Skip to main content

அடிமைகளின் உடல்மொழியும் அதிகாரத்தின் உடல்மொழியும் (4)



இங்கு நாம் கதராடையின் தனியாளுமை பற்றியும் பேச வேண்டும். அந்நிய ஆடையே மேன்மை என நம்பப்பட்ட காலத்தில் காந்தி உள்ளூர் கதராடையை நெய்வதை, அதை வாங்குவதை, அணிவதை அரசியலாக்கினார். கதர் என்பது பிரிட்டீஷ் அரசின் அரசியல் சரிநிலை மீதான பெரிய தாக்குதலாக மாறியது. எது இயல்பானது என பிரிட்டீஷார் நம்மை நம்ப வைத்தனரோ அதையே இயல்பற்றது என காந்தி நமக்குப் புரிய வைத்தார். வெள்ளையர்கள் உடம்பை முழுக்க மறைப்பதே நாகரிகம் என (விக்டோரிய ஒழுக்கவியலின் அடிப்படையில்) நம்பினால் தன்னை மிகக்குறைவாக மறைப்பதே எளிமை என காந்தி எதிர்-அரசியலை முன்னெடுத்தார். இந்த குறியீட்டுத் தாக்குதல் மெல்ல மெல்ல இந்தியாவில்கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்தபிடிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்தை உருக்குலைத்தது.

 ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு கதராடை, குறிப்பாக அரசியல்வாதிகளின் வெள்ளை ஆடை, எந்திரமயமான இந்திய சமூகத்தில் மத்திய வர்க்கத்தின் ஆடைக்கலாச்சாரத்தில் இருந்து மெல்ல மெல்ல விலகிப் போனது. “தில்லுமுல்லு”, “மன்னன்”, “தர்மத்தின் தலைவன்போன்ற படங்களில் ரஜினி கதராடையை வைத்து செய்த நகைச்சுவை இந்த அந்நியத்தன்மையின் பின்னணியில் தோன்றியது தான். இன்று நாம் பொது சமூகத்தில் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிவது அருகி வருகிற நிலையில் அந்த உடை ஒரு படோபமான, மேல்தட்டு, அதிகார உச்சத்தின் குறியீடாக மாறியது. மேலும் பளிச்சென்ற வெள்ளை வண்ணம் மத்திய வர்க்க மங்கலான ஆடை வண்ணங்களின் கலாச்சாரத்துக்கு எதிர்துருவமாக உள்ளது. ஒருவர் பளிச்சென்ற ராம்ராஜ் வெள்ளை அலுவலகத்துக்கு வந்தால் அவர் தனித்து தெரிகிறார். அவருக்கு ஒரு ஒளிவட்டம் வருகிறது. அவருக்கே அது உறுத்தலாக மாறுகிறது. நான் சில நண்பர்களுடன் குர்தா வாங்குவதற்காக காதி கடைக்கு சென்ற போது வெள்ளை நிற குர்தா மிக அரிதாகவே இருந்ததை சுட்டிக் காட்டினேன். அப்போது நண்பர் சொன்னார், “வெள்ளை குர்தாவை நீ ஒரு விசேச நிகழ்ச்சிக்கு அணிந்து சென்றால் மட்டுமே பொருத்தம். அலுவலகத்தில் அது ரொம்ப படோபமாக தப்பாக தெரியும். அதை நிர்வாகம் விரும்பாது.” இப்படி ஆடைத்தேர்வில் எங்கெல்லாம் அதிகார சமக்குலைவு நேர வாய்ப்புண்டோ அங்கெல்லாம் ஆண்கள் அதை கவனமாக தவிர்க்கிறோம்
இன்று தம்மை மத்திய வர்க்கத்துக்கு இணக்கமாக காட்டிக் கொள்ள விரும்பும் அரசியல்வாதிகள் (கேஜ்ரிவால் போல) சட்டை, கால்சராய் அணிகிறார்கள். திருமா, ரவிக்குமார் போன்ற தலித் தலைவர்கள் இதே வெள்ளை சட்டை, கறுப்பு கால்சராயை (மத்தியவர்க்க மேல்சாதி அதிகாரத்துக்கு எதிரான) எதிர்-அதிகார குறியீடாக அணிகிறார்கள். ஸ்டாலின் போன்ற வருங்கால முதல்வர்கள் நடைபயணத்தின் போது டிராக்சூட், டி-ஷர்ட் அணிகிறார்கள்; அதன் மூலம் வித்தியாசமான நவீனமான தலைவராக தம்மை மக்களுக்கு காட்டுகிறார்கள். இங்கு, பிரதமர் மோடியின் ஆர்ப்பாட்டமான நளினமான ஆடைத் தேர்வு சுவாரஸ்யமானது - தனது ஆடைகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதன் மூலம் அவர் தன்னை பாரம்பரியமான ஆனால் அதே நேரம் நவீன கார்ப்பரேட் உலகின் பிரதிநியாக, பாரத தேசத்தின் பெருமையை பறைசாற்றுகிற, அதே சமயம் மேல்மத்திய வர்க்கத்திற்கு இணக்கமானவராக காட்டிக் கொள்கிறார். அதாவது நமது பாலிவுட் நாயகர்கள் தொடர்ந்து முன்வைத்த ஒரு உடல் பிம்பத்தை நாட்டின் தலைவர் எடுத்து பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் அவர் தன்னை, சுதந்திரத்துக்குப் பின்பான எல்லா பெருந்தலைவர்களையும் போல, மத்தியவர்க்க ஆடைத்தேர்வுக்கு நேர் எதிரானவராக காட்டிக் கொள்கிறார். அதிகாரம் அடக்கமான வண்ணங்களை, ஒடுங்கின உடல்மொழியை மத்தியவர்க்கத்திடம் எதிர்பார்க்கிறது; ஆனால் அதிகாரம் படைத்தவர்களோ அதற்கு நேரெதிரான வர்ணங்களை, உடல்மொழியை பயன்படுத்துகிறார்கள்.
இவர்களில் சில தலைவர்கள் தமது தனித்துவத்தை பேண தம் கொள்கைக்கும் அரசியலுக்கும் பொருந்ததாத எதுவோ ஒன்றை தம் தோற்றத்தில் வைத்திருப்பார்கள் - எம்.ஜி.ஆருக்கு தொப்பியும் கண்ணாடியும், கலைஞருக்கு கறுப்புக்கண்ணாடியும் மஞ்சள் துண்டும். மக்களும் இந்த தனித்துவங்களைக் கொண்டே அதனோடு தர்க்கரீதியாக பொருந்தாத இந்த தலைவர்களின் அரசியலை புரிந்து கொண்டார்கள் - எம்.ஜி.ஆரின் தாராளமனத்துக்கு, ஹீரோயிசத்துக்கு அவரது கம்பளி குல்லா குறியீடாகியது; கலைஞரின் சமூகநீதி அரசியலுக்கு, சொல்லாற்றலுக்கு கறுப்புக்கண்ணாடி குறியீடாகியது. .பி.எஸ், எடப்பாடி போன்ற இரு தலைவர்கள் ஜெயலலிதாவுக்குப் பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த போது தமது தக்கவைப்புக்கு தனித்துவ தோற்றம் எதிரானது என உணர்ந்திருந்தனர் - அவர்கள் ஒரு மத்திய வர்க்க ஊழியனைப் போன்றே தம்மை பத்தோடு பனினொன்றாக காட்டிக் கொண்டனர்.
பெண் தலைவர்கள் சிலரின் ஆடைத்தேர்வையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும் - சினிமாவில் தொடர்ந்து தன்னை தனியாக, ஆளுமை மிக்க அழகான பெண்ணாக காட்டிக் கொண்ட ஜெயலலிதா அரசியல் தலைவரானதும் தனது அதுவரையிலான பெண் அடையாளங்களை கழற்றி வைத்தார். அவரதுகவர்ச்சியின்மைஎன்பது ஆண் அரசியல்வாதிகளின் பளிச்சென்ற வெள்ளை ஆடைகளைப் போன்றே மத்தியவர்க்க விழுமியங்களுக்கு முரணாகத் தோன்றியது. ஆண்களை விட அதிகாரமிக்க தலைவியாக அவரைக் காட்ட இது உதவியது. உபியில் மாயாவதியும் வங்காளத்தில் மம்தாவும் இதை தம் பாணியில் செய்தனர்.
எழுத்துலகில் வணிகப்புலத்தில் இயங்கியவர்களில் தம் ஆளுமையை எழுத்து வழி தனித்து ஒளிரச் செய்தவர்கள் தமக்கென ஒரு தோற்ற மரபையும் ஏற்படுத்தினவர்களே - ஜெயகாந்தன், பாலகுமாரன் போன்றோரை உதாரணம் காட்டலாம். ஆனால் தம் ஆளுமையை எழுத்தில் ஒலிக்கும் குரலில் இருந்து தனித்துக் காட்ட விரும்பியவர்கள் தம் தோற்றத்தை மத்தியவர்க்கத்தின் தொடர்ச்சியாகவே வைத்துக் கொண்டார்கள். சினிமா இயக்குநர்களில் பாலுமகேந்திரா (தொப்பி), மிஷ்கின் (கறுப்புக் கண்ணாடி), ராம் (தாடி) என film noir பாணி இயக்குநர்கள் தாமே தம் சினிமா என ஒரு கதையாடலை உருவாக்குகிறார்கள்; இளையராஜா, ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் தம் இசை தாமே தான் என சேதியை விடுக்கிறார்கள்; இதற்கு தம் தோற்றத்தில் ஒரு தனித்துவ அடையாளத்தை திரும்பத் திரும்ப முன்னிறுத்துகிறார்கள். ஆனால் வணிக சினிமாவின் தேவைகளுக்கு இலக்கணத்துக்கு முழுக்க பொருந்தியவர்களாக தம்மை காண்பிக்கும் சங்கர், ரவிகுமார், ஹரி போன்றோர் தம் தோற்றத்தை முடிந்தளவுக்கு சாதாரணமாகவே வைத்துக் கொள்கிறார்கள். வணிகப்படங்களில் தனித்துவமான தரமான போக்கை கொண்டிருக்கும் மணிரத்னத்தை போன்றவர்கள் தம் ஆளுமையையும் படத்தின் மொழியையும் தனித்தனியாக காட்ட விரும்புவதால் தம் தோற்றத்தை தனித்துவமற்றதாக முன்வைக்கிறார்கள்.
விளையாட்டிலும் கிட்டத்தட்ட இதே அரசியல் தான் - தனித்துவமான மேதைகள் தமது உடல்மொழியை, தோற்றத்தை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காண்பிப்பார்கள். சச்சினுக்கு சுருட்டை முடி, கங்குலிக்கு தலை உயர்த்திய நடை, தோனிக்கு ஆரம்ப காலத்தில் நீண்ட கேசம் - நேர்மாறாக கவாஸ்கர், திராவிட் போன்றோர் தம்மை மத்தியவர்க்க விழுமியத்தின் பிரதிநிதியாகவே காட்டினர். கபில்தேவ், யுவ்ராஜ், சேவாக் துவங்கி ரோஹித் ஷர்மா வரை அலட்சியமான சோம்பலான உடல்மொழியும் மேதைமையும் துணிச்சலும் இணைக்கப்படும் கண்னிகளாக உள்ளன. இவர்கள் சாதாரணமாக ஆடினாலே நமக்கு அது அசாதாரணமாகத் தெரிகிறது; இவர்கள் சாதாரணமாக அவுட் ஆனால் சோம்பலுடன் அடித்து வெளியேறினதாகத் தோன்ற கோபம் வருகிறது. திராவிட்டுக்கு ஆர்ப்பரிக்காத நாம் சச்சினுக்கு இருக்கையை விட்டு எழுந்து துள்ளிக் குதித்து கைத்தட்டினது நமது கிணற்றுத்தவளை வாழ்க்கையில் நாம் செய்யத் துணியாத ஒன்றை இந்த சின்னப் பையன் பண்ணுகிறானே எனும் வியப்பில் தான். தோனி அந்த நீண்ட தலைமுடியுடன் அலட்சியமாக கம்பீரமாக தென்னாப்பிரிக்காவில் 20-20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தை வென்று கோப்பையை தூக்கி நடந்த போது அவரது ஆண்மையின் செருக்கு தன்னை கவர்ந்ததாக மனுஷ்யபுத்திரன் எழுதினது நினைவுள்ளது. ஆனால் அதே தோனி அணித்தலைவராக தொடர்வதற்கும் நீடிப்பதற்கும் தன் ஆட்டத்தின் போக்கை, பாணியை மாற்றிக் கொண்டார்; உடனே தோற்றத்தையும் நேர்மாறாக மாற்றினார். முழுமையான அதிகாரம் என்பது அதை பயன்படுத்துகிறவரை ஒரு கட்டத்தில் காயப்படுத்தும் என அவர் அறிந்திருந்தார் (மிகுந்த அதிகாரத்தை ஒருவர் தன் உடல்மொழியில் கட்டற்று வெளிப்படுத்துவதை சமூகமும் அணி வீரர்களும் விரும்ப மாட்டார்கள்); கோடிக்கணக்கான மக்கள் கவனிக்கும் அணியின் தலைவராக இருப்பதன் நெருக்கடிகளை விட்டேத்தியாக இருந்து கையாள்வதே சரி என அவர் உணர்ந்து கொண்டார். ஆகையால் அவர் அடிக்கடி பதுங்கிக் கொள்ள மத்தியவர்க்கத்தின் அடையாளமற்ற பொதுத்தன்மை வசதியாக இருந்தது. முடியை ஒட்ட கத்தரித்து, எந்த பெருமை, தனித்துவத்தையும் கோராத முதிர்ச்சியான தலைவரானார். அதிரடி தோனி கேப்டன் கூல் ஆனார்

இப்படி தோற்றமானது நீங்கள் தனித்து தெரிய விரும்புகிறீர்களா, அதன் அதிகார பயன்மதிப்பு என்ன, நீங்கள் எந்தளவுக்கு அதிகாரத்துடன் நெருங்கி செல்ல விரும்புகிறீர்கள், எந்தளவுக்கு அதிகாரத்தில் இருந்தபடியே அதனால் கறைபடியாதவராக, அதிகாரம்படைத்த சாதாரணனாக உங்களை காட்டிக் கொள்ள விரும்புகிறீர்களோ அதைப் பொறுத்து அமைகிறது.

மீண்டும் பாரதி கிருஷ்ணகுமாருக்கு வருகிறேன்.
ஒவ்வொரு பெண்ணும் தன்னிச்சையாகவே காலுக்கு மேல் காலிட்டு அமர விரும்புகிறாள். பெண்கள் அப்போது மக்கள் திரள் நிரம்பிய அரங்கில் கவிதையை முழங்கும் ஒரு கவிஞனைப் போல உணர்கிறார்கள். உலகின் மொத்த செல்வமும் தம் காலடியில் கிடப்பதாய் அவர்களுக்கு தோன்றுகிறது. ஒரு ஆண், அரிதாகவே, காலுக்கு மேல் காலிடுவான். அப்போது அவன் தன் உடலமைப்பே அதை அவசியப்படுத்தியது என ஒரு நியாயத்தை அதற்கு அளிக்கிறான் (பாரதி கிருஷ்ணகுமார் அப்படியே அன்று வலியுறுத்தினார்). ஆனால் ஒரு பெண்ணோஎனக்கு அது தான் பிடித்திருக்கிறது, நான் அப்போது தான் இயல்பாக உணர்ந்தேன், எனக்கு யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லைஎன தன்னம்பிக்கையுடன் துணிச்சலுடன் சொல்ல முடியும். கமலஹாசன் முன்னிலையில் தான் கால் மீது காலிட்டு அமர்ந்ததை லாஸ்லியா அப்படி அல்லவா நியாயப்படுத்தினார். இந்த இரண்டு காரணங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஒன்று (ஆணுடையது) தானாக இருக்க முடியாததன் தோல்வியை ஒப்புக்கொள்ளுதல்; மற்றொன்று (பெண்ணுடையது) தானாக இருப்பதே இயல்பு, அதில் கேள்வி எழுப்பவே யாருக்கும் இடமில்லை எனும் நம்பிக்கை


நன்றி: உயிர்மை, நவம்பர், 2019

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...