முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவ்தத் படிக்கல்: எதிர்கால இந்திய துவக்க வீரர்?




இந்த தேவ்தத் படிக்கல் ஒரு தனித்துவமான கலவை - அதிரடியாக ஆடினாலும் கண்டமேனிக்கு சுற்றுவதாகத் தோன்றாது. இதனாலே அவர் சரளமாக / வேகமாக ஆடும் போது ‘இதோ இப்போ அவுட் ஆகிடுவான் பாரேன்’ எனத் தோன்றாது. ஐ.பி.எல்லில் வேறு பலர் அடித்தாடும் போது ஏதோ கடையில் இருந்து முட்டையை காகிதத்தில் பொதிந்து வீட்டுக்கு எடுத்து வரும் திகில் உணர்வு இருக்கும். ஆனால் படிக்கல் அதிரடியாக ஆடும் போது ‘இவன் அவுட் ஆவான்னு தோணலியே’ என்றே எனக்குத் தோன்றும். அவருக்கு கச்சிதமான தடுப்பாட்டமோ பழுதற்ற காலாட்டமோ இல்லை. அவர் கால்களை போதுமானபடி அசைப்பதே இல்லை. ஆனால் ஒரு தெளிவான திட்டமிடல், தெளிவு, temperament என சொல்வார்களே அந்த நிதானம் உள்ளது. 
கவனித்துப் பார்த்தால் ஒன்று தெரியும்: அவர் இரண்டு, மூன்று ஷாட்களைத் தான் பவுண்டரி, சிக்ஸர்களுக்காக அடிக்கிறார். வேறு ஷாட்கள் இல்லாமல் அல்ல, தன் அதிரடி ஆட்டத்தை ஒரு கட்டுக்குள் வைப்பதற்காக. இது கோலியின் ஸ்டைல். அவர் எப்போது எப்படி ஆடுவார் என நாம் சுலபமாக கணிக்க முடியும். இந்த கணிக்கத்தக்க ஆட்டமே கோலி தொடர்ச்சியாக ரன்கள் அடிக்கக் காரணம். படிக்கல்லும் அப்படித்தான். 

எனக்கு படிக்கல்லிடம் பிடித்த இன்னொரு விசயம் அந்த உயரமும் அதனால் அவருக்கு உள்ள அசாத்தியமான மட்டை வீச்சும் (reach). மற்றவர்களுக்கு நல்ல நீளமாக உள்ள பந்து இவருக்கு முழுநீளம். முன்னங்காலுக்கு வந்து அப்படியே நேராக தூக்கி அடித்தால் பந்து மைதானத்தை சுலபத்தில் கடந்து விடுகிறது. இதனாலே எனக்கு இவரைப் பார்க்கும் போதெல்லாம் முன்னாள் ஆஸ்திரேலிய துவக்க மட்டையாளர் மேத்யு ஹெய்டன் நினைவுக்கு வருகிறார்.

அடுத்து அவர் தனது பெரும்பாலான பெரிய ஷாட்டுகளை முன்னங்காலுக்கு சென்று நேராக அடிக்கிறார். இப்படி நடக்கும் போது வேக வீச்சாளர்கள் உயரப்பந்துகளைப் போடுவார்கள். பெங்களூரில் வளர்ந்த பெரும்பாலான மட்டையாளர்களைப் போல படிக்கல்லும் பின்னங்கால் ஷாட்டுகளை - pull and hook - நன்றாக ஆடுகிறார். 

அவர் எக்ஸ்டிரா கவரிலும் மிட்விக்கெட்டிலும் முழுநீளப்பந்துகளை அடிக்க முயல்வதில்லை. இதனாலே மெது பந்துகளுக்கு ஷார்ட் மிட்விக்கெட்டிலோ கவரிலோ கேட்ச் கொடுப்பதில்லை. சமநிலையை இழந்து எல்.பி.டபிள்யொ ஆவதில்லை. பந்தை இறுதி வரை கவனிப்பதன் சுலபத்தில் பவுல்ட் ஆவதில்லை. இதனாலே மூன்றாவது-நான்காவது ஸ்டம்பில் போகும் பந்தை விரட்ட முயன்று எட்ஜ் கொடுப்பதும் இல்லை.

ஹெய்டனைப் போல இவர் அதிகமாக ஸ்வீப் செய்வதில்லை, ஆனாலும் சுழல் பந்தை நன்றாகவே ஆடுகிறார்; ஆடுதளத்தைப் பொறுத்து என்ன ஷாட் என தீர்மானிக்கிறார் என நினைக்கிறேன். ஒன்று ரொம்ப முன்னுக்கு வந்து அடித்தாடுகிறார், அடுத்து உடனே பின்னுக்கு சென்று வெட்டியோ புல் செய்தோ ரன் எடுக்கிறார் - பழைய இங்கிலாந்து மட்டையாளர் அலிஸ்டெர் குக்கைப் போன்று. குக்கைப் போல படிக்கல்லின் முன்னங்கால் நேராகவே இருக்கும், பந்தின் திசைக்கு ஏற்ப அசையாது.    

படிக்கல்லின் பலவீனம் பந்து ஸ்விங் ஆகும் போது நான்காவது-ஐந்தாவது ஸ்டம்பில் விரட்டுகிற நீளத்தில் போட்டால் அவரால் கையாள முடியாது என்பது. அடுத்து, நின்று வரும் ஆடுதளத்தில் இவருக்கு சரியாக டைமிங் செய்ய முடியாமல் போகும் என்பது. ஆனாலும் போராடி 100 ஸ்டிரைக் ரேட்டில் முப்பது, நாற்பது ரன்கள் எடுத்து விடுவார்.

இந்திய ஒருநாள் அணியில் ஷிக்கர் தவனின் ஓய்வுக்குப் பிறகு அந்த இடத்தை படிக்கல் எடுத்துக் கொள்வார் எனத் தோன்றுகிறது. ப்ரித்வி ஷா இவரை விட திறமையாளர்; ஆனால் ஒப்பிடுகையில் நிதானமோ வடிவொழுங்கோ அவருடைய ஆட்டத்தில் இல்லை. ஷா மிக மட்டமான களத்தடுப்பாளர் வேறு. அதோடு இந்த வயதிலேயே அவ்வப்போது முட்டிப்பிரச்சனை வருகிறது. மேலும், இப்போதைக்கு படிக்கல்லுக்கு இணையான ஒரு நல்ல இடது கை துவக்க வீரர் வேறு யாரும் உள்ளதாகத் தோன்றவில்லை. இறுதியாக, அவர் பெங்களூர் ராயல்ஸ் அணியில் கோலியின் கீழ் ஆடுகிறார். பெங்களூர் அணியில் ஆடுவது இந்திய அணியில் நுழைய முதல் வாயில் என நமக்குத் தான் தெரியுமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...