முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எனும் பைத்தியக்காரத்தனம் (2)



சொன்னால் நம்ப மாட்டீர்கள் - சில தனியார் கல்வி நிலையங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்குக் கூட தேர்வு கொண்டு வந்து விட்டார்கள் (தொடர் உள்மதிப்பீடு எனும் பெயரில்). எங்கும் எதற்கும் தேர்வு தான். சரி இந்த கல்வியாளர்களுக்கு ஏன் இந்த அபத்தம் உறைக்க மாட்டேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு. தேர்வுகளை நடத்தாவிட்டால் மாணவர்கள் இப்போதெல்லாம் எந்த படிப்பையும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என அவர்கள் சொல்கிறார்கள். அதாவது மாணவர்களே தேர்வைத் தான் விரும்புகிறார்கள் என்பது அவர்களின் உட்கிடக்கை. ஏன் அப்படி?

தேர்வை உயர்கல்வி மாணவர்கள் ஒரே சமயம் வெறுக்கவும் ஆதரிக்கவும் செய்கிறார்கள் - இன்று உயர்கல்விக்கு நிறைய பணம் செலவாகிறது; கடுமையாக உழைக்கவும் போட்டியிடவும் வேண்டி உள்ளது. அந்த நிலையில் மதிப்பெண் என்பது அவர்களுக்கு ஒரு தூலமான பிரதிபலனாக, “சம்பாத்தியமாகஇருக்கிறது. தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஒரு வகுப்பில் 70 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால் அத்தனை பேரும் தமக்கு முதல் மதிப்பெண் வேண்டும் என கோருகிறார்கள். அது சாத்தியமில்லை எனத் தெரிந்தாலும் அவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் மதிப்பெண்ணை அவர்கள் வாங்கும் பண்டமாகப் பார்க்கிறார்கள்; தாம் படிக்கும் பட்டமும் அவர்களுக்கு ஒரு பண்டம் தான். எப்படி ஒரு ஐபோனை நிறைய பணம் கொடுத்து வாங்கினால் அது தரமாக வேலை செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அப்படியே ஒரு படிப்பில் சேர்ந்ததும் தாமும் தரமானவர்களாக மாற வேண்டும், அது தானாகவே நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். சரி அது கூட பரவாவில்லை. இந்த கல்வி எனும் பொருளை வாங்கும் போது அரூபமாக அன்றி தூலமாக அவர்களுக்கு ஒரு பயன்மதிப்பு தேவைப்படுகிறது - இது தான் இன்று மதிப்பெண் ஆகிறது. ஆறுமாதத்துக்கு ஒருமுறை தேர்வு என்பது இன்று நீண்ட காலம். அதனால் இன்று மாதாமாதம் தேர்வு என்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பேஸ்புக்கில் அனுதினமும் அவர்கள் பெறும் லைக்குகள், ஷேர்களைப் போல இருக்கிறது

இந்த கல்வி சந்தைப்படுத்தல் முதலில் தனியார் பள்ளிகளிலே பிரசித்தமானது. அங்கு தான் அடிக்கடி தேர்வுகள் நடத்துவது முதலில் பரிசோதனை செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் பள்ளியின் விளம்பரம் பார்த்தேன் - அவர்கள் ஒரு பரீட்சார்த்தமான கல்விமுறையை வைத்திருக்கிறார்களாம்; தினமும் தேர்வு, தினமும் மதிப்பீடு, அது முடிந்ததும் அடுத்த நாள் தேர்வுக்க்கான தயாரிப்பு. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு ஒரு விதமான தினசரி அங்கீகாரத்தை, சுய-மதிப்பீட்டை அளிக்கிறது என்பதால் இதில் ஒரு மறைமுக கிளுகிளுப்பு உள்ளது. தனியார் பள்ளிக் கல்வியில் ஆரம்பித்த வியாதியானது முதலில் உயர்கல்வியை பாதித்து இப்போது அரசுப்பள்ளிகளுக்கும் பரவியுள்ளது என நினைக்கிறேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...