முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எல்லாம் பழக்கம் தானா?



இன்று ஆயுஷுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவன் எழுதுவது, படிப்பது, சிந்திப்பது எல்லாம் ஒரு பழக்கத்தினால் தானா எனக் கேட்டான். பழக்கம் ஒரு போதையாகிறது. அது இல்லாமல் வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போகுமா என பயம் வருகிறது. காதல் கூட சுலபத்தில் ஒரு பழக்கமாவதில்லையா எனக் கேட்டான். எனக்கு வாழ்க்கையை இப்படி வடிவத்துக்குள் அடைப்பதில் நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. ஆனால் என்னை ஈர்த்தது மற்றொரு கேள்வி: அவன் என்னிடம் கேட்டான் - “உங்களால் எழுதாமல் இருக்க இயலுமா?” “அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் தாராளமாக நான் எழுதாமல் வேறெதாவது செய்வேன். எழுதுவது ஒரு வேதனையான வேலை தானே” (பேஸ்புக்கில் எழுதுவது, தெரிந்த கருத்துக்களை வைத்து கட்டுரை எழுதுவதை சொல்லவில்லை.) என்று நான் அவனிடம் சொன்னேன். கடந்த 14 ஆண்டுகளாக தினமும் எழுதி வருகிறேன். மிக மோசமான இழப்புகள் நேர்ந்து உருக்குலைந்து போகும் போது சில நாட்களில் எழுத்துக்கு மீண்டு விடுவேன். அது பழக்கத்தினால் அல்ல - எழுத்தில் ஒருவித ஈடு இணையற்ற இன்பம் உள்ளது. அது பேசுவதில் நிச்சயம் இல்லை. 


ஆனால் வாழ்க்கை இன்னொரு உலகத்துக்கு என்னை இழுத்து சென்றால் நான் எழுதுவதை மறந்து / விட்டுவிட்டு வேறொன்றை சந்தோஷமாக செய்து கொண்டிருப்பேன் என நினைக்கிறேன். உ.தா., நான் கைதாகி சிறையில் ஒரு வருடம் இருக்க நேர்ந்தால் அங்குள்ள வாழ்க்கைக்கு உகந்தவாறு இருப்பேன். அல்லது நமது ஜி எதிர்காலத்தில் வதைமுகாம்களை ஏற்படுத்தி நாட்டு மக்களை அதனுள் அடைத்தால் என்னுடைய அன்றாட தேவைகளுக்கே கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டால், எழுத்துக்கு அரை மணி நேரம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டால், மரணம் வாசலில் வந்து நின்று கொண்டிருந்தால் ஒவ்வொரு கணத்தையும் வேறெப்படி மகிழ்ச்சியாக, தீவிரமாக வாழ்வது என கண்டுபிடித்து செயல்படுவேன். 

நான் என்றில்லை, பெரும்பாலானோர் அப்படித்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். வாழ்வதற்கு தூண்டுதல், பழக்கம், வடிவம் எல்லாம் தேவையில்லை, அதற்கு நேரம் மட்டும் போதும். காலத்துள் வாழ்கிறவர்களுக்கு அக்காலத்தினுள் தம் இருப்பதை (இன்மையை) அறிவதே நோக்கம், உத்வேகம், திளைப்பு, அறிதல் எல்லாம். ஒரு பனித்திவலைக்குள் தன் முகத்தைத் தேடும் குழந்தையை, ஒரு மலரைப் போல, ஒவ்வொரு மணித்துளிக்குள்ளும் நமது இருப்பை அறிய முனைகிறோம். அதற்கே வாழ்கிறோம். வாழ்தலுக்கு வேறெந்த அர்த்தமும் இல்லை என நினைக்கிறேன். 


காலத்தின் பிள்ளைகள் நாம். நம்மையும் காலத்தையும் பிரிக்க முடியாது. அதனாலே எனக்கு சாவிலும் நம்பிக்கை இல்லை. அது காலத்துக்கு அப்பால் இருக்கிறது. வாழப் பிறந்தவனுக்கு சாவே இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.