Skip to main content

தேவ்தத் படிக்கல்: எதிர்கால இந்திய துவக்க வீரர்?




இந்த தேவ்தத் படிக்கல் ஒரு தனித்துவமான கலவை - அதிரடியாக ஆடினாலும் கண்டமேனிக்கு சுற்றுவதாகத் தோன்றாது. இதனாலே அவர் சரளமாக / வேகமாக ஆடும் போது ‘இதோ இப்போ அவுட் ஆகிடுவான் பாரேன்’ எனத் தோன்றாது. ஐ.பி.எல்லில் வேறு பலர் அடித்தாடும் போது ஏதோ கடையில் இருந்து முட்டையை காகிதத்தில் பொதிந்து வீட்டுக்கு எடுத்து வரும் திகில் உணர்வு இருக்கும். ஆனால் படிக்கல் அதிரடியாக ஆடும் போது ‘இவன் அவுட் ஆவான்னு தோணலியே’ என்றே எனக்குத் தோன்றும். அவருக்கு கச்சிதமான தடுப்பாட்டமோ பழுதற்ற காலாட்டமோ இல்லை. அவர் கால்களை போதுமானபடி அசைப்பதே இல்லை. ஆனால் ஒரு தெளிவான திட்டமிடல், தெளிவு, temperament என சொல்வார்களே அந்த நிதானம் உள்ளது. 
கவனித்துப் பார்த்தால் ஒன்று தெரியும்: அவர் இரண்டு, மூன்று ஷாட்களைத் தான் பவுண்டரி, சிக்ஸர்களுக்காக அடிக்கிறார். வேறு ஷாட்கள் இல்லாமல் அல்ல, தன் அதிரடி ஆட்டத்தை ஒரு கட்டுக்குள் வைப்பதற்காக. இது கோலியின் ஸ்டைல். அவர் எப்போது எப்படி ஆடுவார் என நாம் சுலபமாக கணிக்க முடியும். இந்த கணிக்கத்தக்க ஆட்டமே கோலி தொடர்ச்சியாக ரன்கள் அடிக்கக் காரணம். படிக்கல்லும் அப்படித்தான். 

எனக்கு படிக்கல்லிடம் பிடித்த இன்னொரு விசயம் அந்த உயரமும் அதனால் அவருக்கு உள்ள அசாத்தியமான மட்டை வீச்சும் (reach). மற்றவர்களுக்கு நல்ல நீளமாக உள்ள பந்து இவருக்கு முழுநீளம். முன்னங்காலுக்கு வந்து அப்படியே நேராக தூக்கி அடித்தால் பந்து மைதானத்தை சுலபத்தில் கடந்து விடுகிறது. இதனாலே எனக்கு இவரைப் பார்க்கும் போதெல்லாம் முன்னாள் ஆஸ்திரேலிய துவக்க மட்டையாளர் மேத்யு ஹெய்டன் நினைவுக்கு வருகிறார்.

அடுத்து அவர் தனது பெரும்பாலான பெரிய ஷாட்டுகளை முன்னங்காலுக்கு சென்று நேராக அடிக்கிறார். இப்படி நடக்கும் போது வேக வீச்சாளர்கள் உயரப்பந்துகளைப் போடுவார்கள். பெங்களூரில் வளர்ந்த பெரும்பாலான மட்டையாளர்களைப் போல படிக்கல்லும் பின்னங்கால் ஷாட்டுகளை - pull and hook - நன்றாக ஆடுகிறார். 

அவர் எக்ஸ்டிரா கவரிலும் மிட்விக்கெட்டிலும் முழுநீளப்பந்துகளை அடிக்க முயல்வதில்லை. இதனாலே மெது பந்துகளுக்கு ஷார்ட் மிட்விக்கெட்டிலோ கவரிலோ கேட்ச் கொடுப்பதில்லை. சமநிலையை இழந்து எல்.பி.டபிள்யொ ஆவதில்லை. பந்தை இறுதி வரை கவனிப்பதன் சுலபத்தில் பவுல்ட் ஆவதில்லை. இதனாலே மூன்றாவது-நான்காவது ஸ்டம்பில் போகும் பந்தை விரட்ட முயன்று எட்ஜ் கொடுப்பதும் இல்லை.

ஹெய்டனைப் போல இவர் அதிகமாக ஸ்வீப் செய்வதில்லை, ஆனாலும் சுழல் பந்தை நன்றாகவே ஆடுகிறார்; ஆடுதளத்தைப் பொறுத்து என்ன ஷாட் என தீர்மானிக்கிறார் என நினைக்கிறேன். ஒன்று ரொம்ப முன்னுக்கு வந்து அடித்தாடுகிறார், அடுத்து உடனே பின்னுக்கு சென்று வெட்டியோ புல் செய்தோ ரன் எடுக்கிறார் - பழைய இங்கிலாந்து மட்டையாளர் அலிஸ்டெர் குக்கைப் போன்று. குக்கைப் போல படிக்கல்லின் முன்னங்கால் நேராகவே இருக்கும், பந்தின் திசைக்கு ஏற்ப அசையாது.    

படிக்கல்லின் பலவீனம் பந்து ஸ்விங் ஆகும் போது நான்காவது-ஐந்தாவது ஸ்டம்பில் விரட்டுகிற நீளத்தில் போட்டால் அவரால் கையாள முடியாது என்பது. அடுத்து, நின்று வரும் ஆடுதளத்தில் இவருக்கு சரியாக டைமிங் செய்ய முடியாமல் போகும் என்பது. ஆனாலும் போராடி 100 ஸ்டிரைக் ரேட்டில் முப்பது, நாற்பது ரன்கள் எடுத்து விடுவார்.

இந்திய ஒருநாள் அணியில் ஷிக்கர் தவனின் ஓய்வுக்குப் பிறகு அந்த இடத்தை படிக்கல் எடுத்துக் கொள்வார் எனத் தோன்றுகிறது. ப்ரித்வி ஷா இவரை விட திறமையாளர்; ஆனால் ஒப்பிடுகையில் நிதானமோ வடிவொழுங்கோ அவருடைய ஆட்டத்தில் இல்லை. ஷா மிக மட்டமான களத்தடுப்பாளர் வேறு. அதோடு இந்த வயதிலேயே அவ்வப்போது முட்டிப்பிரச்சனை வருகிறது. மேலும், இப்போதைக்கு படிக்கல்லுக்கு இணையான ஒரு நல்ல இடது கை துவக்க வீரர் வேறு யாரும் உள்ளதாகத் தோன்றவில்லை. இறுதியாக, அவர் பெங்களூர் ராயல்ஸ் அணியில் கோலியின் கீழ் ஆடுகிறார். பெங்களூர் அணியில் ஆடுவது இந்திய அணியில் நுழைய முதல் வாயில் என நமக்குத் தான் தெரியுமே!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...