Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனும் விடாது கறுப்பு


நான் இங்கு அபத்தம் எனக் கூறுவது தனிநபர் சுகாதார நடவடிக்கைகளை அல்ல; கொரோனா வந்தாலும் வராவிட்டாலும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது, ஒரே துண்டை பலர் பயன்படுத்தாமல் இருப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது பொதுவாக நல்லதே. ஆனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் மாதக்கணக்கில் இருந்தாக வேண்டும் என நமது மருத்துவர்கள் சிலர் பரிந்துரைப்பது சுத்த பேத்தல் என்பேன்.
 ஒன்று இது நடைமுறையில் ஏற்புடையது அல்ல. மக்கள் பரஸ்பரம் சந்திக்காமல் பேசாமல் நீண்ட நாட்கள் இருந்தால் அது கடுமையான உளச்சிக்கல்களை ஏற்படுத்தும். சமூக இணக்கத்தை ஒழிக்கும். அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். அடுத்து, எந்த ரத்த பரிசோதனையும் செய்யாமல் ஒருவேளை யாருக்கு வேண்டுமெனிலும் கொரோனா தொற்று இருக்கலாம் எனும் கற்பனையின் அடிப்படையில் இந்த முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கோருவது ராத்திரியானால் ரத்தக்காட்டேரி உலவுகிறது, அதனால் பன்னிரெண்டு மணிக்கு மேல் வெளியே வராதீர்கள் என சில கிராமங்களில் நிலவும் நம்பிக்கையை போல உள்ளது


WHO பரிந்துரைக்கும், ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் - வீட்டுக்குள்ளே மக்கள் பரஸ்பரம் தொடாமல் புழங்காமல் பல அடிகள் விலகி இருப்பது, வெளியிலும் யாரும் யாரிடத்தும் நெருங்காது வாழ்வது, நோய்த்தொற்று வெளியே தெரிந்தால் மக்கள் வெளியே வராதிருக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு போடுவது, வெளியே வந்தால் சிறை, அபராதம் போன்ற தண்டனைகள் - இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளுக்கு பொருந்தி வராது என நம்புகிறேன்

முதலில், இந்த தொற்று ஏற்பட்டால் அது வெளியே தெரிய மூன்று வாரங்கள் ஆகும். அதற்காகத் தான் இப்போது ஒரு மாதம் நிறுவனங்கள் தம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்கின்றன; கல்லூரி, பள்ளிகள் மூடப்படுகின்றன. இந்த ஒரு மாதத்தில் ஏற்கனவே நோய்த்தொற்றியவர்கள் புலப்பட ஆரம்பிப்பார்கள். அவர்களை, அவர்களிடம் புழங்கியவர்களை, அவர்கள் பயணித்த இடங்களில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை பண்ணி சிகிச்சை கொடுக்கலாம் என்பது திட்டம். ஆனால் இது ஒரு கற்பனையான கருதுகோளை முன்வைத்த நடவடிக்கை - அதாவது இம்மாத துவக்கத்தில் இருந்து நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் எனும் ஒரு கருதுகோள். ஒருவேளை இந்த மாதத்தில் வெளிப்படாத சிலரின் உடம்பில் இன்னமும் வைரஸ் இருந்து கொண்டிருந்தால்? அது அடுத்த மாதம் வெளிப்பட்டால்? அடுத்த மாதமும் மக்களை வீட்டுக்குள் சிறைவைப்பார்களா? அதற்கு அடுத்த மாதமும் வைரஸ் இருப்பதாகத் தோன்றினால் அதற்கு அடுத்த மாதமும் சிறைவைப்பார்களா? அப்படி நடக்காது என்றாலும் கேட்கிறேன் - வைரஸ் தொடர்ந்து வெளிப்பட்டபடியே இருந்தால்?

இதையெல்லாம் ஏன் கேட்கிறேன் என்றால் இந்த வைரஸ் குறித்து விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் மிக மிக சொற்பமாகவே இப்போதைக்குத் தெரியும். அதற்கான சிகிச்சை கூட சளி, ஜுரத்துக்கான சிகிச்சையான அறிகுறிகளை கட்டுப்படுத்துவது தானே ஒழிய வைரஸை ஒழிப்பது அல்ல. ஆக மக்களை விட அதிகம் கைவிடப்பட்ட நிலையில் நமது மருத்துவர்களும், அவர்களை நம்பியிருக்கும் அரசு எந்திரமும் உள்ளது. ஆகையால் அவர்கள் பேயோட்டுக்கிற சாமியார்களைப் போல பேச ஆரம்பித்து விட்டார்கள்; “அந்த பயங்கரமான வைரஸ் நம்மை நோக்கி அதோ வந்து கொண்டிருக்கிறது; எல்லாரும் ஓடுங்க ஓடுங்கஎன டிவி டிவியாகத் தோன்றி கையை ஆட்டி சொல்கிறார்கள். வைரஸாக வந்து சிலரைக் கொன்று விட்டு மறைந்து விடும் என மருத்துவர்களும் ஆட்சியாளர்களும் நம்புகிறார்கள், பழைய காலத்தில் அம்மை பாதித்து மக்கள் சாகும் போது அது தெய்வகோபம் என நம்பியதைப் போல. இப்போது தெய்வகோபத்துக்குப் பதில் வைரஸின் கோபம். பலிகொடுக்கப்படும் ஜனங்களின் எண்ணிக்கையை முடிந்தளவுக்கு குறைக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள்.
 ஆனால் இதெல்லாம் ஒரு கற்பனையின் அடிப்படையில் தான் நடக்கிறது - நம்மிடம் எந்த ஆதாரபூர்வமான தகவல்களும் இல்லை; நாம் இன்னமும் மக்களிடம் ரத்த பரிசோதனை பண்ணி அறியவில்லை. ஆக, பிரதமர் மோடியைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் 1326 மில்லியன் ஜனங்களும் கொரோனா வைரஸ் தொற்று கொண்டவர்களே. அத்தனை பேரையும் வீட்டுக்குள் பூட்டி வைக்கலாம் என்பது தான் அவருக்கு நம்முடைய மகத்தான மருத்துவர் குழு அளித்துள்ள பரிந்துரை என நினைக்கிறேன். அடக்கடவுளே!

வரும் மாதங்களில் நம்மால் வேலைக்கு செல்லாமல் சோற்றுக்குப் பணமில்லாமல், வாடகை கொடுக்க வழியில்லாமல் சமாளிக்க முடியுமா? சத்தியமாக முடியாது. இந்த ஒரு மாத கட்டாய விடுமுறை, கட்டாய சமூக விலக்கம் நமது பொருளாதாரத்துக்கு ஏற்படுத்துகிற பாரதூரமான விளைவுகளில் இருந்து நாம் மேலெழ எவ்வளவு காலம் எடுக்கும்? மூன்று நான்கு அல்லது ஆறு ஏழு மாதங்கள் இந்த தேசத்தால் வேலையே இன்றி ஓய்வில் இருக்க முடியும் என நான் நம்பவில்லை. அப்படியான நடவடிக்கை மற்றொரு டீமானிடைசேஷனாக நம் முதுகெலும்பை உடைத்து விடும்


ஓரளவு முன்னெச்சரிக்கையுடன் நாம் மீண்டும் உற்பத்தியிலும் வணிக பரிவர்த்தனைகளிலும் ஈடுபவடுவதே இப்போதைக்கு நலம். அதற்கு முன் இந்தஊழிக்காலபிரச்சார மருத்துவர்களின் வாயில் யாராவது பிளாஸ்திரியைப் போட்டு ஒட்ட வேண்டும். சமூக வலைதளங்களிலும் டிவியிலும் இவர்கள் செய்கிற அலப்பறைகள் தாங்கவில்லை

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...