Skip to main content

370 சட்டப்பிரிவு நீக்கம் - என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம்?


காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ஒரு நீண்ட வரலாறு கொண்டது. காஷ்மீர் இந்திய அரசமைப்பில் இணைய மறுத்து, தனி நாடாக பிரிந்து போக எண்ணி சுதந்திரம் கோரிய நாற்பதுகளின் முடிவு மற்றும் ஐம்பதுகளின் துவக்கத்தில், .நா இப்பிரச்சனையை ஒரு மனித உரிமை மீறலாக கருதி நடவடிக்கை எடுக்குமோ என அச்சம் தோன்றிய நிலையில்நமது மைய அரசு ஒரு சமரசமாக இந்த சட்டப்பிரிவை ஏற்றுக் கொண்டது. இதன் படி காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்கவோ அரசு வேலை பெறவோ முடியாது (பெண்களின் சொத்துரிமை மட்டுமே இந்த சட்டப்பிரிவில் பிற்போக்கானது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்). இது பிற மாநிலங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என சிலர் எண்ணினாலும், காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு நாம் அளித்த மதிப்பின் தூல வடிவமாக இது அமைந்தது. மக்களை பிடிவாதமாக ஒரு ஒற்றை தேசியத்தில் இணைக்கக் கூடாது எனும் நல்லதொரு ஜனநாயக விழுமியத்தை இது கொண்டிருந்தது.

 நியாயமாக 370 சட்டப்பிரிவு நல்கும் இத்தகைய சில சிறப்புரிமைகளை பிற மாநிலங்களும் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக இன்று தமிழகத்தில் மைய அரசு வேலைகளில் (ரயில்வே) வேற்று மாநிலத்தவர் சுலபமாக அதிக எண்ணிக்கையில் வேலை பெறுவதை எதிர்க்கிறோம். தமிழக மருத்துவ கல்வி நிறுவனங்களில் இடம் பெற மைய அரசின் தேர்வு ஒன்றை எழுதி ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நம் மாணவர்கள் தள்ளப்பட்டதை எண்ணி கலங்குகிறோம். பிற மாநிலத்தவர் நமது மருத்துவ கல்லூரிகளில் அதிக இடம் இதன் மூலம் பெறுவது நடந்தால் நியாயமா என கேட்கிறோம். ஆனால் இந்த சிக்கல்கள் ஏதும் வராத வகையில் காஷ்மீர் மக்கள் இந்த சட்டப்பிரிவு பெற்று இன்று வரை பாதுகாத்திருந்தனர். ஆனால் அதை இன்று அவர்கள் இழந்து விட்டனர். இந்த சட்டப்பிரிவு தான் காஷ்மீர் மக்களின் சுதந்திர தாகத்துக்கு, அவர்களின் போராட்ட உணர்வுக்கு அடித்தளம். அதை தகர்ப்பதன் மூலம் மைய அரசு மக்களை போராடும் திறனற்ற, மாநில தேசியவாத உணர்வற்றவர்களாக, ஒற்றை இந்திய தேசிய அடையாளத்துக்கு கைப்பாவைகளாக மக்களை மாற்ற உத்தேசிக்கிறது. இந்த சட்டப்பிரிவு நீக்கம் என்பது அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் மோடியின் அரசு பிற மாநிலங்களின் கட்டுறுதியை எப்படி சிதைக்கப் போகிறது என்பதற்கான ஒரு அபாய சமிக்ஞை இது.

 ஒரு மாநிலத்துக்கு என ஒரு தேசியம் இருக்கலாம் (தமிழ் தேசியத்தைப் போல). அதன் அடிப்படையில் ஒரு மாநிலத்து மக்கள் கூடுதலான சுதந்திரத்தை அமைதியான முறையில் கோரலாம். ஒரு ஜனநாயக அமைப்பு இதை நிச்சயம் அனுமதித்தாக வேண்டும். ஆனால் மத்திய அரசின் இந்த முடிவானது காஷ்மீர் மக்களின் தேசியத்தை வேரோடு அறுத்தெறியும் நோக்கம் கொண்டது. காஷ்மீரின் மக்கள் தொகையில் உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கையை குறைத்து, அங்கு வேறு மாநில மக்களை குடியேற்றி குழப்பங்களை உண்டு பண்ணும் விஷமத்தனமே இந்த அரசியல் நகர்வு. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
அடுத்த சில பத்தாண்டுகளில் காஷ்மீர் மக்கள் இனி தம் மாநிலத்துக்குள் வரும் பிற மக்களை கடுமையாக வெறுத்து அவர்களை மற்றமையாக்கி தாக்குவார்கள். இந்திய அரசபயங்கரவாதமேஇதுவரை அம்மக்களுக்கு ஒரு மற்றமை. இனி அது அனைத்து காஷ்மீரிகள் அல்லாதவர்களும் ஆவார்கள். இது அடுத்த கால் நூற்றாண்டில் காஷ்மீர் மக்களின் வெறுப்பரசியலை மத்திய அரசின் மீதிருந்து எளிய வேற்று மொழி மக்கள் மீது திருப்பி விட இது உதவும். மக்கள் குழப்பத்தில் தத்தளிக்க, மோடியை போன்றோர் அந்த குட்டையில் மீன் பிடிப்பார்கள்.

மோடியின் அரசு இனி அனைத்து மாநிலங்களையும் - குறிப்பாய் தென்னகத்தை - ஒரு மையப்புள்ளியில் திரட்ட, மையவாத அரசியலை அனைத்து தளங்களிலும் முன்னெடுக்க இது உதவும். சமீபத்தில், அணைப் பிரச்சனையில் முடிவெடுக்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து மைய அரசுக்கு மாற்றும் முடிவை எதிர்த்து எம்.பி ரவிக்குமார் மக்களவையில் கவன் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது நினைவிருக்கலாம். இனிமேல் அயல்மாநிலத்துடன் ஒரு கொடுக்கல் வாங்கலில் ஈடுபட நீங்கள் மத்திய அரசை நாட வேண்டி வரும். மைய அரசு ஒரு பக்க சார்பாய் நடந்து கொள்ளும் பட்சத்தில் அது தமிழகத்துக்கு தீங்காக முடியலாம் என ரவிக்குமார் கூறி இருக்கிறார். நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை என ஒவ்வொன்றாய் மாநில உரிமைகளைப் பறிக்கும் மோடி அரசு இப்போது காஷ்மீர் விசயத்தில் ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் வைத்து முதல் ஆணியை அடித்து விட்டது. வரும் ஆண்டுகளில் ஜனநாயகத்தை அது முழுக்க சவ அடக்கம் பண்ணி விடும்.  

இந்த சட்ட நீக்கத்தை அறிமுகப்படுத்தும் முன் காஷ்மீரில் மிகப்பெரிய எண்ணிக்கையில் ராணுவத்தை அனுப்பி, 144 தடை உத்தரவை பிறப்பித்து, தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்து, இணையத்தொடர்பை துண்டிக்கிறது மைய அரசு. அதற்கான அவசியம் தான் என்ன? ஒரு சட்ட திருத்தத்தை மக்கள் ஏற்காவிடில் அதற்கு எதிராக போராடும் உரிமை அவர்களுக்கு இல்லையா? அவர்கள் போராடுவார்கள் என முன்கூட்டியே அறிந்து ஒரு மாநிலத்தின் மீதுசர்ஜிக்கல் ஸ்டிரைக்தொடுப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் அல்லவா!

மோடி அரசின் இந்த முடிவு கண்டனத்துக்குரியது.


இந்த தேசத்தில் இப்போது வாழ நாம் எல்லாம் வெட்கப்பட வேண்டும்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...