முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூங்காதே தம்பி தூங்காதே


கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஒரு வழிமுறை நோய்க்குறியைக் கண்டறிந்து, அடையாளங் கண்டவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சையளிப்பது (test, tract, isolate). ஆனால் இந்தியா போன்ற ஒரு பிரம்மாண்டமான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் இது சாத்தியமில்லை என்கிறார்கள். இது ஒரு பச்சைப் பொய். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் வீடுவீடாகப் போய் வாக்காளர் அட்டைக்காக தகவல் சேகரிக்க நம்மால் முடியும்; அடுத்து தேசிய மக்கள் பதிவேட்டுக்காக அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் கொண்ட ஒரு பெரும் படையை மத்திய அரசு ஒவ்வொரு குடிமகனும் வீட்டுக்கும் அனுப்பப் போகிறது; அப்போதெல்லாம் சாத்தியமாகும் மனிதவளம் இப்போது மட்டும் இந்த அரசுக்கு இல்லை என்பது ஒப்பந்தத்தை மீறக்கூடாது எனும் அஹிம்சைக் கொள்கைக்காக சீனவீரர்களிடம் உருட்டுக்கட்டையால் அடிவாங்கி நம் ராணுவ வீரர்கள் செத்தார்கள் என்பதைப் போல இருக்கிறது.


135 கோடி பேர்களுக்கு ரத்த பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு மற்றும் பொருள் வசதி நமக்கு இல்லை என்பதை ஏற்கிறேன். ஆனால் குறைந்தபட்சம் ஜுரம் உள்ளோரை மட்டுமாவது கண்டடையலாமே. உடல் வெப்பத்தைக் கொண்டு சோதிக்கும் கருவிகளை காவலர்கள் பல இடங்களில் பயன்படுத்துவதைக் காண்கிறோம். இது ஒரு மலிவான முறை. இதைப் பயன்படுத்தி ஏன் அரசு தன் படையை வீடுவீடாக அனுப்பி கொரோனாத் தொற்று இருப்பதாய் தெரிகிறவர்களை மட்டும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கக் கூடாது?

நோய்த்தொற்று உள்ளோரில் ஒரு பாதி பேருக்கு நோய்க்குறி தெரிவதே இல்லை, தெரியாமல் நோய் வந்து மறைந்து விடும் என்கிறார்கள், சிலருக்கு நோய்க்குறி தெரிய நாளாகும். ஆனால் ஜுரம், சளி, இருமல் என முற்றிப் போன நிலையில் உள்ளோர் உடனே மருத்துவமனைக்கு செல்வதில்லை. என் ஊரில் (தக்கலையில்) ஒரு மருத்துவர் கொரோனாத் தொற்றால் கடுமையாக ஜுரம் கண்டு ஐந்து நாள் தாமதித்து பின்னர் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லி இப்போது சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்; அவரால் ஆஸ்பத்திரி பணியாளர்கள், செவிலிகள் என பலருக்கு நோய்த்தொற்று வந்துள்ளது. வீடுவீடாக சென்று உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் ஒரு அடிப்படையான சோதனையை செய்தால் அரசு இப்போதுள்ள பயங்கர சூழலை ஓரளவு தவிர்க்கலாம். நோய்ப்பரவலின் கடுமையைக் குறைக்கலாம்

இந்த அரசுக்கு இது தெரியவில்லை என்பதை விட அக்கறையில்லை என்பதே உண்மை. இதுவே தேர்தல் சமயம் என்றால் எவ்வளவு மும்முரமாக எவ்வளவு ஆட்களை இறங்கி எவ்வளவு ஆயிரம் கோடிகளை செலவழித்து வேலை செய்வீர்கள். ஆனால் மக்கள் பேரழிவில் மாட்டிக் கொண்டு தவிக்கும் போது எல்லா அரசுகளும் திண்ணையில் படுத்து குறட்டை விடுகிறீர்கள். சென்னை வெள்ளத்தின் போது பார்த்தோம், ஒக்கிப் புயலின் போது பார்த்தோம், இப்போது இதோ ஒரு பெருந்தொற்று காலத்திலும் பார்க்கிறோம். உங்களையெல்லாம் திருத்தவே முடியாது


பெருந்தொற்றுச் சூழலுக்கு அரசு தயாராக இல்லை, அதற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை, வலுவில்லை, தடுமாறுகிறது போன்ற வாதங்களை நம்பாதீர்கள். தூங்குவதைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஊழல்-தேர்தல்-அதிகாரம் போன்றத் தேவைகள் மட்டுமே கும்பர்கர்ணனை எழுப்புகிறது. மற்ற சமயங்களில் குறட்டை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.