முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலித்துகள் தம் வாழ்க்கை கண்ணீரும் கம்பலையுமாக காட்டப்படுவதை விரும்பவில்லையா?



கடந்த இரு தினங்களாக நானும் ஜோஷ்வாவும் வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் dissent கருத்தரங்குக்கான தலித் சினிமா அரங்கு பற்றி விவாதிப்பதற்காக அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். நிறைய பேசினோம். தலித் சினிமா மற்றும் அரசியல் குறித்து ஸ்டாலின் ராஜாங்கத்துடன் உரையாடினோம். எண்பது, தொண்ணூறுகளில் எப்படி கீழ்த்தட்டை சேர்ந்த நாயகன் மேல்தட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து போராடி மணப்பது அல்லது பண்ணையாரை எதிர்த்து ஏழை நாயகன் வெல்வது ஆகிய ஒற்றைவரிக் கதைகள் சினிமாவில் பிரசித்தமாக இருந்தன, இது மறைமுகமாக சாதிப் பிளவை நாம் பேச முயன்றதன் விளைவு தான் என ஸ்டாலின் சொன்னது என் மனத்தில் தங்கி இருந்தது; நேற்று அண்ணாமலை படம் பார்க்கும் போது நிலவுடைமை அடிப்படையிலான படிநிலை எப்படி அதில் வந்திருக்கிறது என யோசித்தேன். ஏன் அதில் ரஜினியின் சாதி குறித்த எந்த குறிப்பும் இல்லை? அதில் ராதாதவி ரஜினி மீது கொள்ளும் துவேசம் ஏழை மீது பணக்காரனுக்கு உள்ள ஒவ்வாமை மட்டும் தானா என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் எழுந்தன

இந்த படத்துக்கும் அசுரனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் யோசித்தேன். அன்று மறைமுகமாக பேசப்பட்டது இன்று பட்டவர்த்தமாகிறது; ஆனாலும் இந்த தலித் சாகச நாயகன் பிம்பம் எதார்த்தத்துக்கு புறம்பானது என ஸ்டாலின் குறிப்பிட்டதும் உண்மை தான். மற்றொரு முரணையும் ஸ்டாலின் குறிப்பிட்டார் - தலித் வாழ்வின் அவலங்களை மட்டும் பேசும் படங்களை தலித்துகளே பெரிய அளவில் விரும்புவதில்லை, அதுவும் நிலப்பகுதி, பேச்சுவழக்கு வழி எந்த சாதி குறிப்பிடப்படுகிற என்பது வெளிப்படையாகும் போது சம்மந்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அப்படத்தை ரசிக்க முடியாமல் போகிறது; அவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள். இதே போன்ற செறிவான விசயங்களை இன்னும் பரபரப்பாக தலித் சினிமா அரங்கில் விவாதிப்பார்கள் என நினைக்கும் போது ஆர்வம் பற்றிக் கொள்கிறது.
  நேற்று என்னுடைய வகுப்பு ஒன்றுக்கு ஜோஷ்வாவை அழைத்துப் போய் அம்பேத்கரின் Who Were the Shudhras புத்தகம் பற்றி பேச வைத்தேன். நானும் அவரும் வகுப்பில் கேள்விகளை எழுப்பி விவாதித்தோம். வர்க்கம், இனம், பாலினம், சாதி ஆகியவை எப்படி வேறுபடுகின்றன, எப்படி அதே சமயம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதை, பஞ்சமி நிலப்பிரச்சனை, கேரளாவில் நடந்த நிலசீர்திருத்தம், அதன் சிக்கல்கள், விளைவுகள், வேதகாலத்துக்கு முன்பு தலித்துகள் ஆதிபௌத்தர்களாக இருந்ததே அவர்கள் நால்வர்ணத்துக்கு வெளியே துரத்தப்படக் காரணமா என நிறைய விசயங்களை அவர் பேசினார். ஒரு மாணவன் எழுந்து இடஒதுக்கீடு அநியாயமானது, என்னை விட குறைவாக மதிப்பெண் எடுத்த ஒரு தலித்துக்கு என் இடம் போவது சரியா எனக் கேட்டான். அவனிடம் இட ஒதுக்கீட்டில் தலித்துகள் குறைவாகவே பலன் பெறுகிறார்கள், பெரிய பங்கை வாங்குவது மத்திய சாதிகள் தாம் என சொல்லி புரிய வைத்தோம்

 நீண்ட காலத்துக்குப் பிறகு சமூகம், கலை, இலக்கியம், சினிமா என நேரம் போவது அறியாமல் பேசுவது இங்கு சாத்தியமாகி உள்ளது; சென்னை நாட்களை நினைவுபடுத்தி ஏக்கம் கொள்ளவும் செய்தது; இப்போதைய வேலையிடத்தில் எப்படி இத்தகைய காத்திரமான உரையாடல்கள் இல்லாமல் ஒரு காலிபிளவர் போல இருக்கிறேன் என வருத்தமும் கவ்விக் கொண்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...