முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இவ்வருடம் என் வாசிப்பு


என் வாசிப்பு நாய் வாயை வைத்ததைப் போன்றது. தினமும் ஏதாவது ஒரு புதுப்புத்தகத்தில் சில பக்கங்கள் மேய்ந்து விட்டு அதை மறந்து வேறொரு விசயத்துக்குள் போய் விடுவேன். இவ்வருடமும் அப்படித்தான்.

Storytel ஆப் ஒரு பெரிய கொடுப்பினை - இரவு சில மணிநேரங்களில் அதில் ஒலிப்புத்தகங்களைக் கேட்டு விட்டு தூங்கி விடுவேன். அந்த புத்தகங்களிலும் நான்கைந்து மட்டுமே முழுதாய் முடித்திருப்பேன். நேற்று மைக் பிரெயர்லியின் Art of Captaincy நூலில் சில அத்தியாயங்களைக் கேட்டேன். அதற்கு முந்தின நாள் சக் பலானுயிக்கின் Snuff. அதற்கு முந்தின தினம் வி.எஸ் நைப்பாலில் Enigma of Arrival. அதற்கு முந்தின நாட்கள் “ஜெ.ஜெ சில குறிப்புகள்” நாவலை 80% கேட்டு முடித்தேன். (அரவிந்தனின் வாசிப்பில் ஏதோ அவரே காதுக்குள் வந்து கதை சொல்வதைப் போல வித்தியாசமான அனுபவம்.) அதற்கு முந்தின நாட்கள் “பசித்த மானிடம்”, “ஆகாயத் தாமரை” ஆகிய நாவல்களை பாதி கேட்டேன். நேற்று ஒரு கட்டுரைக்காக டெலூஸைப் புரட்டியதில் இன்று திடீரென இமானுவல் கேன்ட் பற்றி படிக்க ஆசை வந்து ஒரு ஒலிப்புத்தகத்தை திறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படியே தாவிக்கொண்டிருப்பேன். 


புத்தகங்களை கேட்பதில் ஒரே சிக்கல் வாசிப்பு வேகம் சற்று மட்டுப்படும் என்பதே. ஆனால் சுகானுபவம். Storytel ஆப்பை நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன். மாதத்துக்கு 299 சந்தா. 


1) இது போக, ஐபேடிலேயே பி.டி.எப் வடிவில் நூல்களைத் தரவிறக்கி வாசிக்கிறேன். அவசர வாசிப்புக்கு இது உகந்தது. 

2) இவ்வருடம் நான் இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை விட அரசியல், சமூகக்கட்டுரைகளே அதிகமாய் படித்திருக்கிறேன். அதே போல இவ்வருடம் அச்சுநூல் வாசிப்பு பெருமளவு குறைந்து போனது.

3) டிவி அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டது வாசிப்புக்கு இழப்பு தான். முன்பு மிக அதிக நேரம் பல்கலைக்கழகத்தில் இருப்பதால் டிவியோ யுடியூபோ பார்ப்பது 1-2 மணிநேரங்களே. இப்போது அது தலைகீழாகி விட்டது.


 நான் வாசிப்பை (1) பொழுதுபோக்கு, (2) அறிவுப்பயிற்சி, (3) உடனடித் தேவைக்கானது என பகுத்துக் கொள்வேன்.

1) அரசியல் சமூக அபுனைவு இதற்குள் வந்து விடும். இலக்கிய புனைவு, இலக்கியமற்ற புனைவு, வம்பு எழுத்து எல்லாமும் தான். அதாவது மூளைக்கு சவால் அளிக்காத எழுத்து.

2) சுலபத்தில் வாசிக்க முடியாத எழுத்து - பெரும்பாலும் தத்துவ புத்தகங்கள். இதை ஒன்று துணை நூல்கள் மூலமாக வாசிப்பேன். அல்லது நண்பர்களுடன் சேர்ந்து கூகிள் மீட் முலமாக வாசிப்பேன். விவாதித்து யோசித்து வாசிப்பது எனக்குப் பிடித்தமானது. சிந்தனைக்கு, எழுத்துக்கு ஆழம் சேர்ப்பது இவ்வகையான வாசிப்பு. அதிகமாக நாளிதழ் கட்டுரைகள் படிக்கிறேன் எனத் தோன்றினால் சில நாட்கள் அதை நிறுத்தி விட்டு தத்துவம் பக்கமாய் கரை ஒதுங்கி விடுவேன்.

3) ஒரு புத்தகமோ கட்டுரையோ எழுதுவதானால் அதை ஒட்டி வாசிப்பை அமைத்துக் கொள்வேன். உ.தா., முராகாமியை சில மணிநேரம் வாசித்து விட்டு எழுத ஆரம்பித்தால் மூட் செட்டாகி விடும். 

 

இந்த வருடமும் இப்படித்தான் என் வாசிப்பு போனது. வாசிப்பை நான் சாப்பிடுவது, உச்சா, கக்கா போவது, குளிப்பது போலத்தான் பார்க்கிறேன். அதை மகத்துவப்படுவது எனக்குப் பிடிக்காது. அதே போல நிறைய வாசிப்பதால் ஒருவர் மேலானவரோ, கூடுதல் புத்திசாலியோ ஆக மாட்டார், வாசிப்பினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதையும் (ஆசான் சொல்வதைப் போல) ஏற்க மாட்டேன். சாப்பிட்டு, கக்கா போய், குளித்ததால் நீங்கள் மேம்பட்டு விட்டீர்களா? வாசிப்பும் அப்படியே. அது இருப்பின் ஒரு பகுதி. வாசிப்பதால் கூடுதலாய் நீங்கள் உருப்படவும் மாட்டீர்கள், உருப்படாமலும் போக மாட்டீர்கள். ஒன்றுமே படிக்காமல் மிக  மகிழ்ச்சியாக இருப்பவர்களைத் தெரியும், நாளிதழ் கூடப் படிக்காமல் பெரும் லௌகீக வெற்றி பெற்றவர்களையும் நேரடியாகக் கண்டிருக்கிறேன். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் எனச் சொன்னவர் நம் முதல்வர் ஆகவில்லையா? 

வாசிப்பு நம் மூளைக்கு நாம் அளிக்கும் மசாஜ் அல்லது “உடற்பயிற்சி” அல்லது ரெண்டுமே. அதைத் தாண்டி தெய்வீகமாய் ஏதோ இருக்கிறது எனச் சொல்கிறவர்களை நம்பாதீர்கள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...