முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாய் வித் சித்ரா - எஸ்.ரா பேட்டி


கொஞ்சம் நெகிழ்ச்சி, நிறைய செண்டிமெண்ட், நிறைய சுவாரஸ்யமான கதைகள், தகவல்கள், அவதானிப்புகள் என கலவையான உரையாடல். 


எஸ்.ரா ரொம்ப கூர்மையான மனிதர். அதனாலே இலக்கியம், சினிமா குறித்த, குறிப்பாக narratology சார்ந்த அவரது அவதானிப்புகள் வெகுசிறப்பாக இருக்கும். ஆனால் தன் கட்டுரைகளில், உரைகளில் உணர்வுகளை


, சம்பவங்களை சித்தரித்த அளவுக்கு அவர் தன் அவதானிப்புகளை சொன்னதில்லை. சொல்லப் போனால் எஸ்.ரா எனும் தனிப்பட்ட மனிதரின் பார்வையை தவிர்த்து விட்டு எஸ்.ரா எனும் பயணி, எஸ்.ரா எனும் வாசகர், எஸ்.ரா எனும் கதைசொல்லி, எஸ்.ரா எனும் சினிமா ஆர்வலர் என பல்வேறு பாத்திரங்களாக மாறிப் பேசவே அவருக்கு ஆசை அதிகம். தனிப்பட்ட முறையில் உரையாடும் போது அந்த தனிமனிதர் சட்டென வெளிப்பட்டு தன் கருத்துக்களால், பார்வையால் நிறையவே அச்சரியப்படுத்துவார். 


ஒருமுறை - இந்த பேட்டியில் அவர் சொல்லுகிற - ஒரு ரூபா விசயத்தை தனிப்பேச்சில் குறிப்பிட்டார். நான் நீண்ட நாட்கள் அதை மறக்கவே இல்லை. இந்தியர்களின் பேச்சில், சிந்தனையில் இயல்பாகவே ஒரு தத்துவார்த்தம் இருக்கிறது என அவதானித்தார் அன்று. இன்னொரு முறை தான் கதை எழுத ஆரம்பித்த காலத்தில் லத்தீன் அமெரிக்காவின் சிறந்த கதைகளில் உள்ள வடிவத்தை உள்வாங்கி, சொற்களை எண்ணி, சொற்களின் அடுக்குமுறையை கவனித்த ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்ததாக சொன்னார். அந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஒவ்வொரு சில மாதங்களும் திட்டமிட்டு குறிப்பிட்ட வகையான நூல்களைப் படிப்பது ஆச்சரியமூட்டும் மற்றொரு செயல். நான் ஒருமுறை அவருடைய வீட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்த போது தன் நாட்காட்டியை காட்டி “நாளை 11 மணிக்கு அங்கு இருப்பேன், அடுத்த வாரம் அந்த நாள் இந்த வேலை பண்ணிக் கொண்டிருப்பேன்” என்று துல்லியமாக சொன்னார். தமிழில் எஸ்.ரா அளவுக்கு நாட்களை கச்சிதமாக திட்டமிட்டு கழிக்கிற மற்றொரு எழுத்தாளர் இல்லை எனத் தோன்றியது. என்னைப் போன்றவர்கள் நாளை காலை 10 மணிக்கு இதைச் செய்ய வேண்டும் என நாட்காட்டியில் குறித்து வைத்தால், மனம் “இதை கண்டிப்பா செய்யக் கூடாது” என பல்லைக்காட்டி இளித்துக் கொள்ளும். அடுத்தடுத்த நாட்களுக்கு இதையிதை செய்யலாம் என திட்டமிட்டால் நாட்காட்டி இருப்பதே மறந்து போகும். அன்று எஸ்.ரா பேசுவதை ஒரு குழந்தை ராணுவ வீரனைப் பார்ப்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்தேன். 


இப்பேட்டியில் சித்ரா லஷ்மண் சுஜாதாவைப் பற்றி கேட்கிறார். அதற்கு எஸ்.ரா தனக்கு சுஜாதா மீது ஆரம்பத்தில் இருந்தே பெரிய ஈடுபாடோ வியப்போ இல்லை, அவருடைய சிறுகதைகளையும், கட்டுரைகளையுமே பொருட்படுத்தி ஓரளவு படித்திருக்கிறேன் எனச் சொல்கிறேன். ஆனால் பதிலை முடிக்கும் போது சுஜாதாவின் சிறந்த 100 படைப்புகளைத் தொகுத்து ஒரு நூலாக பிரசுரித்திருக்கிறேன் என்கிறார் குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு. நான் அந்த நூலைப் படித்திருக்கிறேன் - அது முழுக்க சுஜாதாவை போற்றும் ஒரு எழுத்தாளர் மிகுந்த கவனத்துடன் தொகுத்ததைப் போன்றே இருக்கும். எந்த நூல் என்றாலும் தன் விருப்புவெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு அது தன் வாழ்நாள் பணி என்பதைப் போல செய்யும் இயல்பு எஸ்.ராவுக்கு உண்டு. அவரை நம்பி ஒரு ஏவுகணையைக் கூட ஒப்படைக்கலாம். ஒரு விஞ்ஞானியைப் போல அதை வானில் ஏவி விட்டு தான் மறுகாரியம் பார்ப்பார்.


பேட்டியில் நான் ரசித்த மற்றோரிடம் எஸ்.ரா திரைக்கதையை, அதன் நுணுக்கங்களை எளிமையாக விளக்கும் பகுதி. மற்றொன்று சென்னையில் காசில்லாமல் திரிந்த போது பாலத்தின் கீழ் தூங்கிய, நண்பர்களின் அறைகளில் தற்காலிகமாக தங்கிய தினங்களைப் பற்றி நினைவுகூருவது. அதில் அவர் சொல்லும் குப்பைத்தொட்டி சம்பவம் புக்காவஸ்கியின் Ham on Rye நாவலை நினைவுபடுத்தியது.


  பாருங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...