அப்கானிஸ்தான்-தாலிபான் பிரச்சனை முழுக்க அம்மக்களின் வரலாறு, உள்நாட்டுச்சிக்கல்கள், அமெரிக்கா, சோவியத் காலனிய ஆதிக்கம், பொருளாதார வளர்ச்சியின்மை, முன்னேற்றத்துக்கும் பழமைக்கும் இடையில் எங்கே போவதெனத் தெரியாத பழங்குடி இனங்கள் சம்மந்தப்பட்டவை. அதை இந்திய சூழலுடன் பொருத்துவதோ, அதை வைத்து பாஜகவை பகடி செய்வதோ, இந்திய இஸ்லாமியர்களுக்கு ஊமைக்குத்து விடுவதோ எல்லாம் அபத்தங்கள். இந்தியா இப்போது வெளியுறவுத்துறை சார்ந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், எப்படி அப்கானிஸ்தானை நமக்கு சாதகமாக கையாள வேண்டும் என பரிந்துரைப்பதும் தவறானது - இன்னொரு மக்களின், தேசியத்தின் நெருக்கடியை, குழப்பங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்து உள்ளே நுழைவது கொள்ளிக்கட்டையால் முதுகை சொறிவது போல ஆகி விடும். அமெரிக்க அரசு இத்தனை ஆண்டுகளாய் அப்கானிஸ்தானை கைப்பிடிக்குள் ராணுவத்தின் மூலம் வைத்திருந்ததால் அந்நாட்டு ஆயுத வியாபாரிகள், கார்ப்பரேட்டுகளைத் தவிர அந்த சாமான்ய அமெரிக்கர்கள் எந்த பயனும் பெறவில்லை. இத்தனை லட்சம் மக்களை டுரோன்களால் போட்டுத்தள்ளியதிலோ, இப்போது அவர்களை தவிக்க விட்டு அலட்சியமாக வெளியேறியதாலோ அமெரிக்கா உண்மையால் எந்த உருப்படியான லாபத்தையும் தார்மீக ரீதியாகவோ அரசியல்ரீதியாகவோ பெறவில்லை. இப்போது நடந்து கொண்டிருப்பவை இந்திய பிரிவினையின் போது அப்போதைய பிரிட்டிஷ் அரசு மக்களின் பாதுகாப்பையும் பெருங்கூட்டமாக மக்கள் புலம்பெயர்வதை ஒருங்கிணைப்பதை தம் பொறுப்பல்ல என கைமலர்த்தி விட்டு சென்றதை, அதன் விளைவாக பல லட்சம் பேர் கொல்லப்பட்டதை, உயிரிழந்ததை ஓரளவு நினைவுபடுத்துகிறது.
அப்கானிஸ்தானில் இப்போது நடப்பது ஒரு மிகப்பெரும் அவலமே. மக்கள் விமானத்தில் தொற்றிக்கொண்டு பாதி வானத்தில் இருந்து விழுவதைக் காண கண்ணீர் வருகிறது. விமானத்தைத் துரத்திக் கொண்டும் ஓடும் மக்களின் பரிதாபகர காட்சியையும் ஒரு அமைதியான நாகரிகமான சூழலில் இருந்து பார்க்கிறவரால் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அப்கானிஸ்தான் ஒருநாள் தன்னையே சீரமைத்துக் கொள்ளும் என நான் நம்புகிறேன். தாலிபான்கள் மூர்க்கத்தையும், வலிமையையும் இழந்து, அதிகாரத்தையும் மக்களிடம் திரும்பக் கொடுக்கும் நாள் நிச்சயமாக வரும். அதை அம்மக்களே செய்ய முடியும். நாம் அல்ல. அதைப் பற்றி அவர்களே சிந்திக்கவும் தவிக்கவும் வேண்டும். நாம் அல்ல.
நமது ஜனநாயகத்தை எப்படி பாதுகாப்பது என்று நாம் கவலைப்படுவோம். இப்போதுள்ள மதவாத ஆட்சி ஒன்றியத்தில் தொடரும் ஒவ்வொரு பத்தாண்டிலும் நாம் ஐம்பது ஆண்டுகள் பின்னுக்கு சென்றபடியே இருக்கிறோம். பல்லாயிரம் விவசாயிகளிடம், எதிர்க்கட்சிகளிடம், பல கோடி சிறுபான்மையினரிடம் எந்த உரையாடலையும் வைத்துக் கொள்ள விரும்பாத ஒரு முரட்டு, ஜனநாயக விரோத அரசை நாம் தலைவணங்கி கொண்டாடுகறோம். சொந்த தேவைக்காக பல லட்சம் கோடிகள் வரிப்பணத்தை தன் எதிரிகளையும் நண்பர்களையும் ஒற்றறிய செலவிட்ட ஒரு அரசை பெருவாரியான மக்கள் எந்த விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொள்கிறோம். இதற்கும் தமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். பெட்ரோல் விலை அம்பானிகளின் லாபம் பல்லாயிரம் மடங்கு பெருகும் நோக்கில், அரசின் கஜானாவை நிரப்பும் நோக்கில் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் இதை ஏதோ வானிலை செய்தி போல எடுத்துக் கொண்டு இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என வானத்தைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் நாம் ஜனநாயக உரிமைகளோ வாக்களிக்கும் அதிகாரமோ தேவையில்லாத ஒரு மக்கள் கூட்டமென நம்மை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். நாம் முதலில் நம்மைப் பற்றி கவலைப்படுவோம். அப்கானிஸ்தானையும் உகாண்டாவையும் அந்நாட்டு மக்கள் கவனித்துக் கொள்ளட்டும்.
ஒரு ஜனநாயக நவீன தேசமாக நாம் என்னவாக விரும்பினோம், என்னவாக விரும்புகிறோம், இப்போது எங்கிருக்கிறோம் என நம்மை நமக்குள்ளே ஒப்பிடுவது தான் சரி.
அதை விட்டு விட்டு பாஜகவும் தாலிபான்களும் ஒன்றா இல்லையா என்றெல்லாம் குடுமிப்பிடி இடுவது என்னவொரு பாசாங்கு. அந்த ஒப்பீடே அவசியமற்றது. உண்மை என்னவென்றால் நமது நவீனத்துக்கு முந்தைய அரசியல், ஜனநாயகமற்ற பாசிச ஆட்சி அமைப்பு குறித்த நமது அவமான உணர்வை மறைக்க “அந்தோ அப்கானிஸ்தானின் நிலையைப் பாரீர்” என ஆவேசப்பட்டுக் கொள்கிறோம். எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு - அடுத்தவன் துர்மணத்தை விமர்சிக்கும் முன் சொந்த குண்டியை மணந்து பார்த்து விட வேண்டும். நாம் நம்முடையதை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வோம், அவர்கள் அவர்களுடைய பார்த்துக் கொள்வார்கள்.
