Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

யுவ புரஸ்கார் விருதாளர்களுக்கான கருத்தரங்கம் - மனப்பதிவு

பாரதியார் பல்கலைக்கழக முதுகலை  மாணவர்களுடன்

நேற்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த யுவ புரஸ்கார் விருதாளர்களுக்கான கருத்தரங்கம் ஒரு நிறைவான அனுபவமாக அமைந்தது. சென்னையில் அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்த லஷ்மி சரவணகுமார், மனுஷி, சுப்ரபாரதிமணியன், வீரபாண்டியன், முதன்முதலாக நாவலாசிரியர் மலர்வதியை என பலருடன் அளவளாவி சிறுபத்திரிகை மூடுபனிக்குள் ஒற்றர்களைப் போல மறைந்து சிறிது நேரம்  இருக்க முடிந்தது. நிகழ்ச்சியில் பேசிய படைப்பாளிகள், விமர்சகர்கள், நெறியாள்கை செய்து அறிமுகவுரை, நன்றியுரை, நிறைவுரை வழங்கிய தமிழ் பேராசிரியர்கள், பாரதி கிருஷ்ணகுமார், ஆண்டாள் ப்ரியதர்ஷினி ஆகியோரின் அழகிய தமிழ் மற்றும் எழுச்சியான உரைகளை கவனித்து என்னை மறந்து முழுநாளும் இருந்தேன் (மாலை ஆனதும் பயண அசதியில் அவ்வப்போது கண்ணசந்து விட்டேன் என்றாலும்). 

தமிழ் நிலத்தில் யுவபுரஸ்கார்: பாதையும் பயணமும்எனும் விமர்சனத் / அறிமுக தொகை நூலையும் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒன்பது இளம் படைப்பாளிகளின் சிறிய அறிமுகம், அவர்களது விருது பெற்ற நூலுக்கான அறிமுகம் மற்றும் விமர்சனம், அவர்களைப் பற்றி ஏற்கனவே பிறர் எழுதிய விமர்சனங்களில் தேர்வு செய்து மீள்பிரசுரம், படைப்பாளிகள் தம் படைப்புலகம் பற்றி எழுதிய கட்டுரை, படைப்பாளிகளின் ஏற்கனவே பிரசுரமான பேட்டியின் மீள்பிரசுரம் என செறிவான முழுமையான அறிமுகமாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றாக திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறார்கள். இந்த கருத்தரங்கையும் தொலைநோக்குடன் திட்டமிட்டு செறிவாக ஒழுங்காக நடத்தி இருக்கிறார்கள்; அதற்காக உற்சாகமாக உழைத்திருக்கிறார்கள். தமிழ் பேராசிரியர்களான முனைவர் சித்ரா, முனைவர் தங்கமணி மற்றும் ஞானதேசிகன், கவிஞர் முத்தமிழ் விரும்பி ஆகியோரை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு முன் இத்தகைய நிகழ்ச்சிகளை விஷ்ணுபுரம் விருதை ஒட்டி ஜெயமோகன் நடத்தி இருக்கிறார்; தேவதச்சனுக்கு ஒரு நிகழ்ச்சியை எஸ்.ரா ஒருங்கிணைத்திருக்கிறார்; வாசக சாலை அமைப்பினர் மூத்த படைப்பாளிகளுக்கான் கருத்தரங்கமாகவும், பாலநந்தகுமார் விருதாளர்களுக்கான பாராட்டு விழாவாகவும் கோவையிலும் சென்னையிலும் நடத்திக் கண்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு முழுமையாக பல படைப்பாளிகளுக்காக இருநாள் விமர்சன அரங்காக, 346 பக்க அறிமுக தொகை நூலுடன் யாருடன் ஒருங்கிணைத்துக் கண்டதில்லை.

நான் தொகை நூலுக்காக எழுதி அளித்திருந்த கட்டுரையை அன்று வாசிக்கவில்லை; நாவல் எழுதுகிற என் அனுபவங்களை சுருக்கமாக பேசி விட்டு, இன்று நாம் மிக அதிகமாக எழுதுவதற்கு சமூக வலைதளங்கள் வாய்ப்பளிப்பதை, முன்பு எப்போதையும் விட பலமடங்கு சிறுசிறு பதிவுகளாக அனுபவங்கள், தகவல்கள், நினைவுகள், கருத்துக்கள் பிரசுரமாவதையும் குறிப்பிட்டு, இந்த சூழலில் நியாயமாக நாவல்களின் பிரசுரமும் அதிகரித்திருக்க வேண்டும், ஆனால் அது நிகழவில்லை எனச் சொன்னேன். அதற்கு ஒரு காரணம் நாம் இன்று மொபைல் போனில் அதிகமும் எழுதுவது. அது நம் மனத்தை உடனுக்குடன் ஆர்வம் கொண்டு மின்னவும் உடனடியாய் அணைந்து அடுத்த ஏதோ ஈர்ப்பில் தன்னை மறக்கவும் செய்கிறது. இன்று ஒருவர் சுலபமாக ஒரு ஸ்மார்ட்போனைக் கொண்டே தினமும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி ஒரு நாவலை நிறைவு செய்ய முடியும்; ஆனால் அத்தகைய முயற்சிகள் நடப்பதில்லை. சமூகவலைதள செயல்பாடுகள் தாம் இதற்குக் காரணமா எனக் கேட்டேன். அடுத்து சில வாசகர் கேள்விகளுக்கு பதிலளித்தேன்
என்னுடைய நாவல்கால்கள்குறித்து தெரிதாவின் கோட்பாட்டின் அடிப்படையில் முனைவர் பா. ஜெயபால் பேசியதைக் கேட்டது ஒரு அபாரமான அனுபவம். என் நாவலின் பாதியில் மையப்பாத்திரத்தின் தன்னிலை பலவாறாக உடைந்து போகிறது; கண்ணாடியில் காணும் தனது பிம்பம், சமூகம் பிரதிபலிக்கும் தன்னுடலின் பிம்பம், வேதனையில் தனக்கென ஒரு தனி மனதைக் கொண்டிருக்கிற தனது உடல் உறுப்பு உருவாக்கும் பிம்பம், கனவில் தன்னுடன் சஞ்சரிக்கிற மனம் என அவள் பல துண்டுபட்ட மனங்களுடன் மோதுகிறாள். ஒரு கட்டத்தில் இதை எதிர்கொள்ள ஒரு பதிலியை உருவாக்குகிறாள் - அவளை ஒத்த தோற்றம் கொண்ட ஆனால் மிகவும் குள்ளமான ஒரு பெண். இந்த கோணத்தை ஜெயபால் முற்றிலும் ஒரு புதிய விமர்சன மொழியை கொண்டு அலசியது எனக்கு மிகவும் திருப்தி அளித்தது. பின்னர் அவரது கட்டுரையை படித்த போது என்னுடைய நாவலைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளில் மிகச்சிறந்தது இதுவே எனவும் தோன்றியது.
எனக்கு முன்பாக, வீரபாண்டியன் கவிதையில் இருந்து தான் நாவலுக்கு வந்ததை, கவிதை மீதுள்ள விருப்பைப் பற்றி பேசினார். மலர்வதி குமரி மாவட்ட தேவாலய தமிழின் இனிய தொனியுடன், மெதுவாக அலையடித்து செல்லும் ஓடை போன்ற இசைவுடன், விவிலிய சொல்லாடல்களுடன் ஆனால் முற்போக்கு சிந்தனையால் தேவாலய அரசியலை, சமூக அநீதிகளை சாடியபடி பேசி பலரையும் நெகிழ வைத்தார்; என்னை அடுத்து லஷ்மி சரவணகுமார் பேசினார். அவரிடம் நான் சில கேள்விகளை வைத்தேன். அதற்கு அவர் அளித்த பதில்களும் நன்றாக இருந்தன. மிக அரிதாகவே எழுத்தாளர்கள் தமக்குள் கேள்வி எழுப்பி உரையாட சந்தர்பங்கள் இப்படி அமைகின்றன.

நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது ஒருநாள் விடுமுறையில் சொந்தபந்தங்களை பார்த்து விட்டு அனாதை இல்லம் திரும்புகிற ஒரு சிறுவனின் மன உணர்வு ஏற்பட்டது. கடந்த இரண்டாண்டுகளாக நான் இழந்தது இது போன்ற உணர்வுபூர்வமாக ஒன்றுகிற, நல்ல தமிழில் செறிவான கருத்துக்களை கேட்டு விவாதிக்கிற அனுபவங்களையே. பெங்களூர் ஒரு அந்தமான காலாபானி சிறைச்சாலை போல இருக்கிறது. இங்கு கன்னடம் கற்று இந்த ஊரில் இலக்கிய சூழலுடன் பொருந்தி (தமிழவன், பாவண்ணன் போல) இருக்கலாம். ஆனால் அப்படி மற்றொரு மொழியில் ஈடுபடுவது பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தை என்னை வந்துஅப்பாஎன அழைத்து தெரியாமல் கையைப் பற்றி இழுப்பது போன்றது. நான் அப்படி முழுமையாக வேரற்றுப் போக விரும்பவில்லை. மீண்டும் தாய்மண்ணுக்கு திரும்ப வேண்டும்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...