Skip to main content

மதன்-ராகவன் லீக்ஸ்: அண்ணாமலையின் மனப்பிரச்சனை


அண்ணாமலையின் பேச்சைக் கேட்கும் போது அவருடைய சொல்லுக்கும் மனதில் ஓடும் எண்ணங்களுக்கும் ஒரு இசைவின்மையை கவனிக்கலாம் - சற்று முன் என்ன பேசினோம் எனத் தெரியாமல் அடுத்ததாக சம்மந்தமில்லாத மற்றொன்றை சொல்லுகிறார். மதனை தான் மாவட்ட செயலாளராக ஆக்குவதாக சொல்லுகிறார், உடனே 2026இல் நீங்க எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கப் போறீங்க, அதுக்கான வேலைகளை இப்பவே ஆரம்பிங்க, இது ஒரு 5 வருட புரோஜெக்ட் பிரதர் என்கிறார். சற்று நேரம் கழித்து தமிழக ஊடகங்களை “நிர்வாகம்” பண்ணும் பொறுப்பு மதனுக்கு வழங்கப்படும், அவர் தமிழகத்தில் இருந்து மோடிஜியின் பிம்பத்தை உயர்த்தும் நோக்கிலான செய்திகள் தொடர்ந்து பேஸ்புக், டிவிட்டரில் வரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும், அதற்காக அவர் கீழ் இயங்குவதற்கு நிறைய பேர் கொண்ட ஒரு சமூகவலைதள அணி உருவாக்கப்படும் என்கிறார். மதனுடைய வேலை தமிழக ஊடக முதலாளிகளிடம் பேசி மோடியின் பெருமையை மக்களிடம் கொண்டு செல்ல வைப்பதே. ஒவ்வொரு சேனலிலும் வேலையில் இருந்து துரத்தி விடப்பட்டு எங்குமே போக முடியாமல் வாசலில் நிற்கும் மதன் எல்லா ஊடக முதலாளிகளையும் அமர வைத்து டீல் பேசப் போகிறாரா? எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர், ஒட்டுமொத்த சமூகவலைதள நிர்வாகி, தமிழக ஊடக முகவர் என எங்கு ஆரம்பித்து எங்கு போகிறார் பாருங்க. இதில் முத்தாய்ப்பு அடுத்து வருவது தான்: “உங்க மதன் டயரிஸ் சேனலுக்கான ஸ்டுடியோ செட் அப்பை புனரமைக்க எவ்வளவு செலவாகுங்க பிரதர்?” “ஒரு மூணு லட்சம் இருந்தா காமிரா, கம்பியூட்டர் எல்லாம் வாங்கி செட் பண்ணிரலாம்.” கே.டி ராகவனின் முப்பது வருட அரசியல் வாழ்க்கையை “இன்ஸ்டண்டாக” முடித்து வைக்க அண்ணாமலை பேரம் பேசும் அழகைப் பாருங்க. 

இதில் எதாவது நம்பும்படியாக இருக்கிறதா? இதே ஆள் தான் தனக்கு கே.டி ராகவனை விசாரித்து தண்டிக்கும் உரிமை இல்லை, தில்லியிடம் பேசி பொறுமையாக ஆறு மாதங்களில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார். அதற்கும் முன்பு தனக்கு எல்லா முடிவுகளையும் எடுத்து, துணிச்சலுடன் அடித்தாடும் அதிகாரத்தை அமித் ஷா வழங்கி உள்ளதாக சொல்லுகிறார். இதையெல்லாம் கேட்கும் போது தலை கிறுகிறுவென சுற்றிக் கொண்டு வருகிறதா?
இவ்வளவு வாக்குறுதிகள் கொடுத்து விட்டு, எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர், ஊடக முகவர், மூன்று லட்ச மதிப்புள்ள ஒரு சின்ன யுடியூப் சேனலின் ஓனர் ஆக்குகிறேன் என இறக்கிக் கொண்டே வந்து விட்டு, “இந்த வீடியோ வந்தா மதன் பிரான்ட் நாளைக்கு எங்கியோ போயிடும் பாருங்க” என்று விட்டு மாலையில் அவரை கட்சியின் அடிப்படைப் பொறுப்பில் இருந்தே தூக்கி விடுகிறார் அண்ணாமலை. காண்டாகுமா ஆகாதா பிரதர்?

 கொஞ்ச நேரம் கழித்து வெண்பாவிடம் அவர் ரொம்ப பணிவாக “இந்த கே.டி ராகவனை எப்படி விசாரிக்கலாமுன்னு சொல்லுங்க?” எனக் கேட்கிறார். உடனே மதனும் வெண்பாவுமாக சேர்ந்து அதிக எண்ணிக்கையில் பெண்கள் இடம்பெறும் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க சொல்லலாம் என்கிறார்கள். இது கூட தெரியாதவரையா அமித் ஷா நம்பி பொறுப்பை ஒப்படைத்தார்? 

இன்னும் 16 பேரின் காணொலிகள் தன்வசம் உள்ளன என மதன் ஏதோ “freshஆ சங்கரா மீன் வந்திருக்கு சார்” எனும் கணக்கில் சொல்ல, அதற்கு அண்ணாமலை “இந்த சேர்ல உட்கார்ந்திருக்கிற எனக்கு கட்சியில உள்ள எல்லார் பற்றின தகவல்களும் வந்து தான் இருக்கின்றன” என டப் கொடுக்கிறார். அவ்வளவு தகவல்களை வைத்துக் கொண்டு இவர் என்னதான் பண்ணுகிறார் எனும் கேள்வி எழுகிறது.

ஆனால் இதைத் தொடர்ந்து வெண்பாவிடம் “நீங்க ‘பொன்னியின் செல்வனில்’ டயலாக் எழுதுறீங்களா சிஸ்டர்?” என அப்பாவியாகக் கேட்கிறார். தன்னிடம் டீல் பேச வந்திருக்கும் வெண்பாவின் பின்னணியே தெரியவில்லை, ஆனால் ஒட்டுமொத்த தமிழக பாஜக தலைவர்களின் அந்தரங்க விவகாரமும் இவருக்குத் தெரியுமா? “இல்லிங்க நான் பாட்டு மட்டும் தான் எழுதி இருக்கேன்…” “எல்லா சாங்ஸுமேவா சிஸ்டர்?” “இல்லீங்க ஒரு பாட்டு தான்.” அப்போது வெண்பாவின் மைண்ட்வாய்ஸ்: “யோவ், நீ விகடன் கூட படிக்கிறது இல்லியா? கூகிள் பண்ணி பார்க்கலாமுல்ல.”  

அடுத்து தான் செமையான ‘ஒன்னு வாங்கினால் ரெண்டு’ சலுகை வருகிறது: வெண்பாவை தான் பாஜக இலக்கிய அணியின் பொறுப்பாளர் ஆக்குகிறேன் என்கிறார். வெண்பா பாஜகவில் உறுப்பினர் தானா என்பது கூட தெரியாமல் அவரை இலக்கிய அணியின் பொறுப்பாளராக்குகிறேன் என ஒருவர் சொல்லுகிறார், வெண்பாவோ தான் ஒரு கட்சிக்கூட்டத்திற்குக் கூட போனதில்லை என்கிறார். இவரை நம்பி இவ்வளவு பெரிய லாரியை எப்படி ஒப்படைத்தார்கள்? (நான் என்ன சொல்றேன்னா “அண்ணாமலை ஜி அதெல்லாம் வேண்டாம், பேசாம வெண்பாவை முதல்வர் ஆக்கிடுங்க ஜி”.)

வெண்பா உடனே “எனக்கு பாதுகாப்பு மட்டும் கொடுங்க” என்கிறார் உஷாராக. உடனே நம் சிங்கம் “இந்த வீடியோவுக்குப் பிறகு யாராவது உங்களை அட்டாக் பண்ணினா I will ruthlessly go after them” என்கிறார். ஆனால் அடுத்த நாளே தன் வசமுள்ள காணொலிகளில் தோன்றும் பாஜக மகளிரணிப் பெண்களின் மார்ப் செய்யப்பட்ட முகங்களை ஒரிஜினலுக்கு மாற்றிடும் முயற்சியில் அண்ணாமலை தீவிரமாக இருப்பதாக தெரிய வந்ததாக வெண்பா சொல்லுகிறார். இதுதான் பெண்களை நீங்க பாதுகாக்கும் லட்சணமா?

மதன், வெண்பாவிடம் டீலிங் நடந்து கொண்டிருக்கும் போது தன்னைப் பற்றி தமிழிசையிடம் போட்டுக்கொடுத்த பிரசாத் என்பவருடைய கை,கால்களை கடவுள் அதற்கு அடுத்த நாளே உடைத்து விட்டதாகவும், அவரை தான் பூங்கொத்து, மலர்கள் சகிதம் போய்ப் பார்த்ததாகவும் மதனுக்கு ஒரு மறைமுக மிரட்டலை செய்கிறார் அண்ணாமலை. “நீங்க எம்.எல்.ஏ ஆக்குவேங்குறீங்க, கொஞ்ச நேரத்தில் கைகாலை உடைப்பேங்குறீங்க, இதென்ன தெலுங்கு சினிமாவா மிஸ்டர் மலை? தெலுங்கு சினிமா வில்லன்கள் கூட தன் பேச்சு பதிவாகிறது என உஷாராக இருப்பார்களே!” 

அண்ணாமலையிடம் அடிப்படையாக ஒரு பிரச்சனை உள்ளது: அவர் தனக்கு என ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டால் அதைத் தவிர வேறெதையும் அவரால் யோசிக்க முடிவதில்லை. மனம் அது வேண்டும், அது வேண்டும் என பரிதவிக்கிறது. அதனால் தான் நம்பும்படியாக, கோர்வையாக பேசக் கூட வரவில்லை. ஒன்று சொல்லி விட்டு அடுத்த நொடியே அதற்கு மாறாக இன்னொன்றை சொல்லுகிறார். தொடர்ந்து பதற்றத்துக்கு மேல் பதற்றம். என் கணிப்பு சரியென்றால் அவருக்கு ஏதோ மனப்பிரச்சனை இருக்கிறது. நீங்கள் இப்போது இருந்து / நின்று கொண்டிருக்கிற இடத்தில் இருந்து ஒரு பொருள் உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது. அதை எடுக்கணும், எடுக்கணும் என்று மட்டுமே யோசிங்க. எப்படி எடுக்கணும் என்றெல்லாம் யோசிக்காதீங்க. “அது வேணும்” என்பதையே உங்க மனமாக உருமாற்றுங்க. போகிற வழியில் கிடக்கும் நாற்காலி கண்ணுக்குப் படாது. தரையில் எண்ணெய் சிந்தியிருந்தால் கவனிக்க முடியாது. அதாவது situational awareness சுத்தமாகப் போய் விடும். புத்திக்கும் பேச்சுக்கும் தொடர்பு அறுந்து விடும். அப்படியே நடங்க. நிச்சயமா விழுந்து விடுவீர்கள். அண்ணாமலை ஒவ்வொரு விசயத்தையும் இப்படித்தான் டீல் பண்ணுகிறார். அவருடைய ஊடக சந்திப்புகளில் இந்த மனப்போக்கை வெளிப்படையாகவே பார்க்கலாம், அது அவருடைய ஊடக சாமர்த்தியமின்மை, அனுபவமின்மை என நினைத்தேன். இல்லை, உண்மை என்னவென்றால் அவர் மனிதர்களிடம் சும்மா பேசும் போதே நாக்கு உதறுகிறது. எதிர்காலத்தில் எப்படியெல்லாம் மக்கள் காய் நகர்த்துவார்கள், அவர்களிடம் தன்னை எப்படி முனைக்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. பேசிக்கொண்டிருக்கும் போதே மானங்கெட்ட அந்த மைண்ட் வாய்ஸ் வேறு அவர் சொல்லைக் கேட்காமல் தத்தித்தத்தி போய் எங்காவது விழுந்து அடிவாங்குகிறது.

தமிழக பாஜகவை நிர்வகிப்பதில் அண்ணாமலை மிக மோசமான தேர்வு. அது மட்டுமல்ல, இவரை சந்தோஷ், நட்டா, ஷா கூட்டணி இப்படியே வளர விட்டால், பாஜகவின் தேசியத் தலைவர்களையும் இப்படி பாலியல் ஹனி டிராப்பிங் முறையில் மிரட்டிப் பணிய வைக்க முயல்வார். மதன் சொல்வதைப் போல “சின்னப்பிள்ளை ஆட்டம்” ஆடுகிறார் அவர். மிஸ்டர் நட்டா, பேசாமல் தமிழிசையையே மீண்டும் தமிழக பாஜகவின் தலைவர் ஆக்குங்க. என்னதான் மக்கள் அவரை பகடி பண்ணினாலும், அவர் மீது எல்லாருக்கும் நல்ல அபிப்ராயம் உண்டு. மக்களை அனுசரித்து செல்பவர். ஒருவேளை இந்த பாஜக ஜல்சா பிம்பத்தை களையவும் அவர் உதவலாம். 

இல்லாவிட்டால், அண்ணாமலையை அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர விட்டால், ஆடிருந்த இடத்தில் ஆட்டுப்புழுக்கை கூட எஞ்சாது!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...