறி போன்ற மனித வாழ்க்கைக்கு மாற்றாக மிஷிமா பார்த்தார். கோட் சூட் அணிந்து வெள்ளைக்காரனுக்காக ஜப்பானில் இருந்து வேலை செய்வதை விட ஆயுதமேந்தி மரணத்தை தழுவுவது ஆத்மார்த்தமான, ஆழமான திருப்தி தரும் வாழ்க்கை என அவர் நம்பினர்
ஆனால் போரின் போது மட்டுமே ராணுவத்தினர் கூட மரணத்துக்கு அருகாமையில் செல்ல முடியும்; அதை ஸ்பரிசிக்க முடியும். ஜப்பானிய ராணுவம் போரில் ஈடுபடக் கூடாது என்பது அவர்களின் அரசியலமைப்பு சட்டம் சொல்வது. கார்ப்பரேட் ஆன்ம சீர்கேட்டில் இருந்து தேசத்தைக் காப்பாற்ற ஒரே வழி போர் தான் என நினைத்த மிஷிமா மீண்டும் மீண்டும் ராணுவத்தை ஆயுதமேந்தி போரிட்ட அனுமதிக்கும்படி அரசியலமைப்பை மாற்ற வேண்டும் கோரினார். அதற்காக நிறைய பத்திரிகைக் கட்டுரைகள் எழுதினார், கூட்டங்களில் பேசினார், அரசியல் தலைவர்களிடம் மன்றாடினார்; ஆனால் யாரும் செவி சாய்க்காத நிலையில் அவர் தானாகவே ஒரு ராணுவ வீரனாக கடும் பயிற்சிகள் மேற்கொண்டு, ஒரு சின்ன தனியார் ராணுவத்தை உருவாக்கி அவர்களின் தலைமையில் ஒரு சாமுராய் கலகம் செய்ய முயன்றார். இதுவே அவரது தற்கொலையில் போய் முடிந்தது.

முடிவாய், நாம் இன்னொரு கேள்வியையும் கேட்க வேண்டும். மரணம் ஏன் இவ்வளவு வசீகரமாய் இருக்கிறது?
மரணத்தை நாம் என்றுமே அறிய / அனுபவிக்க முடியாது; எதை அறியவே முடியாதோ அதுவே எல்லையற்ற முழுமை ஆகிறது. இறைவனை ஒவ்வொரு மதமும் அறிய முடியா இருப்பாய் காண்பது இதனாலே. மரணமும் இறைவனுக்கு அடுத்தபடியாய் முழுமையின் வாசலாய் உள்ளது. ஆனால் மரணத்தை அறிவதில் ஒரு பிரதான சிக்கல் உண்டு. மரணம் என்றால் என்ன என முழுக்க உணரும் முன்பே நாம் பரலோகத்தின் அழைப்பு மணியை அடித்துக் கொண்டிருப்போம். இப்போது, நகைமுரணாய், இந்த அசாத்தியமே முழுமையின் மிகப்பெரிய வசீகரத்தை மரணத்துக்கு அளிக்கிறது. அதனால் தான் நாம் மரணத்தை எதிர்கொள்கையில், துக்க வீட்டுக்குள் நுழைகையில், சிதைக்கு எரியூட்ட தயாராகையில் திகைப்படைகிறோம். இந்த திகைப்பை சமாளிக்கவே நிறைய ஈமச்சடங்குகளை நமது பண்பாடுகள் உருவாக்கி தந்துள்ளன. அவற்றையும் தாண்டி மரணம் என்றுமே நமது அன்றாட மனவொழுக்கின் அடியில் கிடந்து நம்மை வா என அழைத்தபடி இருக்கிறது
ஆக, மனித மனம் மரணத்தை நாடுவது ஒரு முழுமையை நாடுவதாகிறது. மிஷிமாவின் மனமும் அவ்வாறே முழுமையை நாடியது - ஆரம்பத்தில் கலையில், இலக்கியத்தில் நாடிய மனம் அவை போதாது என உணர்ந்து இப்போது பௌதீக உலகில், சமூக மனத்தில், தன் பண்பாட்டின் ஆழத்தில், இறுதியில் தன் தேகத்தின் அழிவில் முழுமையை நாடியது. இது எப்படி சாத்தியமாகும்?
நீங்கள் ஒரு பொருளையோ மனிதரையோ சாதனையையோ நாடுகையில் அது / அவர் கிடைத்ததும் அலுத்து விடுகிறது. நம் தேடல் அடுத்தடுத்த நாட்டங்கள், இலக்குகள் எனத் தொடர்கிறது. இதில் நாம் ஒரு முழுமையின்மையை, கசப்பை, அர்த்தமின்மையை மெல்ல மெல்ல உணரத் துவங்குகிறோம். இதற்கு ஒரு தீர்வு கனவுகளில் இருக்கிறது. சாத்தியமே இல்லாத அரசியல் சமூகப் புரட்சிகள், இலக்கிய இலக்குகள் தொடர்பான கனவுகளை பின் தொடர்வ்தில் இருக்கிறது. இந்த பின் தொடரும் முயற்சிகளில் ஆக உன்னதமானது மரணத்தை பின் தொடர்வது. அதை ஒருநாளும்அடைந்துவிட முடியாது என்பதே அதை முழுமையின் வாசல் ஆக்குகிறது. இதுவே மிஷிமாவின் வாழ்நாள் தேடல், ஏக்கம், கனவு என பிளானகன் தன் நூலில் நுணுக்கமாய் நமக்கு உணர்த்துகிறார். மிஷிமாவின் அந்த கொடூரமான முடிவுக்கு அவர் ஒரு அழகான, ஆழமான விளக்கத்தை அளிக்கிறார்.
மிஷிமாவின் ஒரே தவறு மரணத்தை திட்டமிட்டு அடைய முயன்றதே. அவ்வாறு அடைந்து விட்டால் இந்த மனித வாழ்வில் என்ன மீதி இருக்கிறது? நாம் மனிதராகவே பின்னர் இருக்க முடியாதே.

Yukio Mishima எனும் இந்நூலை படித்து முடிக்கையில் நமக்கு வாழ்வதும் சாவதும் எப்படி ஒரே சமயம் அபத்தமாக இருக்கிறது எனத் தோன்றுகிறது.

நன்றி: விகடன் தடம், ஜூன் 2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.