முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2019இல் கிரிக்கெட்: மட்டையாளர்கள் வந்தார்கள் வென்றார்கள்





நாட்டுப்புறக் கதைகளில் ஒரு நாட்டில் பேரழகியான இளவரசி ஒருத்தி இருப்பாள். அவள் ஒரு யாரும் குணப்படுத்த முடியாத வியாதியால் மரணப்படுக்கையில் கிடப்பாள். அரசர் பரிதவித்துப் போவார். அவளை குணப்படுத்துவோருக்கு தேசத்தையே பரிசாய் அளிக்கிறேன் என்பார். பேராசைக்கார மருத்துவர்கள் யாராலும் குணப்படுத்த முடியாது. இளவரசியின் மரணத்தை யாரும் தடுக்க முடியாது எனும் நிலை ஏற்படும் போது ஒருவன் வருவான். அவன் சுலபத்தில் அவளைக் காப்பாற்றி நாட்டின் மன்னன் ஆவான். உலக கிரிக்கெட்டின் நிலையும் அவ்வப்போது இப்படித் தான் - டெஸ்ட் ஆட்டம் செத்து விட்டது, ஒருநாள் ஆட்டம் அலுத்து விட்டது, டி-20 தேவைக்கதிகமாய் ஆடப்படுகிறது, கிரிக்கெட் வெறும் சிக்ஸர் அடிக்கும் கூத்தாகி விட்டது, நிதானமான கச்சிதமான ஆட்டத்துக்கு மதிப்பில்லை எனும் குற்றச்சாட்டுகளும் ஒப்பாரிகளும் விண்ணைப் பிளக்கும், ஆனால் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட்டில் அபாரமான சாதனைகளும் அற்புதங்களும் நடக்கும்; கிரிக்கெட் இப்போதும், சமீபமாய் நடந்து முடிந்த இந்தியா-மே. தீவுகள் ஒருநாள் ஆட்டத்தொடரின் கடைசி ஆட்டம் வரை, கடைசிப் பந்து வரை நம்மை நகங்களைக் கடித்துக் கொண்டு வியப்பும் நெஞ்சிடிப்புமாய் எதிர்பார்த்திருக்க வைக்கிறது. கிரிக்கெட்டின் ஆயுள் கெட்டி என்பதை 2019 நிரூபித்துள்ளது.


 2019இல் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் இங்கிலாந்துக்கும் நியுசிலாந்துக்கும் இடையில் நடந்த போது உலகமே - இங்கிலாந்தைத் தவிர பிற நாட்டு ரசிகர்களில் கணிசமானோர் - நியுஸிலாந்து வெல்ல வேண்டும் என்று பிரார்த்தித்தனர். கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தேசங்களுக்கும் சிறிய தேசங்களுக்குமான இடைவேளை மிகவும் அதிகரித்து வரும் கடந்த பத்தாண்டிலும் நாம் மிகச்சிறிய, வலுவற்ற ஒரு தேசம் ஒரு ராட்சச அணியை வீழ்த்த வேண்டும் என்றே எதிர்பார்த்தோம். அந்த அணியும் முடிந்த வரை போராடியது. ஜூன் மாதம் 14ஆம் தேதி நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் மட்டையாடிய நியுசிலாந்து 241 அடித்தது; அடுத்தாடிய இங்கிலாந்து 46.1 ஓவர்களில் 203 அடித்து ஆறு விக்கெட்டுகள் இழந்த போது இங்கிலாந்தின் டைட்டானிக் கப்பல் மூழ்கியே விட்டது என ரசிகர்கள் நம்பினர். ஆனால் மற்றொரு பக்கம் பென் ஸ்டோக்ஸ் எனும் லியனார்டோ டி காப்ரியோ தன் காதலியின் கையைப் பற்றி எப்படியாவது கரை சேர்க்கப் போராடினார். அவரது 98 பந்துகளிலான 84 கிரிக்கெட் ஆட்டத்தை கௌபாய் துப்பாக்கி சண்டையாக மாற்றியது. 241க்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆக ஆட்டம் டை ஆனது. சூப்பர் ஓவர் வந்தது. அதிலும் ஒரு பக்கம் நியுசிலாந்தின் பிடிவாதம், மற்றொரு பக்கம் ஸ்டோக்ஸின் மேதைமை என இழுபறி நடக்க அதுவும் டை ஆனது. கடைசியில் நியுசிலாந்தை விட அதிக பவுண்டரிகள் அடித்தது எனும் அடிப்படையில் கோப்பை இங்கிலாந்துக்குப் போனது; அதுவும் ஒரு பந்து களத்தடுப்பின் போது ஸ்டோக்ஸின் மட்டையில் பட்டு பவுண்டரிக்கு உருண்டோடியது என்னும் நிலையில், உலகமே மீண்டும் ஒப்பாரி வைத்தது

என்னதான் நியுசிலாந்தின் தோல்வி காவிய சோகம் பொருந்தியது என்றாலும் இந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் அணி இங்கிலாந்து தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை - இவ்வருடம் அவர்களின் ரன் ரேட் சராசரி என்பது 6.49. ஒவ்வொரு ஆட்டத்திலும் பிற அணிகளை விட அவர்கள் 51 ரன்கள் அதிகம் அடித்திருக்கிறார்கள். 22 ஆட்டங்களில் 14 போட்டிகளை வென்று இவ்வருடம் தாம் ஆடிய ஆட்டங்களில் சிறந்த வெற்றி விகிதத்துக்கான சாதனையும் படைத்திருக்கிறார்கள்

இவ்வருடம் கிரிக்கெட்டில், டெஸ்ட் போட்டிகளைத் தவிர்த்து, மட்டையே பந்தை ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. 150 ஒருநாள் போட்டிகள் இவ்வருடம் நடந்திருக்கின்றன - இவற்றில் 5.42 என்பது ரன்களின் சராசரி. 350 என்பது வெற்றிக்கு குறைந்த பட்சம் தேவைப்படும் இலக்காக இருந்துள்ளது. விதிமுறைகள், ஆடுதளம், ஆட்டச்சூழல், அதிக ஆட்டங்கள் என பல விசயங்கள் பந்து வீச்சுக்கு விரோதமாகவே இருந்தன. பவுலர்களின் விக்கெட் சராசரியான 33.36 என்பது, 1974க்குப் பிறகு, உலகில் வேறெப்போதும் இவ்வளவு அதிகமாக இருந்தது (பவுலிங் சராசரி குறைவாக இருந்தாலே சிறப்பு.)

இவ்வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த முதல் 15 மட்டையாளர்களில் 12 பேர் துவக்க வீரர்கள். இவர்களில் ரோஹித் ஷர்மாவே எதிரணி பவுலர்களை ஜுராசிக் பார்க்கில் புகுந்ததைப் போல மிரட்சியடைய வைத்தார். 28 ஆட்டங்களில் 1490 ரன்கள். ஏழு சதங்கள் (உலகக்கோப்பையில் மட்டுமே 5). இவருக்கு அடுத்தபடியாய் விராத் கோலி இருக்கிறார் (1377 ரன்கள்). சிறந்த பவுலர்களின் பட்டியலில் முதல் ஐந்து பேர் வேக வீச்சாளர்கள்: ஷாமி, போல்ட், பெர்குஸன், முஸ்தபீசு, புவனேஸ்வர் குமார். ஷாமி 42 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். கால்சுழலர்கள் உலகை ஆள்வார்கள் என குல்தீப், சாஹலின் கூட்டணியால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு ஆசியாவுக்கு வெளியே ஆடுதளங்கள் சுழலர்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும் ஏற்றத்தாழ்வான விதிமுறைகளாலும் பொய்த்துப் போனது.  

டெஸ்ட் போட்டிகளில் டாப்டென் வரிசையில் முதலாவது இடத்தில் இருக்கும் இந்தியா இவ்வருடம் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்கவில்லை என்பதும், ஆஸ்திரேலியா மற்றும் மே. தீவுகளில் தொடர்களை வென்றது என்பதும் தனி சாதனைகள். இதே போல இலங்கை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டித் தொடரில் எதிர்பாராமல் வென்றதும், டர்பன் மைதானத்தில் குசல் பரேரா அடித்த 153 நாட் அவுட்டும் குறிப்பிட வேண்டிய மைல்கற்கள்


வரும் ஆண்டில் வேகவீச்சாளர்களுக்கு மட்டுமன்றி சுழலர்களுக்கும் சாதகமாய் ஆட்டம் மாற வேண்டும், மட்டைக்கும் பந்துக்குமான ஏற்றத்தாழ்வு மறைய வேண்டும் என்பதே நம் வேண்டுதல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...