Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இவ்வருடம் என் வாசிப்பு


என் வாசிப்பு நாய் வாயை வைத்ததைப் போன்றது. தினமும் ஏதாவது ஒரு புதுப்புத்தகத்தில் சில பக்கங்கள் மேய்ந்து விட்டு அதை மறந்து வேறொரு விசயத்துக்குள் போய் விடுவேன். இவ்வருடமும் அப்படித்தான்.

Storytel ஆப் ஒரு பெரிய கொடுப்பினை - இரவு சில மணிநேரங்களில் அதில் ஒலிப்புத்தகங்களைக் கேட்டு விட்டு தூங்கி விடுவேன். அந்த புத்தகங்களிலும் நான்கைந்து மட்டுமே முழுதாய் முடித்திருப்பேன். நேற்று மைக் பிரெயர்லியின் Art of Captaincy நூலில் சில அத்தியாயங்களைக் கேட்டேன். அதற்கு முந்தின நாள் சக் பலானுயிக்கின் Snuff. அதற்கு முந்தின தினம் வி.எஸ் நைப்பாலில் Enigma of Arrival. அதற்கு முந்தின நாட்கள் “ஜெ.ஜெ சில குறிப்புகள்” நாவலை 80% கேட்டு முடித்தேன். (அரவிந்தனின் வாசிப்பில் ஏதோ அவரே காதுக்குள் வந்து கதை சொல்வதைப் போல வித்தியாசமான அனுபவம்.) அதற்கு முந்தின நாட்கள் “பசித்த மானிடம்”, “ஆகாயத் தாமரை” ஆகிய நாவல்களை பாதி கேட்டேன். நேற்று ஒரு கட்டுரைக்காக டெலூஸைப் புரட்டியதில் இன்று திடீரென இமானுவல் கேன்ட் பற்றி படிக்க ஆசை வந்து ஒரு ஒலிப்புத்தகத்தை திறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படியே தாவிக்கொண்டிருப்பேன். 


புத்தகங்களை கேட்பதில் ஒரே சிக்கல் வாசிப்பு வேகம் சற்று மட்டுப்படும் என்பதே. ஆனால் சுகானுபவம். Storytel ஆப்பை நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன். மாதத்துக்கு 299 சந்தா. 


1) இது போக, ஐபேடிலேயே பி.டி.எப் வடிவில் நூல்களைத் தரவிறக்கி வாசிக்கிறேன். அவசர வாசிப்புக்கு இது உகந்தது. 

2) இவ்வருடம் நான் இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை விட அரசியல், சமூகக்கட்டுரைகளே அதிகமாய் படித்திருக்கிறேன். அதே போல இவ்வருடம் அச்சுநூல் வாசிப்பு பெருமளவு குறைந்து போனது.

3) டிவி அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டது வாசிப்புக்கு இழப்பு தான். முன்பு மிக அதிக நேரம் பல்கலைக்கழகத்தில் இருப்பதால் டிவியோ யுடியூபோ பார்ப்பது 1-2 மணிநேரங்களே. இப்போது அது தலைகீழாகி விட்டது.


 நான் வாசிப்பை (1) பொழுதுபோக்கு, (2) அறிவுப்பயிற்சி, (3) உடனடித் தேவைக்கானது என பகுத்துக் கொள்வேன்.

1) அரசியல் சமூக அபுனைவு இதற்குள் வந்து விடும். இலக்கிய புனைவு, இலக்கியமற்ற புனைவு, வம்பு எழுத்து எல்லாமும் தான். அதாவது மூளைக்கு சவால் அளிக்காத எழுத்து.

2) சுலபத்தில் வாசிக்க முடியாத எழுத்து - பெரும்பாலும் தத்துவ புத்தகங்கள். இதை ஒன்று துணை நூல்கள் மூலமாக வாசிப்பேன். அல்லது நண்பர்களுடன் சேர்ந்து கூகிள் மீட் முலமாக வாசிப்பேன். விவாதித்து யோசித்து வாசிப்பது எனக்குப் பிடித்தமானது. சிந்தனைக்கு, எழுத்துக்கு ஆழம் சேர்ப்பது இவ்வகையான வாசிப்பு. அதிகமாக நாளிதழ் கட்டுரைகள் படிக்கிறேன் எனத் தோன்றினால் சில நாட்கள் அதை நிறுத்தி விட்டு தத்துவம் பக்கமாய் கரை ஒதுங்கி விடுவேன்.

3) ஒரு புத்தகமோ கட்டுரையோ எழுதுவதானால் அதை ஒட்டி வாசிப்பை அமைத்துக் கொள்வேன். உ.தா., முராகாமியை சில மணிநேரம் வாசித்து விட்டு எழுத ஆரம்பித்தால் மூட் செட்டாகி விடும். 

 

இந்த வருடமும் இப்படித்தான் என் வாசிப்பு போனது. வாசிப்பை நான் சாப்பிடுவது, உச்சா, கக்கா போவது, குளிப்பது போலத்தான் பார்க்கிறேன். அதை மகத்துவப்படுவது எனக்குப் பிடிக்காது. அதே போல நிறைய வாசிப்பதால் ஒருவர் மேலானவரோ, கூடுதல் புத்திசாலியோ ஆக மாட்டார், வாசிப்பினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதையும் (ஆசான் சொல்வதைப் போல) ஏற்க மாட்டேன். சாப்பிட்டு, கக்கா போய், குளித்ததால் நீங்கள் மேம்பட்டு விட்டீர்களா? வாசிப்பும் அப்படியே. அது இருப்பின் ஒரு பகுதி. வாசிப்பதால் கூடுதலாய் நீங்கள் உருப்படவும் மாட்டீர்கள், உருப்படாமலும் போக மாட்டீர்கள். ஒன்றுமே படிக்காமல் மிக  மகிழ்ச்சியாக இருப்பவர்களைத் தெரியும், நாளிதழ் கூடப் படிக்காமல் பெரும் லௌகீக வெற்றி பெற்றவர்களையும் நேரடியாகக் கண்டிருக்கிறேன். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் எனச் சொன்னவர் நம் முதல்வர் ஆகவில்லையா? 

வாசிப்பு நம் மூளைக்கு நாம் அளிக்கும் மசாஜ் அல்லது “உடற்பயிற்சி” அல்லது ரெண்டுமே. அதைத் தாண்டி தெய்வீகமாய் ஏதோ இருக்கிறது எனச் சொல்கிறவர்களை நம்பாதீர்கள். 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...