முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிஷிமா- தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்? (3)

மிஷிமாவுக்கு மன்னர் மீது தனிப்பட்ட பிரியமோ மன்னராட்சி மீது மயக்கமோ இல்லை. ஆனால் நவீன கார்ப்பரேட் தாக்கம், எந்திரமயமாக்கலால் மக்கள் அடிமையாகி, ஆன்ம சாரத்தை இழக்கும் நிலை, பாண்பாட்டு வேர்கள் அறுக்கப்பாட்டு சமூகம் மலினப்படும் சூழல் ஆகியவற்றை எதிர்ப்பதற்காக அவர் மன்னரை, அவர் மீதான வழிபாட்டை, ஒரு குறியீடாக பயன்படுத்துகிறார். இந்த செப்புக்கு மூலம் மிஷிமா தெரிவித்த உண்மையானது ஹைடெக்கார் தனது தத்துவத்தில் பேசியது தான். நீட்சே ஜெர்மனியில் இருந்தபடிகடவுள் இறந்து விட்டார், மீமனிதன் தோன்ற வேண்டிய காலம் அருகாமையில் உள்ளதுஎன அறைகூவியது தான்.

ராணுவம் என்பது அன்றாடம் மரணத்துடன், பௌதீகமான போராட்டங்களுடன் சம்மந்தப்பட்டது; இதை நவீன கார்ப்பரேட் யுகத்தின் குளிர்பதனப்பெட்டிக்குள் இருக்கும் காய்கறி போன்ற மனித வாழ்க்கைக்கு மாற்றாக மிஷிமா பார்த்தார். கோட் சூட் அணிந்து வெள்ளைக்காரனுக்காக ஜப்பானில் இருந்து வேலை செய்வதை விட ஆயுதமேந்தி மரணத்தை தழுவுவது ஆத்மார்த்தமான, ஆழமான திருப்தி தரும் வாழ்க்கை என அவர் நம்பினர்
ஆனால் போரின் போது மட்டுமே ராணுவத்தினர் கூட மரணத்துக்கு அருகாமையில் செல்ல முடியும்; அதை ஸ்பரிசிக்க முடியும். ஜப்பானிய ராணுவம் போரில் ஈடுபடக் கூடாது என்பது அவர்களின் அரசியலமைப்பு சட்டம் சொல்வது. கார்ப்பரேட் ஆன்ம சீர்கேட்டில் இருந்து தேசத்தைக் காப்பாற்ற ஒரே வழி போர் தான் என நினைத்த மிஷிமா மீண்டும் மீண்டும் ராணுவத்தை ஆயுதமேந்தி போரிட்ட அனுமதிக்கும்படி அரசியலமைப்பை மாற்ற வேண்டும் கோரினார். அதற்காக நிறைய பத்திரிகைக் கட்டுரைகள் எழுதினார், கூட்டங்களில் பேசினார், அரசியல் தலைவர்களிடம் மன்றாடினார்; ஆனால் யாரும் செவி சாய்க்காத நிலையில் அவர் தானாகவே ஒரு ராணுவ வீரனாக கடும் பயிற்சிகள் மேற்கொண்டு, ஒரு சின்ன தனியார் ராணுவத்தை உருவாக்கி அவர்களின் தலைமையில் ஒரு சாமுராய் கலகம் செய்ய முயன்றார். இதுவே அவரது தற்கொலையில் போய் முடிந்தது.

முடிவாய், நாம் இன்னொரு கேள்வியையும் கேட்க வேண்டும். மரணம் ஏன் இவ்வளவு வசீகரமாய் இருக்கிறது?
மரணத்தை நாம் என்றுமே அறிய / அனுபவிக்க முடியாது; எதை அறியவே முடியாதோ அதுவே எல்லையற்ற முழுமை ஆகிறது. இறைவனை ஒவ்வொரு மதமும் அறிய முடியா இருப்பாய் காண்பது இதனாலே. மரணமும் இறைவனுக்கு அடுத்தபடியாய் முழுமையின் வாசலாய் உள்ளது. ஆனால் மரணத்தை அறிவதில் ஒரு பிரதான சிக்கல் உண்டு. மரணம் என்றால் என்ன என முழுக்க உணரும் முன்பே நாம் பரலோகத்தின் அழைப்பு மணியை அடித்துக் கொண்டிருப்போம். இப்போது, நகைமுரணாய், இந்த அசாத்தியமே முழுமையின் மிகப்பெரிய வசீகரத்தை மரணத்துக்கு அளிக்கிறது. அதனால் தான் நாம் மரணத்தை எதிர்கொள்கையில், துக்க வீட்டுக்குள் நுழைகையில், சிதைக்கு எரியூட்ட தயாராகையில் திகைப்படைகிறோம். இந்த திகைப்பை சமாளிக்கவே நிறைய ஈமச்சடங்குகளை நமது பண்பாடுகள் உருவாக்கி தந்துள்ளன. அவற்றையும் தாண்டி மரணம் என்றுமே நமது அன்றாட மனவொழுக்கின் அடியில் கிடந்து நம்மை வா என அழைத்தபடி இருக்கிறது
ஆக, மனித மனம் மரணத்தை நாடுவது ஒரு முழுமையை நாடுவதாகிறது. மிஷிமாவின் மனமும் அவ்வாறே முழுமையை நாடியது - ஆரம்பத்தில் கலையில், இலக்கியத்தில் நாடிய மனம் அவை போதாது என உணர்ந்து இப்போது பௌதீக உலகில், சமூக மனத்தில், தன் பண்பாட்டின் ஆழத்தில், இறுதியில் தன் தேகத்தின் அழிவில் முழுமையை நாடியது. இது எப்படி சாத்தியமாகும்?
நீங்கள் ஒரு பொருளையோ மனிதரையோ சாதனையையோ நாடுகையில் அது / அவர் கிடைத்ததும் அலுத்து விடுகிறது. நம் தேடல் அடுத்தடுத்த நாட்டங்கள், இலக்குகள் எனத் தொடர்கிறது. இதில் நாம் ஒரு முழுமையின்மையை, கசப்பை, அர்த்தமின்மையை மெல்ல மெல்ல உணரத் துவங்குகிறோம். இதற்கு ஒரு தீர்வு கனவுகளில் இருக்கிறது. சாத்தியமே இல்லாத அரசியல் சமூகப் புரட்சிகள், இலக்கிய இலக்குகள் தொடர்பான கனவுகளை பின் தொடர்வ்தில் இருக்கிறது. இந்த பின் தொடரும் முயற்சிகளில் ஆக உன்னதமானது மரணத்தை பின் தொடர்வது. அதை ஒருநாளும்அடைந்துவிட முடியாது என்பதே அதை முழுமையின் வாசல் ஆக்குகிறது. இதுவே மிஷிமாவின் வாழ்நாள் தேடல், ஏக்கம், கனவு என பிளானகன் தன் நூலில் நுணுக்கமாய் நமக்கு உணர்த்துகிறார். மிஷிமாவின் அந்த கொடூரமான முடிவுக்கு அவர் ஒரு அழகான, ஆழமான விளக்கத்தை அளிக்கிறார்.
மிஷிமாவின் ஒரே தவறு மரணத்தை திட்டமிட்டு அடைய முயன்றதே. அவ்வாறு அடைந்து விட்டால் இந்த மனித வாழ்வில் என்ன மீதி இருக்கிறது? நாம் மனிதராகவே பின்னர் இருக்க முடியாதே.

Yukio Mishima எனும் இந்நூலை படித்து முடிக்கையில் நமக்கு வாழ்வதும் சாவதும் எப்படி ஒரே சமயம் அபத்தமாக இருக்கிறது எனத் தோன்றுகிறது.

நன்றி: விகடன் தடம், ஜூன் 2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...