முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலித்துகள் தம் வாழ்க்கை கண்ணீரும் கம்பலையுமாக காட்டப்படுவதை விரும்பவில்லையா?



கடந்த இரு தினங்களாக நானும் ஜோஷ்வாவும் வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் dissent கருத்தரங்குக்கான தலித் சினிமா அரங்கு பற்றி விவாதிப்பதற்காக அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். நிறைய பேசினோம். தலித் சினிமா மற்றும் அரசியல் குறித்து ஸ்டாலின் ராஜாங்கத்துடன் உரையாடினோம். எண்பது, தொண்ணூறுகளில் எப்படி கீழ்த்தட்டை சேர்ந்த நாயகன் மேல்தட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து போராடி மணப்பது அல்லது பண்ணையாரை எதிர்த்து ஏழை நாயகன் வெல்வது ஆகிய ஒற்றைவரிக் கதைகள் சினிமாவில் பிரசித்தமாக இருந்தன, இது மறைமுகமாக சாதிப் பிளவை நாம் பேச முயன்றதன் விளைவு தான் என ஸ்டாலின் சொன்னது என் மனத்தில் தங்கி இருந்தது; நேற்று அண்ணாமலை படம் பார்க்கும் போது நிலவுடைமை அடிப்படையிலான படிநிலை எப்படி அதில் வந்திருக்கிறது என யோசித்தேன். ஏன் அதில் ரஜினியின் சாதி குறித்த எந்த குறிப்பும் இல்லை? அதில் ராதாதவி ரஜினி மீது கொள்ளும் துவேசம் ஏழை மீது பணக்காரனுக்கு உள்ள ஒவ்வாமை மட்டும் தானா என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் எழுந்தன

இந்த படத்துக்கும் அசுரனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் யோசித்தேன். அன்று மறைமுகமாக பேசப்பட்டது இன்று பட்டவர்த்தமாகிறது; ஆனாலும் இந்த தலித் சாகச நாயகன் பிம்பம் எதார்த்தத்துக்கு புறம்பானது என ஸ்டாலின் குறிப்பிட்டதும் உண்மை தான். மற்றொரு முரணையும் ஸ்டாலின் குறிப்பிட்டார் - தலித் வாழ்வின் அவலங்களை மட்டும் பேசும் படங்களை தலித்துகளே பெரிய அளவில் விரும்புவதில்லை, அதுவும் நிலப்பகுதி, பேச்சுவழக்கு வழி எந்த சாதி குறிப்பிடப்படுகிற என்பது வெளிப்படையாகும் போது சம்மந்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அப்படத்தை ரசிக்க முடியாமல் போகிறது; அவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள். இதே போன்ற செறிவான விசயங்களை இன்னும் பரபரப்பாக தலித் சினிமா அரங்கில் விவாதிப்பார்கள் என நினைக்கும் போது ஆர்வம் பற்றிக் கொள்கிறது.
  நேற்று என்னுடைய வகுப்பு ஒன்றுக்கு ஜோஷ்வாவை அழைத்துப் போய் அம்பேத்கரின் Who Were the Shudhras புத்தகம் பற்றி பேச வைத்தேன். நானும் அவரும் வகுப்பில் கேள்விகளை எழுப்பி விவாதித்தோம். வர்க்கம், இனம், பாலினம், சாதி ஆகியவை எப்படி வேறுபடுகின்றன, எப்படி அதே சமயம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதை, பஞ்சமி நிலப்பிரச்சனை, கேரளாவில் நடந்த நிலசீர்திருத்தம், அதன் சிக்கல்கள், விளைவுகள், வேதகாலத்துக்கு முன்பு தலித்துகள் ஆதிபௌத்தர்களாக இருந்ததே அவர்கள் நால்வர்ணத்துக்கு வெளியே துரத்தப்படக் காரணமா என நிறைய விசயங்களை அவர் பேசினார். ஒரு மாணவன் எழுந்து இடஒதுக்கீடு அநியாயமானது, என்னை விட குறைவாக மதிப்பெண் எடுத்த ஒரு தலித்துக்கு என் இடம் போவது சரியா எனக் கேட்டான். அவனிடம் இட ஒதுக்கீட்டில் தலித்துகள் குறைவாகவே பலன் பெறுகிறார்கள், பெரிய பங்கை வாங்குவது மத்திய சாதிகள் தாம் என சொல்லி புரிய வைத்தோம்

 நீண்ட காலத்துக்குப் பிறகு சமூகம், கலை, இலக்கியம், சினிமா என நேரம் போவது அறியாமல் பேசுவது இங்கு சாத்தியமாகி உள்ளது; சென்னை நாட்களை நினைவுபடுத்தி ஏக்கம் கொள்ளவும் செய்தது; இப்போதைய வேலையிடத்தில் எப்படி இத்தகைய காத்திரமான உரையாடல்கள் இல்லாமல் ஒரு காலிபிளவர் போல இருக்கிறேன் என வருத்தமும் கவ்விக் கொண்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.