முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எல்லாம் பழக்கம் தானா?



இன்று ஆயுஷுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவன் எழுதுவது, படிப்பது, சிந்திப்பது எல்லாம் ஒரு பழக்கத்தினால் தானா எனக் கேட்டான். பழக்கம் ஒரு போதையாகிறது. அது இல்லாமல் வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போகுமா என பயம் வருகிறது. காதல் கூட சுலபத்தில் ஒரு பழக்கமாவதில்லையா எனக் கேட்டான். எனக்கு வாழ்க்கையை இப்படி வடிவத்துக்குள் அடைப்பதில் நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. ஆனால் என்னை ஈர்த்தது மற்றொரு கேள்வி: அவன் என்னிடம் கேட்டான் - “உங்களால் எழுதாமல் இருக்க இயலுமா?” “அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் தாராளமாக நான் எழுதாமல் வேறெதாவது செய்வேன். எழுதுவது ஒரு வேதனையான வேலை தானே” (பேஸ்புக்கில் எழுதுவது, தெரிந்த கருத்துக்களை வைத்து கட்டுரை எழுதுவதை சொல்லவில்லை.) என்று நான் அவனிடம் சொன்னேன். கடந்த 14 ஆண்டுகளாக தினமும் எழுதி வருகிறேன். மிக மோசமான இழப்புகள் நேர்ந்து உருக்குலைந்து போகும் போது சில நாட்களில் எழுத்துக்கு மீண்டு விடுவேன். அது பழக்கத்தினால் அல்ல - எழுத்தில் ஒருவித ஈடு இணையற்ற இன்பம் உள்ளது. அது பேசுவதில் நிச்சயம் இல்லை. 


ஆனால் வாழ்க்கை இன்னொரு உலகத்துக்கு என்னை இழுத்து சென்றால் நான் எழுதுவதை மறந்து / விட்டுவிட்டு வேறொன்றை சந்தோஷமாக செய்து கொண்டிருப்பேன் என நினைக்கிறேன். உ.தா., நான் கைதாகி சிறையில் ஒரு வருடம் இருக்க நேர்ந்தால் அங்குள்ள வாழ்க்கைக்கு உகந்தவாறு இருப்பேன். அல்லது நமது ஜி எதிர்காலத்தில் வதைமுகாம்களை ஏற்படுத்தி நாட்டு மக்களை அதனுள் அடைத்தால் என்னுடைய அன்றாட தேவைகளுக்கே கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டால், எழுத்துக்கு அரை மணி நேரம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டால், மரணம் வாசலில் வந்து நின்று கொண்டிருந்தால் ஒவ்வொரு கணத்தையும் வேறெப்படி மகிழ்ச்சியாக, தீவிரமாக வாழ்வது என கண்டுபிடித்து செயல்படுவேன். 

நான் என்றில்லை, பெரும்பாலானோர் அப்படித்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். வாழ்வதற்கு தூண்டுதல், பழக்கம், வடிவம் எல்லாம் தேவையில்லை, அதற்கு நேரம் மட்டும் போதும். காலத்துள் வாழ்கிறவர்களுக்கு அக்காலத்தினுள் தம் இருப்பதை (இன்மையை) அறிவதே நோக்கம், உத்வேகம், திளைப்பு, அறிதல் எல்லாம். ஒரு பனித்திவலைக்குள் தன் முகத்தைத் தேடும் குழந்தையை, ஒரு மலரைப் போல, ஒவ்வொரு மணித்துளிக்குள்ளும் நமது இருப்பை அறிய முனைகிறோம். அதற்கே வாழ்கிறோம். வாழ்தலுக்கு வேறெந்த அர்த்தமும் இல்லை என நினைக்கிறேன். 


காலத்தின் பிள்ளைகள் நாம். நம்மையும் காலத்தையும் பிரிக்க முடியாது. அதனாலே எனக்கு சாவிலும் நம்பிக்கை இல்லை. அது காலத்துக்கு அப்பால் இருக்கிறது. வாழப் பிறந்தவனுக்கு சாவே இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...