Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

2019இல் கிரிக்கெட்: மட்டையாளர்கள் வந்தார்கள் வென்றார்கள்





நாட்டுப்புறக் கதைகளில் ஒரு நாட்டில் பேரழகியான இளவரசி ஒருத்தி இருப்பாள். அவள் ஒரு யாரும் குணப்படுத்த முடியாத வியாதியால் மரணப்படுக்கையில் கிடப்பாள். அரசர் பரிதவித்துப் போவார். அவளை குணப்படுத்துவோருக்கு தேசத்தையே பரிசாய் அளிக்கிறேன் என்பார். பேராசைக்கார மருத்துவர்கள் யாராலும் குணப்படுத்த முடியாது. இளவரசியின் மரணத்தை யாரும் தடுக்க முடியாது எனும் நிலை ஏற்படும் போது ஒருவன் வருவான். அவன் சுலபத்தில் அவளைக் காப்பாற்றி நாட்டின் மன்னன் ஆவான். உலக கிரிக்கெட்டின் நிலையும் அவ்வப்போது இப்படித் தான் - டெஸ்ட் ஆட்டம் செத்து விட்டது, ஒருநாள் ஆட்டம் அலுத்து விட்டது, டி-20 தேவைக்கதிகமாய் ஆடப்படுகிறது, கிரிக்கெட் வெறும் சிக்ஸர் அடிக்கும் கூத்தாகி விட்டது, நிதானமான கச்சிதமான ஆட்டத்துக்கு மதிப்பில்லை எனும் குற்றச்சாட்டுகளும் ஒப்பாரிகளும் விண்ணைப் பிளக்கும், ஆனால் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட்டில் அபாரமான சாதனைகளும் அற்புதங்களும் நடக்கும்; கிரிக்கெட் இப்போதும், சமீபமாய் நடந்து முடிந்த இந்தியா-மே. தீவுகள் ஒருநாள் ஆட்டத்தொடரின் கடைசி ஆட்டம் வரை, கடைசிப் பந்து வரை நம்மை நகங்களைக் கடித்துக் கொண்டு வியப்பும் நெஞ்சிடிப்புமாய் எதிர்பார்த்திருக்க வைக்கிறது. கிரிக்கெட்டின் ஆயுள் கெட்டி என்பதை 2019 நிரூபித்துள்ளது.


 2019இல் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் இங்கிலாந்துக்கும் நியுசிலாந்துக்கும் இடையில் நடந்த போது உலகமே - இங்கிலாந்தைத் தவிர பிற நாட்டு ரசிகர்களில் கணிசமானோர் - நியுஸிலாந்து வெல்ல வேண்டும் என்று பிரார்த்தித்தனர். கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தேசங்களுக்கும் சிறிய தேசங்களுக்குமான இடைவேளை மிகவும் அதிகரித்து வரும் கடந்த பத்தாண்டிலும் நாம் மிகச்சிறிய, வலுவற்ற ஒரு தேசம் ஒரு ராட்சச அணியை வீழ்த்த வேண்டும் என்றே எதிர்பார்த்தோம். அந்த அணியும் முடிந்த வரை போராடியது. ஜூன் மாதம் 14ஆம் தேதி நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் மட்டையாடிய நியுசிலாந்து 241 அடித்தது; அடுத்தாடிய இங்கிலாந்து 46.1 ஓவர்களில் 203 அடித்து ஆறு விக்கெட்டுகள் இழந்த போது இங்கிலாந்தின் டைட்டானிக் கப்பல் மூழ்கியே விட்டது என ரசிகர்கள் நம்பினர். ஆனால் மற்றொரு பக்கம் பென் ஸ்டோக்ஸ் எனும் லியனார்டோ டி காப்ரியோ தன் காதலியின் கையைப் பற்றி எப்படியாவது கரை சேர்க்கப் போராடினார். அவரது 98 பந்துகளிலான 84 கிரிக்கெட் ஆட்டத்தை கௌபாய் துப்பாக்கி சண்டையாக மாற்றியது. 241க்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆக ஆட்டம் டை ஆனது. சூப்பர் ஓவர் வந்தது. அதிலும் ஒரு பக்கம் நியுசிலாந்தின் பிடிவாதம், மற்றொரு பக்கம் ஸ்டோக்ஸின் மேதைமை என இழுபறி நடக்க அதுவும் டை ஆனது. கடைசியில் நியுசிலாந்தை விட அதிக பவுண்டரிகள் அடித்தது எனும் அடிப்படையில் கோப்பை இங்கிலாந்துக்குப் போனது; அதுவும் ஒரு பந்து களத்தடுப்பின் போது ஸ்டோக்ஸின் மட்டையில் பட்டு பவுண்டரிக்கு உருண்டோடியது என்னும் நிலையில், உலகமே மீண்டும் ஒப்பாரி வைத்தது

என்னதான் நியுசிலாந்தின் தோல்வி காவிய சோகம் பொருந்தியது என்றாலும் இந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் அணி இங்கிலாந்து தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை - இவ்வருடம் அவர்களின் ரன் ரேட் சராசரி என்பது 6.49. ஒவ்வொரு ஆட்டத்திலும் பிற அணிகளை விட அவர்கள் 51 ரன்கள் அதிகம் அடித்திருக்கிறார்கள். 22 ஆட்டங்களில் 14 போட்டிகளை வென்று இவ்வருடம் தாம் ஆடிய ஆட்டங்களில் சிறந்த வெற்றி விகிதத்துக்கான சாதனையும் படைத்திருக்கிறார்கள்

இவ்வருடம் கிரிக்கெட்டில், டெஸ்ட் போட்டிகளைத் தவிர்த்து, மட்டையே பந்தை ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. 150 ஒருநாள் போட்டிகள் இவ்வருடம் நடந்திருக்கின்றன - இவற்றில் 5.42 என்பது ரன்களின் சராசரி. 350 என்பது வெற்றிக்கு குறைந்த பட்சம் தேவைப்படும் இலக்காக இருந்துள்ளது. விதிமுறைகள், ஆடுதளம், ஆட்டச்சூழல், அதிக ஆட்டங்கள் என பல விசயங்கள் பந்து வீச்சுக்கு விரோதமாகவே இருந்தன. பவுலர்களின் விக்கெட் சராசரியான 33.36 என்பது, 1974க்குப் பிறகு, உலகில் வேறெப்போதும் இவ்வளவு அதிகமாக இருந்தது (பவுலிங் சராசரி குறைவாக இருந்தாலே சிறப்பு.)

இவ்வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த முதல் 15 மட்டையாளர்களில் 12 பேர் துவக்க வீரர்கள். இவர்களில் ரோஹித் ஷர்மாவே எதிரணி பவுலர்களை ஜுராசிக் பார்க்கில் புகுந்ததைப் போல மிரட்சியடைய வைத்தார். 28 ஆட்டங்களில் 1490 ரன்கள். ஏழு சதங்கள் (உலகக்கோப்பையில் மட்டுமே 5). இவருக்கு அடுத்தபடியாய் விராத் கோலி இருக்கிறார் (1377 ரன்கள்). சிறந்த பவுலர்களின் பட்டியலில் முதல் ஐந்து பேர் வேக வீச்சாளர்கள்: ஷாமி, போல்ட், பெர்குஸன், முஸ்தபீசு, புவனேஸ்வர் குமார். ஷாமி 42 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். கால்சுழலர்கள் உலகை ஆள்வார்கள் என குல்தீப், சாஹலின் கூட்டணியால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு ஆசியாவுக்கு வெளியே ஆடுதளங்கள் சுழலர்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும் ஏற்றத்தாழ்வான விதிமுறைகளாலும் பொய்த்துப் போனது.  

டெஸ்ட் போட்டிகளில் டாப்டென் வரிசையில் முதலாவது இடத்தில் இருக்கும் இந்தியா இவ்வருடம் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்கவில்லை என்பதும், ஆஸ்திரேலியா மற்றும் மே. தீவுகளில் தொடர்களை வென்றது என்பதும் தனி சாதனைகள். இதே போல இலங்கை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டித் தொடரில் எதிர்பாராமல் வென்றதும், டர்பன் மைதானத்தில் குசல் பரேரா அடித்த 153 நாட் அவுட்டும் குறிப்பிட வேண்டிய மைல்கற்கள்


வரும் ஆண்டில் வேகவீச்சாளர்களுக்கு மட்டுமன்றி சுழலர்களுக்கும் சாதகமாய் ஆட்டம் மாற வேண்டும், மட்டைக்கும் பந்துக்குமான ஏற்றத்தாழ்வு மறைய வேண்டும் என்பதே நம் வேண்டுதல்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...