Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மதன்-ராகவன் லீக்ஸ்: அண்ணாமலையின் மனப்பிரச்சனை


அண்ணாமலையின் பேச்சைக் கேட்கும் போது அவருடைய சொல்லுக்கும் மனதில் ஓடும் எண்ணங்களுக்கும் ஒரு இசைவின்மையை கவனிக்கலாம் - சற்று முன் என்ன பேசினோம் எனத் தெரியாமல் அடுத்ததாக சம்மந்தமில்லாத மற்றொன்றை சொல்லுகிறார். மதனை தான் மாவட்ட செயலாளராக ஆக்குவதாக சொல்லுகிறார், உடனே 2026இல் நீங்க எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கப் போறீங்க, அதுக்கான வேலைகளை இப்பவே ஆரம்பிங்க, இது ஒரு 5 வருட புரோஜெக்ட் பிரதர் என்கிறார். சற்று நேரம் கழித்து தமிழக ஊடகங்களை “நிர்வாகம்” பண்ணும் பொறுப்பு மதனுக்கு வழங்கப்படும், அவர் தமிழகத்தில் இருந்து மோடிஜியின் பிம்பத்தை உயர்த்தும் நோக்கிலான செய்திகள் தொடர்ந்து பேஸ்புக், டிவிட்டரில் வரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும், அதற்காக அவர் கீழ் இயங்குவதற்கு நிறைய பேர் கொண்ட ஒரு சமூகவலைதள அணி உருவாக்கப்படும் என்கிறார். மதனுடைய வேலை தமிழக ஊடக முதலாளிகளிடம் பேசி மோடியின் பெருமையை மக்களிடம் கொண்டு செல்ல வைப்பதே. ஒவ்வொரு சேனலிலும் வேலையில் இருந்து துரத்தி விடப்பட்டு எங்குமே போக முடியாமல் வாசலில் நிற்கும் மதன் எல்லா ஊடக முதலாளிகளையும் அமர வைத்து டீல் பேசப் போகிறாரா? எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர், ஒட்டுமொத்த சமூகவலைதள நிர்வாகி, தமிழக ஊடக முகவர் என எங்கு ஆரம்பித்து எங்கு போகிறார் பாருங்க. இதில் முத்தாய்ப்பு அடுத்து வருவது தான்: “உங்க மதன் டயரிஸ் சேனலுக்கான ஸ்டுடியோ செட் அப்பை புனரமைக்க எவ்வளவு செலவாகுங்க பிரதர்?” “ஒரு மூணு லட்சம் இருந்தா காமிரா, கம்பியூட்டர் எல்லாம் வாங்கி செட் பண்ணிரலாம்.” கே.டி ராகவனின் முப்பது வருட அரசியல் வாழ்க்கையை “இன்ஸ்டண்டாக” முடித்து வைக்க அண்ணாமலை பேரம் பேசும் அழகைப் பாருங்க. 

இதில் எதாவது நம்பும்படியாக இருக்கிறதா? இதே ஆள் தான் தனக்கு கே.டி ராகவனை விசாரித்து தண்டிக்கும் உரிமை இல்லை, தில்லியிடம் பேசி பொறுமையாக ஆறு மாதங்களில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார். அதற்கும் முன்பு தனக்கு எல்லா முடிவுகளையும் எடுத்து, துணிச்சலுடன் அடித்தாடும் அதிகாரத்தை அமித் ஷா வழங்கி உள்ளதாக சொல்லுகிறார். இதையெல்லாம் கேட்கும் போது தலை கிறுகிறுவென சுற்றிக் கொண்டு வருகிறதா?
இவ்வளவு வாக்குறுதிகள் கொடுத்து விட்டு, எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர், ஊடக முகவர், மூன்று லட்ச மதிப்புள்ள ஒரு சின்ன யுடியூப் சேனலின் ஓனர் ஆக்குகிறேன் என இறக்கிக் கொண்டே வந்து விட்டு, “இந்த வீடியோ வந்தா மதன் பிரான்ட் நாளைக்கு எங்கியோ போயிடும் பாருங்க” என்று விட்டு மாலையில் அவரை கட்சியின் அடிப்படைப் பொறுப்பில் இருந்தே தூக்கி விடுகிறார் அண்ணாமலை. காண்டாகுமா ஆகாதா பிரதர்?

 கொஞ்ச நேரம் கழித்து வெண்பாவிடம் அவர் ரொம்ப பணிவாக “இந்த கே.டி ராகவனை எப்படி விசாரிக்கலாமுன்னு சொல்லுங்க?” எனக் கேட்கிறார். உடனே மதனும் வெண்பாவுமாக சேர்ந்து அதிக எண்ணிக்கையில் பெண்கள் இடம்பெறும் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க சொல்லலாம் என்கிறார்கள். இது கூட தெரியாதவரையா அமித் ஷா நம்பி பொறுப்பை ஒப்படைத்தார்? 

இன்னும் 16 பேரின் காணொலிகள் தன்வசம் உள்ளன என மதன் ஏதோ “freshஆ சங்கரா மீன் வந்திருக்கு சார்” எனும் கணக்கில் சொல்ல, அதற்கு அண்ணாமலை “இந்த சேர்ல உட்கார்ந்திருக்கிற எனக்கு கட்சியில உள்ள எல்லார் பற்றின தகவல்களும் வந்து தான் இருக்கின்றன” என டப் கொடுக்கிறார். அவ்வளவு தகவல்களை வைத்துக் கொண்டு இவர் என்னதான் பண்ணுகிறார் எனும் கேள்வி எழுகிறது.

ஆனால் இதைத் தொடர்ந்து வெண்பாவிடம் “நீங்க ‘பொன்னியின் செல்வனில்’ டயலாக் எழுதுறீங்களா சிஸ்டர்?” என அப்பாவியாகக் கேட்கிறார். தன்னிடம் டீல் பேச வந்திருக்கும் வெண்பாவின் பின்னணியே தெரியவில்லை, ஆனால் ஒட்டுமொத்த தமிழக பாஜக தலைவர்களின் அந்தரங்க விவகாரமும் இவருக்குத் தெரியுமா? “இல்லிங்க நான் பாட்டு மட்டும் தான் எழுதி இருக்கேன்…” “எல்லா சாங்ஸுமேவா சிஸ்டர்?” “இல்லீங்க ஒரு பாட்டு தான்.” அப்போது வெண்பாவின் மைண்ட்வாய்ஸ்: “யோவ், நீ விகடன் கூட படிக்கிறது இல்லியா? கூகிள் பண்ணி பார்க்கலாமுல்ல.”  

அடுத்து தான் செமையான ‘ஒன்னு வாங்கினால் ரெண்டு’ சலுகை வருகிறது: வெண்பாவை தான் பாஜக இலக்கிய அணியின் பொறுப்பாளர் ஆக்குகிறேன் என்கிறார். வெண்பா பாஜகவில் உறுப்பினர் தானா என்பது கூட தெரியாமல் அவரை இலக்கிய அணியின் பொறுப்பாளராக்குகிறேன் என ஒருவர் சொல்லுகிறார், வெண்பாவோ தான் ஒரு கட்சிக்கூட்டத்திற்குக் கூட போனதில்லை என்கிறார். இவரை நம்பி இவ்வளவு பெரிய லாரியை எப்படி ஒப்படைத்தார்கள்? (நான் என்ன சொல்றேன்னா “அண்ணாமலை ஜி அதெல்லாம் வேண்டாம், பேசாம வெண்பாவை முதல்வர் ஆக்கிடுங்க ஜி”.)

வெண்பா உடனே “எனக்கு பாதுகாப்பு மட்டும் கொடுங்க” என்கிறார் உஷாராக. உடனே நம் சிங்கம் “இந்த வீடியோவுக்குப் பிறகு யாராவது உங்களை அட்டாக் பண்ணினா I will ruthlessly go after them” என்கிறார். ஆனால் அடுத்த நாளே தன் வசமுள்ள காணொலிகளில் தோன்றும் பாஜக மகளிரணிப் பெண்களின் மார்ப் செய்யப்பட்ட முகங்களை ஒரிஜினலுக்கு மாற்றிடும் முயற்சியில் அண்ணாமலை தீவிரமாக இருப்பதாக தெரிய வந்ததாக வெண்பா சொல்லுகிறார். இதுதான் பெண்களை நீங்க பாதுகாக்கும் லட்சணமா?

மதன், வெண்பாவிடம் டீலிங் நடந்து கொண்டிருக்கும் போது தன்னைப் பற்றி தமிழிசையிடம் போட்டுக்கொடுத்த பிரசாத் என்பவருடைய கை,கால்களை கடவுள் அதற்கு அடுத்த நாளே உடைத்து விட்டதாகவும், அவரை தான் பூங்கொத்து, மலர்கள் சகிதம் போய்ப் பார்த்ததாகவும் மதனுக்கு ஒரு மறைமுக மிரட்டலை செய்கிறார் அண்ணாமலை. “நீங்க எம்.எல்.ஏ ஆக்குவேங்குறீங்க, கொஞ்ச நேரத்தில் கைகாலை உடைப்பேங்குறீங்க, இதென்ன தெலுங்கு சினிமாவா மிஸ்டர் மலை? தெலுங்கு சினிமா வில்லன்கள் கூட தன் பேச்சு பதிவாகிறது என உஷாராக இருப்பார்களே!” 

அண்ணாமலையிடம் அடிப்படையாக ஒரு பிரச்சனை உள்ளது: அவர் தனக்கு என ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டால் அதைத் தவிர வேறெதையும் அவரால் யோசிக்க முடிவதில்லை. மனம் அது வேண்டும், அது வேண்டும் என பரிதவிக்கிறது. அதனால் தான் நம்பும்படியாக, கோர்வையாக பேசக் கூட வரவில்லை. ஒன்று சொல்லி விட்டு அடுத்த நொடியே அதற்கு மாறாக இன்னொன்றை சொல்லுகிறார். தொடர்ந்து பதற்றத்துக்கு மேல் பதற்றம். என் கணிப்பு சரியென்றால் அவருக்கு ஏதோ மனப்பிரச்சனை இருக்கிறது. நீங்கள் இப்போது இருந்து / நின்று கொண்டிருக்கிற இடத்தில் இருந்து ஒரு பொருள் உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது. அதை எடுக்கணும், எடுக்கணும் என்று மட்டுமே யோசிங்க. எப்படி எடுக்கணும் என்றெல்லாம் யோசிக்காதீங்க. “அது வேணும்” என்பதையே உங்க மனமாக உருமாற்றுங்க. போகிற வழியில் கிடக்கும் நாற்காலி கண்ணுக்குப் படாது. தரையில் எண்ணெய் சிந்தியிருந்தால் கவனிக்க முடியாது. அதாவது situational awareness சுத்தமாகப் போய் விடும். புத்திக்கும் பேச்சுக்கும் தொடர்பு அறுந்து விடும். அப்படியே நடங்க. நிச்சயமா விழுந்து விடுவீர்கள். அண்ணாமலை ஒவ்வொரு விசயத்தையும் இப்படித்தான் டீல் பண்ணுகிறார். அவருடைய ஊடக சந்திப்புகளில் இந்த மனப்போக்கை வெளிப்படையாகவே பார்க்கலாம், அது அவருடைய ஊடக சாமர்த்தியமின்மை, அனுபவமின்மை என நினைத்தேன். இல்லை, உண்மை என்னவென்றால் அவர் மனிதர்களிடம் சும்மா பேசும் போதே நாக்கு உதறுகிறது. எதிர்காலத்தில் எப்படியெல்லாம் மக்கள் காய் நகர்த்துவார்கள், அவர்களிடம் தன்னை எப்படி முனைக்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. பேசிக்கொண்டிருக்கும் போதே மானங்கெட்ட அந்த மைண்ட் வாய்ஸ் வேறு அவர் சொல்லைக் கேட்காமல் தத்தித்தத்தி போய் எங்காவது விழுந்து அடிவாங்குகிறது.

தமிழக பாஜகவை நிர்வகிப்பதில் அண்ணாமலை மிக மோசமான தேர்வு. அது மட்டுமல்ல, இவரை சந்தோஷ், நட்டா, ஷா கூட்டணி இப்படியே வளர விட்டால், பாஜகவின் தேசியத் தலைவர்களையும் இப்படி பாலியல் ஹனி டிராப்பிங் முறையில் மிரட்டிப் பணிய வைக்க முயல்வார். மதன் சொல்வதைப் போல “சின்னப்பிள்ளை ஆட்டம்” ஆடுகிறார் அவர். மிஸ்டர் நட்டா, பேசாமல் தமிழிசையையே மீண்டும் தமிழக பாஜகவின் தலைவர் ஆக்குங்க. என்னதான் மக்கள் அவரை பகடி பண்ணினாலும், அவர் மீது எல்லாருக்கும் நல்ல அபிப்ராயம் உண்டு. மக்களை அனுசரித்து செல்பவர். ஒருவேளை இந்த பாஜக ஜல்சா பிம்பத்தை களையவும் அவர் உதவலாம். 

இல்லாவிட்டால், அண்ணாமலையை அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர விட்டால், ஆடிருந்த இடத்தில் ஆட்டுப்புழுக்கை கூட எஞ்சாது!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...