என் சக-விரிவுரையாளர் அருள் கேஸ்பர், சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத் துறையை சேர்ந்த டி. வெங்கட் ரமணன் ஆகியோருடன் சேர்ந்து 200 தமிழ் நவீன கவிதைகளை ஆங்கிலத்தில் ஒரு நூலாக மொழிபெயர்த்து வருகிறேன். அடுத்த வருட இறுதிக்குள் தயாராகி விடும். எந்த வரையறையும் இன்றி எங்கள் ரசனை மற்றும் விருப்பத்தின் படி தான் கவிதைகளின் தேர்வு. இப்போது வரை தேவதேவன், மனுஷ்யபுத்திரன், நகுலன், குட்டி ரேவதி, முகுந்த் நாகராஜன், இசை, விக்கிரமாதித்தன், அழகிய பெரியவன், பசுவய்யா, பாதசாரி ஆகியோரின் கவிதைகள் சேர்ந்திருக்கின்றன. முடிந்தளவுக்கு தமிழின் முக்கிய கவிஞர்கள் அனைவரையும் உள்ளே கொண்டு வந்து விட திட்டம். ஆனால் அப்படி முழுமையான ஒரு தொகுப்பாக இது அமையும் என நம்பிக்கையில்லை - தமிழ் நவீன கவிதை அப்படி ஒரு முடிவற்ற கடல்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments
for all the great blog posts.