Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆழ்துயிலும் தூங்கும் நேரமும்



நாம் தூங்க செல்லும் போது முதலில் உடம்பு தளரத் தொடங்கும்; கண்கள் சொருகும்; மெல்ல மெல்ல எண்ணங்கள் கலக்கமடையும்; குட்டை குழம்ப குழம்ப நிறங்கள் அங்க மங்க நாம் ஏதோ ஒரு தருணத்தில் தூக்கத்துக்கு செல்வோம். இதை ஆரம்பநிலை லகு உறக்கம் என்கிறார்கள். இதன் அடுத்த கட்டத்தில் நம் மூளையின் அலைகள் மெதுவாக எழுந்து விழுகின்றன; இதயத்துடிப்பு குறைகிறது. இதுவும் லகு உறக்கம் தான். நாம் எட்டு மணிநேரம் உறங்கினால் நான்கு மணி நேரம் இந்த இரண்டாவது நிலையாக இருக்கும் என்கிறார்கள். இதற்கு அடுத்த இரு நிலைகள் தாம் ஆழ்துயில் நிலைகள்

இப்போது ரத்த அழுத்தம் குறையும், கண்களில் அசைவிருக்காது, மூச்சு ஆழமாய், மெதுவாய் நுழைந்து வெளியேறும், உடம்பு சிலை போலக் கிடக்கும். இந்த இரு நிலைகளும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம் - வளர்ச்சிக்கும் செரிமானத்துமான ஹார்மோன்கள் சுரக்கும். தசைகளுக்கு அதிகமாய் ரத்தம் பாய்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும். அடுத்த நாள் பசி அதிகம் தோன்றாமல் இருக்க உதவும்


இறுதியான ஐந்தாவது நிலை மூளைக்கு மிகவும் நல்லது. இந்த நிலையின் போது உடம்பு செயலற்றுக் கிடக்க விழிகள் மட்டும் அதன் பாட்டுக்கு சுற்றுமுற்றுமாய் அலையுமாய். இதனால் இந்நிலையை விரைவு விழியியக்க நிலை (REM) என்கிறார்கள். இந்த நிலையின் போது தான் உங்களுக்கு கனவுகள் வண்ணமயமாய் களேபரமாய் தோன்றுகின்றன. இதற்குக் காரணம் உங்கள் மூளையில் அலைகள் தாறுமாறாய் எகிறி குதிப்பதே. இந்த கனவுகளின் முடிவிலே நாம் துயில் எழுகிறோம். சில நேரம் ஒரு கனவைத் தொடர விரும்பி உறக்கத்தைத் தொடர்ந்தால் அந்த கனவு முற்றிலும் வேறொரு திரைக்கதையுடன் தொடர்வதை கவனிப்போம். நீங்கள் தூக்கத்தின் முதல் நிலையில் இருக்கும் போது இப்படி பிரக்ஞைபூர்வமாய் ஒரு கனவுக்குள் இறங்கி நடக்க முடியாது. ஆனால் ஐந்தாம் நிலையில் அது சாத்தியமாகும். சில கனவுகள் நினைவில் தங்கும், சில தங்காது, ஆனால் கனவின்றி நீங்கள் தூக்கத்தை நிறைவு செய்யவே முடியாது. கனவுகள் ஒரு படத்தின் கிளைமேக்ஸைப் போன்றவை.
 இந்த இறுதி மூன்று நிலைகளையும் சேர்த்தே ஆழ்துயில் என்கிறார்கள். இவை நம் தூக்க நேரத்தின் 20% ஆக்கிரமிக்கும். அதாவது நீங்கள் எட்டு மணிநேரம் தூங்கினால் 1-2 மணிநேரங்களாவது ஆழ்துயில் அவசியம். ஆழ்துயில் 20-30 நிமிடங்கள் எனக் குறைந்து போனால் அன்று தூக்கம் நிம்மதியாக இல்லை எனப் பொருள். படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தீர்கள் எனப் பொருள். அடுத்த நாள் முழுக்க களைப்பாக அலுப்பாக உலவப் போகிறீர்கள் என அன்று காலை கோபத்துடன் சோம்பல் முறிக்கும் போதே தெரிந்து போகும்
எனக்கு என்றுமே தூங்கும் பிரச்சனை இருந்ததில்லை; படுத்தால் கொஞ்ச நேரத்தில் அசந்து தூங்கி விடுவேன். ஒவ்வொருவரும் தூக்கத்துக்குப் போக ஒவ்வொரு முறையை வைத்திருப்பார்கள் - சிலருக்கு இசை கேட்பது, சிலருக்கு புத்தகம் படிப்பது, சிலருக்கு கொட்டகொட்ட முழித்து எதையாவது யோசித்துக் கொண்டு கிடப்பது. எனக்குப் பிடித்த முறை எனக்கே நான் கதை சொல்லிக் கொள்வது; ஏதாவது ஒரு மிகுகற்பனைச் சூழலில் ஒரு கதையை ஒற்றை வரியாக்கிக் கொள்வேன். அது நான் பார்க்கும் ஒரு விளையாட்டில் இருந்து ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம், ஒரு படத்தின் காட்சியோ என் அன்றாட வாழ்வின் ஒரு சாத்தியமான காட்சியோ ஆக இருக்கலாம். நான் செய்வதெல்லாம் இப்படி ஒன்று நடக்க வேண்டுமென்றால் அதற்கு முந்தைய காட்சிகள் எப்படியெல்லாம் அதை நியாயப்படுத்தும்படி இருக்க வேண்டும் என தகவல்களை தொகுப்பது; ஒவ்வொன்றாய் பின்னுக்குப் போய் அந்த காட்சிக்கு வரும் முன் தூங்கிப் போய் விடுவேன். ஒரு உதாரணம் தருகிறேன். நீங்கள் சரவண கார்த்திகேயன் என்றால் ஒரு மழைபெய்யும் இரவில் அனு சித்தாராவுடன் காரில் போவதாக ஒரு காட்சியை ஒற்றை வரியாக வைத்துக் கொள்ளலாம். அந்த சந்தர்ப்பம் அமைய உங்களது அன்றாட வாழ்வில் வாய்ப்பே இல்லை; வினோதமான காட்சிகளின் நகர்வே அந்த கிளைமேக்ஸுக்கு உங்களை இட்டுச் செல்ல வேண்டும். அவை என்னென்ன என யோசித்தால் தூக்கம் ஜம்மென வந்து விடும். அடுத்த நாள் தூங்கப் போகும் போதும் விட்ட இடத்தில் இருந்து தொடர்வேன்.
 இப்படி எனக்கு தூக்கத்துக்குள் செல்வது பிரச்சனையாகவே இருந்ததில்லை - ஆனால் என் ஆழ்துயில் அளவில் எப்போதுமே பற்றாக்குறை தான். குறிப்பாக கல்லூரி வேலைக்கு வந்த பிறகு. என் கல்லூரியில் கணிசமான மாணவர்களுக்கு தூக்கப் பற்றாக்குறை உண்டு. கணிசமானோருக்கு படுத்தால் உறக்கம் வராது; உறங்கினாலும் மூன்றாம் நிலைக்குள் எட்டிப் பார்த்து விட்டு திரும்ப இரண்டுக்கு மீண்டு விடுவார்கள். நான் இப்போது அணியும் Mi Band என் இதயத்துடிப்பை அளந்து என் ஆழ்துயிலின் அளவை தினமும் காலை சொல்வதுடன் பிற பயனர்களின் ஆழ்துயிலின் அளவுடன் அதை ஒப்பிட்டும் எனக்கு கிளுகிளுப்பை அளிக்கும். கிறித்துமஸ் விடுமுறையின் போது என் ஆழ்துயிலின் அளவு அதிகரித்திருக்கிறது. 40 நிமிடங்களில் இருந்து 2-2:30 மணி நேரங்களுக்கு. எனக்கு முதலில் இந்த விசித்திரம் புரியவில்லை. விடுமுறையின் போது நான் தாமதமாகவே தூங்க செல்கிறேன். தாமதமாக எழுகிறேன். வேலை நாட்களில் சீக்கிரமாக தூங்க சென்று 6-6:30 மணிக்கு எழுகிறேன். சீக்கிரமாக, ஒரு குறிப்பிட்ட வேளையில் தினமும் தூங்கினால் தான் ஆழ்துயில் நன்றாக இருக்கும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். இது ஏன் தலைகீழாக இருக்கிறது?
அப்போது தான் நான் ஒன்றை கவனித்தேன் - நான் தூங்கும் கால அளவு இந்த விடுமுறையின் போது அதிகரித்திருக்கிறது. அது என் ஆழ் துயிலின் அளவு அதிகமாக உதவுகிறது. அடுத்து நான் சிறுவயதில் இருந்தே தாமதமாக தூங்கச் சென்று ஒன்பது பத்து மணிக்கு துயிலெழும்பும் பழக்கம் கொண்டவன். என் வேலைகளும் மதியம் 1: 30க்கு மேல் தான் பெரும்பாலும் இருந்ததால் இந்த பழக்கத்தை தொடரவும் முடிந்தது. ஆனால் ஆசிரிய வேலை என்னை சீக்கிரம் துயிலெழ செய்கிறது. அப்போது என் ஆழ்துயிலின் அளவும் குறைகிறது. என் உடம்பின் பழக்கப்படி நான் ஆழ்துயிலுக்கு செல்வது நள்ளிரவு 3 மணியில் இருந்து நான்கு மணிக்கு மேலாகத் தான் இருக்க வேண்டும். மற்ற நாட்களில் நான் 3 / 4வது நிலையிலோ அல்லது 5இல் காலடி வைத்த உடனேயோ அலாரத்தால் எழுப்பப்படுகிறேன். இப்போது அலாரம் ஒளிக்காததால் என்னால் எனக்குப் பழகின வேளையில் நீண்ட நேரம் ஆழ்துயிலில் இருக்க முடிகிறது.


நம் உடம்புக்கென ஒரு நடந்து பழக்கப்பட்ட பாதை இருக்கிறது. அதனை அறிந்து கொள்வது, அதிலேயே அதை செலுத்துவது, அசந்து தூங்குவதற்கும் அவசியம். வேலை, குடும்பம் என பல தேவைகளின் பொருட்டு அது மாறும் போது உடம்பு திமிறுகிறது. தடுமாறுகிறது. நாம் எப்படி இளமையில் இருந்து இருந்திருக்கிறோமோ அப்படியே உடம்பை தொடர்ந்து வைத்திருக்க முடிந்தால் நாம் நலமாக இருப்போம். அவ்வளவு எளிதானது அது!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...