Skip to main content

ஒரு அட்டகாசமான இறுதி ஆட்டம்



கட்டக்கில் நடந்த இந்தியா-மே. தீவுகள் ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டம் நான் கண்ட மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டங்களில் ஒன்று - என் கணிப்புப்படி ரிஷப் பண்டின் விக்கெட்டுடன் ஆட்டம் முடிந்து விட்டது. ஏனென்றால் கோலி இலக்கை விரட்டும் போது ஆபாரமான சாதனையாளர் என்றாலும் அவருக்கு துணையாக மத்திய வரிசையில் யாராவது அதிரடியாக ஆட வேண்டும். அல்லாவிடில் அவர் சோர்ந்து தவறான நேரத்தில் ஆட்டமிழந்து விடுவார். ஆனால் இன்று ஒரு பக்கம் விக்கெட்டுகள் உதிர அவர் உறுதியாக நிதானமாக புத்திசாலித்தனமாக ஆடினார். அதுவும் பந்தை தூக்கி அடிக்காமல், ஸ்டம்புக்கு குறுக்கே ஆக்ரோசமாய் பந்தை விளாசாமல் 30-45 ஓவர்கள் வரை அவர் ஆடி தொய்வின்றி ரன்கள் சேகரித்த விதம் அவரது கட்டுப்பாட்டுக்கு, தன்னம்பிக்கைக்கு சான்றாக அமைந்தது. இன்னொரு பக்கம் 25வது ஓவருக்கு சற்று முன்பிருந்தே மே. தீவுகளின் வேக வீச்சாளர்கள் அபாரமாய் வீசிக் கொண்டிருக்க அவர்கள் களத்தடுப்பின் தீவிரம், மும்முரம் ஆட்டத்தை பரபரப்பாக்கியது. ஆடுதளத்தில் அவர்களுக்கு உதவ ஒன்றுமே இல்லை; ஒவ்வொரு வீச்சாளரும் தமது பாணியில் தொடர்ந்து விக்கெட் எடுக்க முயன்றனர். ஜோசப் குறைநீளத்தில் தொடர்ந்து வீசினார். ஹோல்டர் குட் லெங்தில் தன் வழக்கமான வேகத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் அதிகமாய் வீசினார். கீமோ பால் தான் அதிசிறப்பு - அவரது ஸ்லோ பந்துகளையும் குறைநீளத்தையும் அடிக்கடி எகிறும் வேகத்தையும் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை. ராகுல், ஷ்ரேயாஸ், பண்ட், கேதார் போன்றோர் மே. தீவு வேகவீச்சாளர்கள் இந்த நீளத்தை சரியாக கவனிக்கவோ கணிக்கவோ இல்லை


இந்த ஆடுதளத்தில் சில பந்துகள் நின்று வருகின்றன - குறிப்பாக ஸ்லோ பந்துகள் (கடைசி பத்து ஓவர்களில் இந்திய வேகவீச்சாளர்கள் இதை சரிவர பயன்படுத்தவில்லை.) ஆட்டத்தின் முக்கியமான திருப்புமுனை மே. தீவு வீரர்களின் மிகையான ஆவேசம் தான் - ஜாதவ் வெளியேறினதும் ஜடேஜாவுக்கு கோட்டரல் பவுன்சர் இட முயன்று நான்கு ரன்கள் கொடுத்தார். இதே போல ஆடுதளத்தின் இரட்டை வேகத்தை பயன்படுத்தி கோலியை வெளியேற்றிய பின் தாக்கூர் ஆட வந்தார். அவர் சற்று பதற்றமாக இருந்தார். அவருக்கு ஒரு யார்க்கரோ ஸ்லோ பந்தோ வைடாக இட்டு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பால் வேகப்பந்தை முழுநீளத்தில் வீச அதை தாக்கூர் நான்குக்கு கவர் டிரைவ் பண்ணினார். அந்த ஒரே ஷாட்டுடன் மே. தீவு வீச்சாளர்களை சற்று குழப்பி விட்டது. அவரக்ள் கோலியின் விக்கெட்டுடன் ஆட்டம் முடிந்தது என நினைத்தார்கள். ஆனால் தாக்கூரின் பேட்டிங் திறன் அவர்களை ஆச்சரியப்படுத்தியது. இதற்கு அடுத்த ஓவரும் ஒரு திருப்பு முனை - முதல் பந்தில் நக்கிள் பால் எனப்படும் ஸ்லோ பந்தை போல முயன்று கோட்டரல் வைடாக போட்டார். இதை அடுத்து அவர் பதற்றமானார். அவரது உடல்நிலையும் சரியாக இல்லை என நினைக்கிறேன். அந்த ஓவரில் அவர் தொடர்ந்து ஸ்லோ பந்துகளாக வீசியிருந்தால் ஒருவேளை தாக்கூரை தூக்கி இருக்கலாம். ஆனால் முதல் பந்தே சொதப்ப அவர் அடுத்து பவுன்சர் போட தாக்கூர் அதை ஹூக் பண்ணி டாப் எட்ஜ் வாங்கி அது சிக்ஸருக்குப் போக காட்டரல் நிலைகுலைந்து போனார். அடுத்து அவர் பதற்றத்தில் தொடர்ந்து வேகத்தை குறைக்காமலே வீசி தொடர்ந்து அடி வாங்கினார். ஒருவேளை அந்த வைட் விழாமல் இருந்திருந்தால் அந்த ஓவர் ஒழுங்காக அமைந்திருக்கலாம், இந்தியா மீது நெருக்கடி அதிகரித்திருக்கும். இதற்கு அடுத்த ஓவரில் மே. தீவுகள் முழுக்க நம்பிக்கை குலைந்து சொதப்பியது. இப்படி கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு செல்லும் போது நடுத்தர அணிகள் தம் கட்டுப்பாட்டையும் நம்பிக்கையையும் இழக்கும் எனும் தோனி கால வியூகத்தை ஜோலியும் ஜடேஜாவும் பின்பற்றி மற்றுமொரு வெற்றியை, மறக்க முடியாத வெற்றியை, ஈட்டினர்.





Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...