முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிஷிமா- தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்? (3)

மிஷிமாவுக்கு மன்னர் மீது தனிப்பட்ட பிரியமோ மன்னராட்சி மீது மயக்கமோ இல்லை. ஆனால் நவீன கார்ப்பரேட் தாக்கம், எந்திரமயமாக்கலால் மக்கள் அடிமையாகி, ஆன்ம சாரத்தை இழக்கும் நிலை, பாண்பாட்டு வேர்கள் அறுக்கப்பாட்டு சமூகம் மலினப்படும் சூழல் ஆகியவற்றை எதிர்ப்பதற்காக அவர் மன்னரை, அவர் மீதான வழிபாட்டை, ஒரு குறியீடாக பயன்படுத்துகிறார். இந்த செப்புக்கு மூலம் மிஷிமா தெரிவித்த உண்மையானது ஹைடெக்கார் தனது தத்துவத்தில் பேசியது தான். நீட்சே ஜெர்மனியில் இருந்தபடிகடவுள் இறந்து விட்டார், மீமனிதன் தோன்ற வேண்டிய காலம் அருகாமையில் உள்ளதுஎன அறைகூவியது தான்.

ராணுவம் என்பது அன்றாடம் மரணத்துடன், பௌதீகமான போராட்டங்களுடன் சம்மந்தப்பட்டது; இதை நவீன கார்ப்பரேட் யுகத்தின் குளிர்பதனப்பெட்டிக்குள் இருக்கும் காய்கறி போன்ற மனித வாழ்க்கைக்கு மாற்றாக மிஷிமா பார்த்தார். கோட் சூட் அணிந்து வெள்ளைக்காரனுக்காக ஜப்பானில் இருந்து வேலை செய்வதை விட ஆயுதமேந்தி மரணத்தை தழுவுவது ஆத்மார்த்தமான, ஆழமான திருப்தி தரும் வாழ்க்கை என அவர் நம்பினர்
ஆனால் போரின் போது மட்டுமே ராணுவத்தினர் கூட மரணத்துக்கு அருகாமையில் செல்ல முடியும்; அதை ஸ்பரிசிக்க முடியும். ஜப்பானிய ராணுவம் போரில் ஈடுபடக் கூடாது என்பது அவர்களின் அரசியலமைப்பு சட்டம் சொல்வது. கார்ப்பரேட் ஆன்ம சீர்கேட்டில் இருந்து தேசத்தைக் காப்பாற்ற ஒரே வழி போர் தான் என நினைத்த மிஷிமா மீண்டும் மீண்டும் ராணுவத்தை ஆயுதமேந்தி போரிட்ட அனுமதிக்கும்படி அரசியலமைப்பை மாற்ற வேண்டும் கோரினார். அதற்காக நிறைய பத்திரிகைக் கட்டுரைகள் எழுதினார், கூட்டங்களில் பேசினார், அரசியல் தலைவர்களிடம் மன்றாடினார்; ஆனால் யாரும் செவி சாய்க்காத நிலையில் அவர் தானாகவே ஒரு ராணுவ வீரனாக கடும் பயிற்சிகள் மேற்கொண்டு, ஒரு சின்ன தனியார் ராணுவத்தை உருவாக்கி அவர்களின் தலைமையில் ஒரு சாமுராய் கலகம் செய்ய முயன்றார். இதுவே அவரது தற்கொலையில் போய் முடிந்தது.

முடிவாய், நாம் இன்னொரு கேள்வியையும் கேட்க வேண்டும். மரணம் ஏன் இவ்வளவு வசீகரமாய் இருக்கிறது?
மரணத்தை நாம் என்றுமே அறிய / அனுபவிக்க முடியாது; எதை அறியவே முடியாதோ அதுவே எல்லையற்ற முழுமை ஆகிறது. இறைவனை ஒவ்வொரு மதமும் அறிய முடியா இருப்பாய் காண்பது இதனாலே. மரணமும் இறைவனுக்கு அடுத்தபடியாய் முழுமையின் வாசலாய் உள்ளது. ஆனால் மரணத்தை அறிவதில் ஒரு பிரதான சிக்கல் உண்டு. மரணம் என்றால் என்ன என முழுக்க உணரும் முன்பே நாம் பரலோகத்தின் அழைப்பு மணியை அடித்துக் கொண்டிருப்போம். இப்போது, நகைமுரணாய், இந்த அசாத்தியமே முழுமையின் மிகப்பெரிய வசீகரத்தை மரணத்துக்கு அளிக்கிறது. அதனால் தான் நாம் மரணத்தை எதிர்கொள்கையில், துக்க வீட்டுக்குள் நுழைகையில், சிதைக்கு எரியூட்ட தயாராகையில் திகைப்படைகிறோம். இந்த திகைப்பை சமாளிக்கவே நிறைய ஈமச்சடங்குகளை நமது பண்பாடுகள் உருவாக்கி தந்துள்ளன. அவற்றையும் தாண்டி மரணம் என்றுமே நமது அன்றாட மனவொழுக்கின் அடியில் கிடந்து நம்மை வா என அழைத்தபடி இருக்கிறது
ஆக, மனித மனம் மரணத்தை நாடுவது ஒரு முழுமையை நாடுவதாகிறது. மிஷிமாவின் மனமும் அவ்வாறே முழுமையை நாடியது - ஆரம்பத்தில் கலையில், இலக்கியத்தில் நாடிய மனம் அவை போதாது என உணர்ந்து இப்போது பௌதீக உலகில், சமூக மனத்தில், தன் பண்பாட்டின் ஆழத்தில், இறுதியில் தன் தேகத்தின் அழிவில் முழுமையை நாடியது. இது எப்படி சாத்தியமாகும்?
நீங்கள் ஒரு பொருளையோ மனிதரையோ சாதனையையோ நாடுகையில் அது / அவர் கிடைத்ததும் அலுத்து விடுகிறது. நம் தேடல் அடுத்தடுத்த நாட்டங்கள், இலக்குகள் எனத் தொடர்கிறது. இதில் நாம் ஒரு முழுமையின்மையை, கசப்பை, அர்த்தமின்மையை மெல்ல மெல்ல உணரத் துவங்குகிறோம். இதற்கு ஒரு தீர்வு கனவுகளில் இருக்கிறது. சாத்தியமே இல்லாத அரசியல் சமூகப் புரட்சிகள், இலக்கிய இலக்குகள் தொடர்பான கனவுகளை பின் தொடர்வ்தில் இருக்கிறது. இந்த பின் தொடரும் முயற்சிகளில் ஆக உன்னதமானது மரணத்தை பின் தொடர்வது. அதை ஒருநாளும்அடைந்துவிட முடியாது என்பதே அதை முழுமையின் வாசல் ஆக்குகிறது. இதுவே மிஷிமாவின் வாழ்நாள் தேடல், ஏக்கம், கனவு என பிளானகன் தன் நூலில் நுணுக்கமாய் நமக்கு உணர்த்துகிறார். மிஷிமாவின் அந்த கொடூரமான முடிவுக்கு அவர் ஒரு அழகான, ஆழமான விளக்கத்தை அளிக்கிறார்.
மிஷிமாவின் ஒரே தவறு மரணத்தை திட்டமிட்டு அடைய முயன்றதே. அவ்வாறு அடைந்து விட்டால் இந்த மனித வாழ்வில் என்ன மீதி இருக்கிறது? நாம் மனிதராகவே பின்னர் இருக்க முடியாதே.

Yukio Mishima எனும் இந்நூலை படித்து முடிக்கையில் நமக்கு வாழ்வதும் சாவதும் எப்படி ஒரே சமயம் அபத்தமாக இருக்கிறது எனத் தோன்றுகிறது.

நன்றி: விகடன் தடம், ஜூன் 2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...