முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசோகமித்திரனை வாசித்தல் (2)


3) மினிமலிச எழுத்து என்றால் என்ன, நவீனத்துவ சிறுகதை, நாவலின் அழகியல் என்றால் என்ன, இருத்தலியல் என்றால் என்ன எனப் புரிந்து கொண்ட பின் அந்த சட்டகத்தில் வைத்துப் பார்த்தாலே அசோகமித்திரனின் தனித்துவமான பங்களிப்பு நமக்கு விளங்கும். அடுத்து அவர் வலியுறுத்திய அன்பு, கருணை மற்றும் மானுடநேயம். பெண்களுக்கு அவர் அளித்த முக்கியத்துவம். அசோகமித்திரன் சொல்ல வந்த சேதி இதில் தான் இருக்கிறது என நினைக்கிறேன். தன்னைப் பிறரிடத்தில் வைத்து பார்ப்பது, அன்றாட வாழ்வில்தான்அழிவது, “தான்-மற்றமைஎன இருமையை கடப்பது - அவருடைய கணிசமான பாத்திரப் படைப்புகள் போய் சேர்வது இந்த இருமையற்ற, ஈகோவற்ற வெளியில் தான். அது குடும்ப பாசப்போராட்டங்களில், வேலைக்கான, உய்வுக்கான போராட்டங்களில் நடக்கலாம். சின்னச்சின்ன அன்றாடத் தேவைகளுக்கான பெரிய அலைச்சல்களில் நடக்கலாம். இந்த முதிர்ச்சியை அசோகமித்திரன் உருவகமாக சித்தரிப்பார் - தண்ணீருக்கான அன்றாடப் போராட்டம் வாழ்க்கையில் ஈரத்துக்கான தேடலாவது (“தண்ணீர்”), பிறரது தத்தளிப்புகள் மற்றும் இடறல்களை மதிப்பிடாமல் அப்படியே ஏற்பது, வாசலில் நின்று ஒட்டுக்கேட்கிற ஒருவனைப் போல (“ஒற்றன்”). 


4) இந்த உருவக / குறியீடு பயன்பாட்டு விசயத்திலும் அசோகமித்திரன் தனித்துவமானவர் - அவர் இவற்றை உருவகம் / குறியீடு போலவே உணர விடுவதில்லை. நமது வாழ்வில் எப்படி பொருட்கள், நிகழ்வுகள், செயல்கள், புலனனுபவங்கள் வேறோ ஏதோ ஒன்றை மறைமுகமாக புலப்படுத்தியபடியோ இருக்கின்றனவோ (ஒரு குழந்தையின் மெத்து மெத்தென்ற கை நமக்கு வாழ்க்கையில் அப்படி எதையோ உணர்த்துகிறது, ஒற்றை ஒளிக்கதிர் இருளைப் பிளந்து வரும் போது அதன் அழகை மெய்மறந்து ரசிக்கிறோம், இருளற்றது அழகு எனும் உள்ளார்ந்த புரிதலினால்). இந்த மனநிலையில் தான் அசோகமித்திரன் உருவகங்கள் / குறியீடுகளை தன் கதைகளில் பயன்படுத்துகிறார். எந்த கட்டத்திலும் அவை எழுத்தாளனாய் உருவாக்கப்பட்டவை எனும் உணர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறார். அப்படி செய்து அவரது கதைகளை நிஜ அனுபவங்கள் போல தொனிக்க வைக்கிறார். இவ்விசயத்தில் அசோகமித்திரனை எந்த நவீன எழுத்தாளனுடனும் ஒப்பிட முடியாது என நினைக்கிறேன். ஹெமிங்வேயின் குறியீட்டுக் கதைகளில் கூட ஒரு வினோதத்தன்மை இருக்கும், ஆனால் அசோகமித்திரன் தன் குறியீடுகளை அவ்வளவு சாதாரணமாய் வைத்திருப்பார். “புலிக்கலைஞன்நல்ல உதாரணம். நமக்கு அந்த கலைஞனிடத்து இரக்கம் ஏற்படும்படியாய் எழுதியிருப்பார். உருவகங்கள் மீது பொதுவாக வாசகனுக்கு இரக்கம் வராது. அசோகமித்திரன் இப்படி செய்து அவன் உருவகமே அல்ல என நினைக்க செய்வார் - அபாரமான சாதனை.   

5) கடைசியாக, அசோகமித்திரனின் இந்திய இருத்தலியம். இருத்தலியம் ஒரு மேற்கத்திய கோட்பாடு. ஆனால் நமது பண்பாட்டிலேயே அதற்கு வேர்கள் உண்டு. .தா., கர்ணனின் கதை. கர்ணனுக்கு இறுதி வரை காலமோ சமூகமோ நீதி வழங்குவதில்லை. அவனாகத் தான் அதைத் தேடிப்பெற்றுக் கொள்கிறான். அப்போதெல்லாம் காலம் அவனுக்கு இரு தேர்வுகளை அளித்து இரண்டையும் அவனுக்கு எதிரானதாக மாற்றி விடும் - அவன் அர்ஜுனனைக் கொன்று நண்பன் துரியோதனனைக் காப்பாற்றலாம், அல்லது அர்ஜுனனைக் கொல்லாமல் தான் உயிர்விட்டு தன் சகோதரனான அர்ஜுனனைக் காப்பாற்றி தாய்க்குக் கொடுக்க வாக்குறுதியை நிறைவேற்றலாம். ஆனால் அப்போது அவன் தன் நண்பனைக் காப்பாற்றத் தவறியிருப்பான். அவன் இரண்டாவதைத் தேர்கிறான். ஆனால் முதலாவதை தேர்ந்திருந்தாலும் அவனுக்கு நிம்மதி இருந்திருக்காது. இருத்தலியம் மனித வாழ்க்கையின் அபத்தமாக இதைத் தான் சுட்டுகிறது. Myth of Sisyphus கட்டுரையில் ஆல்பர்ட் காமு இதைத்தான் வாழ்வின் அபத்தமாகக் குறிக்கிறார் - கிரேக்க வீரனான சிசிபஸ் ஒரு சிகரத்தின் உச்சிக்கு ஒரு உருளைக்கல்லை உருட்டிக் கொண்டு போகிறான், ஆனால் மேலே போனதும் அது கீழே உருண்டு வந்து விடும். அவனால் தடுக்கவே முடியாது (அப்படி ஒரு சாபம்). ஆனாலும் அவன் விடாமல் போராடுகிறான். நவீன யுகத்தில் மனிதனுக்கு போராடுவது ஒன்றே தேர்வு, ஜெயிப்பது அல்ல என காமு சொல்கிறார்.
 அசோகமித்திரனின் பெரும்பாலான கதைகளில் ஒரு இந்திய இருத்தலியம் உண்டு - இங்கு எளியோன் ஒருவன் பெரும் அமைப்புகளின் சந்து பொந்துகளில் புகுந்து ஓடி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறான், அவன் தோற்கிறான், ஆனால் இந்த போராட்டத்தில் அவன் தன் துயரங்களை மறக்கிறான் - “பூனைசிறுகதையில் பூனையிடம் இருந்து தன் தயிரைக் காப்பாற்ற வேண்டும் எனும் ஆவேசம் ஒரு ஏழை ஓட்டல் பணியாளனுக்கு வாழ்க்கையின் பெரிய அவலங்களில் இருந்து தப்பிக்க உதவுகிறது. ஆம், தயிருக்காக அவன் உயிர் விடுவது அபத்தமே, ஆனால் அதுவே அவனுக்குள்ள ஒரு தேர்வு. வேறு பல நவீனத்துவ எழுத்தாளர்கள் இத்தகைய அபத்தத்தை தத்துவார்த்தமாக / இலக்கியத்தனமாக கையாண்ட போது (சு.ராவின்ஜன்னல்” / “பல்லக்குத்தூக்கிகள்”), அசோகமித்திரன் அன்றாட தமிழ் வாழ்வின் எளிய சித்திரங்களைக் காட்டுவதன் வழி இருத்தலியத்தை இந்திய கோணத்தில் புதிதாக உருவாக்கினார் - இந்தியர்கள் கல்லை சிகர உச்சிக்கு உருட்டுவதைப் போன்ற பெரிய காரியங்களைப் பண்ணுவதில்லை; ஒரு குடம் தண்ணீருக்காக காத்திருப்பதே அவர்களுக்கு ஒரே கனவு. அந்த தண்ணீர் கழிவு நீர் எனத் தெரிய வரும் போது கோபப்படாமல், கவலையில் சரியாமல் அதைக் கொட்டி விட்டு அடுத்த குடத்துக்காக காத்திருப்பது அசோகமித்திரனின் கதைகளில் அவர்கள் இருத்தலியல் சிக்கலை எதிர்கொள்ளும் முறை. இந்த காத்திருப்பினூடே அவர்கள் தம் இருப்பை மறக்கிறார்கள். குடும்பத்தினரின், நண்பரின், அந்நியரின் துயரங்களை அறிந்து கைகொடுப்பதனூடே அவர்கள் இருப்பின் அபத்தத்தை கடக்கிறார்கள் என அசோகமித்திரன் காட்டினார். இதை அவர் தத்துவத்தின் வழியாக அன்றி கதைமொழியின் ஊடே செய்தார் என்பது தான் சிறப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...