Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கின் பூடகம்


பாத்திமா லத்தீப்பின் தற்கொலை வழக்கு (ஸ்வாதி கொலை வழக்கு போன்றே) பூடகமானது. சில கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் இல்லை:
1) பேராசிரியர் சுதர்சனன் பத்மநாபன்  செய்த குற்றம் தான் என்ன? அவர் பேசிய மத-துவேசம் கொண்ட வாக்கியம் என்ன?
2) அவர் நேரடியாக தற்கொலைக்குத் தூண்டினாரா
3) வகுப்பில் பொதுமன்றத்தில் அவர் மாணவியை அவமதிக்கும்படி பேசினாரா? ஆம் எனில் அது என்ன? இத்தனை பேர் இருந்த ஒரு கல்வி நிறுவனத்தில் ஒருவர் கூடவா இதை வெளியே வந்து சாட்சியமாக சொல்ல மாட்டார்களா?
4) ஒரு ஆசிரியர் தன் மாணவிக்கு CIA மதிப்பெண்ணை குறைத்து வழங்கியதை தற்கொலைக்கான தூண்டுதல் / உளவியல் ரீதியான ஒடுக்குமுறை என நாம் சித்தரிக்க முடியுமா? அது நியாயமா? அதற்கு சட்டத்தில் இடமுண்டா?

5) ..டியில் சாதிய / மத ஒடுக்குமுறைச் சூழல் இருக்கலாம் - இருக்கிறதெனில் அதனால் தான் பாத்திமா போன்றவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் எனில் அது என்ன? ஆடை அணிவதில், கருத்துக்களை வெளிப்படுத்துவதில், மத அடையாளங்களைப் பூணுவதில், சைவ / அசைவ உணவை உண்பதில் தடைகள் உண்டா? இந்த கலாச்சார நடைமுறைகளை வைத்து யாரேனும் அவமதிக்கப்படுகிறார்களா? எங்கே எப்போது என்று மற்றும் எப்படி?
6) தற்கொலை என வழக்கு கட்டமைக்கப்படுவதை பாத்திமாவின் அப்பா எதிர்க்கிறார் - தன் மகள் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக, ஆகையால் இது ஒரு கிட்டத்தட்ட கொலை என அவர் நம்பலாம். அதற்கு ஆதாரம் இருப்பின் கராறாய் விசாரணை நடத்தப்பட வேண்டும். காவல்துறையின் போக்கில் சந்தேகம் ஏற்பட்டதனாலே அவர் சி.பி. விசாரணிஅ வேண்டுமென கோரிக்கை வைத்தார். தொடர்ந்து ..டி பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்தார். கேரள மாநில முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தார். அவர் இந்த குற்றச்சாட்டுகளையும் துல்லியமாக வெளிப்படையாக வைக்கவில்லை. தன் மகளின் தற்கொலைக் குறிப்பை அவர் வெளிப்படுத்தவில்லை (பாத்திமாவின் சகோதரி அதை புகைப்படம் எடுத்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள்; ஊடகங்களில் வெளியான படம் போலியானது என்றும் சொல்கிறார்கள்). வெறுமனே பெயர்களை உதிர்த்திருக்கிறார். இது பிரச்சனையை மேலும் பூடமாக்கி விட்டது. நாளை வழக்கு விசாரணையில் அந்த பேராசிரியர் குற்றமற்றவர் எனத் தெரிய வந்தால் இப்போது ஏற்பட்டுள்ள சமூக சித்தரிப்பு / இந்த முகத்தில் பூசப்பட்ட கரி அகலுமா? அவர் ஆய்விதழ்களில் முற்போக்கு அரசியல் கட்டுரைகள் எழுதுபவர் என்கிறார்கள். அவர் உண்மையில் மதவெறியர் அல்லவெனில் இந்த ஊடகங்களின் கூட்டுவேட்டை நியாயமாகுமா? இதற்கு பாத்திமாவின் அப்பா பொறுப்பேற்பாரா?
பாத்திமாவின் அப்பா ஒன்று தன் மகளின் மரணம் தற்கொலை அல்ல, அது குறித்து சந்தேகமிருக்கிறது என சொல்லி இருக்க வேண்டும். அல்லது நேரடியாக ஆதாரங்களை வெளியிட்டிருக்க வேண்டும். அவரது செயல் இரண்டுக்கும் இடைப்பட்டது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாகவே நம்புகிறேன்.

பொத்தாம்பொதுவாக எதிரிகளை கட்டமைக்கக் கூடாது இல்லையா? ..டி மட்டுமல்ல எந்த உயர்கல்வி நிறுவனத்திலும் சாதி/மத ஒடுக்குமுறை உண்டெனில் அதை வெளிப்படையாக ஆதராங்களுடன் விவாதிக்க வேண்டும், கண்டிக்க வேண்டும்.
 இப்போதுள்ள ஊடக கட்ட பஞ்சாயத்து சூழலில் அங்கு வேலை செய்பவர்கள் எல்லாரும் பிராமணிய மனநிலை கொண்டவர்கள் / மதவெறியர்கள் / சங்கிகள் எனும் சித்திரம் உருவாகிறது. இது அங்கு வேலை செய்பவர்கள் / படிப்பவர்களை காயப்படுத்தும்; அவர்களுக்கு உளவியல் நெருக்கடி ஏற்படுத்தி தம்மளவில் சிறு சிறு குழுக்களாக பிரியத் தூண்டும்.
என் அனுபவத்தில் நான் வசித்த இடங்களில் இருந்து படித்த / வேலை பார்த்த இடங்கள் வரை தொடர்ந்து சாதிய ஒடுக்குமுறை குறித்த பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். சாதியக் குழுமங்கள் செயல்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்றாத இடங்களே இல்லை. இந்தியச் சூழலில் இதைத் தவிர்க்க முதல் வழி சாதிய / மதப் பிரவினையை சமூகவெளியில் குறைப்பது தான். அடுத்து அரசு / தனியார் நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்புகள் வருடத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும். அடுத்து, இட ஒதுக்கீட்டை இன்னும் கூடுதலாக நடைமுறைப்படுத்தலாம் (தகுதிப்பாடு என்பது ஒரு அபத்தம்; வாய்ப்பு கொடுக்கப்பட்டால் கல்வியில் அனைவரும் சமமாவார்கள்). ஆனால் இப்படி ஒரு சமத்துவத்தை நீங்கள் நிறுவனங்களில் செயற்கையாக உருவாக்கினாலும் அது நீடிக்காது; மாற்றம் சமூக அளவில் முதலில் நிகழ வேண்டும். நீங்கள் உங்கள் சாதிக்குள்ளே (அல்லது மதத்துக்குள்ளே) பெண் கொடுத்து / எடுத்து விட்டு வெளியே பாகுபாடு இருக்கக் கூடாது என்றால் அது அபத்தம் இல்லையா? பாசாங்கு இல்லையா


விரைவில் இந்த வழக்கு முடிக்கப்பட்டு விசாரணை முடிவுகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அரசல்புரசலாக குற்றச்சாட்டுகளை கிளப்புவதை நாம் நிறுத்த வேண்டும்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...