முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இட ஒதுக்கீடு பற்றின பொதுப்புத்தி அபத்தங்களும் பத்மப்ரியாக்களும்



“திறமை இருப்பவர்கள் படித்து மேலே வந்துவிடலாம். பல உயர்சாதி மக்களால் திறமை இருந்தும் வேலைக்கு வர முடியவில்லை. பலர் திறமையே இல்லாமல் இட ஒதுக்கீட்டால் மட்டுமே மேலே வந்திருக்கிறார்கள். மக்களிடம் சென்று சாதிவாரி இட ஒதுக்கீடு வேண்டுமா எனக் கேட்டால் பலரும் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். இடஒதுக்கீடு ரொம்ப காலத்துக்கு முன் கொண்டுவரப்பட்டது. அது ஏன் இன்னும் மாற்றப்படவில்லை?


90 மார்க் எடுக்கும் ஒரு மாணவன் உயர்சாதி என்பதாலேயே நீங்கள் இடம் கொடுக்கவில்லை எனில், அது ஏற்றத்தாழ்வு இல்லையா?”


- மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா


பத்மப்ரியாவின் இந்த கருத்துக்கள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்று ஏற்கனவே ஒரு கட்டுரையில் சொல்லி இருந்தேன். ஏனென்றால், ஒரு ஆசிரியனாக பல உயர்சாதி, மேற்தட்டு இளைஞர்களிடம் இக்கருத்து உள்ளதை பலமுறை கண்டிருக்கிறேன். “பல உயர்சாதி மக்கள்” திறமை இருந்தும் இட ஒதுக்கீட்டால் வேலையின்றி தவிக்கிறார்கள் என்பது ஒரு ஆதாரமில்லாத, பொதுப்புத்தி கருத்து மட்டுமே. எதார்த்தம் வேறு.


கடந்த வருடம் என்னுடைய வகுப்பொன்றில் அம்பேத்கரின் நூலின் அத்தியாயம் ஒன்றை சொல்லித் தரும் போது அதில் உரையாற்ற தலித்தியத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் நண்பர் ஒருவரை அழைத்து சென்றேன். அவர் பேசினார். அதன் பிறகு மாணவர்களில் ஒருவர் கேள்வி கேட்டார். அச்சு அசலாக பத்மப்ரியா கேட்டுள்ள அதே கேள்வி தான் - “ஏன் இட ஒதுக்கீடு திறமையில்லாத தலித்துகளுக்கு வழங்கப்படுகிறது, உயர்சாதி மாணவர்கள் என்ன தவறு செய்தார்கள்?” வகுப்பில் பிற மாணவர்களும் இதை ஏற்றுக் கொண்டதை போல மௌனம் சாதித்தனர். சிலர் மெல்ல தலையசைத்தனர். நண்பர் ஒரு எதிர்-கேள்வி கேட்டார்: “இட ஒதுக்கீடு அதிகமாக எந்த பிரிவினருக்கு வழங்கப்படுகிறது தெரியுமா?” மாணவர் உடனே “எஸ்.ஸி, எஸ்.டி பிரிவினருக்கு” என்றார். அப்போது நண்பர் அது தவறு என விளக்கினார். அரசு வேலைகளிலும், கல்வி நிலையங்களிலும் மொத்தமாய் 59.50% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது (இப்போதைய கணக்கு). இதில் 22.5% தான் தலித்துகளுக்கு. 27% பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எனப்படும் மத்திய, கீழ்மத்திய சாதிகளுக்கு வழங்கப்படுகிறது. இப்போதைய நடுவண் அரசு கூடுதலாய் 10% பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவில் உள்ள (உயர்) சாதியினருக்கு அளிக்கிறது. கணக்குப் போட்டுப் பார்த்தால் 59.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் 37% தலித்துகள் அல்லாதோருக்கு போய் விடுகிறது. ஆனால் இட ஒதுக்கீட்டின் மொத்த பழியும் அவர்கள் மீது போய் விழுகிறது. யாரும் 27% மத்திய, கீழ் மத்திய சாதியினர் பெறும் இட ஒதுக்கீட்டு சலுகைகளைப் பற்றி பேசுவதில்லை.


 மொத்தமாய் தலித்துகளே அனுபவிப்பதாய் ஒரு பொதுப்புத்தி எண்ணம் இங்கே சுற்றி வருகிறது. இதைத் தான் முதலில் உடைக்க வேண்டும். ஆனால் பத்மப்ரியா போன்ற மக்கள் நீதி மய்யத்தினர், பாஜகவை பின்பற்றி, இந்த பொய்ப்பிரச்சாரத்துக்கு நீரூற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள OBC பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் 180 சாதிகள் வருகின்றன. இந்த சாதிகளுக்குள் நான்குக்கு மேல் பகுப்புகள் பெரும்பாலானவற்றுக்குள் வருவதை வைத்துப் பார்த்தால் எப்படியும் 252 சாதிகள் வரும் என பிரண்ட் லைன் கட்டுரை ஒன்று சொல்கிறது. அதாவது மொத்த தமிழக மக்கள் தொகையில் 68% OBC மக்கள் இட ஒதுக்கீட்டால் பயன்பெறுகிறார்கள். தலித்துகளோ வெறும் 21% தான். சாதிவாரி இட ஒதுக்கீட்டால் பயனடையாத உயர்சாதியினர் வெறும் 8% தான். பத்மப்ரியா போன்றோர் தம்மை மட்டும் கணக்கில் கொண்டு தான் பல உயர்சாதி திறமையாளர்கள் இட ஒதுக்கீட்டால் வேலை வாய்ப்பை இழக்கிறார்கள் எனக் கூறுகிறார். மக்களிடம் சென்று கேட்டால் இட ஒதுக்கீடு வேண்டாம் என சொல்லுவார்கள் என அவர் கருதுகிறாரே அந்த மக்களும் இந்த 8% தான்.

 இந்த முன்னேறிய 8% மக்களுக்காகத் தான் பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கிறது. இதையே தான் பத்மப்ரியாவும் செய்கிறார். கேட்டால் “எனக்கு மோடிஜியை பிடிக்கும்” என்கிறார். இதே மோடிஜி கொண்டு வந்த சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை எதிர்த்து இவர் முன்பு பேசித் தான் பிரபலமானார். அப்போது இவரை பாஜகவினர் கீழ்த்தரமாக மிரட்டி அவமதித்தனர். இந்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வரைவைக் கொண்டு வந்து நாட்டை சுடுகாடு ஆக்க அரசு முயல்கிறது எனச் சொன்னாரே அந்த அரசின் தலைவர் தானே மோடிஜி. ஒருவருடைய அரசியல், கொள்கைகளை எதிர்ப்பவருக்கு எப்படி அவரை மட்டும் பிடிக்க முடியும்? அவர் ராமர் கோயிலை கட்டுவதாலா? அல்லது அவர் தான் உங்களுடைய சாதி மக்களுக்காக 10% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார் என்பதாலா? 

  இது ஒன்றைக் காட்டுகிறது - இவர் தன் சமூகத்தைத் தாண்டி யாரையும் மக்களாகவே மதிக்கவில்லை. அவர்கள் - 92% மக்கள் - அவருடைய மனப்பரப்பிலே இல்லை. தன் சாதியைக் கடந்து யோசிக்கத் தெரியாத இவரை கமல் எந்த விடயத்தை கண்டு மெச்சி வேட்பாளராக நிறுத்தி உள்ளார்?

10% இட ஒதுக்கீடு அவசியமில்லை என இதே கமல் முன்பு கூறினார். ஆனால் அவரது வேட்பாளர் இதற்கு நேரெதிராக பேசுகிறார். எனில் ஒரு சின்ன விசயத்தில் கூட கட்சிக்குள்ளாகவே ‘கொள்கைத் உடன்பாடு’ இல்லை (கொள்கையே இல்லை என்பது வேறு விசயம்).

 குஷ்பு பாஜகவுக்குள் வந்தது போலத்தான் பத்மப்ரியாவும் வந்திருக்கிறார் போல. குஷ்பு நுழைந்தது பாஜகவின் முன்வாயில் என்றால் பத்மப்ரியா நுழைந்துள்ளது அதன் ‘பின்வாயில்’ வழியாக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.