Skip to main content

The Woman Next Door



The Woman Next Door (1981) பிரஞ்சு புதிய அலை இயக்குநர்களில் தலையானவரான டுரோபோவின் படைப்பு. அவரது 400 Blows பிரசித்தமானது. Mobi ஆப்பில் அவரது பல படங்களை தொடர்ச்சியாக காண்பித்து வருகிறார்கள். கணிசமானவை குறும்புத்தனமான, அதேவேளை தீவிரமான காதல் கதைகள். இந்த படங்கள் வழியாக அவர் மனித வாழ்வில் சுதந்திரம் என்றால் என்ன எனும் கேள்வியை பல கோணங்களில் கேட்கிறார் என நினைக்கிறேன் - எளிய மனித உறவுகள், காதல் உறவுகள், தாம்பத்ய உறவுகள் என ஒவ்வொன்றிலும் மனிதன் நாடுவது பிறழ்வுகளை, பிறழ்வுகள் வழி சுதந்திரத்தை, இதே  அந்த பிறழ்வே பின்னர் விரிசலாகி விரிசல் அஸ்திராவரத்தை அசைக்கும் நடுக்கமாகி அவனை அழிக்கிறது என்பதை.
 The Woman Next Door அப்படியான ஒரு கதை - முன்னாள் காதலர்கள் பிரிவுக்குப் பிறகு திருணம் செய்து இயல்பு வாழ்வில் பொருந்திட முயல்கிறார்கள். பெர்னர்ட் அன்பான மனைவி; இரு குழந்தைகள் என அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆனால் அந்த மகிழ்ச்சி மேலோட்டமானது என்பதை மெட்டில்டா அவன் பக்கத்து வீட்டில் குடி வரும் போது தெரிய வருகிறது. மெட்டில்டா சற்றே வயதான ஆணொருவரை திருமணம் செய்து கொண்டு நிலையற்று இருக்கிறாள். துவக்கத்தில் பெர்னர்ட் அவளை சந்திப்பதைத் தவிர்க்கிறான். அவள் அவனைத் தேடிச் செல்கிறாள். “நாம் நண்பர்களாக இருப்போமேஎன அழைப்பு விடுக்கிறாள். ஆனால் அவர்களுக்கு இடையில் காதல் பற்றி எரிய சில வினாடிகளின் அந்நியோன்யமே போதுமாக இருக்கிறது.
 இருவரும் காதல் முற்றுப்பெறும் முன்னரே அவசரமாய் பிரிந்தவர்கள். பெர்னர்டின் நிதானமற்ற போக்கு மெட்டில்டாவை அச்சுறுத்திட அவள் அவனிடமிருந்து விலகுகிறாள். பின்னர் அவள் வேறொருவரை அவசரமாய் திருமணம் செய்து கொண்டு பெர்னர்டை மறக்க முயல்கிறாள். அதுவும் முடியாமல் போக விவாகரத்துப் பண்ணுகிறாள். அடுத்தது தான் இப்போதைய கணவர் அவளது வாழ்வுக்குள் வருகிறார். அவர் எதேச்சையாக அவளது பழைய காதலனின் வீடருகே ஒரு வீட்டை தேர்ந்தெடுத்து தற்செயலாக இருவரையும் இந்த இக்கட்டான சந்தர்பத்தில் தள்ளிட திருப்புமுனை ஏற்படுகிறது. இருவரும் மீண்டும் காதலிப்பார்களா, எனில் என்னவாகும் என்பதே மிச்சக்கதை.
ஆம், இருவரும் மீண்டும் காதலில் விழுகிறார்கள். ஆனால் காதல் இப்போது கள்ளகாதல் ஆகிறது. காதலின் போது நடந்தது இப்போது அச்சுப்பிசகாமல் இப்போது திரும்ப நடக்கிறது - பெர்னர்டின் மிதமிஞ்சிய ஆவேசம், அவனது பொறாமை, ஆட்கொள்ளும் விருப்பம் மெட்டில்டாவை மீண்டும் அச்சம் கொள்ள வைக்கிறது; அவனிடம் இருந்து விலக முயல்கிறாள். அவன் இப்போது கூடுதல் இச்சையுடன் நெருங்குகிறான், அவளுக்காக தவிக்கிறான், ஊர் உலகம் தன் கள்ள உறவை அறிந்தால் கூட தவறில்லை எனும் இடத்துக்கு வருகிறான். அவள் இதை ரசிக்கிறாள், மற்றொரு பக்கம் வெறுக்கவும் செய்கிறாள். நாம் இனி சந்திக்க முடியாது, கூடாது என அறுதியாக சொல்கிறாள். இருவருக்குமிடையே பொதுவிடத்தில் மோதல் வெடிக்க குடும்பத்தினருக்கும் உண்மை அனைத்தும் தெரிய வருகிறது.
 பெர்னர்ட் தன் காதல் முறிவை ஏற்றுக் கொண்டு மனைவியுடன் அமைதியான வாழ்க்கைக்குத் திரும்புகிறான். ஆனால் மெட்டில்டாவில் அது முடிவதில்லை - அவள் மனம் உடைந்து பேதலித்து மருத்துவ சிகிச்சை பெறுகிறாள். அப்போது அவளுக்கு ஆறுதல் அளிக்க பெரன்ர்ட் அங்கு செல்கிறான். இது முடிந்து, மெட்டில்டாவின் குடும்பம் இடம்பெயர்ந்து சென்று, பெர்னர்டின் மனைவி கர்ப்பமாகி, கிட்டத்தட்ட எல்லாம் சாமாதானம் ஆகிய பின்னர் மெட்டில்டா விடிகாலை ஒன்றில் தனது பழைய வீட்டுக்குத் திரும்புகிறாள். அவளது வீட்டின் கதவு காற்றில் தடதடவெ அடிக்கும் அரவம் கேட்டு அவன் இரவில் எழுந்து அங்கு செல்கிறான். மெட்டில்டாவை அங்கு கண்டு கட்டித் தழுவுகிறான். அவர்கள் அந்த வீட்டின் முன்னறையின் தரையில் படுத்து உறவு கொள்கிறார்கள். இது அவர்களின் மூன்றாம் பிரிவுக்குப் பின்பான சந்திப்பு; இதுவும் எப்படி முடியுமோ என நாம் யோசிக்கும் போது மெட்டில்டா தன் கைப்பையில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து தன் மீது கிடக்கும் பெர்னர்டின் தலையை சுடுகிறாள். (அவர்கள் முன்பு சந்திக்கும் போது அடிக்கடி அவனது தலையை அவள் வருடி விடுவாள், அவளது கை அப்போது தன் கன்னத்தை அடைந்து தடவுவதை அவன் மிகவும் ரசிப்பான் என்பது நமக்கு இப்போது நினைவுக்கு வருகிறது). அடுத்து அவள் தன் தலையில் துப்பாக்கியை வைத்து சுடுகிறாள். படம் முடிகிறது

மெட்டில்டா ஏன் அப்படி செய்தாள்? இதற்கு இரண்டு பதில்கள் உண்டு:
1) அவளுக்கு மனநிலை பிசகி விட்டது.
2) இந்த காதல் இப்படித் தான் முடிய முடியும். அவர்கள் ஒருமுறை உரையாடும் போது அவன் முன்பு கூறிய ஒரு வாக்கியத்தை அவள் நினைவு கோருவாள் - “எந்த ஒரு காதல் கதைக்கும் ஒரு துவக்கம், மையம், முடிவு வேண்டும்”. அது இல்லாமல் போவது அவர்களின் பிரச்சனை - முடிவு அமையாத காதல்கள் மீள மீள ஒரே வட்டத்தில் சுற்றி வருகிறது; தாள முடியாத வாதையாக மாறுகின்றன. மெட்டில்டா அதற்கு ஒரு முடிவு அமைக்கும் வண்ணம் அவனையும் கொன்று தானும் சாகிறாள் எனலாம். அவர்கள் ஓடிப் போய் வாழ்ந்திருக்கலாமே? ம்ஹும். நிச்சயம் மனம் முறிந்து பிரிந்து மீண்டும் சேர்ந்து பரஸ்பரம் வாழ்க்கையை வதையாக்கி இருப்பார்கள்.

காதல் என்பது மிதமிஞ்சிய இன்பத்திலும் துன்பத்திலுமாய் ஊசலாடுகிறது. துன்பத்தில் இன்பத்தையும் இன்பத்தில் துன்பத்தையும் அது காண்கிறது. மெட்டில்டாவின் மனநிலை இதனாலே மெல்ல மெல்ல சீரழிகிறது. ஓவியரான அவள் குழந்தைகளுக்கான சித்தரக்கதைப் புத்தகம் ஒன்றை எழுதுகிறாள் - அதில் ஒரு பக்கத்தில் ஒருவன் தலையில் சுடப்பட்டு கிடக்கிறான். ரத்தப் பெருக்கு தரையில் கோலமிட்டுச் செல்கிறது, பளிச்சென்ற ரத்தச்சிவப்பில். பதிப்பாளர் அதை வெண்ணிறமாக மாற்றுகிறார்; குழந்தைகளுக்கு அந்த சித்தரிப்பு அதிர்ச்சி அளிக்கலாம் என வாதிடுகிறார். ஆனால் மெட்டில்டா அதை ஏற்க மறுக்கிறாள். இறுதிக் காட்சியின் கொலை-தற்கொலைக்கான அறிகுறியை டுரோபோ அங்கே நமக்கு விதைத்து விடுகிறார், அவளது மனப்பிரச்சனையின் சமிக்ஞையாகவும் அக்காட்சி இருக்கிறது.

மற்றொரு முக்கிய காட்சியில் ஒருநாள் மெட்டில்டா பெர்னர்டின் வீட்டுக்குச் சென்று அவனது குழந்தையுடன் தனியாக உரையாடுகிறாள். அவனது அறைக்கு செல்லும் அவள் அங்கு அவன் வரைந்த ஓவியம் ஒன்றை கவனித்து அதைப் பாராட்டுகிறாள்; ஒரு திமிங்கலம் அழுவதை அவன் சற்றே நவீன ஓவிய பாணியில் குழந்தைத்தனமாக வரைந்திருக்கிறான். திமிங்கலத்தின் தலையில் இருந்து நீர் பிசிறியடிப்பதைப் பார்த்திருப்போம். அவ்வாறு அது தன் உடல் முழுக்க இருக்க கண்ணீர் பிசிறடிக்க அழுவதான ஒரு சித்தரிப்பு. கடலும் கண்ணீரைப் போல உப்பானது என்பதால் தன் துயரத்தினுள் மூழ்கிப் போய் துயரத்தையே கண்ணீராக வெளிப்படுத்தும் ஒரு பிராணியாக அது இருக்கிறது. முதலில் குழந்தையிடம் அவள்திமிங்கலம் ஏன் அழுகிறது?” எனக் கேட்க அவன் அதுவருத்தத்தில் இருக்கிறதுஎன்கிறான். துன்பம் ஏன் இருக்க வேண்டும் என அவள் கேட்பதுடன் அக்காட்சி முடிகிறது. துன்பத்தைக் குடித்து துன்பத்தையே நாம் அழுவதனாலே அது இருக்கிறது; நமக்கு வேறு வழியில்லை; அன்பை நாடும் ஒவ்வொரு இதயமும் அந்த திமிங்கலம் தான். மிதமிஞ்சிய அன்பு என்பது தனக்கு போதுமான அன்பு கிடைக்கவில்லை எனும் ஏக்கத்தில் இருந்து மட்டுமே தோன்ற முடியும், அந்த ஏக்கம் நம்மைத் தனிமையில் தள்ளுகிறது, காதலர்கள் அதனாலே தனிமையை மீள மீள நாடுகிறார்கள், அது எப்படியும் நம்மை அழித்தே தீரும் என இப்படம் பேசுகிறது.


எனக்கு இந்த படத்தின் காட்சி மொழி பத்மராஜனின் ஸ்டைலை நினைவுபடுத்தியது (பாலசந்தரின்ஏக் துஜே கேலியே’, ‘புன்னகை மன்னன்ஆகிய படங்களையும் தாம்). பத்மராஜனின் வெறித்தனமான ரசிகன் என்ற முறையில் நான் இந்த படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தேன் எனலாம் - அதே போன்ற haunting soulful இசை, அதே டீப் குளோசப்பை, குளோசப்பின் போதான zooming in பாணியை, அப்போது ஒரு பாத்திரம் தனக்குள் மூழ்குவதை, அப்போது அவனது/ளது தனிமை உணர்த்தப்படுவதை, சதா விடிகாலையின் இளநீல ஒளியை உணர்த்தும் லைட்டிங், இரவில் கார் வெளிச்சம் நோக்கி பீறிட்டு வரும் ஷாட்டுகள், சூழ்நிலையில் அகப்பட்டு வெளிவர முடியாது தன்னையே அழிக்கும் பாத்திரங்களை என பத்மராஜன் ஆர்ப்பரிக்கும் அலையைப் போல என் நினைவுகளின் கரையில் தோன்றிக் கொண்டே இருந்தார். பத்மராஜன் டுரோபால் மிகவும் தாக்கம் பெற்றிருக்கிறார் என அறிய இந்த படம் உதவியது. இனிதூவானத் தும்பிகள்” (1987), “நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்” (1986) போன்றவற்றை பார்க்கும் போதெல்லாம் இந்த படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...