Skip to main content

ரஜினி ஏன் வரவில்லை என்பது குறித்த புளுகுகள்



ரஜினி உடல்நலமின்மையால் அரசியலுக்கு வரவில்லை என்பது சுத்தப் புளுகு என நினைக்கிறேன். அது தெரியும் என்பதாலே பாஜகவினர் புலம்புகிறார்கள். பிரவீன் காந்த் கூட ரஜினியின் அறிவிப்புக்கு ரத்தக்கொதிப்பு காரணமல்ல என்கிறார். ஏன் புளுகு என்பதற்கான சில நடைமுறை நியாயங்களைப் பார்ப்போம்:


1) ஆம், ரஜினி ஒன்றும் புரூஸ் லீ இல்லை. ஆனால் அதே நேரம் இன்றைய நிலையில் அவர் ஊர் ஊராகப் பயணித்து மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. காணொலி மூலமாக அவ்வப்போது அறிவிப்புகளை விட்டால் போதும். அவர் நீண்ட நேரம் பேசினால் அது அவருக்கே பாதகமாகும் என்பதால் சுருக்கமாக ஒன்றிரண்டு வசனங்களைப் பேசி விட்டு மிச்ச வேலையை ரசிகர் மன்ற நிர்வாகிகள், கட்சியை நடத்தும் மாஜி பாஜக தலைவர்கள், தமிழருவிகளிடம் விட்டு விடலாம். ஆக, உடல்நிலை காரணமாக விலகுகிறேன் என்பது இந்த இணைய அரசியல் காலத்தில் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.


2)  சன் நியூசில் குணசேகரன் கேட்டதைப் போல இந்த உடற்பிரச்சனைகள், கொரோனா ஆபத்து எல்லாம் முன்பே இருந்தது. ஒருநாள் பி.பி எகிறினதும் ஏன் ரஜினி வேலியை எகிறிக் குதித்து ஓட வேண்டும். ஆக இந்த முடிவுக்குப் பின்னால் ஏதோ அரசியல் / பொருளாதாரக் காரணம் இருக்கிறது. அதை நியாயப்படுத்தவே அவர் இரண்டு நாள் அட்மிட் ஆகி மருத்துவ சான்றிதழ் எல்லாம் வாங்கி இருக்கிறார். என்னதான் வளர்ந்து கழுதை வயசானாலும் ரஜினி ஒரு குழந்தை தான்.


3) ரஜினியின் முடிவுக்குப் பின்னால் பாஜக கொடுத்த அழுத்தம் தான் என்கிறார்கள். இது சரியாக இருக்க முடியாது - ரஜினி எப்போதுமே பாஜகவுக்கு இணக்கமானவர். அவர்களது மனதை நோகடிக்கக் கூடாது என தாங்குவாரே தவிர அவர்களை நினைத்து அஞ்சவோ எரிச்சலாகவோ மாட்டார். மாறாக, இதன் பின்னால் அதிமுக தலைமை இருக்கலாம். ரஜினி களத்தில் இருந்து நீங்கியது அதிமுகவுக்கே பெரிதும் பயனளித்துள்ளது. இனி சசிகலாவை களமிறக்கி மட்டுமே பாஜகவால் அதிமுகவை கழுத்தை நெரிக்க முடியும். சசி எனும் அஸ்திரமும் எந்தளவுக்கு பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்குமென சொல்ல முடியாது. ஏவின ஆளையே வந்து தாக்கினாலும் தங்கலாம். இப்போதைக்கு சீட் பேரத்தில் அதிமுகவின் கையே ஓங்கியிருக்கிறது. 20 இடங்களை பொத்திக் கொண்டு வாங்க வேண்டியது தான். பாஜகவை இதுவே கடுப்பேற்றியிருக்கும் - தப்பான நேரத்தில் ரஜினி கைவிட்டதில் தாமரை சகதியில் விழுந்து விட்டது. ஆனால் எடப்பாடியார் எதைக் காட்டி “அண்ணாத்தையை” மிரட்டியிருப்பார் என்பது தான் தெரியவில்லை.


4) வீட்டில் உட்கார்ந்து காணொலியில் பிரச்சாரம் பண்ணுவதற்கு இல்லாத உடற்தகுதி ரஜினிக்கு படம் நடிக்க மட்டும் இருக்கிறதா? அவர் “அண்ணாத்த” படபிடிப்பில் இருந்து பின்வாங்கவில்லை, கவனியுங்கள். 


5) கமல் எத்தனையோ தப்பான படங்களில் ரிஸ்க் எடுத்து பணத்தைக் கொட்டி சொதப்பி இருக்கிறார். எந்தளவுக்கு என்றால் வலது காலை வைத்தால் கையால் தங்கிக் கொள்வார்கள், இடது கால் என்றால் கண்ணிவெடி எனச் சொன்னால் அவர் இடதுகாலை தான் வைப்பார். அப்படித்தான் அவர் அரசியலிலும் களம் இறங்கினார். கமலின் இந்த  ரஸ்கைப் போல ரிஸ்கைக் கடிக்கும் தெகிரியம் தலைவருக்குக் கிடையாது. அவர் மிக மிக யோசித்து தான் படத்தேர்வுகளையே செய்வார். 

ரஜினி அவ்வளவாக ரிஸ்க் எடுக்க விரும்பாத மத்திய வர்க்க மனநிலை கொண்டவர் என்பார்கள். அதனால் தான் கல்யாண மண்டபம், பள்ளிக்கூடம் என சந்துபொந்தில் எல்லாம் புகுந்து வரி ஏய்ப்பு பண்ணுகிறார். அந்தளவுக்கு “கஞ்சம்”. அவர் தன் “எதிர்கால” திரைவாழ்வு அரசியலினால் பாதிக்கப்படக் கூடாது என நினைக்கலாம். எப்படியும் ஏதாவது ஒரு கழகக் கட்சியே ஆட்சிக்கு வரும். எதற்கு மூன்று மாத பிரச்சாரத்தினால் இரண்டு தரப்பையும் பகைத்து தன் படவெளியீட்டை முடக்க வேண்டும் என கொஞ்சம் அற்பமாகவே கவலைப்பட்டிருக்கலாம். 


எது எப்படியோ ரஜினியின் பின்வாங்கல் தான் 2020இன் மிகச்சிறந்த சேதி. 

(அ) இனி அவரது அரசியல் உளறல்களைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் (உளறத் தான் போகிறார்) நடிப்பை ரசிக்கலாம். 

(ஆ) பேரங்களில் பாஜகவின் கரம் தாழ்வது எப்போதுமே தமிழகத்துக்கு நலன் பயக்கும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...